சுடச்சுட:

ஆலயங்கள்

இலக்கியம்

ஆன்மிகம்

From our Blog

திங்கள், ஜூன் 08, 2015

சொன்னது ஒன்று; புரிந்து கொண்டதோ வேறு: சம்ஸ்கிருத சிலேடை


பள்ளிப் பருவத்தில் ஒரு நாள். வகுப்பறையில் பாடம் எடுத்துக் கொண்டிருந்தார் ஆசிரியர்  பாடத்திட்டம் இல்லாமலே!  போன வருஷத்து அனுபவப் பாடமாம்! பள்ளி திறந்து மாதம் மூன்றாகி விட்டது; ஆனால் பாடத் திட்டம் வந்த பாடில்லை! அப்போது சொன்னார்… “நம்ம ஸ்கூலுக்கு சில ‘பஸ்’ தான் வருதேயொழிய, இன்னும் ‘சிலபஸ்’ வந்தபாடில்லை!”
அட! இந்த மாதிரி நாமும் பேசும்போது உபயோகித்தால் என்ன? என்ற ஆர்வம் அப்போது துளிர் விட்டது. அதன் பிறகு இருபொருள் தரும் சொல்லை அகராதியில் தேடத் தொடங்கியது மாணவ உள்ளம்.
இச் சொல் பயன்பாட்டில் சில நேரம் விபரீதம் தந்தாலும் பல நேரங்களில் சுகமாகத்தான் இருந்தது… காரணம் பலரும் பொருள் தெரிந்து ரசித்ததால். நம்மால் நாலுபேரை சந்தோஷப்படுத்த முடிகிறதே என்ற எண்ணம்தான்!
ஒரு நாள் இரவு பக்கத்து வீட்டு நண்பரிடம் “நாளை சீக்கிரம் எழுந்து நெல்லை ஜங்ஷனுக்குப்போகணும்…” என்று சொல்லி வைத்தேன். மறுநாள் காலை… வழக்கம் போல் சோம்பல். வியப்போடு பார்த்த நண்பர் கேட்டார்… “ஏ என்ன? போலயா?” கேள்வி கேட்ட வேகத்துக்கு ஈடு கொடுத்து “போல” என்றேன். விறுவிறுவென என் அப்பாவிடம் சென்ற நண்பர் சொன்னார்… “மாமா, உங்க பையன் என்னை ‘போல’ ண்ணு  சொல்லிட்டான்…”  ‘போகல’ என்ற சொல்லில் ‘க’ கண்ணாமூச்சி காட்டியதால் எழுந்த வினை இது!
சொலவடையா? சிலேடையா? எப்படி இருந்தால் என்ன? பயன்பாட்டில் கிடைக்கும் ஆனந்தமே தனிதான்! என்ன பேசுபவருக்கும்  கேட்பவருக்கும் மொழி நன்கு தெரிந்திருக்க வேண்டும் அவ்வளவுதான்! கி.வா.ஜ வின் சிலேடைகளைக் கேட்டு இன்புறாத தமிழர் உள்ளமும் உண்டோ?
தமிழில் மட்டுமல்ல, எல்லா மொழிகளிலும் இந்த உத்தி இருந்து வருகிறது. நம் இன்னொரு தொன்மையான மொழியான சம்ஸ்க்ருதத்திலும் சிலேடைக்கவிகள் ஏராளம். அவற்றில் பெரும்பாலும் உவமையாகவே கையாளப்பட்டிருக்கும். தமிழில் கடைசி முடிப்பு, இரண்டுக்கும் பொதுவாக அமைந்து அழகு காட்டுவது போல், பெரும்பாலும் சம்ஸ்க்ருதத்தில் பாடலின் முதல் வரியிலேயே சிலேடை இன்பம் வெளிப்படும். காளமேகப் புலவரின் சிலேடை வெண்பாக்களை எவ்வளவு தூரம் நாம் அசை போட்டிருப்போம்…? ‘எள்ளுக்கும் பாம்புக்கும்’ காட்டும் ‘ஆடிக்குடத்தடையும்’ பாடல் நம் காதுகளிலே ரீங்காரம் இடுகிறதே!
ஒரு சம்ஸ்க்ருதக் கவி…
ஜீவனக்ரஹணே நம்ரா: க்ருஹீத்வா புநருந்நதா:/
கிம் கனிஷ்டா: கிமு ஜ்யேஷ்டா: கடீயந்த்ரஸ்ய துர்ஜனா://
கடீ யந்த்ரம்  நீர் இறைக்கும் எந்திரம்  ஏற்றச்சால். துர்ஜனா  தீயோர். சந்தர்ப்பவாதி என்றும் கொள்ளலாம். இவ்விரண்டில் எந்திரம் தீயவனுக்கு இளையவனா? மூத்தவனா? என்று கேள்வி கேட்டு, இரண்டுக்குமான ஒப்புமையை இரு பொருள் தரும் வகையில் கவி கையாண்டிருக்கிறார். ‘ஜீவன க்ரஹணே’ என்றதில் ‘ஜீவனம்’ என்று, தண்ணீருக்கு ஒரு பெயர் உண்டு. ஜீவிகை என்றதான உயிர் வாழ்தலுக்கும் ஒரு பெயர் உண்டு. ஏற்றச் சாலில் தண்ணீர் மொண்டு கொள்வதற்காக அது கிணற்றில் இறங்கும்போது, தலை தாழ்த்தியிருக்கும். நீரை மொண்டு கொள்ளும் வரையில்தான் தலை வணங்கும்; மொண்டு கொண்ட பிறகு உடனே தலை தூக்கும். அதுபோல் தீயோர்(சுயநலவாதிகள்) பயன் அடையும் வரையில்தான் மற்றோர் காலில் விழுந்து கிடப்பர். பிறகு செருக்கோடு தலை நிமிர்ந்து அலைவர்.
இதுபோல் கத்திக்கும் கருமிக்குமான சிலேடை சுவையானது; உள்ளத்தை ஊடுருவுவதும் கூட!
த்ருடதர நிபத்தமுஷ்டே: கோச நிஷண்ணஸ்ய ஸஹஜமலிநஸ்ய/
க்ருபணஸ்ய க்ருபாணஸ்ய ச கேவலமாகாரதோ பேத://
க்ருபணன்  கருமி; க்ருபாணம்  கத்தி. இரண்டுக்கும் உச்சரிப்பில் ஒரு ‘ஆ’காரம்தான் வேற்றுமையே தவிர இரண்டின் சுபாவமும் ஒன்றுதான்! இவ்விரண்டின் சுபாவத்தை மூன்று விஷயங்கள் ஒற்றுமைப்படுத்தி, சிலேடை இன்பம் தருகிறது. ‘த்ருடதர நிபத்தமுஷ்டே’  கத்தியைக் கையில் பிடிக்க, நன்றாக முஷ்டி பிடித்து இறுக்கிப் பிடிக்க வேண்டும். கருமியும் அப்படியே! எங்கே கை திறந்தால் காசு விழுந்து விடுமோ என்று அஞ்சி கையை இறுக்கிப் பிடித்திருப்பான். ‘கோச நிஷண்ணஸ்ய’  கத்தி உறையையும் பொக்கிஷத்தையும் ‘கோசம்’ என்பர். கத்தி அதன் உறையில் தங்கும். கருமி எப்போதும் பொக்கிஷத்தைக் காவல் காத்து, பூட்டைப் பற்றியவாறு தொங்கிக் கொண்டு கிடப்பான். ‘ஸஹஜ மலிநஸ்ய’  கத்தி, இரும்பால் செய்யப்படுவதால் இயற்கையாகவே கருப்பாக இருக்கும்; அழுக்கடைந்து துருப்பிடித்து இருக்கும். கருமியோ வெள்ளைத் துணி அழுக்காகும்; அதை சலவைக்குக் கொடுத்தால் காசு செலவாகுமே என்று அஞ்சி அழுக்குத் துணியையே அணிந்திருப்பான். ஒரு அலங்காரமும் செய்து கொள்ளாமல் மலினனாகவே இருப்பான். அதனால் இவ்விரண்டுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை; ‘கேவலம் ஆகாரதோ பேத:’ என்றபடி ‘ஆ’கார சப்தத்தில் மட்டுமே வேற்றுமை என்பதை உணரலாம்.
இப்படி ஒரு பொருளுக்கும் மனிதனின் குணத்துக்கும் ஏற்ப ஒப்பிட்டு சிலேடை இன்பத்தைத் தருவது கவிகளுக்குக் கைவந்த கலையே!
கண்ணனைப் பாடிய கவிகள், எத்தனையோ சொல்லின்பத்தையும் பக்தி இன்பத்தையும் தந்திருக்கிறார்கள். கண்ணனின் குறும்புகளை தம் கவித்திறனால் அழகுற வெளிப்படுத்திய நம் பாரதியைப் போல், பிற இந்திய மொழிகளிலும் இச்சுவை உண்டு. ‘தீராத விளையாட்டுப் பிள்ளை’யில்,  ‘பின்னலைப் பின்னின்று இழுப்பான், தலை பின்னே திரும்புமுன்னே சென்று மறைவான்…’ என்று கோபியருடன் கண்ணன் செய்த குழந்தைத் தனக் குறும்புகளை பாரதி வெளிப்படுத்தியது போல், சம்ஸ்க்ருதக் கவிஞரும் இதைப் பாடியிருக்கிறார். அதிலே சிலேடை உண்டு; கண்ணனின் வார்த்தை சமத்காரமும் உண்டு.
அம்ஸே ஸலீலமதிரோப்ய சுகம் ஸ்வஹஸ்தாத்
கோப்யா பயாகுல த்ருச: குதுகீ முகுந்த:/
அம்ஸம்கதம் சுகமிஹா பநயேதி வாசம்
தஸ்யா நசம்ய ச ததம் சுகமாசகர்ஷ//
கண்ணனின் லீலா விநோதம் இந்தப் பாடலில் அனுபவிக்கப் படுகிறது. கண்ணன் ஒரு கோபியின் தோளில் விளையாட்டாக ஒரு கிளியை ஏறவிட்டான். திடீரென ஏதோ ஒன்று தோளில் தட்டுப்பட, பயந்து போன கோபி கண்ணனிடம் சொன்னாள்… “ஹே க்ருஷ்ணா, அம்ஸம் கதம் சுகம் அபநய…” என்று! அம்ஸம்  தோளை, கதம்  அடைந்திருக்கும், சுகம்  கிளியை, அபநய  அப்புறப்படுத்து… அதாவது, “கண்ணா! என் தோளின் மேல் ஏறியுள்ள இக் கிளியை அகற்று” என்ற பொருளில் சொன்னாள்.
ஆனால் அதை அப்படியே கேட்டுச் செய்தால் கண்ணனுக்கு என்ன சிறப்பு? கண்ணன் குறும்பு எப்படி வெளிப்படும்? கோபி சொன்ன வார்த்தைக்கு சிலேடையாகப் பொருள் கொண்டு, கண்ணன் ஒரு குறும்பைச் செய்கிறான்…
கோபி சொன்ன ‘அம்ஸம் கதம் சுகம் அபநய’  என்பதையே, ‘அம் ஸங்கதம் சுகம் அபநய’ என்று ஆக்கிக் கொண்டான் கண்ணன். அம் ஸங்கதம்  அம் என்ற எழுத்தோடே சேர்ந்த; சுகம் அபநய  சுகத்தைத் தள்ளு… அதாவது, அம் என்பதோடு சேர்ந்த சுகம்  அம்சுகம்! அதற்கு ‘ஆடை’ என்று பொருள்! இப்படிப் பொருள் கொண்டு, அம் என்ற சுகத்தோடு அம்சுகத்தைத் தள்ளு என்று பொருள் கொண்டு, கோபியின் தோளின் மேலேறியிருக்கும் மேலாடையைப் பிடித்திழுத்தான்… பிறகு “கோபி நீ சொன்னபடியேதான் நான் செய்தேன்…” என்று கள்ளச் சிரிப்பும் சிரித்தான்!
கட்டுரை: செங்கோட்டை ஸ்ரீ.ஸ்ரீராம்

வியாழன், ஏப்ரல் 23, 2015

கற்பனை மேடைப் பேச்சு: தாலி... நூலு.... அறுப்பு....


இப்ப நடக்கற கூத்தையெல்லாம் வெச்சி...
நாமும் ஒரு இயக்கம் தொடங்கி...
அதுக்கு நாமே ஒருங்கிணைப்பாள தலைவனா இருந்து...
அதுக்கும் நாமே காசு கொடுத்து கூட்டம் சேத்து.... இவங்கள மாதிரியே மேடையில பேசினா....
எப்டி இருக்கும்...?????
அந்தப் பேச்சையும் நாமே ரிப்போர்ட் எடுத்து,
நாமே எடிட் செய்து,
நாமே ஒரு பேப்பர் நடத்தி,
நாமே அதை வெளியிட்டு..
நாமே (நாம் மட்டுமே ) அதைப் படித்துப் பார்த்தா எப்படியிருக்கும்....???
கற்பனைக்கு எல்லை இருக்கா என்ன???
அரசியலை அவர்கள் கேலிக் கூத்து ஆக்கி விட்டார்கள் என்பதால்... நாமும் ஒரு கேலிக் கூத்து ஆடுவோமே.....
இப்படியாக... குதிரையைத் தட்டி விட்டோமா... தட தடன்னு அது ஓடுச்சா...அப்படியே அது கொட்டுச்சா.....
முடிஞ்சா நீங்களும் படிச்சி உங்க மேடைப்பேச்சையும் இங்க நீட்டி முழக்குங்க...
*****
இதோ நம்ம ரிப்போர்ட்டிங்:
*****
தாலி, பூணூல் அறுத்து திருமண பந்தத்தை அடிமை எனும் தி.க. தொண்டர், தம் அடிமைக் கயிற்றை அறுத்து தி.க. தலைவர் ஆக முடியுமா? : செந்தமிழன் சீராமன் கேள்வி
சென்னை:
அண்மையில் தி.க.வினர் சித்திரை தமிழ்ப் புத்தாண்டு நாளில் மேடையில் தாலியறுப்பு நிகழ்ச்சி நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இரு தினங்களுக்கு முன்னர் மயிலாப்பூர், மே. மாம்பலத்தில் வயதான இரு பூசாரிகளின் பூணூல் அறுக்கப்பட்டதைக் கண்டித்தும், தெய்வத்தமிழ் இயக்கம் சார்பில் மயிலாப்பூர் மாங்கொல்லையில் கண்டனக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில், அந்த இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீராமன் தலைமை தாங்கிப் பேசினார். அப்போது, தாலி, பூணூல் அறுத்து, திருமண பந்தத்தை அடிமை என்று கூறும் தி.க. வைச் சேர்ந்த தொண்டர், நெடு நாட்களாக தாமும் தம் வாரிசுகளும் கொத்தடிமைகளாக ஒரு தலைக்கும் குடும்பத்துக்கும் அடிமைப் பட்டுக் கிடக்கும் நிலையை உணர்ந்து, அடிமை விலங்கை உடைத்து, கயிற்றை அறுத்து வெளியில் வந்து தாமே அதற்கு தலைவன் ஆகிக் காட்ட முடியுமா என்று கேள்வி எழுப்பினார்.
அவர் மேலும் பேசியது....
தாலி என்பது பெண்ணுக்கு வேலி என்றார்கள். ஆனால் காலிப் பயல்கள் அதை போலி என்கிறார்கள். ஒரு பெண்ணின் நெற்றி வகிடையும் கழுத்தில் தாலிக் கயிறையும் பார்த்தால், இவள் வேறொருவன் மனைவி என்று கருதி, எந்த ஓர் ஆடவனும் அவளை மரியாதையாகப் பார்த்து விலகிச் செல்வான். இது தமிழர் நாகரிகம்.
ஆனால்... நடந்தது என்ன? இந்தியா முழுதும் பரந்து விரிந்த ராமாயணக் கதையில், ராவணனின் கதாபாத்திரத்தை இவர்கள் தமிழன் என்றார்கள். பிறன் மனை நோக்கி தன் குடியைக் கெடுத்துக் கொண்ட அரக்கன் ராவணன் தமிழன் என்று தூக்கிக் கொண்டாடுபவர்கள், அவனது செயலையே மேற்கொள்ள எண்ணம் கொண்டார்கள் என்றே தோன்றுகிறது. பிறன் மனை நோக்கல் தீதென்ற பரம்பரையில் வந்தவர்களிடம், பிறன் மனை நயத்தலாக, மாற்றான் தோட்டத்து மல்லிகை என்று சிறுமைப் படுத்திய கயமைக் கூட்டத்தில் வந்தவர்கள் பிரசாரம் செய்கிறார்கள் என்று சொல்லும்போது, அவர்களுக்கும் அப்படி ஒரு தனி நாகரிகத்தை ஏற்படுத்திக் கொடுத்த தலைவர்கள், தங்கள் முன்னோரை நனி நாகரிகர் என்று விளித்ததை விளங்கிக் கொள்ளாமல் போனார்களோ என்று வெட்கப் படுகிறேன், வேதனைப் படுகிறேன். துக்கப் படுகிறேன், துயரப் படுகிறேன்...
இவ்வகையில், தாலி கட்டியிருந்தால் அடுத்தவன் மனைவி என்று தன் அறிவுக்கு எட்டி, ஏதோ ஒரு மூலையில் இருக்கும் தன் முன்னோரான நனி நாகரிகரின் நற்பண்பு தனக்கும் வந்து விடுமே என்ற எண்ணத்தில்தான், தாலியை தன் கண்ணுக்குத் தெரியாமல் செய்வதற்காக, தாலி ஒரு அடிமைச் சின்னம் என்றுகூறி பெண்களின் மூளையை மழுங்கடித்து, தன் சுய இச்சையைத் தீர்த்துக் கொள்ள வழி செய்து கொள்கிறார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.....
பெண்ணாக இருந்தால் சரி... கழுத்தில் தொங்கும் கயிறு அடிமைச் சின்னம். அட.. ஆணுக்கு என்னய்யா வந்தது?
பூணூல் அணிபவன் பார்ப்பனன் மட்டுமா? எத்தனையோ சாதிக்காரர்களும் தான் அணிகிறார்கள். ஆனால் இதிலும் ஒரு சூட்சுமம் உள்ளது என்பதை எண்ணிப் பார்க்கும் போது உடலெல்லாம் அப்படியே சிலிர்க்கிறது. மயிர்க் கூசுகிறது. உள்ளம் பூரித்துப் போகிறது.
பெண்ணுக்கு மட்டும்தான் திருமணம் ஆன அடையாளம் இருக்க வேண்டுமா? ஆணுக்கு கிடையாதா என்று அந்தக் காலத்தில் நம் முன்னோர் யோசித்துதான் இப்படி ஒரு பழக்கத்தை கொண்டு வந்தார்கள்.
வயசில் சின்ன பையன்களுக்கு பூணூல் கிடையாது. படிக்கும் வயது எட்டியதும், ஒரு முடிச்சு பூணூலை போடுவார்கள். அவன் படிக்கும் மாணாக்கன் என்பதாக. அவனே திருமண வயது வந்ததும், இரண்டு முடிச்சுகளாக... அதாவது ஒரு முடிச்சு கொண்ட தலா இரு பூணூலை அணிவிப்பார்கள். இந்த சடங்கு, அந்த ஆடவன் திருமணமானவன் என்பதை உலகுக்கு தெரியப்படுத்தும். அவனே ஒரு குழந்தைக்கு தந்தையாகும் போது, அவன் குழந்தை பெற்றவன் என்பதை வெளிப்படுத்த மூணு பூணூலை அணிவிப்பார்கள். அதைக் கண்டு கொள்ளும் உடன் இருப்போர், உறவினர், அல்லது அறிமுகமற்ற நபர்கள், அந்த நபர் திருமணமானவன் என்பதை உறுதிப் படுத்திக் கொண்டு, ஏமாற்றாமலோ, ஏமாறாமலோ தடுத்தார்கள்.
ஆனால், இப்போது நடப்பது..... திருமணம் ஆனதையே மறைத்து எத்தனை திருமணமும் செய்து கொள்ளலாம், யாரை வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் நோக்கலாம், பாக்கலாம், தூக்கலாம் என்ற காட்டுமிரான்டித் தனமான நிலையை ஒரு நாகரிக சமுதாயத்தில் ஏற்படுத்த முனைகிறார்கள் என்பதை எண்ணிப் பார்க்கும் போது, ஐயஹோ.. இதை நோக்கியா இந்த சமுதாயம் செல்ல வேண்டும் என்று ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு கணமும், கடிகார முள் டிக் டிக் என்று அடிக்கும் ஒவ்வொரு சத்தத்தின் போதும் என் இருதயமும் டக் டக் என்று அடிக்கிறது.
பெண்ணுக்கு தாலி , கல்யாணமானதைக் காட்டிக் கொடுக்கும் அடிமைச் சின்னம் என்று கூறி அறுத்து எறிகிறார்கள்.
ஆணுக்கும் பூணூல் கல்யாணமானதைக் காட்டிக் கொடுக்கும் அடிமைச் சின்னம் என்று எண்ணி அறுத்து எறிகிறார்கள்.
நான் கேட்கிறேன். கல்யாணம் ஆனவன் அல்லது ஆனவள் என்பதை உலகுக்குத் தெரியப் படுத்தும் ஒரு சின்னத்தை அறுத்து அறிவதில் அப்படி என்ன குரூர புத்தி உங்களுக்கு? இதை செய்து நீங்கள் என்ன சாதிக்கப் போகிறீர்கள்? கல்யாணம் ஆகாதவள் அல்லது ஆகாதவன் என்று உங்கள் மனசுக்கும் வெளியிலும் காட்டுவதால் எப்படிப்பட்ட காட்டுமிராண்டித் தனங்களை இந்த சமுதாயம் சந்திக்கும் என்பதை நீங்கள் அறிவீர்களா?
அது சரி... நான் கேட்கிறேன்... இவற்றை எல்லாம் அடிமைக் கயிறு என்கிறீர்களே... நீங்கள் எத்தனைக் காலமாக இவர்களின் சுய இச்சைக் கொள்கைகளுக்கு அடிமைப் பட்டு, உங்கள் சுயத்தைத் தொலைத்து, சுய மரியாதையைத் தொலைத்து, அடிமை வாழ்க்கை வாழ்ந்து, உங்கள் பிள்ளை, பேரன் என கொத்தடிமைகளாக்கி... அடிமை, கொத்தடிமை, சொத்தடிமை, சோத்து அடிமை என அடிமைகளாக இருக்கிறீர்களே... என்றாவது நீங்கள் சிந்தித்துப் பார்த்ததுண்டா..? கேட்கிறேன்.... எத்தனை நாட்களுக்கு நீங்கள் கொடி பிடிப்பீர்கள், கோஷம் போடுவீர்கள்? சமத்துவம் சகோதரத்துவம் என்றெல்லாம் பேசுகிறீர்களே... அந்த சமத்துவப் படி, பெரியார் சொத்து உங்களுக்கு கிடைத்ததா? அட... அந்த புத்தகமாச்சும் பொதுச் சொத்தாகி, உங்களுக்கு ஒரு பாகமாவது கிடைத்ததா? என்றாவது ஒரு நாள் நீங்களும் தலைவன் ஆக வேண்டும் என்று யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா?
அவ்வளவு அடிமைப் புத்தியை வைத்துக் கொண்டு, நீங்கள் அடுத்தவரின் அடிமைத் தனத்தைப் பற்றிச் சொல்ல வேண்டியது தான்? வெளங்கும் இந்த நாடு. வெளங்கும் உங்கள் கொள்கை... இன்னும் பேச நிறைய இருக்கிறது. ஆனாலும், மணி பத்தைத் தாண்டி, பத்து மணி ஒரு நிமிடம் ஆகி, நொடிகள் கடந்து உங்கள் மூளை எல்லாம் வாட்டத்தைச் சந்திப்பதை என் உள்ளம் உணர்ந்து கொண்ட காரணத்தால், இத்துடன் என் சுய ஊக்க சிந்தனையை உங்களிடம் விதைத்துக் கொண்டேன் என்ற மன திருப்தியோடு என் பேச்சை நிறைவு செய்கிறேன். வாழ்க தமிழ். வெல்க தமிழ். திராவிடத்தை ஒழித்து, தமிழைத் தூக்கிப் பிடிப்போம் என்று கூறி அமைகிறேன். நன்றி வணக்கம். "
என்று பேசினார் செந்தமிழன் சீராமன்.
தெய்வத் தமிழ் இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் ஏராளமானோர் முக்காடு போட்டு முழங்காலிட்டு அமர்ந்தபடி கலந்து கொண்டனர்.

திங்கள், ஜனவரி 12, 2015

கோபமும் வீரமும் வேறுபடுவது எங்கே? : தேசிய இளைஞர் தினத்தில் ஒரு சிந்தனை!


ஜனவரி 12 ஆம் நாள் சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினம். நாட்டின் இளைஞர்களுக்கெல்லாம் ஆதர்ஷ புருஷராக விளங்கியவர் சுவாமிஜி. இந்தியாவின் இளமை அடையாளத்தை உலகுக்கு உணர்த்தியவர். சுவாமிஜியின் பிறந்த தினத்தை தேசிய இளைஞர் தினமாகக் கொண்டாடி மகிழ்கிறார்கள் சுவாமிஜியின்பால் பற்றுள்ளவர்கள். இது அரசின் அதிகாரபூர்வ நாளாகவும் அறிவிக்கப்பட்டால், விவேகானந்தரின் உலக சாதனையை நாடே நினைவுகூர்வதாக அமையும்!
காஞ்சிபுரத்திலுள்ள ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் இளைஞர் தினத்தை ஒட்டி ஒரு சொற்பொழிவு நிகழ்த்த அழைத்திருந்தார் மடத்தின் தலைவர் சுவாமி தர்மாத்மானந்தர். (அன்பு ததும்பும் அவர் வார்த்தைகளால், இளையோர் பட்டாளம் அவரை மொய்ப்பதைக் காண ஆனந்தமாக இருந்தது.) சுவாமிஜியின் செய்தியை  இளைஞர்களுக்கு சொல்வதைவிட வேறு மனநிறைவு என்ன இருக்கப்போகிறது! காரணம்- நாட்டைப்பற்றிய சிந்தனை; சமூகம் பற்றிய கோட்பாடு; எளியோரையும் எல்லோரையும் அரவணைத்துச் செல்லும் சமயம் / பக்தி மார்க்கம் - குறிப்பாக, வீரத்தை மையமாகக் கொண்ட அவரது கம்பீரம் போன்றவற்றை மாணவர்கள் நிச்சயம் அறிந்துகொள்ள வேண்டுமே!
ஒரு சுபாஷிதம்: (பொன்மொழி)
அச்வம் நைவ கஜம் நைவ வ்யாக்ரம் நைவச நைவச|
அஜாபுத்ரம் பலிம் தத்யாத் தேவோ துர்பல காத:||
அச்வம் - குதிரை; கஜம் - யானை; வ்யாக்ரம் - புலி; அஜாபுத்ரம் - ஆட்டுக்குட்டி...
இந்த சுபாஷிதத்தின் பொருள்: (பலமுள்ள) குதிரையோ யானையோ புலியோ பலியிடப்படுவதில்லை; (பலவீனமான) ஆட்டுக்குட்டிதான் பலியிடப்படுகிறது. அதுபோல் (துர்பலனான) பலவீனமானவனுக்கு தேவர்களின் பெயராலும் துன்பமே நேரும். எனவே வீரம் நிறைந்தவனுக்குத் துன்பம் தர யாருமே சற்று யோசிப்பார்கள் என்பது புரிகிறதல்லவா?!
சுவாமிஜி இதை எளிமையாக "பலமே வாழ்வு; பலவீனமே மரணம்!' என்று ஒற்றை வாக்கியத்தில் முழங்கிவிட்டுச் சென்றிருக்கிறார். வீரம் நெஞ்சில் இருக்கும்போது தானே பலம் வெளித்தெரிகிறது.
அந்த வீரம் எப்படிப்பட்டதாக இருக்கவேண்டும்? நல்ல குணமுள்ள எளியோருக்கு இரக்கம் காட்டவும், கொடுமதி படைத்த வலியோரை வீழ்த்தவும் உரமுள்ளதாக இருக்கவேண்டும். பலரும் வெற்று வார்த்தைகளால் வீரம் காட்டி, மனத்தால் கோழைகளாகிவிடுகிறார்கள். அவர்களிடம் வெளித்தெரிவது கோபம் - சினம் தானே ஒழிய வேறல்ல! அப்படிப்பட்டவர்களால் சுற்றமும் நட்பும் கெட்டுவிடுகிறது என்பது வள்ளுவர் வேதம். (சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி...)
வீரத்துக்கும் கோபத்துக்கும் நூலிழைதான் வேறுபாடு!
கோபம் இருக்கும் இடத்தில்தான் குணமும் இருக்கும் - என்கிறார்கள். அப்படிப்பட்டவர்கள் சந்தர்ப்பவாதிகள்; சுயநலமிகள் என்பது என் எண்ணம். எப்படி? - வார்த்தை உக்கிரத்தால் பிறர் மனத்தைக் காயப்படுத்திவிட்டு, சொல்லாலும் செயலாலும் தன் கோபத்தைப் பிறர் மீது திணித்துவிட்டு, அடுத்த சில நொடிகளில் அவர்கள் அடங்கிப் போவார்கள். சமாதானம் பேசுவார்கள். காரணம் - காரியம் நடக்கவேண்டும். ஆனால் வார்த்தை வடுக்களால் காயமுற்ற பிறர் நெஞ்சோ, அந்த ரணத்திலிருந்து கொஞ்சமும் ஆறாமல் அப்படியே இருக்கும்.
ஸ்டீபன் கோவே என்பாரின் "90/10 கொள்கை' கட்டுரையை ஒருமுறை வாசித்தேன். அந்தக் கட்டுரையின் சாரம்...
10% வாழ்க்கை, உங்களுக்கு என்ன நடக்கிறது என்பதைப் பொறுத்தது. 90% வாழ்க்கை, நீங்கள் அதற்கு ஏற்ப எப்படி நடந்துகொள்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது. அந்த 10% த்தை நாம் கட்டுப்படுத்தமுடியாது. உதாரணத்திற்கு, பஸ், கார் பிரேக் டவுன் ஆவதையோ, ஏரோப்ளேன் தாமதமாவதையோ, டிரைவரால் கார் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொள்வதையோ... குறிப்பாக பிறரால் நமக்கு நேரும் இதுபோன்ற விஷயங்களையோ நம்மால் கட்டுப்படுத்த முடியாது. ஆனால் மீதமுள்ள 90% த்தைத் தீர்மானிப்பது நாமே!
ஒரு வாழ்க்கை உதாரணம்:
குடும்பத்தோடு காலைச் சிற்றுண்டி சாப்பிட்டுக் கொண்டிருக்கிறீர்கள். அப்போது உங்கள் செல்ல மகள் காபி கொண்டு வருகிறாள். எதிர்பாராமல் கால் தடுக்கி கை அசைந்து காபி உங்கள் அழகான சட்டையில் அபிஷேகம் செய்துவிடுகிறது. இச்செயலுக்கு நீங்கள் பொறுப்பாக முடியாது. இச்செயலை உங்களால் கட்டுப்படுத்தவும் முடியாது. காரணம் - எதிர்பாராமல் நடந்தது. ஆனால் அதற்குப் பிறகு நடக்க வேண்டியதை நீங்கள் தீர்மானிக்க முடியும்.
ஆனால் நடப்பது? உங்கள் மகளைக் கோபத்தால் திட்டுகிறீர்கள். அஷ்டகோணலான உங்கள் முகத்தைக் கண்ட அப்பெண் உடனே காபிக் கோப்பையைத் தடாலெனப் போடுகிறாள். கண்களில் "பொலபொல'வென கங்கைப் பிரவாகம். திட்டிமுடித்தபிறகு உங்கள் மனைவியிடம் சொல்கிறீர்கள்... ""ஏன் காபிக் கோப்பையை சட்டை அருகே கொண்டு வந்து நீட்டவேண்டும்? அப்படி தொலைவிலேயே வைத்துவிடக் கூடாதா?'' கேட்டுக் கொண்டே மாடியில் உங்கள் அறைக்குச் சென்று வேறு உடை மாற்றிக் கொண்டு வருகிறீர்கள். அப்போதும் உங்கள் மகள் அழுதுகொண்டே மெதுவாகச் சாப்பிடுகிறாள் - வேண்டா வெறுப்பாக! பிறகு பள்ளி செல்லத் தயாராகி வெளியே வந்தால் பள்ளிப் பேருந்து போய்விட்டது... உங்கள் மனைவியோ உடனே செல்லவேண்டும்! என்ன செய்ய? மகளைக் காரில் ஏற்றிக் கொண்டு பள்ளிக்கு விரைகிறீர்கள் - காரை வேகமாக ஓட்டியபடி! 40 கி.மீ வேக வரையறை மறந்து 60 கி.மீட்டரில் ஓட்டுகிறீர்கள். நேரமாகிவிட்டதே! போலீஸ்காரர்கள் சும்மாயிருப்பார்களா? உரிய தண்டத்தொகை செலுத்திவிட்டு பள்ளிக்குப் போனால், கார் கதவைத் தடாலெனத் திறந்து உங்கள் மகள் "குட்-பை' கூட சொல்லாமல் பள்ளிக்குள் ஓடுகிறாள். பிறகு 20 நிமிட தாமதத்தில் அலுவலகம் நுழைந்தால், அவசரத்தில் முக்கியமான கைப்பெட்டி "மிஸ்ஸிங்!' -அது வீட்டில்! உங்கள் நாள் மிக மோசமாக அன்று தொடங்கப்பட்டிருக்கிறது. இதுவே தொடர்ந்தால் அன்றைய வேலைகள் அதோகதிதான்! எப்படியோ சமாளித்து மாலை வீட்டிற்குள் நுழைந்தால் உங்களுக்கும் உங்கள் மனைவி மகளுக்கும் இடையே மவுனயுத்தம் தொடங்கியிருப்பதை நீங்கள் உணர்வீர்கள். இது எதனால்? நீங்கள் காலையில் நடந்துகொண்ட முறை     யினால். உங்கள் தினம் ஏன் அன்று மோசமானது?
1. காபியாலா? 2. மகளாலா? 3. போலீஸ்காரராலா? 4. உங்களாலா?
நிச்சயம் உங்களால்தான். காபியால் அன்று உங்களுக்கு நேர்ந்ததைக் கட்டுப்படுத்த முடியாது. ஆனால் அதற்கு அடுத்த 5 நிமிடங்களில் நீங்கள் நடந்து கொண்ட முறையே அன்றைய உங்கள் நாளைப் பாழாக்கியது. அதற்குப் பதிலாக, காபியை இப்படி சட்டையில் கொட்டிவிட்டோ மே என்று துணுக்குற்ற மகளிடம், "சரி, பரவாயில்லை; இனி இப்படிச் செய்யாதேம்மா' என்று அன்போடு கூறி, அடுத்த நிமிடத்திலேயே மாடிக்குச் சென்று வேறுசட்டை மாற்றிக் கீழே வரும்போது உங்கள் செல்ல மகள் "டாடா' சொல்லி வலியவரவழைத்த புன்னகையோடு "பஸ்' ஏறியிருப்பாள். நீங்களும் 5 நிமிடம் முன்னதாக அலுவலகம் சென்று மேலதிகாரிகளிடம் "ஹவ் எ நைஸ் டே' என்று புன்னகை பதிலைப் பறிமாறியிருக்கலாம்.
இரண்டுக்கும் உள்ள வேற்றுமையைப் பாருங்கள். 90% உங்கள் கைகளில்தானே உள்ளது. 90/10 கொள்கையை உங்கள் வாழ்க்கையில் கடைபிடிக்க சில வழிகள்...
* உங்களைப் பற்றி தவறாக யாராவது சொல்லிக் கொண்டிருந்தால், கோபத்தை ஆயுதமாக்கக் கூடாது. கண்ணாடி அறையினுள் தண்ணீரைப் பீய்ச்சியடிப்பதுபோல் மனத்தைத் தெளிவாக்கி அகன்று விடலாம். சூழ்நிலைக்குத் தக்க, பொறுமையோடு கையாளலாம்.
* வேகமாகச் சென்று கொண்டிருக்கும் உங்கள் காரை வழிமறித்தால்... வேலையிழப்பு நேர்ந்தால்... விமானமோ ரயிலோ தாமதமானால்... பார்க்கவேண்டிய நபர் இல்லாமல் போனால்... - இப்படி பல சந்தர்ப்பங்களில் 10/90 கொள்கையைக் கடைப்பிடித்தால் வாழ்க்கை இனிதாகும். அது உங்கள் கையில்... - இப்படி நீண்டுகொண்டே போகிறது ஸ்டீபன் கோவேயின் கட்டுரை.
வாரியார் சுவாமி ஓரிடத்தில் கோபம்பற்றிச் சொல்வார்... ""சூடான பால் ஆறவேண்டும் என்றால் அதை வேறு டம்ளரில் மாற்றி ஊற்றி ஆற்றவேண்டும். அதுபோல் சூடான சூழ்நிலையால் உங்கள் மனம் சலனமுற்றால் அந்த இடத்தைவிட்டு அகன்று விடவேண்டும்.'' - இது ஒரு வழி.
பிறர் உங்களைக் கோபப்படுத்தும்படி நடந்துகொண்டால் இப்படி நடந்துகொள்ளலாம். ஆனால் நீங்கள் பிறரைக் கோபப்படுத்தாமல் இருக்க ஒரு வழி உண்டு. பொதுவாகச் சொன்னால் - அடுத்தவர் குறைகளைப் பெரிதுபடுத்திப் பேசாமல் இருப்பது. பெரும்பாலும் மனிதன் அவதூறுகளைக் கண்டே கோபம் கொள்கிறான்.
குண தோஷௌ புதோ க்ருஹ்ணந்  இந்துக்ஷ்வேளா விவேச்வர:|
சிரஸா ச்லாகதே பூர்வம் பரம் கண்டே நியச்சதி||
உலகில் குணமே இருப்பவனும் குற்றமே இருப்பவனும் யாருமிலர். அனைவருக்கும் இரண்டும் கலந்தே இருக்கும். ஆனால் விவேகியானவன், இரண்டையும் தெரிந்து கொண்டு ஒருவனின் குற்றங்களை வாய்விட்டு வெளிவிடாமலும், குணங்களைத் தலையில் தூக்கிக் கொண்டாடியும் வாழவேண்டும். இதற்கு உதாரணம் - சிவபெருமான். மகாவிவேகியான பரமசிவனுக்கு, ஆலகால விஷமும் சந்திரனும் கிடைத்தன. சந்த்ரமௌலீச்வரன் என்ற பேருக்குத் தக்கபடி, தண்ணொளி பரப்பும் வெண்ணிலாவைத் தன்தலையில் வைத்துக் கொண்டாடுகிறான். நீலகண்டன்; காலகண்டன் எனும் பேர்களுக்குத் தக்க, விஷத்தைத் தன் கழுத்தில் அடக்கி மறைத்துவிட்டான். ஆனால் உலகில் நாமோ, பிறர் குணங்களை மறைத்து குற்றங்களையே வெளியிடுவோராயுள்ளோம்! மகனிடம் பாடம்கேட்ட அந்த அப்பனிடமிருந்து, பிள்ளைகள் கற்கவேண்டிய பாடம் இது என்று தோன்றுகிறது. ஆனால் குணம், குற்றத்துள் ஒருவனுக்கு எது அதிகமாக இருக்கிறதோ, அதையறிந்து, அவனை சேர்க்கவோ விலக்கவோ வேண்டும் என்கிறார் வள்ளுவர். ஒரு வகையில் இதுவும் நன்மை தருவதே!
குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல்.
- இது இந்தக் கருத்துக்கான வள்ளுவன் குறள்.
இனத்தை சுகத்தை இனிதாய் விரும்பின்
சினத்தை அடக்கல் சிறப்பு.            
- இது முந்தைய கருத்துக்கான என் குரல்.

திங்கள், ஜனவரி 05, 2015

பேராசிரியர் இல.ஜானகிராமன் நினைவலைகள்:: கம்பன் என்ற கணக்குச் சக்கரவர்த்தி


இலக்கியச்சாரல் அமைப்பில் இருந்து ரசிகமணி டிகேசி நினைவு விழா நடத்துவதாகவும், அதற்கு, செங்கோட்டையில் இருந்து ஜனார்த்தனன் சாரை அழைத்து வர முடியுமா என்றும் கேட்டார் அந்த அமைப்பின் நிறுவனர் கவிமாமணி இளையவன்.
அவர் வேண்டுகோளின்படி, செங்கோட்டை ஜனார்த்தனன் சாரை அழைத்து வந்து, என் வீட்டில் தங்கவைத்து, நிகழ்ச்சிக்கு அழைத்துச் சென்று, அவரை பத்திரமாக அனுப்பி வைத்தேன். அந்த நிகழ்ச்சியில், ஆழ்வார்குறிச்சி பேராசிரியர் இல.ஜானகிராமனும் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சி நடந்தது 17/9/2004 என்று இந்தக் கரும்பலகையில் எழுதியுள்ள தேதியில் இருந்து தெரிகிறது. பத்து வருடங்களுக்கு முன்னர் நடந்த இந்த நிகழ்ச்சியில் இருவரும் ரசிகமணி டி.கே.சி குறித்து பலவற்றைப் பகிர்ந்து கொண்டார்கள். இந்தப் படத்தில் பேசிக் கொண்டிருப்பவர் இல.ஜா. அருகே அமர்ந்திருப்பவர் ஜனார்த்தனன் சார்.
என் புகைப்படத் தொகுப்பில் பொக்கிஷமாக வைத்திருந்த படம். அப்போதைய எனது கேனான் ஃபிலிம் ரோல் கேமராவில் இதை க்ளிக்கியிருந்தேன்.


***
நான்... ஒரு கணித மாணவன். பள்ளி முதல் கல்லூரிக் காலம் வரை கணிதம் என்னை ஆட்கொண்டிருந்தது. என் கணித ஆர்வத்தால் நான் ஆசிரியராகப் பணிபுரிந்த மஞ்சரி இதழில் கணிதப் பாடங்கள் தொடர்பான சுவாரஸ்யமான நுணுக்கங்களை அதிகம் வெளியிட்டேன்.
ஆழ்வார்குறிச்சி பரமகல்யாணி பள்ளியில் ஒரு வருடம் படித்தேன். அப்போது அறிமுகமானவர்கள், பரமகல்யாணி கல்லூரிப் பேராசிரியர்கள் லக்ஷ்மிநாராயணன்(தமிழ்), இல.ஜானகிராமன்(கணிதம்) ஆகியோர்.
லக்ஷ்மிநாராயணன் சார் தென்காசியில் இருந்தார். இல.ஜா. ஆழ்வை அக்ரஹாரத்தில் இருந்தார்.
பின்னாளில் ஒரு முறை கீழாம்பூர் சாரைப் பார்க்க கலைமகள் அலுவலகத்துக்கு இல.ஜா., வந்திருந்தபோது, பழைய நினைவுகளைக்கூறி, என்னிடம் அவர் கணிதத்தில் சில புதிர்களைச் சொல்லி மகிழ்ந்தார். அவர் பாணியில் கேட்ட விளக்கத்தால், அவரிடம் நான் அதை எழுதித் தரச் சொல்லிக் கேட்டு, மஞ்சரியில் வெளியிட்டேன். கணிதம் குறித்து சில கட்டுரைகள் எழுதினார். ஆர்வத்துடன் மொழிபெயர்ப்புக் கட்டுரைகள் தாமே அனுப்பி வைப்பார். கான்சக்ரேஷன் என்ற ஆங்கில இதழில் இருந்து, ஆன்மிகமும் அறிவியலும் இணைந்த கட்டுரைகளை மொழிபெயர்த்து அனுப்புவார். ஒரு முறை "கணக்கன் கம்பன்" என ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதில், கம்பன், படைகளின் கணக்கை எப்படி கணிதப் புதிராகக் காட்டியிருப்பார் என்று விளக்கியிருந்தார். என் சகோதரியை, "என்ன ஸ்ரீ ஸ்கொயர்... என் ஜாதி எப்படி இருக்கா?" என்று விசாரிப்பார். என் சகோதரி ஆசிரியப் பணியில் இருந்தவள். அதனால் அப்படி! நான் ஸ்ரீ.ஸ்ரீராம் என்று எழுதுவேன். அதனால் ஸ்ரீ ஸ்கொயர் என்று என்னை அழைப்பார்.
9 வருடங்களுக்கு முன்னர் ஒரு முறை நானும் கீழாம்பூர் சாரும் பம்மலில் அவர் வீட்டுக்குச் சென்றோம். உடல் நலமின்றி இருந்தபோதும், சிரத்தை எடுத்து உபசரித்தார். அவர் மகன் லட்சுமணன் பம்மலில் சங்கரா கண் மருத்துவமனை நடத்துகிறார். எங்கள் இருவரையும் ஆசையுடன் ஃபோட்டோ க்ளிக் செய்து, பத்திரமாக வைத்துக் கொண்டார்.
தினமணி ஆசிரியர் வைத்தியநாதன் சாருக்கு இல.ஜா., மீது மிகுந்த மதிப்பு உண்டு. இரு வருடங்களுக்கு முன்னர் தினமணி ஆசிரியருடன் ஆழ்வார்குறிச்சி சென்றிருந்தபோது, அக்ரஹாரத்தில் அவர் வீட்டு மாடியைக் காட்டி, சிறு குழந்தையைப் போல்... நான் இங்குதான் தங்கியிருந்தேன்.. இதுதான் ஜானகிராமன் சார் வீடு என்றெல்லாம் பரபரவென அந்தத் தெருவில் அங்குமிங்கும் ஓடி மகிழ்ந்தார். எங்களுக்குள் பழைய நினைவுகள் ஏதேனும் குறித்து பேச்சு எழுமானால்... அது இல.ஜா., குறித்த பேச்சுடனே துவங்கும்.
முன்னர் இருந்த நாங்குனேரி ஜீயருக்கும் இல.ஜா.,வுக்கும் நெருங்கிய நட்பு உண்டு. ஜீயரையோ, அல்லது இல.ஜா., வையோ சந்திக்கும்போது, இருவர் குறித்தும் மாறி மாறி விசாரித்துக் கொள்வேன்.
கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி காலையில் தினமணி ஆசிரியரிடம் இருந்து ஒரு குறுஞ்செய்தி வந்தது. இல.ஜா., மனைவி சரோஜா ஜானகிராமன் 75ஆவது வயதில் காலமான செய்தி. அன்புடன் இணைந்து வாழ்ந்த தம்பதியர். மனைவி மீதான பிரியத்தில் வீட்டுக்கு சரோஜம் என்றே பெயரிட்டிருந்தார் இல.,ஜா!
கீழாம்பூர் சார் போட்ட இந்த புகைப்படம் இத்தகைய நினைவுகளைக் கிளறிவிட்டது..! இந்த நினைவுகளை விட்டால் எனக்குத் துணை வேறில்லை


***
என் ஆசான்களில் ஒருவரான ஆழ்வார்குறிச்சி கணிதப் பேராசிரியர் இல.ஜானகிராமன் மஞ்சரியில் நான் ஆசிரியராக இருந்தபோது எழுதிக் கொடுத்த கட்டுரை. மஞ்சரியில் 2005ல் வெளியானது.
இதில், கம்பன் தன் கவிதையில் கணக்கை எப்படி கணக்காகக் கையாண்டிருக்கிறார் என்பதைக் காட்டியுள்ளார்.
***

கம்பன் கணக்கு சக்ரவர்த்தி
தமிழ் கவிஞர்களுக்கு கணக்கின் மேல் ஒரு மாளாத காதல்! கவிதைகள் மூலம் கணக்கைக் கற்பிக்கும் பாங்கு மிக நயமானது.
தமிழ்ப் புலவர்கள் "பதினாங்கு உலகங்கள்' என்று கூறமாட்டார்கள். ""ஈரேழு பதினான்கு உலகங்கள்'' என்று வாய்ப்பாட்டைச் சொல்லித்தான் கூறுவார்கள். ஒன்றல்ல, இரண்டல்ல. பலப்பல உதாரணங்களைக் கூறலாம்.
"சாதாரண கவிஞர்களே இப்படி என்றால் கவிச்சக்கரவர்த்தி எப்படி என்று பார்ப்போமா?
வாலியும் மாயாவியும் கடும் சண்டை போடுகிறார்கள். சண்டை போட்டுக் கொண்டே மாயாவி ஒரு குகைக்குள் ஒளிந்து கொள்கிறான். வாலி தொடர்ந்து குகைக்குள் சென்று அரக்கன் மாயாவியை ஒழித்துக்கட்ட விரும்புகிறான். வாலி தனது தம்பி சுக்ரீவனை அழைத்து ""தம்பி! நீ குகை வாயிலில் காவல் இரு. மாயாவி தப்பித்து ஓடிவிடாமல் பார்த்துக் கொள். நான் உள்ளே சென்று அக்கொடியவனைக் கொன்று வருகிறேன்'' என்று சொல்லி குகைக்குள் சென்றான். பல நாட்கள் ஆகியும் வாலியோ, அரக்கனோ வெளியே வரவில்லை. எத்தனை நாட்கள்? கம்பனிடம் கேட்போமா? ""ஏகி வாலியும் இருது ஏழொடு ஏழ்'' மாதம் போரிட்டான் என்கிறார் கம்பன்.
ஏழொடு ஏழ் என்றால் 7+7=14
இருது என்றால் இரு மடங்கு
இருது ஏழொடு ஏழ் என்றால் 2 x 14=28
இருது என்பது, twice, square என்ற ஆங்கிலச் சொற்களுக்கு இணையான அழகு தமிழ்ச் சொல். இருபத்து எட்டு மாதங்கள் என்று உப்புச் சப்பில்லாமல் கூறுவதற்கு மாறாக என்ன அருமையான கவிதைக் கணக்கு பாருங்கள்!
சுக்ரீவன், இராமனுக்கு வாலியை எதிர்கொள்ளும் அளவிற்கு வலிமை இருக்கிறதா என்று சோதிக்க விரும்புகிறான். மராமரத்தில் ஒன்றைத் துளைத்து உன் வலிமையைக் காட்டு என இராமனை வேண்டுகிறான். மராமரங்கள் எத்தனை? இதோ கம்பனின் கூற்று: ""ஐந்தினொடு இரண்டின் ஒன்று உருவ உன் அம்பு போகவே!'' ஏழு மராமரங்கள் என்பதை 5+2 என்கிறார் கம்பர்.
அனுமனை எதிர்த்துப் போரிட அக்ஷய குமாரன் பெரும்படையுடன் புறப்படுகிறான். அவனுடன் "நான்கு லக்ஷம்' வீரர்கள் செல்கின்றனர். ""நான்கு லக்ஷம் என்று கூறினால் கம்பன் எப்படி கணக்குச் சக்ரவர்த்தி ஆக முடியும்! எனவே ""ஈர் இரண்டு இலக்கம்'' வீரர்கள் என்கிறார்.
இன்னொரு இடத்தில் ஒரு பெரிய கணக்கையே போடுகிறார் கம்பர்.
ஜம்புமாலி அனுமனை எதிர்க்கச் செல்கிறான். அவனுடன் தேர்ப்படை, யானைப்படை, குதிரைப்படை, காலாட்படை என பின் தொடர்கின்றன. இவை ஒவ்வொன்றிலும் எத்தனை எண்ணிக்கை சென்றன? கம்பனின் அருமையான கணக்குக் கவிதை இதோ.
""ஆயிரம் ஐந்தொடு ஐந்து ஆம் ஆழி அம் தடந்தேர் அத்தேர்க்கு
ஏயின இரட்டியானை, யானையின் இரட்டிபாய் மா,
போயின, பதாதி சொன்ன புரவியின் இரட்டிபோலாம்
தீயவள், தடந்தேர் சுற்றித் தெற்றெனச் சென்ற சேனை''
ஐந்தாயிரத்தொடு ஒரு ஐந்தாயிரம் = 10000/ தேர்கள். அதில் இரட்டி = 20000 யானை. அதில் இருது = 40000 பாயும் குதிரைகள். அதில் இருமடங்கு = 80000 பதாதிகள் அதாவது காலாட் படைகள்!
எத்தனை அருமையான கணக்கு!

சனி, டிசம்பர் 13, 2014

தினமணியில் இருந்து வெளியேறினேன்..!



அன்பு நண்பருக்கு... 

நான் தினமணி இணையதள ஆசிரியர் பொறுப்பில் இருந்து வெளியேறிவிட்டேன்.

வெளியேறியதன் பின்னணி...  இதுதான் !

*****
தினமணி மிக மோசமான நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது. ஜீரோ நியூஸ் வேல்யூ ஐட்டம் எல்லாம் (எடிட்டர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள், படங்கள் என) வருவதாக எல்லாருமே பேசுகிறார்கள். 

வெப்பில் கமெண்ட்களை மாடரேட் செய்யும் பொறுப்பில் நான் மிகவும் சிரமப்படுகிறேன். அசிங்கமான வார்த்தைகள் கொண்டு திட்டுகிறார்கள்... ஒவ்வொரு முறையும் அவரிடம் சொல்லியிருக்கிறேன்.. தினமணியை அடுத்த நமது எம்.ஜி.ஆர். என்று சொல்ல வைத்துவிட்டதாக எல்லோரும் சொல்கிறார்கள். 

உடன் இருந்து பார்த்து பல முறை நல்லது சொல்லியிருக்கிறேன்.. ஆனால், அவர் கேட்கவில்லை. ஆனால், என் மீது வன்மத்தை வளர்த்துக் கொண்டார்.  பல முறை உரசல்கள் ... தவறுகளைச் சுட்டிக் காட்டினால் தகராறு. 

இந்த முறை இண்க்ரிமெண்ட் விவகாரத்தில் மிகவும் மோசமாக நடந்து கொண்டார். 
பிப்ரவரி மாசமே அவரிடம் எங்கள் டாட்காம் டீம் பேப்பர்களை கொடுத்தேன். ஆனால், போன மாசம் வரை அதை கையெழுத்திட்டு அனுப்பவேயில்லை. 

தீபாவளி நேரத்தில் அனுப்பியிருந்தாலாவது, போனஸ் போல் ஏதோ கொஞ்சம் பணம் சகாக்களுக்கு கிடைத்திருக்கும். என் டீம் மக்கள் மட்டுமல்லாது, தினமணியின் ஒவ்வொரு எடிஷன் நிருபர்கள், உதவி ஆசிரியர்கள் என அனைவருக்குமே பல சிரமங்கள். ஒழுங்காக ஏப்ரலில் அனுப்பினால், மே மாதம் டிரான்ஸ்பர் ஆகிப் போறவங்க, போகிற இடத்தில் வீடு பார்த்து செட்டில் ஆக முடியும். குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது  உள்பட. 

ஆனால், இவரோ அக்டோபரிலும் நவம்பரிலும் போட்டால் எப்படி அவர்களால் போய் வேலை செய்ய முடியும். ? 

எடுத்துச்சொன்னாலும், கேட்க மாட்டார். சுய வேலைக்காக சி.எம்.டியைப் பார்த்து கேட்பவர்.. பணியாளர் குறித்து எதையும் முன்வைக்கவில்லை....

இத்தகைய சூழலில்தான் இந்தமுறை பெரும் ஏமாற்றத்துக்கு உட்பட்டு, தீபாவளி அன்று பேஸ்புக்கில் ஒரு பதிவிட்டேன்...

**** 

பிரச்னை ஏற்படக் காரணமாக இருந்த பேஸ்புக் ஸ்டேடஸ் இதுதான்...
ஆனால், இதனால் பிரச்னை பெரிதாகி, மேலிடத்தில் இருந்து அழைப்பார்கள் என எதிர்பார்த்தேன்.

அதன்படியே சி.எம்.டி. அழைத்துப் பேசினார். அவரிடம், நீங்கள் என்னை அழைத்துப் பேசுவீர்கள் எனத் தெரியும் என்றேன். என் கருத்துகளை ஏற்றுக் கொண்டார். பின்னர் ஒவ்வொரு எடிஷன் செய்தி ஆசிரியர்களையும் அழைத்து, அவரவர் எடிஷனில் உள்ள காலியிடங்களை நிரப்ப அவரவர்க்கு அதிகாரம் அளித்தார்.

எல்லாமே எடிட்டர் மூலம்தான் நடக்கும் என்ற நிலையை மாற்றினார். எல்லோருக்கும் இண்க்ரிமெண்ட் உடனடியாகப் போடவும், அரியர்ஸுடன் இந்த மாத சம்பளத்திலேயே சேர்க்கப்படவும் ஏற்பாடு செய்தார். அனைவருக்கும் சரியான தீர்வு கிடைத்தது... ஓரளவு தினமணி என் அதிரடி நடவடிக்கையால் ஒரு சரிவிலிருந்து தப்பித்தது. 

ஆனால், எடிட்டர் வைத்தியநாதனோ.. ஒன்று நான் இங்கே இருக்க வேண்டும், இல்லை சீராம் இருக்கட்டும்.. என்று சி.எம்.டி.யிடம் பேரம் பேசி, அவரைப் பணிய வைத்துள்ளார். இந்த நிலையில் நானே ராஜினாமா செய்வதாகச் சொல்லி கடிதம் கொடுத்தேன்... 
எதிர்காலம் நன்றாக இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. 

என் பேஸ்புக் ஸ்டேடஸ்!
Senkottai Sriraam feeling angry
October 19 at 4:53pm ·
இந்த முறை 
தீபாவளி .. கொண்டாட்டத்தில் சுரத்தில்லை! 
எனக்கு மட்டுமில்லை... 
சகாக்களுக்கும்தான்!

உள்ளத்தில் சோர்வடைந்து 
வெளியில் பல்லிளித்து நடித்து...

விட்டமின் 'ப' 
கிட்டாமல் செய்து விட்டதற்காக...
அந்த ஒருவருக்கு
நொந்த ஒருவனாய் 
ஒரு கோடி புண்ணியம்!

என் 
சகாக்களின் மனச்சோர்வில் பங்கெடுத்து...
அலுவலக வேலையைப் பார்த்தபடி
தீபாவளியைக் கொண்டாடுகிறேன்..!

உழைப்பை உறிஞ்சி உலா வருபவருக்கு
எல்லா நாளும் திருநாளே!

உழைத்துக் களைப்பவருக்கு 
எல்லா நாளும் ஒரேநாளே!
 
Copyright © 2013 செங்கோட்டை ஸ்ரீராம்
Shared by Alahappa Grafix