சுடச்சுட:

ஆலயங்கள்

இலக்கியம்

ஆன்மிகம்

செவ்வாய், ஜனவரி 01, 2013

யலேய்... எதுக்குலே இந்த ஆர்ப்பாட்டம்லாம்?!


ஹலோ... வெங்கட்! 
சொல்லுங்க சார்...
வெங்கட் இரண்டாவது முறையா அதே உதவி...
என்ன சார்... சர்க்கரைதானே! 
ஆமாம்.
ஓகே சார் வரும்போது வாங்கிட்டு வந்துடறேன்!
- மணி 10. ஆவடியில் பஸ் ஏறி, அம்பத்தூர் தொ.பே. வந்து, அலுவலகத்துக்குள் நுழைந்த வெங்கட்.டின் கையில் 1 கிலோ சர்க்கரை பொட்டலம்!
அதற்கு உண்டான ரூ.36ஐக் கொடுத்துவிட்டு, ஒரு மன்னிப்பு கேட்டுக் கொண்டேன். இரவு அலுவலக வேலை முடிந்து வீட்டுக்குப் போகும்போது எல்லா கடைகளும் அடைத்து விடுகிறார்கள். ஊரே நிசப்தமாக உறங்குகிறது. நான் எங்கே போய் அப்போது சர்க்கரையை வாங்க முடியும். காலை எழுந்தால், காபி பொடியை பில்டரில் போட்டு, டிகாக்‌ஷன் இறக்கி, காபி குடித்தால்தான் அடுத்த வேலை ஓடுகிறது. கூடவே 2 தமிழ், 2 ஆங்கிலம் என நாலைந்து செய்தித்தாள்களையும் வைத்துக் கொண்டு செய்திகளை மேய வேண்டியுள்ளது. இது மாற்ற முடியாத பழக்கமாகிவிட்டது.
இரண்டு மூன்று நாள்களாக சர்க்கரை டப்பா காலியாகி பல்லிளித்தது. சட்டையைப் போட்டுக்கொண்டு, வீட்டைப் பூட்டி, செல்போனை கையில் எடுத்து, ஒரு துணிப் பையையும் இடுக்கியபடி, தரைத்தளமாக இருந்தாலும் கீழே ஓரிரண்டு படிகள் இறங்கி தெருவில் இறங்கி, தெரு முக்கில் திருப்பத்தில் இருக்கும் கடைக்குப் போய், சர்க்கரை, தோசை மாவு, சேமியா, ரவை, ஏதேனும் காய்கறி என இந்த இத்யாதிகளை வாங்குவதற்குள்... அப்பாடா என்றாகிவிடும். கூட்டம் இருந்தால் ஒவ்வொருவருக்காக பொருளை எடுத்துக் கொடுத்து நம் முறை வருவதற்குள்... கால் மணியில் இருந்து அரை மணி கடந்துவிடும். இதற்கு சோம்பல்பட்டே... காலை நேரம் கடைக்குப் போக பெரும் சோம்பல்.!
வேறு வழி..! அடடே! கல்கண்டு இருக்கிறதே! அதைப் போட்டு காப்பி போட்டுக் குடித்து காலம் போக்கியாச்சு... சரி! காலை நேரம் அலுவலகம் போகும் போதாவது கடையில் வாங்கிக் கொண்டு போகணும்... நினைத்துக் கொண்டு வண்டியைக் கிளப்பினால்... அது நேரே அலுவலகத்தில்தான் போய் நிற்கிறது. ஹெல்மெட் கழற்ற சோம்பல்! சரி... மாலை நேரம் திரும்பும் போது வாங்கிக் கொள்ளலாம் என்றால்... அலுவலகத்தில் நேரம் போவது தெரியாமல்... பதினொன்றும் பன்னிரண்டும் ஆகிவிடுகிறது!
இந்த நிலையில்தான் இரவுப் பணிக்கு வரும் சக பணியாள நண்பர் வெங்கட்டிடம் வாங்கி வரச் சொல்லி, அவரை தொந்தரவு செய்கிறோமே என்ற குற்ற உணர்வு...
சர்க்கரையும் எடுத்துக் கொண்டு, விடைபெற்று மணியைப் பார்த்தால் 11.30. அப்படியே வண்டியை எடுத்துக் கொண்டு தெருவில் வந்தால்... மக்கள் நடமாட்டம்! ஆச்சரியத்தில் யோசித்தால்.. அட ஆங்கிலப் புத்தாண்டு! அதற்குத்தானா இந்த ஆர்ப்பாட்டம் எல்லாம். தெருவெங்கும் வெடியோசை. பாடி சாலையில் கடைகளில் இன்னும் நிறுத்தப் படாத மின்சார வெளிச்சம்! அப்படியே வில்லிவாக்கம் வந்தால்... சூப்பர் மார்க்கெட் கடைகளும் ஓரிரண்டு திறந்து வைத்து வியாபாரம் ஜரூர்... எல்லாம் புத்தாண்டு கொண்டாட்டமாம்!
தீபாவளி என்றால் 10 மணிக்கு மேல் வெடிக்கக் கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கும் நீதித் துறையும், ஜட்ஜ் பெருமக்களும், செயல்படுத்தும் காவல்துறையும் ஆங்கிலப் புத்தாண்டு என்று அலறிக் கொண்டு தெருவெல்லாம் டாஸ்மாக் போதையில் தள்ளாடி இரு சக்கர வாகனங்களில் மூவராய் பயணிக்கும் இளசுகளைக் கண்டும் காணாமல் விட்டுவிட்டு, இந்த ஒரு நாளைக்கு மட்டும் கறுப்புத் துணியை கண்களில் கட்டிக் கொண்டு மூடிவிடுவது ஏன்?
எல்லாம் இந்த மேல்நாட்டுக் கல்வி செய்த மாயம்தானே!? இந்த மாயம் நடக்கும் என்று திட்டமிட்டுத்தானே இருநூறு வருடங்களுக்கு முன்னர் மெக்காலே சொல்லிச் சென்றான்!
Rathnavel Natarajan சொன்னது…

அருமையான பதிவு.
நன்றி. வாழ்த்துகள்.

 
Copyright © 2013 செங்கோட்டை ஸ்ரீராம்
Shared by Alahappa Grafix