சுடச்சுட:

ஆலயங்கள்

இலக்கியம்

ஆன்மிகம்

வியாழன், ஜூலை 17, 2014

குற்றாலத்தில் சோப்பு, ஷாம்பு, எண்ணெய்க் குளியலுக்குத் தடை: தூய்மையாகக் காட்சி தரும் அருவிக் கரை!


குற்றாலத்தில் இப்போது குளிக்க வருபவர்கள், சோப்பு, ஷாம்பு, எண்ணெய், சிகைக்காய் ஆகியவற்றை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
முன்பெல்லாம் எண்ணெய்க் குளியல்தான் குற்றாலத்தில் சிறப்பாக இருக்கும். தலையில் எண்ணெய் வைத்துக் கொண்டு அருவியில் நின்றால், சிகைக்கால், ஷாம்பு போடாமலே தலையில் வைத்த எண்ணெய் காணாமல் போய் விடும்.
எண்ணெய் மாலிஷ் செய்து விடுவதற்கென்றே சிலர் அருவிக் கரைக்கு வெளியே அமர்ந்திருப்பார்கள். இப்போது அந்தக் காட்சிகளை எல்லாம் காண முடியாது. ஆனால்... அருவிக் கரை மிகத்தூய்மையாக உள்ளது. தண்ணீர் அதே தெளிவுடன் செல்கிறது. அருவி விழுந்து நீர் ஓடும் ஓடையில், பிளாஸ்டிக் கழிவு அடைப்புகள் இல்லாமல் நீர் சலசலத்து ஓடுகிறது.
ஆனாலும், வியாபாரிகள் அலுத்துக் கொள்கிறார்கள். கூட்டம் இல்லை... நீதிமன்ற உத்தரவு இப்படியா இருக்க வேண்டும்? குற்றாலக் குளியல் என்றாலே எண்ணெய்தானே! மூலிகை எண்ணெய் தேய்த்து குளிக்கத்தானே குற்றாலம் வருகிறார்கள்... - இவ்வாறாக!~
திங்கள் அன்று குளிக்கச் சென்றேன். கூட்டம் ஓரளவு இருந்தது. நெருக்கியடிக்கும் நிலை இல்லை என்றாலும், அருவிக்கு அருகில் ஒரே தள்ளுமுள்ளு. ஆனால், அருவி நீர் நன்றாக விழும் நடுப் பகுதியில் நெருக்குதல் இன்றி, நன்றாகக் குளிக்கும் வகையில் இருந்தது.
முன்பெல்லாம் அருவி நீர் விழுகிறதோ இல்லையோ... ஒவ்வொருவர் உடலிலும் தேய்த்திருக்கும் எண்ணெய்ப் பிசுக்கை நம் உடலில் இழுவி விட்டுச் செல்வார்கள்... இப்போது அப்படி இல்லை என்றாலும், நெருக்கியடித்தலின் போதான வாடை... குறிப்பாக டாஸ்மாக் சரக்கு நெடி.. குமட்டத்தான் செய்கிறது. இத்தனைக்கும் அருவியிருக்கும் இடத்தில் இருந்து ஒரு கி.மீ. தொலைவுக்கு டாஸ்மாக் கடைகளை மாற்றி விட்டார்களாம்.. இருந்தாலும் தண்ணி போடாமல் தண்ணியில் தலை காட்ட ஏன் இந்தக் குடிமகன்களுக்கு ஞானம் வர மறுக்கிறதோ தெரியவில்லை!
தமிழகம் தரம் தாழ்ந்து போவதற்கு, அளவுக்கு அதிகமான சரக்கு விற்பனை ஒரு காரணமாக அமையக் கூடும்!







 
Copyright © 2013 செங்கோட்டை ஸ்ரீராம்
Shared by Alahappa Grafix