சுடச்சுட:

ஆலயங்கள்

இலக்கியம்

ஆன்மிகம்

வெள்ளி, ஜூலை 25, 2014

அக்ஞாத வாசம் அல்லது தலைமறை வாழ்க்கை!


















முகநூலில் என் (ஃபோட்டோ) படங்களைப் போடுவதில் நண்பர் சந்திரசேகரனுக்கு விருப்பம் இல்லை. வெளிப்படையாகவே கருத்துக் கூறியிருந்தார்....
என் புகைப்படத்துக்கு அவர் இட்ட கருத்துகள்...
***
Chandra Sekaran முகம் காட்டாதிருப்பதே நல்லது என்று கருதுகிறேன். ந்மக்கு நெருக்கமானவர்கள் நேரில் பார்க்கப் போகிறார்கள். இங்கே போடும் கருத்துகளுக்காக இணைப்பில் சேருபவர்களுக்கு நம்முடைய முகத்தைப் பற்றி என்ன வேண்டியிருக்கிறது?

Senkottai Sriram-> Chandra Sekaran-> இதை நான், எடிட் செய்யும் பத்திரிகையில் கொள்கையாக வைத்திருந்தேன். நான் எடிட் செய்யும் பத்திரிகையில் என் புகைப்படத்தை இதுவரை போட்டுக் கொண்டதில்லை. இது முக நூல் என்பதால் மூஞ்சி காட்டினேன்!

Chandra Sekaran சுய புகைப்படம் போடுவதை நிறுத்தறதுதான் எப்பவும் நல்லது. எல்லோருக்கும். பல சிக்கல்களை தவிர்க்கலாம். நம்மை பற்றி பிறர் ஒரு அனுமானமாகவே இருப்பார்கள்.

Senkottai Sriram Chandra Sekaran உங்கள் கருத்தை ஏற்கிறேன்... எப்போது வேண்டுமானும் பொதுவெளியில் திட்டித் தீர்ப்பவர்களுக்கு உதவிகரமாக இருக்கும். போகட்டும். இதோடு நிறுத்திக் கொள்கிறேன்... புகைப்படம் போடுவதை!
***
- இ
ப்படி அவருக்கு வாக்குறுதி கொடுத்தாலும், அதை என்னால் நிறைவேற்ற முடியவில்லை. எல்லாம்.. அல்ப ஆசைதான் காரணம்! நம் தனிப்பட்ட முகநூல் பக்கம், தனிப்பட்ட வலைப்பூ எனக் கருதும் மன எண்ணம்தான் காரணம்!
***
- இன்னொரு நண்பர் சக்ரவர்த்தி பாலசுந்தரம் --- ஒரு முறை அவரின் கவிதையை ரசித்து விரும்பியிருந்தேன். அதற்கு அவர் அளித்த பதில்.
***
Chakravarthy Balasundaram பொதுவாக, கவிதை எழுதுபவர்கள், அத்தனை எளிதில் பிறரது கவிதைக்கு விருப்பம் தெரிவிக்க மாட்டார்கள். நீங்கள் எனது டைம்லைனுக்கு சென்று, லைக் தந்துள்ளது, உங்கள் பெருந்தன்மையை காட்டுகிறது. செங்கோட்டை ஸ்ரீராம், வாழ்த்துக்கள் நன்றி.

Chakravarthy Balasundaram முதலில் நான் ஒரு பத்திரிகையாளன்... இலக்கிய ரசிகன். குறிப்பாக இலக்கியத் தரமான பத்திரிகைகளில் அதிகம் பணி செய்திருக்கிறேன். அதிலும் குறிப்பாக, இதழாசிரியராக, பொறுப்பாசிரியராக இருந்திருக்கிறேன்...
என் முதல் பணியே... ரசிப்பது. சரிசெய்வது, வெளியிடுவது, படைப்பாளனை வெளிக் கொணர்வது. என்னால் அடையாளம் காட்டப்பட்ட, முன்னிலைப் படுத்தப் பட்ட திறமையாளர்கள் அதிகம். என்னை அறிந்தவர்கள் அதனை உணர்வார்கள்.
நண்பரே...
பத்திரிகை ஆசிரியன் முதலில் தன்னை விட, தன் எழுத்தை விட, பிறர் எழுத்தை ரசித்து உலகுக்கு வெளிப்படுத்த வேண்டும். இந்தக் கொள்கையில் இப்போதும் மாறாமல் இருக்கிறேன்...
நான் கர்வத்துடன் சொல்லிக் கொள்வதுண்டு...
மிகச் சிறு வயதில், அதாவது 26 வயதில் எனக்கு மஞ்சரி இதழின் பொறுப்பாசிரியர் பணியை மிகவும் தைரியத்துடனும் நம்பிக்கையுடனும் அளித்தார் கலைமகள் இதழின் பதிப்பாளர் எம்.எல்.ஜே, பிரஸ் அதிபர் திருவாளர் நாராயணஸ்வாமி ஐயர்.
அவர் நம்பிக்கையை காப்பாற்றியது மட்டுமல்ல... எனக்குள் ஒரு சபதம் எடுத்துக் கொண்டேன்...
நான் ஆசிரியராக இருந்து பணிபுரியும் இதழில் என் புகைப்படத்தை பிரசுரித்துக் கொள்ளக் கூடாது என்று! அதை இன்றளவும் 99% காப்பாற்றி வருகிறேன்.
மஞ்சரி இதழில் கடைசிப் பக்கத்தில் உங்களோடு ஒரு வார்த்தை என்று ஒரு கட்டுரைத் தொடர் எழுதினேன். அந்த ஒரு இடத்தில் மட்டும்தான் என் பெயரை முழுமையாக... செங்கோட்டை ஸ்ரீ.ஸ்ரீராம் என்று போட்டுக் கொண்டேன்.
மற்ற இடங்களில் மொழிபெயர்ப்போ, கட்டுரையோ எழுத நேர்ந்தால்... புனை பெயர் மட்டுமே போட்டுக் கொண்டிருந்தேன்.
இன்றளவும் அந்த சபதத்தைக் காத்து வருகிறேன்.
தினமணி ஒலிச்செய்திகள் என் குரலில் வெளியானாலும், இதுநாள் வரை வாசிப்பவர் என்று என் பெயரை சொல்லிக் கொண்டதில்லை...
என் புகைப்படங்களை என் தனிப்பட்ட ஃபேஸ்புக், என் வலைப்பூ தவிர தினமணியின் எந்தப் பக்கத்திலும் நீங்கள் காண முடியாது.
காப்பது - விரதம் ! என்பதை எவ்வளவு தூரம் கடைப்பிடிக்க முடிகிறது பார்க்கலாம்...
எதற்கு இவ்வளவு சொல்ல வந்தேனென்றால்... உங்கள் கவிதையை வெறுமனே லைக் செய்ததற்காக மகிழ்கிறீர்கள்...
பத்திரிகைகளில் பணியாற்றும் நம் பணியே... படைப்பாளிகளைக் கண்டுபிடித்து வெளிப்படுத்துவதுதானே...
இந்த முகநூலிலும் கூட... எத்தனை பேரை இனம் கண்டு என் அதிகார எல்லைக்கு உட்பட்ட தளங்களில் படைப்புகளை வெளியிட்டிருக்கிறேன்... அது அவரவர்க்குத் தெரியும்.
***
ஆக, என் அல்ப ஆசைக்கு ஆட்பட்டு, 7 வருடங்களுக்கு முன்னர் 'க்ளிக் ரவி' எடுத்த இந்தப் படங்களை பொதுவெளியில் விடுகிறேன். இதுவரை எதிலும் வெளியாகாமல் என் கணினியின் சேமிப்பு அறையில் உறங்கிக் கொண்டிருந்தவை இவை. இன்றாவது விமோசனம் கிடைக்கிறதே! இந்தப் படங்கள், மஞ்சரி ஆசிரியராக பணிசெய்தபோது எடுக்கப்பட்டவை. கலைமகள், மஞ்சரி ஆண்டுவிழா நிகழ்ச்சி நவிமும்பை தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்றபோது எடுக்கப்பட்டவை. நான், கலைமகள் ஆசிரியர் கீழாம்பூர் சங்கரசுப்ரமணியன், இரு இதழ்களின் பதிப்பாளர் திருவாளர் நாராயணஸ்வாமி ஐயர்.. இந்தப் படங்களில்..!
இதழாசிரியனாக என்னை அமர்த்தி வைத்து அழகு பார்த்த நாராயணஸ்வாமி ஐயர், இந்த நிகழ்விலும் நாற்காலியில் அமரவைத்து மரியாதை செய்து அழகு பார்த்தார். அந்தப் படத்தில் அவரின் புன்னகையும், முகமலர்ச்சியும் அதைக் காட்டும். பத்திரிகை ஆசிரியனுக்கும் பதிப்பாளருக்கும் இடையே ஒருவருக்கு ஒருவர் நம்பிக்கையும் அதைக் காப்பாற்றுதலும் முக்கியம். உண்மையும் நேர்மையும் அதில் சேரும்.
***
என்னுடையவை எல்லாமே பழைமைதான். சிறுவயது சாதனைகள்தான்! கடந்த நாலைந்து வருடங்களாக குறிப்பிடும்படியாக அப்படி எந்த (நிகழ்வுகளோ) சாதனைகளோ, ஆக்கங்களோ நான் செய்துவிடவில்லை. இது என் அக்ஞாதவாசம்!


 
Copyright © 2013 செங்கோட்டை ஸ்ரீராம்
Shared by Alahappa Grafix