சுடச்சுட:

ஆலயங்கள்

இலக்கியம்

ஆன்மிகம்

வெள்ளி, ஜூலை 18, 2014

கபிலவாணர் விருதும் திருக்கோவிலூர் பண்பாட்டுக் கழகமும்!


 

ஏ.என்.சிவராமன் - தினமணியின் ஆசிரியராக நீண்ட காலம் இருந்தவர். அவருக்கு மத்திய அரசின் மதிப்பு மிக்க விருதான பத்மஸ்ரீ விருது கொடுக்க அவரிடம் அணுகினார்கள். ஏ.என்.எஸ்., மறுத்துவிட்டார். தான் ஏன் இந்த விருதைப் பெற மறுத்தேன் என்பது குறித்து தினமணிக் கதிரில் ஒரு கட்டுரையாக எழுதினார். 

பார்க்க... 

http://www.dinamani.com/impressions/article1331359.ece

(1968ம் ஆண்டில், தனக்கு மத்திய அரசின் சார்பில் குடியரசுத் தலைவர் அளிப்பதாக இருந்த பத்மஸ்ரீ/பத்மபூஷன் விருதை தான் ஏன் ஏற்கவில்லை என்பதற்கு அன்றைய தினமணி ஆசிரியர் ஏ.என்.சிவராமன் அளித்த பதில்.

1968ம் வருட தினமணிக் கதிரில் இது குறித்து அவர் எழுதிய விளக்கம் இது...) 

ஏ.என்.எஸ்ஸுக்கு பட்டங்கள், விருதுகள் பேரில் விருப்பம் துளியும் இருந்ததில்லை என்று என் நண்பரும் வழிகாட்டியுமான கலைமகள் ஆசிரியர் கீழாம்பூர் அடிக்கடி சொல்வார். அப்படி விருதுகள் பேரில் துளியும் விருப்பம் இல்லாமல் தவிர்த்து வந்த ஏ.என்.எஸ்., ஒரே ஒரு விருது தன்னைத் தேடி வந்தபோது, சரி என்று ஒப்புக் கொண்டாராம். அது, திருக்கோவிலூர் பண்பாட்டுக் கழகத்தின் சார்பில் கடந்த 38 ஆண்டுகளாக நடந்து வரும் கபிலர் விழாவில், வழங்கப்படும் கபிலவாணர் விருது. 

இந்தக் கழகத்தின் தலைவர் டி.எஸ்.தியாகராஜன் வருடந்தோறும் விழாவை சிறப்பாக நடத்தி வருகிறார். அவருடைய இந்தப் பணிக்காகவே ஏ.என்.எஸ்., விருதைப் பெற ஒப்புக் கொண்டதாகக் கருத இடமுண்டு. 

பின்னர் இந்த விருதைப் பெற்ற அடுத்த தினமணி ஆசிரியர்- ஐராவதம் மகாதேவன். 

தற்போது, ஜூலை 19ம் தேதி சனிக்கிழமை தினமணி ஆசிரியருக்கு இந்த அமைப்பின் கபிலவாணர் விருது வழங்கப் படுகிறது. பொற்கிழியாக ரூ.1 லட்சமும் வழங்கப் படுகிறது.

நமது. வாழ்த்துகள் ! ! 

==================

இந்த நிகழ்ச்சி குறித்து தினமணியில் வந்த செய்தியில் இருந்து...

--------------------------------

விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் பண்பாட்டுக் கழகம் சார்பில் கபிலர் விழா, ஜூலை 18-ஆம் தேதி இன்று தொடங்கி 3 நாள்கள் நடைபெறுகிறது. 19-ஆம் தேதி நடைபெறும் விழாவில், தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதனுக்கு கபிலவாணர் விருதும், ரூபாய் ஒரு லட்சம் பொற்கிழியும் வழங்கப்படுகிறது.

கபிலர் விழா தொடக்க நாள் நிகழ்வுகளாக, 18-ஆம் தேதி காலை கபிலர் குன்று வழிபாடு, மங்கல இசை, ஸ்ரீமத் எம்பெருமானார் ஜீயர் ஸ்ரீனிவாச ராமானுஜாச்சாரியார் ஆசியுரை, இலக்கியச் சோலை, இசை மாலை, திருமுறை இன்னிசை, பட்டிமன்றச் சோலை ஆகியவை நடைபெறுகின்றன.

வரும் 19-ஆம் தேதி காலை இலக்கிய விழா, மாலை அறிஞர் உலா, இரவு பரிசு நிலா நிகழ்வுகள் நடைபெறுகின்றன. பின்னர் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி இராம.சுப்பிரமணியன் தலைமையில் விருது வழங்கும் நிகழ்வு நடைபெறுகிறது.

விழாவில், "தினமணி' ஆசிரியர் கே.வைத்தியநாதனுக்கு ரூபாய் ஒரு லட்சம் பொற்கிழியும், "கபிலவாணர்' விருதும் வழங்கி, மலேசியாவைச் சேர்ந்த டத்தோ டாக்டர் கே.ஆர். சோமசுந்தரம் பாராட்டிப் பேசுகிறார். புது தில்லித் தமிழ்ச் சங்க முன்னாள் பொதுச் செயலர் எம்.என்.எஸ்.மணியனுக்குத் "தமிழ் ஞாயிறு' என்கிற பட்டம் வழங்கிக் கெளரவிக்கப்படுகிறது.

தொடர்ந்து நித்யஸ்ரீ மகாதேவன் குழுவினரின் இசை விழா நடைபெறுகிறது. வரும் 20-ஆம் தேதி காலை மங்கல இசை, தெய்வத் திருப்பாடல்கள் அரங்கு, இசை அரங்கு, நாகசுர இசை அரங்கு, திருமுறை இசை அரங்கு, நாட்டிய அரங்கு நடைபெறுகிறது.


 
Copyright © 2013 செங்கோட்டை ஸ்ரீராம்
Shared by Alahappa Grafix