சுடச்சுட:

ஆலயங்கள்

இலக்கியம்

ஆன்மிகம்

From our Blog

ஞாயிறு, டிசம்பர் 09, 2018

அக்னிக் குஞ்சுகளே அணி திரள்வீர்.....!!



 அக்னிக் குஞ்சுகளே அணி திரள்வீர்.....!!

ஆசிரியர் அழைக்கின்றார் அணி சேர்வீர்!!!

84 வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள தினமணிக்கு ஏராளமான பெருமைகள்  இருந்தாலும், மகாகவி பாரதியையும், தினமணியையும் வேறுபடுத்தி பார்க்க முடியாது. பாரதி நினைவு நாளான செப்டம்பர் 11-ம் தேதிதான் தினமணியும் உதயமானது. 

நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை, நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள் என்ற பாரதியின் மேற்கோளை அடிநாதமாக கொண்டு தொடங்கப்பட்டு அதன் வழியில் பீடு நடை போட்டு வரும் தேசிய பார்வை கொண்ட நாளிதழ்தான் தினமணி.

பாரதியின் பாடல்களையும், அவரது சிந்தனைகளையும் உணராதவர்கள், அவரது தாக்கம் இல்லாதவர்கள் பத்திரிக்கையாளர்களாகவே இருக்க முடியாது என்பது எனது சொந்தக் கருத்து.

பாரதியின் சொல்லாட்சியில் மிக முக்கியமானதும், இன்றைய கால கட்டத்தில் அனைவருக்கும் தேவையானதுமான கோபம் எனப்படும் 

ரெளத்திரம் பழகு என்ற ஆத்திசூடி வைர வரிகளாகும்.

நாட்டில் நடக்கும் தீமைகளை எதிர்த்து குரல் கொடுக்காமல் முடங்கிப் போயிருந்த சமூகத்தில் பாரதி, தீக்குச்சி போல பற்ற வைத்தான் விடுதலை எனும் நெருப்பை. அவன் வழியில் இன்றும் தினமணி பாசறையில் ஏராளமான பாரதிகள் தோன்றி அக்னிக் குஞ்சுகளாக வலம் வந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

அவரது பிறந்த நாளை (டிசம்பர் 11) இன்றும் ஏராளமான அமைப்புகள் கொண்டாடி வந்தாலும், அதற்கும் ஈடாக தினமணியும் அவனது புகழைப் பாட துணிந்துவிட்டதை எண்ணி பெருமைப்படுகிறோம்.

எங்களது தினமணி ஆசிரியர் திருமிகு. கி. வைத்தியநாதன் அவர்களுக்கு எண்ணற்ற சாதனைகள் இருந்தாலும் அவரது காலத்தில், அவரது ஏற்பாட்டில் பாரதிக்கு பிறந்த நாள் கொண்டாட்டம், அதுவும் அவர் பிறந்த எட்டையபுரத்தில் வரும் 11-ம் தேதி நடத்தவிருப்பது தினமணிக்கு மேலும் புகழை சேர்க்கும். இது நல்ல தொடக்கம். 

பாரதியின் பேரில் ரூ. 1 லட்சம் பொற்கிழியும், அவரது பெயரில் விருது வழங்கும் திட்டமும் தொடங்கப்பட்டுள்ளது.

தினமணியில் திரு. கி.வைத்தியநாதன் ஆசிரியராகப் பொறுப்பேற்ற பிறகு, இடையில் நின்றுவிட்ட தமிழ்மணி எனும் பகுதியை பட்டைத்தீட்டி புத்தொளி பெறச் செய்தார் அவர். பெற்ற தாயைக் கொல்வது போல, தமிழை தினமும் கொன்று கொண்டிருக்கும் தினப் பத்திரிகைகளுக்கு மத்தியில் தமிழுக்கென்று தனிப் பக்கத்தை உருவாக்கி ஞாயிறுதோறும் தமிழை பீடமேற்றி வைத்தவர் ஆசிரியர் அவர்கள். 

தமிழ்மணியை தமிழ் கூறும் நல்உலகிற்கு வழங்கிய நிகழ்வுகளுக்கு அடுத்து சிகரம் வைத்தார் போன்று மற்றொரு சாதனை நிகழ்வு இந்த பாரதி விருது வழங்கும் விழா. இது ஆண்டுதோறும் நடத்தப்பட வேண்டும். சாதனை புரியும் இளம் பத்திரிக்கையாளர்களுக்கும் எதிர்காலத்தில் இந்த விருது வழங்கப்பட வேண்டும். அதையும் எமது ஆசிரியர் செய்வார் எனக் கருதுகிறோம்.

எமது வாசகர்கள், பாரதியிடம் காதல் கொண்ட  இதழாளர்கள், அன்புள்ளங்கள் அனைவரும் மறவாமல் எட்டையபுரத்திற்கு வர வேண்டும்.

ஊர்க் கூடி தேர் இழுப்போம் வா..வா.....!

ஊரெல்லாம் பாரதி புகழை ஏந்திச் செல்வோம் வா..வா...!!

பின்குறிப்பு:  ஶ்ரீவைத்யநாதாய வித்மஹே தமிழ்மணியாய தீமஹி தந்நோ தினமணி பிரசோதயாத் 

என்றெல்லாம் எமக்கு மேற்கண்டதுபோல் சரணாகதி செய்யத் தெரியவில்லை. தெரிந்திருந்தால் திருநெல்வேலி டிரான்ஸ்பர் ஆவது கிடைத்திருக்கும்... 

வாழ்க வளமுடன்

வியாழன், பிப்ரவரி 16, 2017

தினமணி ஆசிரியருக்கு எழுதிய கடிதம்..!

அதீத அன்புள்ளம் கொண்ட
தினமணி ஆசிரியராக இருந்துவரும்
திரு.வைத்தியநாதருக்கு,

வணக்கம்.

இரண்டு வருட இடைவெளியில் மீண்டும் ஒரு கடிதம் எழுதுகிறேன்...

இத்தனை நாட்களாய் தங்களை மறந்துவிட்டதற்காக மன்னிக்கவும்.

தங்கள் டிவிட் ஒன்று, ஓ மன்னிக்கவும்! தங்களுக்கு சுட்டுரை என்றால்தான் பிடிக்கும் இல்லையா? தங்களுக்குத்தான் ’தமிழ்மணி’யின் மீது தீராக் காதல் அல்லவா! அப்படியான தங்களின் சுட்டுரை ஒன்று மாலையில் என் கவனத்துக்கு வந்தது. ரசித்தேன்! உடனே கடிதம் எழுதத் தோன்றிவிட்டது! 

//”எனது தலையங்கத்தைப் படிக்க ஆவலாய்க் காத்திருந்தவர்களுக்கு ஒரு வார்த்தை. நான் நானாக இருக்கிறேன். இருப்பேன்.”// என்று தாங்கள் குறிப்பிட்டதைப் பார்த்து புளகாங்கிதம் அடைந்தேன். 

தொடர்ந்து அதே சுட்டுரையின் தொடர்ச்சியாய் ஒருவர் கேட்ட கேள்விக்கு தாங்கள் அளித்த பதிலைக் கண்டு மயங்கிப் போனேன்...

// சார், அதிமுக பொதுச்செயலராக சசிகலா நியமிக்கப்பட்டதில் இருந்து நேற்று வரை தமிழக அரசியலை பற்றிய தலையங்கம் உங்களுக்கு திருப்தியா// என்ற வாசகர் ஒருவர் கேள்விக்கு 
// @rajeshksy நிச்சயமாக. சரி என்று படுவதைப் பதிவு செய்கிறேன்.அரசமைப்புச் சட்டத்தை ஏற்றுக்கொள்பவர்கள் சில கசப்பையும் சகித்துக் கொண்டாக வேண்டும்// என்று பதிலளித்திருக்கிறீர்கள்! 

மிக்க மகிழ்ச்சி. மெத்த சந்தோஷம்!

குறுகிய காலத்தில் தாங்கள் இவ்வளவு தூரம் நவீனத் தொழில்நுட்ப ரீதியாக சமூக வலைத்தளங்களில் உலா வருவது மகிழ்ச்சியைத் தருகிறது. கைப்பிடித்து அட்சரப்யாஸம் கொடுத்த தகப்பனும் தாய்க்கும் இருக்கும் மகிழ்ச்சி அது! 

சமூக வலைத்தளங்களில் ஆர்வம் இல்லாமல் இருந்த தங்களுக்கென, டிவிட்டர், பேஸ்புக் கணக்குகளை நானே உருவாக்கி, அவற்றைப் பயன்படுத்தும் முறையை சொல்லிக் கொடுத்து சுவை ஏற்படுத்தியவன் என்ற வகையில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி! 

உங்களுடன் எத்தனையோ இடங்களுக்கு உடன் வந்திருக்கிறேன். அப்போதெல்லாம், ”சீராமுக்கு எங்க போனாலும் ஒரு பிளக்பாயிண்ட் இருந்தா போதும்.. அவன் பாட்டுக்கு லேப்டாப்பை எடுத்துண்டு வேலை செய்வான்; வேற எதப் பத்தியும் அவனுக்கு கவலை கிடையாது” என்று சொல்வீர்கள். அப்படியாக என் தொழில்நுட்ப ஆர்வத்தைப் பாராட்டி, எனக்கு ஒரு ’சாம்சங்க் டேப்’ பரிசளித்தீர்கள். எவரிடமும் எந்தப் பொருளோ பணமோ கைநீட்டி வாங்கியிராத நான், உங்கள் நட்புமுறை பரிசளிப்புக்கு மகிழ்ந்தேன். ஆனால், எப்போது அந்த நட்புமுறை உடைந்ததோ, அப்போதே அதையும் உடைத்துவிட்டேன் என்பதை இங்கே பதியவைக்கிறேன்.

நிற்க...

அண்மைக்கால தமிழக அரசியல் சூழலில் தாங்கள் எழுதும் தலையங்கம், தங்களின் ஆசிரியர் குழு போடும் முதல்பக்க கட்டுரை, உள்பக்க லீட், ஆப் எட் லீட் ஆகியவற்றை கவனித்து வரும்போது, தங்களுக்கு கருத்து சொல்ல வேண்டும் என்று தோன்றும். ஆனால் தன்மானம் தடுத்து, மனம் அப்படியே நின்று விடும்! நான் தினமணியின் இணையதளப் பொறுப்பில் இருந்த வரை, பல நாட்களில் தங்கள் தலையங்கக் கருத்துகளை விமர்சித்திருக்கிறேன். சிலவற்றில் பாராட்டும்படியான அம்சம் இருக்கும். சிலவற்றில் தவிர்க்கும்படியான தடுமாறல்கள் இருக்கும். எல்லாவற்றையும் உரிமையோடு விமர்சித்திருக்கிறேன். நீங்களும் பல முறை அவற்றைக் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள்!  காரணம், தலையங்கம் எப்போதும் தாங்கள் எழுதுவதில்லை! நாமக்கல்லில் தாங்கள் ஒரு லட்ச ரூபாய் பொற்கிழிப் பரிசு பெற்ற கூட்டத்தில் சுட்டிக்காட்டினீர்கள் நினைவிருக்கலாம்... ”தலையங்கத்துக்குப் பொருத்தமான திருக்குறளைத் தேர்ந்தெடுத்துத் தரும் திருச்சி செய்தி ஆசிரியர் சோமு” என்று! அந்த சோமுவும், குருசாமியும் இன்னும் லோக்கல் தாதாக்களும் எழுதாமல் போகும் நாட்களில் தாங்கள் எழுதி வரும் தலையங்கத்தையும் ஒப்பிட்டு, உங்கள் எழுத்து நடை, வாக்கிய அமைப்பு, கையாளும் வார்த்தைகளைச் சொல்லி எப்படி தனித்துத் தெரிகிறது என்று சுட்டிக் காட்டுவேன். என்ன இருந்தாலும் கருத்து நாந்தானே அவர்களுக்குச் சொல்லி அதைத் திருத்துகிறேன் என்பீர்கள்! இப்போது அவற்றில் தடுமாற்றங்களைக் காணும்போது.... சரி.. அது கிடக்கட்டும்! அது உங்கள் உள் விவகாரம்!  

இப்போது, தாங்கள் திருவாளர் சோமுவைக் கழட்டி விட்டதாலும், வேறு எவரும் தங்களுக்குத் தோதாகப் படவில்லை என்பதாலும், தலையங்கத்தை மிக முயன்று தாங்களே எழுதுகிறீர்கள் என்பது தெரிகிறது. நான் முன்பே சொன்னதுபோல், தங்களின் எழுத்து நடை அங்கங்கே பல்லைக் காட்டிச் சிரித்துக் கவர்கிறது! அந்தக் கவர்ச்சிகரமான உந்துதலிலேயே தலையங்கத்தைப் படிக்க ஆவலாக இருப்பதாக நான் நேற்று எழுதியிருந்தேன்! எதை எல்லாம் நாங்கள் சகிக்கல என்று யோசிக்கிறோமோ அதெல்லாம் தங்களுக்கு சிறந்த சகிப்புத்தன்மையைக் காட்டி, சசிகலா என்று சஹஸ்ரநாம அர்ச்சனையை செய்யத் தூண்டிவிட்டிருக்கிறது. 

இதே டிவிட்டில் ஒருவர் கேள்வி கேட்கிறார்... நானும் வெகு நாட்களாய் கேட்டுக் கொண்டிருந்ததுதான்... 

@KVaidiyanathan சார், மதி அவர்களின் கார்ட்டூன் கடந்த 2 மாதமாக வருவதில்லையே என்ன காரணம்..?

@rajeshksy அவர் விடுப்பில் இருக்கிறார். அலுவலகம் வருவதில்லை
என்பது உங்கள் பதில். அவர் விடுப்பில் இருக்கிறார் என்பது, வாசகருக்குச் சொல்வதற்குப் போதுமான தகவல்! ஆனால், அடுத்த, அலுவலகம் வருவதில்லை என்று கூறும் பதில், ஏன் வருவதில்லை, என்ன காரணம் அவர் வராமலிருக்க என்றெல்லாம் பின்னணியின் அலசலை தானாக ஏற்படுத்தி, எங்களைச் சிந்திக்க வைத்துள்ளது. 
தாங்களும் சசிகலா போல்தான் இந்த வாக்கியத்தைக் கையாண்டிருக்கிறீர்கள். தங்கள் உள்மனசை வெளிக்காட்டியபடி! 
சரி கிடக்கட்டும்.. இது உங்கள் உள்நாட்டுக் குழப்பம், கம்பெனி உள்விவகாரம்! 

ஆனால் தாங்கள் டிவிட்டினீர்கள் ஒரு டிவிட்...! 
”எனது தலையங்கத்தைப் படிக்க ஆவலாய்க் காத்திருந்தவர்களுக்கு ஒரு வார்த்தை. நான் நானாக இருக்கிறேன். இருப்பேன்.”// என்று...

இதுதான் என்னை இக்கடிதத்தை எழுதத் தூண்டிவிட்டுள்ளது. 

ஐயா... உங்கள் வார்த்தையில் சொல்லப்போனால்... நான் நானாக இருக்கிறேன், இருப்பேன்! என்று சசிகலா அம்மையார் ஜெயலலிதா சமாதியில் வைத்து சபதமிட்டதைப் போல் அதிபயங்கர சபதமாகத் தெரிகிறது உங்கள் சபதம்!  

ஒரு விஷயம் என்ன என்றால்...

நான் தங்களுடன் ஒரே அலுவலகத்தில் பணியில் இருந்த அந்த நாலரை வருடங்களும்... நீங்கள் நீங்களாக இருக்கக் கூடாது என்றுதானே அவ்வளவு தூரம் முயற்சி செய்தேன். உங்களை உங்கள் இயல்பில் இருந்து வெளியில் கொண்டுவந்து, நீங்கள் தினமணி ஆசிரியராக இருக்க வேண்டும், தினமணி ஆசிரியர் பொறுப்புக்கு ஏற்ப உங்களைத் தகவமைக்க வேண்டும் என்றுதானே முயன்றோம்... 

ஏனென்றால், 
தினமணியின் வரலாறையும் அதன் ஆசிரியர்களின் வரலாறையும் படித்து, ஊர்ப் பாசத்தாலும் ஜில்லா பாசத்தாலும், தேசியமும் தமிழும் விதைவிட்டுக் கிளைத்த நெல்லை மண்ணில் இருந்து வந்து நாட்டு நலனில் அக்கறை கொண்ட ஒருவனாக அணுகியதாலும்... குறிப்பாக தாங்களும் அதே நெல்லை மண்ணில் கல்லூரிக் காலத்தைக் கழித்தவர்; என் ஆசிரியர் உங்களுக்கும் கல்லூரி ஆசிரியர், என் நட்பு வட்டம் உங்களின் நட்பு வட்டத்தில் ஒரு பகுதி என்றெல்லாம் இருந்த காரணத்தால் உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தார் மீதும் பாசம் வைத்துப் பழகியதன் வெளிப்பாடுதான்... தங்கள் கௌரவத்தின் மீதான, தங்கள் வளர்ச்சியின் மீதான அக்கறையாக அன்று இருந்தது. ஏற்பவோ ஏற்ப இல்லாமலோ தாங்கள் தினமணியின் ஆசிரியர் பொறுப்புக்கு வந்துவிட்டீர்கள்; தினமணியின் வரலாற்றில் தங்கள் இடம்பெறப் போகிறீர்கள் என்ற எச்சரிக்கை உணர்வையே தங்களுக்கு அவ்வப்போது பதிய வைத்துக் கொண்டிருந்தோம். ஆனால், உங்கள் உள்மனத்தின் உந்துதலை அறியத் தவறிவிட்டோம்! 

நீங்கள் அடிக்கடி சொல்வீர்கள்... முட்டாள்கள்தான் இங்கே வேலை செய்வான்; தினமணியை விட்டுச் செல்பவன் நல்ல அறிவுஜீவியாக இருப்பான் என்று!

அதை குறுகிய காலத்தில் உணர்ந்தேன்.

எத்தனை பேர் அப்படி! 
தினமணிக் கதிரில் சிவக்குமார் வேலை செய்தார். தங்கள் வாக்கை மெய்ப்பிக்க, அவர் பணி ஓய்வு பெறும் வயதில் திருச்சிக்குத் திசைதிருப்பினீர்கள். சிரமப்பட்டு அவர் போதுமென்று வந்துவிட்டார்.
தங்கள் அறிவுஜீவிப் பட்டத்தைச் சுமக்காமலே சினிமா எக்ஸ்பிரஸ் சிவகுமார்... ( தங்கள் ஜெயலலிதா பாணி தண்டனையைப் பார்க்காமலே மறைந்தது மகிழ்ச்சி என்ற வாசகத்தின்படி) பாவம் மறைந்துபோனார்.

இந்தப் பட்டியலில் எத்தனையோ பேர். அனைவரின் பெயரையும் பட்டியலிடுவது பொதுவெளியில் தகாது என்பதால் உங்கள் வாக்கியத்தின் படி ஓர் அறிவுஜீவியாக இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன்.

ஓர் இலக்கிய மாத இதழ், தங்கள் முகப்பில் “இதழல்ல இயக்கம்” என்று போட்டுக் கொண்டிருக்கும். 

ஆனால், அதை அழகாக செயல்படுத்தி வருபவர் தாங்களே.
தினமணியை இதழாக இல்லாமல் ஒரு அரசியல் இயக்கமாகவே நடத்தி வருவதை, உலகம் அறியும். அதைத்தான் இப்போது நான் வேடிக்கையாகக் குறிப்பிடுகிறேன்... தினமணி பின்னேற்றக் கழகம் என்று! - அதன் தலைவர் தாங்கள்! ஒவ்வொரு பதிப்பும் ஒரு மண்டலம். அதற்குள் மாவட்டம். வட்டம். அதன் நிருபர்கள், செய்தியாளர்கள் அந்த அந்த மாவட்ட,வட்ட செயலர்கள். உள்ளே செ.ஆ., பொ.ஆ., உ.ஆ., தலைமை செய்தியாளர்கள், எல்லோருக்கும் ஒரு பொறுப்பு. தலைவரின் சுற்றுப்பயணம், கூட்டங்கள் குறித்த விவரங்கள் தினமணியில் முன்னதாகவே பிரசுரிக்கப்பட்டு தெரிவிக்கப்பட்டுவிடும். 

அங்கங்கே, தலைவர் பயணம் செய்யும் ரயில் வரும் போது, ரயில் நிலையங்களில் வட்டச் செயலர் தலைவருக்குப் பிடித்த உணவு, இனிப்பு, இட்லி சாம்பார் பாக்கெட்டுகளுடன் காத்திருந்து கையசைப்பார். எவர் தீவிர விசுவாசியோ, அவருக்கு வருடாந்திர கவனிப்பு நன்றாக இருக்கும். 

இப்படியாக ஓர் அரசியல் கட்சியில் இருந்து எதைப் பார்க்க வேண்டுமோ அதை, அரசியல் கட்சிகள் என்றாலே அடியோடு வெறுக்கும் நான் குறுகிய காலத்தில் தி.பி.க.,வில் இருந்து கற்றுக் கொண்டுவிட்டேன். அதற்காக நன்றி. இனி நானும் அரசியலில் ஈடுபடலாம். 

எப்படி நம்மை நாமே முன்னிறுத்திக் கொள்வது, எப்படி ஒரு கட்சியைக் கையாள்வது, எப்படி போட்டுக் கொடுத்து இடத்துக்குத் துண்டு போடுபவர்களின் பேச்சைக் கேட்டு அரவணைப்பது, போட்டுக் கொடுக்கப் பட்டவர்களின் சீட்டைக் கிழிப்பது எல்லாம் உடனிருந்து கற்றுக் கொண்டுவிட்டேன். எல்லாம் அனுபவம். அந்த அனுபவத்தைப் படிக்க வைத்த தங்களுக்கு என்றென்றும் நன்றிக் கடன் பட்டுள்ளேன்.  

இத்தகைய பின்னணியில் நீங்கள் எழுதிய தலையங்கத்தை விமர்சிக்க விழைகிறேன். ஏனெனில் தங்களுடன் தொடர்பு விட்டுப் போய் இரண்டு வருடங்கள் ஆகிவிட்டதாலும், தங்களிடம் நேரில் சொல்ல முடியாது என்பதாலும், அப்படியே சொல்பவர்களின் பேச்சையே தட்டிக் கழிக்கும் தாங்கள் என் பேச்சையெல்லாம் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ள மாட்டீர்கள் என்று என் உள்மனம் சொல்வதாலும் இதனை இங்கே பதிவு செய்கிறேன்.
 நிற்க...

தங்கள் 15.2.2017ம் தேதியிட்ட தலையங்கத்தில்...

//மது கோடாவும், ஓம் பிரகாஷ் செளதாலாவும் ஊழல் வழக்கிலும், ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கிலும் தண்டனை பெற்றிருக்கிறார்கள் என்பது மட்டுமே வித்தியாசம்.// 
ஆஹா... ஊழல் செய்யாமல் சொத்துக் குவிப்பது எப்படி என்பதையும், ஊழலுக்கும் சொத்துக் குவிப்புக்கும் என்ன வித்யாசம் என்பதையும் வாசகர்களுக்கு அக்குவேறு ஆணிவேறாகச் சொல்லிவிட்டால், நானும் தங்களை உயர்ந்த ஆசிரியராகக் கொண்டு கற்றுக் கொள்கிறேன். காசு இல்லாம ரொம்ப கஷ்டப் படுறேனுங்க ஸாமீ. 

//"...ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் இப்போது நிலமை எப்படி இருக்கும் என்பதை நினைத்தால் சற்று வேதனையாகத்தான் இருக்கிறது. இப்படி ஒரு அவமானத்தை எதிர் கொள்ளாமல் அவர் மறைந்தது கூட நல்லதுதான் என்று கூறத் தோன்றுகிறது..."//

// "யாராக இருந்தாலும் சட்டத்தின் முன்பு  நிறுத்தி தண்டிக்கப்படுவர் என்பதை இந்தத் தீர்ப்பு உறுதி படுத்தியிருக்கிறது"//

என்ன சொல்ல வருகிறீர்கள்? 

தீர்ப்பும், தண்டனையும் வரவேற்கத்தக்கது. ஆனால் அதை ஜெயலலிதா அனுபவிக்காதது நல்லது... 
என்ன நியாயமோ? புரியவில்லை!

2014ல் இதே கர்நாடக நீதிமன்றம் அப்படி ஒரு தீர்ப்பு அளித்த போது வராத அவமானம், இப்போது வந்துவிடுமா? எந்த மாநிலத்துடன் காவிரிப் பிரச்னைக்காக சண்டை போட்டு மல்லுக்கட்டினாரோ அந்த மாநிலத்தில் கேவலப்பட்டு, அந்த மாநில மக்களால் சிரிப்பாய்ச் சிரித்து, ஒட்டு மொத்த தமிழகத்தையே கேலி பேசும் விதமாக நின்றபோது வராத அவமானம் இப்போது வந்துவிடப் போகிறதா?

ஜெயலலிதா மறைந்த போது (டிச.6,2016) முதல் பக்க சிறப்பு தலையங்கத்தில்,

"இனி ஜெயலலிதா ஓர் அசைக்க முடியாத சக்தி என்று அனைவரும் நினைத்துக் கொண்டிருந்த வேளையில் இடியென தாக்கியது பெங்களூரு சொத்துக் குவிப்பு வழக்குத் தீர்ப்பு.

நீதிபதி குன்ஹாவின் தீர்ப்பும், அதைத் தொடர்ந்த அவரின் சிறைவாசமும் அவரை நிலை குலைய வைத்துவிட்டன. அந்த அதிரடி தாக்குதலிலிருந்து ஜெயலலிதா மனதளவில் மீளவே இல்லை.
 அவரது உடல்நிலை இந்த அளவுக்கு பாதிக்கப்பட்டு இப்போது மரணத்தை தழுவி இருப்பதற்கு குன்ஹா வழங்கிய தீர்ப்புத்தான் காரணம் என்று சரித்திரம் பதிவு செய்தால் வியப்பதற்கில்லை...." 
  
- என்று ஜெயலலிதா மரணத்துக்கு குன்ஹாவைக் காரணம் காட்டுகிறீர்கள். நீதிபதி அல்ல;  ஜெயலலிதா அன்கோ செய்த தவறுகள் தான் காரணம் என்று சொல்லத் தோன்றாத நடுநிலையைத் தாங்கள் கொண்டிருப்பது மெத்த மகிழ்ச்சி தருகிறது. 

நிற்க...

ஜெயலலிதா மறைந்த போது மிக பதட்டமான சூழல் இருந்தது. பிரச்னை ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்டபோது, கட்சியினர்கூட அமைதியாக  இருந்து அந்த நேரத்தை எதிர்கொண்டனர். ஆனால் அப்போது இந்தச் சூழலை குன்ஹாவுக்கு எதிராகத் திருப்பிவிட்டு, சசிகலா மீது பொதுமக்களுக்கு எழுந்த சந்தேகத்தை திசை திருப்பி விட்ட அற்ப சந்தோஷத்தை தாங்கள் அடைந்திருப்பீர்கள். 
ஆனால் இன்று குன்ஹா, உச்ச நீதிமன்றத்தின் ஒப்புதலால், நேர்மையாளர் என வரலாற்றில் இடம் பெற்றுவிட்டார். கோடிகளுக்கு விலைபோகிறவர்கள் கேடிகளாவர் என்பதை நிலைநிறுத்தும் வண்ணம் குமாரசாமி கேலிக்கு ஆளாகிவிட்டார். 

தலையங்கத்தின் கடைசிப் பகுதியில் தாங்கள் ஒரு அதிமுக., கட்சி நாளேட்டின் தகுதி வாய்ந்த  ஆசிரியர் என்பதை நிரூபித்து விட்டீர்கள். கட்சி உடைந்துவிடக் கூடாது என்பதில் கவனம் தெரிகிறது. அதற்காக நீங்கள் சொல்லும் வழிமுறைகள், திரு.எம்.நடராஜனாரை சந்தித்து அடிக்கடி பேசுவதில் இருந்து வெளிப்படுகிறது. ஏன்.. உங்கள் சிந்தனை இப்படிப் போகாதா?
பன்னீர்செல்வமும் சசிகலா காலில் விழுந்து கும்பிடு போட்டவர்தான். அவரை முதல்வராக நீடிக்க வைத்து, தாங்கள் கட்சிப் பொறுப்புகளில் இருந்து தங்கள் அராஜக/பிறர் சொத்தை, அரசாங்க சொத்தை கபளீகரம் செய்யும் காரியத்தை நிறைவேற்றிக் கொள்ள முயலட்டுமே என்று! அப்படி எனில் கட்சி உடையும் நிலை வராது இல்லையா?

எப்படிப் பார்த்தாலும் தாங்கள் தமிழக மக்களுக்கு துர்நலனை நாடும் துர்போதனையைச் செய்கிறீர்கள் என்பதை எப்போது உணரப் போகிறீர்கள்!

ஒருவேளை தாங்களே நேரடியாக பாதிக்கப்பட்டால் பொங்கி எழுவீர்கள் போலும்! 

ஆளுநரை குறை சொல்லும் நீங்கள், ஆளுநரின் செயல், மோடி, குருமூர்த்தி உள்ளிட்ட ஆர்.எஸ்.எஸ். கும்பலின் சதி என்று சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். தாங்கள் திருவாளர் தி.க. வீரமணியின் கருத்தைச் சொல்லி, திருவாளர் எம்.என்.னின் கைக்கூலி ஆகிவிட்டீர்கள் என்று பேசிக்கொள்கிறார்களே! அதை எப்படித் துடைப்பீர்கள்! தேவையில்லைதான்... உண்மை அதுவாகவே இருக்கும்போது!

ஆனால் இப்போது ஒன்று சொல்லத் தொடங்கியிருக்கிறீர்கள். எல்லாம் முதலாளியின் கட்டளை என்று! அமரர் கோயங்கா தொடங்கி, இன்று வரையுள்ள முதலாளியைப் பற்றி நன்கு தெரிந்தவர்கள் தெளிவாகக் கூறுவார்கள்... தினமணியின் ஆசிரியர் குழுவுக்கு இருக்கும் கௌரவமே சுதந்திரம்தான்! முதலாளியுடன் பழகி அறிந்தவன் என்ற வகையில், அவர் ஒன்றே ஒன்று சொல்வார்... எல்லா முதலாளிகளும் சிந்திக்கக்  கூடியதுதான்.. இத்தனை பேருக்கு சம்பளம் கொடுக்க வேண்டும். பாதகமில்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்பது மட்டுமே! அது நம் தார்மீக கடமையும்கூட! இந்த ஓர் இதழின் இயக்கத்தில்தான் எத்தனை பேரின் வாழ்வாதாரம் இருக்கிறது!?
ஆனால் எக்காலத்திலும் இப்படிப் போடு என்று கட்டளையிடும் முதலாளி இல்லை! 
தாங்களாகவே சசிகலா நட்பு வட்டம் நாடி, ஆதரவு நிலை எடுத்து, முதல் பக்கத்தில் இருந்து செய்தியைப் பிரதானப் படுத்தி... எல்லாம் இந்த உலகம் பார்த்துக் கொண்டிருக்கிறது. 

வெகுஜன இயக்கத்தில் இருந்து தனித்துப் போகும் உங்கள் திபிக., இயக்கம்... பெரும் பின்னடைவைச் சந்திக்காமல் இருக்க வேண்டுமே என்றும், இதழை நம்பியுள்ள பலரின் வாழ்க்கை கெட்டுப் போய்விடக் கூடாதென்ற கவலையினாலும் இவ்வளவு நேரத்தை செலவிட்டு இதை பதிவு செய்ய வேண்டியுள்ளது. 

ஆசிரியரே! நாங்கள் எதிர்பார்த்தது தினமணி ஆசிரியராக, தன் பெருமையைக் காக்கும் ஒருவராக தாங்கள் இருப்பதைத்தானே ஒழிய, அதிமுக., கட்சிப் பத்திரிகையின் ஆசிரியராக அல்ல! ஆகவே ஆசிரியரே நீங்கள் நீங்களாக இருக்க வேண்டாம். தினமணி ஆசிரியராக இருங்கள்! 

இப்படிக்கு, 
தினமணியின் நலன் நாடும்
உங்கள் முன்னாள் நண்பன்.


Best Regards,

Senkottai Sriram

(Journalist / Writer)

திங்கள், நவம்பர் 14, 2016

பாசம் எனும் கட்டு; முன்னேற்றத்தைத் தடுக்கிறதோ?


வீரகேரளம்புதூரில் கோயில்கொண்ட நவநீதகிருஷ்ண ஸ்வாமியின் பெயரை, எங்கள் குடும்பத்தில் உள்ள ஆண்கள் சிலருக்கு வைத்திருக்கிறார்கள். அவர்களில் ஒருவராக இருந்தவர் என் அத்தை மகன் நவநீதகிருஷ்ணன். நவநீதன், நவனீ என்றெல்லாம் செல்லமாய் அழைக்கப்பட்டவர்!

என் துவக்கப் பள்ளிப் பருவத்தில் பார்த்ததுண்டு. மிகவும் அமைதியானவர். யாரிடமும் அதிர்ந்து பேச மாட்டார். மனத்தில் ஓர் அழுத்தமும் அமைதியும் குடிகொண்டிருக்கும். முகம் சலனமற்று எந்தவித கோபத்தையோ வருத்தத்தையோ நகைப்பையோ வெளிப்படுத்தாமல் அப்படியே இருக்கும்!

மிகச் சிறு வயதில் ராணுவத்தில் பணியில் சேர்ந்தாராம். பத்து வருடத்துக்கும் மேல் சர்வீஸ் முடித்து 30 வயதுகளில் ஊர் திரும்பிவிட்டார். தென்காசி மேலப்புலியூர் அக்ரஹாரத்தில், அவரது வீட்டின் மாடியில் போய் அமர்ந்தாரென்றால் புத்தகமும் கையுமாக இருப்பார். ராணுவத்தில் இருந்த சகவாசம், மிலிட்டரி சரக்குக்கு ஆட்பட்டு விட்டாராம்! அதனால் அவர் அருகே போக அச்சப்பட்டு ஒதுங்கிச் சென்றிருக்கிறேன்! வயது பத்தைக் கடந்திராத அந்தப் பருவத்தில் சாராயத்தின் வீரியம் எல்லாம் என் அறிவுக்குள் எட்டியதில்லை! ஆகவே எட்ட நின்றே பார்த்திருந்தேன்! ஆனாலும் ராணுவ சேவை என்பது அவர் மூலம் சிறுவயதில் தீப்பொறியாய் ஒரு மூலையில் பற்றியது!

அடுத்த ஓரிரு வருடங்களில் அவருக்குத் திருமணம் ஆயிற்று! அதற்கு அடுத்த ஓரிரு வருடங்களில் மண வாழ்க்கை நிலைக்காமல் மரித்தும் போனார்! இருந்தாலும், ராணுவத்தில் இருந்து திரும்பியவர் என்ற அந்த அடையாளம் மட்டும் மனசுக்குள் ஒட்டிக் கொண்டதில், நாமும் ராணுவப் பணிக்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் துளிர்விட்டிருந்தது!

தென்காசியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்த நேரம்... ஆறடி உயரம். கூடைப்பந்து, வாலிபால், கால்பந்து, கிரிக்கெட் என விளையாட்டுகளில் ஆர்வமுடன் பங்கேற்று போட்டிகளுக்கும் சென்று வந்தேன். குழு விளையாட்டுகள்தான்! அப்போதுதான், NDA - National Defence Academy தேர்வு எழுதலாம் என்று உடன் படித்த நண்பர்கள் ஓரிருவர் முயன்றனர். என்னவென்றே அம்மாவிடம் சொல்லாமல் அந்தப் பதினாறு வயதில் நானும் எழுதினேன்.

எழுத்துத் தேர்வு முடிந்து, அடுத்த கட்டத்தில் வந்து நின்றது. மெள்ள அம்மாவிடம் ஆசையைச் சொன்னேன்! டிஃபன்ஸ் என்ற சொல், அம்மாவுக்கு அதிர்ச்சியைத் தந்தது. ஏற்கெனவே மதிப்பும் பாசமும் வைத்திருந்த என் அத்தான் நவநீயின் வாழ்க்கை ஏற்படுத்திய பாதிப்பு ஒரு புறமும், ஒற்றைப் பிள்ளை, அதுவும் தலைப்பிள்ளை எப்படி உன்னை விட்டு இருப்போம் என்ற பாசக் கட்டு மறுபுறமுமாக இழுத்துக் கட்டியதில், அந்த முயற்சி அத்துடன் நின்று போனது! பனிரெண்டாம் வகுப்பு முடிந்த கையுடன் என் பெரிய மாமா சுந்தர்ராஜனின் கையில் என்னை ஒப்படைத்தார்! நானும் திருச்சிக்கு வந்தேன்; கல்லூரிப் படிப்புக்கு!

இப்போது யோசித்துப் பார்க்கிறேன். அந்தப் பதினாறு வயதில் ராணுவப் பணிக்கு சென்றிருந்தால், இருபது வருட சேவை முடிந்து இன்று திரும்பியிருக்கலாம்! இந்த இருபதுக்கும் மேலான வருடங்களிலும்  தாயை விட்டுப் பிரிந்து தனியாகத்தான் வாழ்ந்திருக்கிறேன், என்றாலும் கூப்பிடு தொலைவில் இருந்து கொண்டு! ஆசையிருந்தும் ராணுவப் பணிக்குச் செல்லாமல் இருந்த இந்த இருபது வருடங்களில் அப்படி ஒன்றும் பெரிய சாதனையோ, சமூகத்துக்குப் பயனுள்ள வாழ்க்கையையோ நான் வாழ்ந்துவிடவில்லைதான்!

அத்தானின் கதியை நினைத்துதான், சிகரெட், மது இரண்டின் அருகேயும் செல்லக் கூடாதென சத்தியம் செய் என்றார் அம்மா. இன்று வரை அந்த சத்தியத்தைக் கடைப்பிடிக்கிறேன்! ஆனாலும், பாசம் என்ற கயிறு, எப்படி நம் தனிப்பட்ட விருப்பங்களில் இழுத்துச் செல்லாமல் கட்டிப் போட்டு முடக்கிவிடுகிறது என்பதை அவ்வப்போது யோசித்துப் பார்க்கிறேன்.

கல்லூரியில் படித்த 90களில்தான் கணினிப் படிப்பு அறிமுகமானது. யுனிக்ஸ், சி ப்ளஸ், டிபேஸ், என முயன்று படித்தும், உடன் படித்த நண்பர்கள் அத்துறையில் சென்றபோதும்,  வழிகாட்ட யாருமின்றி அந்தத்  துறையிலும் கால் பதிக்காமல் ஏதோ மார்கெடிங் என்று துவக்கத்தில் ஊர் சுற்றி, பின்னாளில் பத்திரிகைத் துறை என்று தடம் மாறிப் போனது!

இந்த ஞாயிறுப் போதில், குடியிருப்பின் அடுத்த ப்ளாக் நண்பர் திரு. ஜகந்நாதனிடம் பேசிக் கொண்டிருந்தபோது, 28 வயதாகும் அவர் மகன் இன்ஃபோஸிஸ் பணியில் மெல்பர்னில் இருப்பதாகவும், இந்தக் காலத்துப் பசங்களெல்லாம் படிக்கும் போதே கேரியர் குரோத், வளர்ச்சி, போட்டிகள் நிறைந்த உலகம் எப்படி சமாளிப்பது என்பதில் கவனம் செலுத்துகின்றனர் என்றும், பாசம் என்றெல்லாம் பார்த்துக் கொண்டு தயங்கி நிற்பதில்லை என்றும் கருத்தைச் சொன்னார். சாப்பிட்டாயா என்று கேட்டால் கூட, அதற்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டிருக்கும் மனநிலையில் அவர்கள் இல்லை என்றும், தங்களை இன்னும் குழந்தை போல் யோசிக்கிறார்களே என்று நினைத்துக் கொள்வதாகவும் கூறினார்.

தலைமுறைகள் குறித்த அவரின் இந்தச் சிந்தனையே, என்னைப் பற்றிய சுயபரிசோதனைக்கு என்னைத் தூண்டியது! படிப்பும் திறமையும் இருந்தது; ஆனால் வழிகாட்டிகள் எவரும் இல்லை! சொந்தங்களும் சொல்லிக் கொள்ளும்படி வழிகாட்டும் நல்ல நிலையிலில்லை! காற்றின் திசையில் அலைக்கழிக்கப்படும் படகைப் போல் பயணித்தாயிற்று! துடுப்பு போடும் வலிமையின்றி! அதுதான்... நான் ஏன் இப்படி உதவாக்கரை ஆனேன் என்று இப்போதும் யோசித்துக் கொண்டிருக்கிறேன்...! சுய சிந்தனை! சுய பரிசோதனை! 

ஞாயிறு, ஜூன் 05, 2016

புனித தாமஸ் எனும் புனை கதை!

புனித தாமஸ் எனும் புனை கதை!
***
தி நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ் அலுவலகத்தில் பணி புரிந்து கொண்டிருந்தபோது...
பல மணி நேரம் பணி செய்வதால் பணியாளர்க்கு ஏற்படும் மன அழுத்தம் போக்க சிறப்புப் பயிற்சி என்று
ஒரு டாக்டர்... ஹாஹா ஹிஹி ஊஹு ஹெஹே ஹைஹைன்னு ஏதோ சிரிப்பு, கைதட்டல், டான்ஸ், எக்சர்சைஸ் என்று என்னமோ கூத்தடித்து ஒரு நாள் முழுக்க வீணாக்கினார்...
சென்னையைப் பற்றி சொன்னார்...
சுற்றுலா இடங்கள் என்று ஏதேதோ பேசினார்
எல்லாம் சகித்துக் கேட்டுக் கொண்டிருந்தேன்...
திடீரென செண்ட் தாமஸ் சர்ச் என்றார்... மந்தைவெளி சர்ச்..
பிருங்கிமலை சர்ச் பற்றி சொன்னார்...
ரொம்ப உருக்கமாக யாரோ ஒரு பிராமணன் தாமஸை குத்தி  தோமயர் மலையில் சாவடிச்சார் என்று கதை விட்டார்...(இந்த பிருங்கி மலை பரங்கிமலையான கதையை  ஏற்கெனவே பகிர்ந்துகொண்டிருக்கிறேன்...)
என் சகிப்புத் தன்மை என்னிடம் சகிக்காமல் ஓடியது...
எழுந்து நின்று கொஞ்சம் ஆக்ரோஷமாகவே பேசினேன்...
நீங்க சொல்றதுக்கு என்ன ஆதாரம்? என்று!
வழிவழியாக சொல்லப்படும் கதை, அங்கே அப்படித்தான் எழுதிப்  போட்டுள்ளார்கள் என்றார்.
அப்படியானால்... தாமஸ் எந்த வழியில் இந்தியாவுக்கு வந்தார்  என்றேன்...
கடல் வழிஎன்றுதான் சொல்கிறார்கள் என்றார்.
அப்படியானால் வாஸ்கோடகாமாவை இந்திய வரலாற்றின் பக்கங்களில் இருந்து கிழித்து எறிந்துவிட வேண்டும் சம்மதமா என்றேன்...
அர்த்தம் புரிந்தவர் போல் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து விட்டார்...
மயிலையில் இருந்து கொண்டு, சர்ச்சாகிவிட்ட அந்தக் கபாலியின் கோயிலுக்கு எத்தனை முறை சென்றிருக்கிறேன். தூண்களும் படிகளும் இன்றும் பறை சாற்றுகின்றது.  (https://goo.gl/uWRpdV)
பாடப்பட்ட பாடல்களெலாம்... கடற்கரையில் அமர்ந்த ஈசனின் திருக்கோவில் தாள் தொட்டு சாகரத்தில் சங்கமித்த அலைகளைப் பேசுகின்றன...
சம்பந்தரின் சம்பந்தம் பெற்ற இந்தப் பாடல் அதைச் சொல்லும்...
*
ஊர்திரை வேலை உலாவும் உயர் மயிலைக்
கூர்தரு வேல் வல்லார் கொற்றங் கொள் சேரிதனில்
கார்தரு சோலைக் கபாலீச்சரம் அமர்ந்தான்
ஆர்திரை நாள் காணாதே போதியோ பூம்பாவாய்.
கடலின் அலைகளானது ஊரில் உலாவரும் உயர்ந்த மயிலையில், கூரிய வேல்வல்லவர்களால் காவல் காக்கப்பட்ட பகுதியில், கரிய சோலைகள் சூழ்ந்த திருக்கபாலீச்சரத்து அமர்ந்த பிரானின் ஆதிரைத் திருநாள் காணாது, பூம்பாவையே, போவாயோ!
1. திருவாதிரைத் திருநாளும் புராணங்களிலும் சங்க இலக்கியங்களிலும் போற்றப்படும் விரதமாகும். இறைவன் ஆடல் வல்லானாகக் காட்சி அளித்த கருணை கருதி ஆதிரையன் எனத் திருமுறைகள் பலவிடத்தும் விளிக்கும்.அட்ட மாவிரதங்களில் ஒன்றான திருவாதிரைச் சிறப்பு
2. ஊர் திரை வேலை உலாவும் உயர் மயிலை -திருமயிலாப்பூர்க் கபாலீச்சரம், திருஞானசம்பந்தப் பெருமான் காலத்தில் கடற்கரையிலேயே இருந்தது. (மாசிக் கடலாட்டுக் கண்டான் கபாலீச்சரம் அமர்ந்தான் – சம்பந்தர்)
3. திரை – அலை; வேலை – கடல்; கொற்றம் – காவல்;சேரி – இருப்பிடம்; கார் – கருமை.

***
பொய்கள் .. மதசார்பின்மை என்ற நிலைப்பாட்டில் பலராலும் பரப்பப்  படுவது இது ஒன்றும் புதிதல்ல!
இந்திய வரலாற்றின் பக்கங்களில்
ரத்தம் தோய்ந்த வரலாறு - துருக்கியர் படையெடுப்புகளும் அதன் மதப் பரவலாக்கமும்!
இந்திய வரலாற்றின் பக்கங்களில்
ரத்தம் தோய்ந்த வரலாறு - ஐரோபியப் படையெடுப்புகளும் கிறிஸ்துவ மத பரவலாக்கமும்!

வாள் என்று முன்னே நீட்டி, கழுத்தில் கத்தியை வைத்து கதறக் கதறக் கொலைகளைச் செய்த அரேபியராகட்டும்...
ரொட்டித் துண்டை முன்னே நீட்டி கதறக் கதறப் பார்த்திருந்து இயேசுவின் நாமத்தால் நாக்கைச் சப்புக் கொட்ட வைத்த பாதிரிகளாகட்டும்...
எல்லாரும் இந்த இந்தியத்  திருநாட்டின் வரலாற்றின் பக்கங்களில் அழுத்தமாகப் பதியப் பட்டிருக்கிறார்கள்!
அந்த உண்மை வரலாறுகளை தேடிப் படிக்காதது நம் குற்றம்!
***
கோவா இன்க்யுசிஷன் - கோவா நீதி விசாரணை  என்பதை கூகுளில் தேடிப் பிடித்துப் படியுங்கள்!
கோவா என்ற அந்த இந்தியப் பிரதேசம் - எப்படி  ’அளவு கடந்த அன்பெனும் மகிமை’யால் கிறிஸ்துவமயமானது என்பதை படித்துப் பாருங்கள்!
***
இந்திய மன்னர்களும் சண்டையிட்டார்கள்!
சேரனும் சோழனும் பாண்டியனும்கூட சண்டையிட்டான்.
வாள்களும் ஈட்டிகளும் மோதிக் கொண்டன...
சமணமும் புத்தமும் கூட போட்டியிட்டது
சைவமும் வைணவமும் கூட சண்டையில் ஈடுபட்டன
மதங்களைக் கட்டிக் கொண்ட மன்னர்களால் மதப்  பிடிப்புள்ள தத்துவவாதிகள் கொலையுண்டார்கள்...
ஆனால்... மக்கள் மடியவில்லை! கத்தி முனையில் கழுத்தில் கீறப்படவில்லை! மதத்தை முன்னிறுத்தி போர்கள் நிகழவில்லை!
மண்ணாசையே போருக்குக் காரணமானது!
வரலாற்றில் தன்னை முன்னிறுத்தும் பேராசையே வாள்சண்டைக்கு காரணமானது!
வெற்றி பெற்றாலும், வென்ற மண்ணில் மக்களை சமாதானப் படுத்த வெற்றிபெற்றவன் செய்த முதற்காரியம், அந்த மக்களின் மத உணர்வைப் போற்றும் விதமாய் அவர்களின் தெய்வத்துக்கு கோயில்களை எழுப்பியதுதான்! காரணம் அதே தெய்வம் இவனுக்கும் தெய்வமாக இருந்ததே!
ஆனால்....
இந்திய மதங்களை அழிக்கக் கிளம்பிய அன்பு, அகிம்சை பேர் தாங்கிய மதங்களெலாம்
இந்த மண்ணுக்குச் செய்த துரோகங்கள்... கொஞ்ச நஞ்சமல்ல! கொடிய நஞ்சு!
***
இன்றளவும் மாரியம்மனையும் சுடலையப்பனையும் மாடசாமியையும் இன்னும் வெளி உலகை வந்தடையா எண்ணற்ற தெய்வங்களையும் கும்பிட்டுக் கொண்டிருக்கும் அந்த மக்களைக் காணும்போதெல்லாம்....
எத்தகைய வீரம் விளைந்தவர்கள் என்பதை எண்ணி எண்ணி உள்ளம் சிலிர்க்கும்!
ஆமாம்..
இன்றும் தங்கள் குல வழக்கப்படி, மரபு சார்ந்து, விழா எடுத்து, பொங்கலிட்டு, படையலிட்டு, தங்கள் தெய்வங்களைத் தொழுது கொண்டிருக்கும் ஒவ்வொருவருமே...
வீர நெஞ்சினரே...
விலை போனவர்களைப் போலும், வாளுக்கு அஞ்சி வாய் மூடிய கோழைகளைப் போலும் இல்லாது நெஞ்சு  நிமிர்த்தி நிற்கின்றார்களே... அதற்காகவே அவர்கள் காலில் விழுந்து வணங்கலாம்! வணங்குகிறேன்!

****
மேலும் படிக்க... சில சுட்டிகள்!
* ஜெயமோஹன் கட்டுரை http://www.jeyamohan.in/600#.V1OdUPl97IU
* டோண்டு வலைப்பதிவு: http://dondu.blogspot.in/2008/08/blog-post_12.html
கோவா நீதிவிசாரணைச் சம்பவங்கள்:
* https://en.wikipedia.org/wiki/Goa_Inquisition
* http://www.newindianexpress.com/education/student/Goa-Inquisition/2015/09/03/article2979630.ece
* https://goo.gl/3VUfFk

புதன், மார்ச் 02, 2016

இதழியல் அறம் குறித்த நீதிபதியின் பார்வை


ஒன் வே, நோ எண்ட்ரி, நோ ஃப்ரீ லெப்ட், சிக்னலை மதிக்காமல் கடப்பது... இவற்றில் எல்லாம் பார்த்தீர்கள் என்றால், தவறு செய்பவர்களை தகுந்த நேரத்தில் பிடித்து அபராதம் விதிப்பது என்பதை விட,
தவறு செய்யத் தூண்டி, வண்டியோட்டியின் கண்ணில் படாதவாறு இடது புறம் மரத்துக்குப் பின்னோ, தெருவிளக்கு மின் பெட்டிக்குப் பின்னோ மறைந்து நின்று... திடீரென இடப்புறம் திரும்பி வருபவரை கப் என்று பிடித்து, கறந்து விடுவது... போக்குவரத்து போலீஸாரின் இயல்பு. அவர்கள் என்றுமே, தவறு செய்யாமல் தடுக்கும் வகையில், வாகன ஓட்டிகளின் கண்ணில் படும் வகையில் நிற்பதில்லை!
இது கிட்டத்தட்ட ஸ்டிங் ஆபரேஷன் போல்தான்! அதாவது பொறி வைத்துப் பிடிப்பது.
ஏற்கெனவே சபல புத்தியுள்ள ஒருவனை, விதி மீற வைத்து, அபராதம் கறக்கும் ஒரு செயலைச் செய்வது அறமா?
இது போன்றதற்கான விடையை, ஊடகங்களின் ஸ்டிங் ஆபரேஷனை வைத்து  நீதிபதி ராமசுப்ரமணியன் சொன்னது ரசிக்கும் படி இருந்தது. நல்ல தகவலாகவும் இருந்தது.
எங்கே என்று கேட்கிறீர்களா?
***
தினமணி அறக்கட்டளையின் சார்பில், மார்ச் 1 ஆம் நாள், ஏ.என்.எஸ்., நினைவுச் சொற்பொழிவு என்றும், முதல் சொற்பொழிவாக நீதிபதி ராமசுப்ரமணியன் சிறப்புச் சொற்பொழிவு என்றும் பார்த்தேன். தலைப்பு இன்னும் தூண்டுதலாக அமைந்துவிட்டது. "இதழியல் அறம்” என்பதுதான் அது.
நீதிபதி ராமசுப்ரமணியன் மீது பெரும் மரியாதை மட்டுமல்ல, எதிர்பார்ப்பும் உண்டு எனக்கு! நேரில் சந்தித்து அளவளாவிய தன்மையால் மட்டுமல்ல... எவர் ஒருவர் பசுவை வைத்து பூஜை செய்து நியமப்படி நடந்து கொள்கிறாரோ... அவர்  காமதேனுவின் அம்சம் ஆகிறார்!
நீதிபதி ராமசுப்ரமணியன் தமது இல்லத்தில் இப்போதும் பசு மாடு வைத்து, கோ பூஜை முறையாகச் செய்து, தர்ம நெறிப்படி வாழ்வை நகர்த்திச் செல்பவர். அந்த நம்பிக்கை எனக்கு உண்டு! மேலும், நல்ல பேச்சுத் தமிழ் நடை கைவரப் பெற்றவர். கெக்கே பிக்கே நகைச்சுவை என மலிவான சரக்கை வலுக்கட்டாயமாகத் திணிக்காமல், இயல்பான கௌரவமான நகைச்சுவையைக் கையாளக் கூடியவர். அந்த எண்ணத்தில் ஏ.என்.எஸ்ஸுக்காகவும், தினமணிக்காகவும், நீதிபதியாருக்காகவும் இந்த நிகழ்ச்சிக்கு தனிப்பட்ட அழைப்பிதழ் வராவிட்டாலும், தினமணியின் பொது அழைப்பு காரணத்தால், தினமணி வாசகனாகவே இந்த நிகழ்ச்சிக்குச் சென்றேன்!
***
நிகழ்ச்சியில் பேசிய அனைவரின் பேச்சுமான, ஓரளவு முழுமையான ரிப்போர்ட்... தினமணியில் 2ம் பக்கம் முழுமைக்கும் பிரசுரமாகியிருக்கிறது. பார்த்துப் படித்துக் கொள்க!
நீதிபதியார் பேசியவை வழக்கம்போல் ரசிக்கத் தக்கனவாய் அமைந்திருந்தது.
அவர் பேசியவற்றில் ஒரு கருத்து...
***
அறம் விலகக் காரணம்..?
இதழ்களின் எண்ணிக்கை பெருகியது; (இதழ்கள் பெருகிய அளவுக்கு வாசகர்கள் பெருகாதது); இதழ்களுக்கு இடையேயான போட்டி மனப்பான்மை! முந்தித் தருதலில் குளறுபடி; கிடைத்தது மலினமாக இருந்தாலும் காசுக்காக செய்தியாக்குவது! தவிர்க்க இயலாத போட்டியால் பொறிவைத்தல் செய்திச் செயல்களில் ஈடுபடுவது....
- இப்படி சில காரணங்கள் முன்வைக்கப்பட்டது.
அடுத்தது... அவரின் உரைத் தொகுப்பில் கடைசியாக இடம்பெற்ற முத்தாய்ப்பு வார்த்தைகள்!

ஓர் இதழ், அறத்தில் பால் நிற்கிறதா அல்லது அப்பால் தள்ளிப் போகிறதா என்பதை, அந்த இதழ் வெளியிடும் செய்திகள், அதில் இடம்பெறும் கட்டுரைகளின் உண்மைத் தன்மை, பொதுநலன் மட்டுமே அதில் பொதிந்துள்ளதா அல்லது தங்களுடைய சுழற்சி (சர்குலேஷன்), மலிவான பரபரப்பு விற்பனையை மையமாகக் கொண்டுள்ளதா என்ற தன்மை, (சுயவிளம்பரம், சுயதம்பட்டம் கொண்டு விளங்கும் தன்மை) இவற்றுக்கான விடையில்தான் இதழியல் அறத்தின் உயிர் நாடி உள்ளது.
***
இப்படியாக,
இந்த உயிர்நாடியை உயர் நாடித் துடிப்பாய்க் கொண்டு செயல்பட்டதால்தான், ஏ.என்.எஸ் என்ற ஒரு சித்தாந்தத்தை இன்றளவும் நாம் சிந்தித்துக் கொண்டிருக்கிறோம். இது தலைமுறை கடந்த உயர் தனிச் சிந்தனை!

இருக்கும்போது, ஜால்ரா போட்டு, அண்ணன் வாழ்க, ஐயா வாழ்க கோஷம் போடுவதெல்லாம் அவ்வப்போதைக்கு காதுக்கு குளிராகவும் மனதுக்கு போதையாகவும் இருக்கும்... ஆனால் காலம் கடந்து நிற்பதுதான் பிறப்பின் பயன்.
அந்தப் பிறவிப் பயனை அடைந்த ஏ.என்.எஸ் போன்றவர்கள், நமக்கு வழிகாட்டிகளாய் அமையட்டும்!

திங்கள், ஜனவரி 18, 2016

வரதராசப் பெருமாளின் பழையசீவரம் திருமுக்கூடல் பார்வேட்டை உற்ஸவம்

பொங்கல் விழா களை கட்ட, தன் அரசாங்கத்தில் உள்ள குடிமக்களைக் கண்டு அருள வரதராஜன் புறப்பாடு கண்டருளினான். அவன் ராஜாங்கத்தில் இருந்துகொண்டு அவனை வரவேற்காது இருக்கலாமோ என்று அடியேனும் கிளம்பிவிட்டேன் பழையசீவரத்துக்கு!
ஸ்ரீரங்கத்து ராஜா ரங்கராஜன். குடிமக்கள் எல்லாம் அவனை அரசனாகவே கருதி பணிவிடை செய்ததுண்டு. அவன் குடிகொண்ட கோவில், அவனது அரண்மனை. நம் தென்னகத்து ராஜாக்கள் எல்லாம் தனக்கும் தன் வசதிக்காகவும் அரண்மனைகளைக் கட்டிக் கொண்டதைவிட அந்த அந்த ஊரில் ஆட்சி புரியும் ஆண்டவனுக்கே அரண்மனைகள் போல் ஆலயங்களைக் கட்டிக் கொடுத்தார்கள்.
இப்படியாக பாலாற்றின் கரையினிலே கச்சிப் பதியை ஆளும் அரசனான வரதராஜன் தன் குடிமக்களைக் கண்டு நலம் விசாரிக்கவும், விழாக் கொண்டாட்டத்தின் மூலம் மக்களை ஒன்று கூட்டி, மகிழ்ச்சியடையச் செய்யவும்... எத்தனை தொலைவு கடந்து எழுந்தருள்கிறான்.
எவருக்கும் உள்ளர்த்தமும் காரணமும் புரியாத எழுந்தருளல்தான் இது!
கொட்டும் பனி, நடுக்கும் குளிர், கரடுமுரடு பாதை, பாலாற்றின் மணல்வெளி, அச்ச இரவு... எல்லாம் கடந்து, அவன் எழுந்தருளும் காரணம் யாருக்கும் தெரியாது! கிட்டத்தட்ட 40 கி.மீ. தொலைவு. அவனடியார் குழாம் அவனை எழுந்தருளச் செய்துகொண்டு, அவன் நாமம் பாடி, பஜனை பாடல்கள் என உற்சாகம் மிகக் கொண்டு வரும் அழகே தனி!
இந்த நாகரிக யுகத்திலும் இவ்வளவு பேர் திரண்டு இத்தனை விசுவாச பக்தியுடன் அவனை வரவேற்கிறார்கள் எனில்... சற்று கால ஓட்டத்தின் பின்நோக்கிப் பார்த்தால், கற்பனை சிறகு விரிகிறது. சரித்திரத்தின் பக்கங்களில் காலங்காலமாக வரதனின் இந்தப் புறப்பாட்டுச் சரித்திரம் எழுதப் பட்டுள்ளது. ஆயினும் காரணம் இதுவென்ற புரிதலின்றி!
***
சிந்தனை ஓட்டம் வரதனைப் பற்றியே இருந்தது. கேள்விப்பட்ட சங்கதிதான்! ஆயினும் கண்ணாரக் கண்டு உணர்வில் கலந்ததில்லை! எப்படியும் இன்று சென்றுவிடலாம். எண்ணிக் கொண்டிருந்த நேரத்தில் ஓர் அழைப்பு! எடுத்தால்... நான் முன்னர் பணிபுரிந்த நாளிதழில் தற்போதும் பணிபுரியும் ஒரு நண்பர். கட்டாயத்தின் பேரில் தான் விருதாவாகத் தான் ஒரு நிகழ்ச்சிக்கு செல்ல வேண்டியதைச் சொன்னார். நான் திருமுக்கூடல் சென்று, பாலாற்றின் கரையில் பொழுது போக்கச் செல்லவதாகச் சொன்னேன்! "நீங்க கொடுத்து வெச்சவர்ண்ணா" என்ற வாசகத்தோடு முடித்துக் கொண்டார்.
வாளுக்கு ஆட்பட்டவன் பரம்பரைப் பெருமை மறந்து வாழ்க்கையின் உன்னதம் மறந்தான்; கூழுக்கு ஆட்பட்டவன் கொண்ட கொள்கை துறந்து வாழ்க்கையின் உட்பொருள் மறந்தான்!
வாழ்க்கையின் உள்ளர்த்தம் புரியாத கோட்பாடுகள் என்னைச் சுற்றிச் சுற்றி உழலத் தொடங்கின. இயற்கையின் விளையாடல் எத்தனையோ அத்தனையும் புரிந்து கொள்ளும் திறன் நமக்கு இல்லைதான்! ஏன்... சிறு துளிகூட நம் மனத்தில் ஏறுவதில்லைதான்! ஆனாலும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்!
***
வரதனின் விழாக் கற்பனைகள் ஒரு புறமும், கசந்த காலத்தைக் கடந்து வாழ்க்கையின் வசந்த காலத்தை எதிர்நோக்கிச் செல்லும் கற்பனைகள் ஒரு புறமுமாய்... வழக்கம்போல் பைக் பறந்து கொண்டிருந்தது. காட்டாங்குளத்தூர், மறமலைநகர், சிங்கப்பெருமாள்கோவில் கடந்து பாலார் செல்லும் காட்டுப் பாதையினூடே தனியனாய் பயணம். ஆளரவமற்ற பகுதி என்பார்களே... அதன் வடிவத்தைக் கண்டுகொள்ளும் சாலைதான்! இடையில் இரு கிராமங்கள். ஆனாலும் அமைதியாய் அடங்கிக் கிடந்தன. காஞ்சிபுரத்தின் பழைமைச் செழுமையைக் கண்ணுக்குள் நிரப்பலாம். எல்லாம் வரதனின் ராஜாங்கம் ஆயிற்றே!
அண்மையில் பெய்த அடைமழையில் நிரம்பி, அதற்குள் தன் இயல்புக்கு வந்துவிட்ட சாலையோர ஏரிப் பரப்பில் இளைஞர்கள் கிரிக்கெட்டிக் கொண்டிருந்தார்கள். இருபுறமும் சிறு குன்று. நடுவே செல்லும் பாதை. இரவில் திரும்பி வரும்போது இந்தப் பாதையின் இயல்பை கற்பனை செய்து கொண்டே சீவரம் அடைந்தேன்.
மக்கள் வெள்ளம்தான்! சுற்றுப் பகுதி கிராமத்து மக்களின் பக்தியும் அன்பும்தான் பெருமிதத்தைத் தரும். எத்தனை சிறுவர்களும், பெண்களுமாய் வரதனின் உற்ஸவத்தைக் கண்ணுற அங்கே கூடிருந்தார்கள்! போட்டிக்கு கார்களும் பைக்-களும் சாலையின் இருமருங்கும் ஆக்கிரமித்திருந்தன.
ஹஸ்திகிரி எனும் சிறுகுன்றில் வீற்றிருக்கும் வரதன், இன்று பழைய சீவரம் மலைக்கு எழுந்தருளி மண்டபத்தில் காட்சியளித்தான். பணிவிடைகள் அவனுக்கு ஏராளம். பளிச்செனத் திகழும் படிகள். பக்தர் குழாம் புடைசூழ அந்த அத்திரிகி வரதன், இந்த மலையில் இருந்து இறங்கிவரும் அழகே அழகுதான்!
மலையில் இருந்து இறங்கி பாலாற்றின் மணல் வெளியில் இறங்கிச் செல்கிறான் வரதன். துணைக்கு உடன் வருகிறார் சீவரம் பெருமாள். இருவரும் பாலாற்றின் மணல் வெளியில், ஓரளவு ஓடைபோல் ஓடிக் கொண்டிருக்கும் நீரில் கால நனைத்து திருமுக்கூடல் செல்லும் போது, பாகவத பக்தர் குழாம் பின்னே பஜனைப் பாடல்களைப் பாடிக் கொண்டும் ஆடிக் கொண்டும் வருகிறது.
***
திருமுக்கூடல் - மூன்று ஆறுகள் கூடும் இடம்! பெருமான் அந்தக் கரையில் எழுந்தருளியதால் 'திரு' சேர்ந்து கொண்டுள்ளது. நீர் இன்றி ஏதோ ஆற்றின் பெயரைத் தன்னளவில் கொண்டுள்ள பாலாறு. ஒருவேளை பால் போல் வெண்மை என்பதால் வெண்மணல் சேர்ந்து வெளித் தெரிகிறதோ? இடப்புறத்தே ஓடிவந்து கலந்துவிடும் செய்யாறு மட்டும் தன்னில் நீர் தாங்கி அங்கே நிரம்புகிறது! வேகவதி ஒரு சிற்றோடையாகி அங்கே சங்கமித்து விடுகிறது.
சென்ற வருடம் பிரயாகையில் திரிவேணிசங்கமத்தில் எத்தகைய உணர்வுடன் நதியில் கால் நனைத்தேனோ அதே உணர்வு இங்கே! புண்ணியத்தைப் பெருகச் செய்வதில் இந்த மூன்று ஆறுகளும் பின்வாங்கியதல்ல! ஆயினும் அவற்றில் நீர் பெருகச் செய்யத்தான் நாம் மறுத்துவிடுகிறோம்; மறந்துவிடுகிறோம்!
***
திருமுக்கூடல் தலத்தைப் பற்றி என்றோ படித்தும் எழுதியும் இருக்கிறேன் என்றாலும், முதல்முறை நேரில் காணும் பரவசம்! தொல்லியல் துறைப் பராமரிப்பின் வெளித்தோற்றம் பளிச்செனப் படுகிறது. கோபுரமற்ற புகுவாசல் வெண்மைக் கற்கள் தாங்கி நெடிது நிற்கிறது! உள்ளே ஒரு பசுமைப் பூங்காவின் தோற்றம். செதுக்கப்பட்ட பாதைகள். புல்வெளி. ஈரடிக்கு வளர்ந்து பராமரிக்கப்படும் செடிகள். பூக்களைத் தாங்கி நந்தவனத்தின் அருமை காட்டுறது.
கோயிலில் அப்பன் வேங்கடேசப் பெருமாள் சந்நிதி அழகு. பெருமாள் கரிய நிற வண்ணனாய் விளக்குகளின் ஒளி முகத்தில் பட்டு மின்ன பளிச்சென்று திருமேனி கொண்டு சேவை சாதிக்கிறான். நெடிதுயர் உருவம். தாயார் சந்நிதி, வரதன் சந்நிதியிலும் பக்தர்கள் வரிசை கட்டி ஒழுங்காகச் சென்று தரிசித்து எந்தவித நெருக்கடியும் குழப்பமும் இன்று அமைதியாகத் திரும்பிக் கொண்டிருந்தனர். கோயிலினுள் மொத்தம் 4 காவலர்களே நின்றிருந்தனர்! சந்நிதிகளின் பராமரிப்பு அவ்வளவு தூய்மை!
ஒவ்வொரு மண்டபத்திலும் ஒவ்வொரு பெருமாள். எல்லோரையும் ஸேவித்து இறங்கி, மணல்வெளியில் கலக்கிறது பக்தர் வெள்ளம். அந்த வெள்ளத்தினூடே அடியேன் பெயர் சொல்லி அழைத்த சிலர். நண்பர்களான ஸ்ரீ உ.வே. அனந்தபத்மநாபன் ஸ்வாமி, ஆசார்ய லட்சுமிநரசிம்மன், முகநூலில் மட்டுமே அடியேன் முகம் கண்டு பழகிய உப்பிலி ஸ்வாமி... இப்படியாக!
பெருமாள்கள் ஐவரும் இதை அடுத்து திருமுக்கூடல் கிராமத்துக்குச் செல்கிறார்கள். பின்னே சென்றேன். தெரு மிகத் தூய்மை. வாசலில் கோலமிட்டு, தங்கள் ராஜாவை வரவேற்கும் உற்சாகத்துடன்!
கிராமத்தின் கடைக்கோடி வரை சென்று பெருமாள் அங்கேயே எழுந்தருளி, சற்று நேரம் அந்தக் காலனிவாசிகளின் பூஜையையும் அவர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் வழங்கியதையும் ஏற்றுக் கொண்டு மீண்டும் திரும்புகிறார். சிலிர்ப்பூட்டும் அனுபவம்தான்! பெருமாள் தனியாக வந்தால் இராது! பாகவத கோஷ்டியும், இத்தகைய பக்த கோஷ்டியும்தான் இந்த உற்ஸவத்துக்கு வலு, அழகு!
பெருமாளை எழுந்தருளச் செய்துகொண்டு காஞ்சிக்குத் திரும்பும் அந்தக் கைங்கர்ய கோஷ்டியைப் பார்த்தால், அதைவிட சிலிர்ப்பு. வரதனுக்காக அனைத்தையும் தூக்கி எறிந்துவிட்டு, அவனுடனேயே நடந்து, இரவெல்லாம் விழித்து, பத்திரமாக அவன் அரண்மனையில் அவனை சேர்ப்பிக்கும் வரை இவர்களின் அர்ப்பணிப்பு உணர்வு! நிச்சயம் அரங்க நகர் கோஷ்டிக்கு சளைத்ததல்ல!
***
இரவு 8 மணி ஆயிற்று! சீவரம் பெருமாளை தரிசித்துவிட்டு, திரும்பினேன். சீவரத்தை அடுத்த பெட்ரோல் பங்கில் திரும்பினேன். யாருமே இல்லாதது போன்ற நிலை. ஆனால், ஒரு ஓரத்தில் நின்று செல்லில் சினுங்கிக் கொண்டிருந்த ஒருவர், ஒற்றை ஆளாய் எனைக் கண்டதும் அசைந்து வந்தார். அவரை மெதுவாகப் பேசிவிட்டு பிறகு வருமாறு சைகை செய்தேன். சில நொடிகளில் வந்தார். அவரை நிதானமாக வருமாறு சைகை காட்டியதாலோ என்னவோ... பெட்ரோல் நிரப்பிக் கொண்டே வெகுநாள் பழகிய சிநேகத்துடன் பேசினார்... "வண்டிங்க வந்துட்டு இருக்கு சார். வீட்ல இருந்து பேசினாங்க. கோயிலுக்கு கூட்டிட்டுப் போகணும்னு காலைல இருந்தே சொல்லிக்கிட்டிருந்தாங்க! ஆனா பாருங்க இன்னிக்குன்னு நெறய பேர் லீவு. சிலர் சாப்ட போய்ட்டாங்க. பெட்ரோல் போட ஆளில்ல. அதான் வீட்ல சொல்லி புரியவெச்சிட்டிருந்தேன். இப்பவாவது 9 மணிக்குள்ள வீட்டுக்கு போய் கூட்டிட்டு சீவரம் பெருமாளயாச்சும் பாத்துட்டு வந்துடணும்... ஆனா... நீங்க கொடுத்து வெச்சவங்க சார்...!"
அடடே! ஒரே மாதிரியான வாசகம்! சீவரம் செல்லும் முன்பு அந்த நாளிதழ் பணியில் இருக்கும் நண்பரும், இந்த நபருமாக!
***
அதே காட்டுப் பாதையில் திரும்பினேன். இரவுப் பொழுதுக்கேயுரிய வண்டுகள் பூச்சிகளின் சப்தங்கள் நிசப்தத்தைக் கடந்து கொண்டு கேட்கிறது! பாலார் ஊர் கடந்து, ரெட்டிப்பாளையம் காட்டுப் பகுதியினூடே செல்கையில், சாலையின் ஓரத்தில் இருந்த புதரில் இருந்து மர அணில் போன்ற ஏதோ ஒன்று... பைக் விளக்கின் வெளிச்சத்துக்கு அப்படியே கீழிருந்து தாவி சரியாக என் வலது தோளில் பாய்ந்து கீழே விழுந்தது! நள்ளிரவும் காட்டுப் பாதையும் தனிமையும் எனக்குப் புதிதல்ல. பொதிகை மலைப் பகுதியின் காட்டுப் பாதைகளில் சிறுவயது முதலே தனித்துச் சென்று பழகிய பழக்கம்தான்! பள்ளிப் பருவத்துக்குப் பிறகான வாழ்க்கையிலும் வருடம் பல தனித்திருந்தே கடந்து விட்டவனுக்கு, காட்டுப் பாதையில் மட்டும் தனிமைப் பயணம் அச்சத்தைத் தந்துவிடவில்லை!
ஆனாலும்... இப்போதும் மனத்தில் ஓடிக் கொண்டிருக்கிறது. பெருந்தேவித் தாயாரைத் துறந்து, உபய நாச்சிமாரான தேவியர் இருவரைத் துறந்து, ராஜ மாளிகை துறந்து, எந்த உற்சவமானாலும் எல்லோரும் துணையிருக்க நடத்திக் கொண்டு, இந்த ஒரு உற்ஸவம் காண மட்டும் வரதன் ஏன் தன்னந் தனியனாக இங்கே வருகிறான்!?
***
இந்த உற்ஸவம் குறித்து தினசரியில் வெளியிட்ட செய்தி:
காஞ்சிபுரம்:
செங்கல்பட்டு காஞ்சிபுரம் வழியில் திருமுக்கூடல் கிராமத்தில் உள்ள அப்பன் வேங்கடேசப் பெருமாள் கோயிலில் பார்வேட்டை உற்ஸவம் சனிக்கிழமை வெகுசிறப்பாக நடைபெற்றது.









திருமுக்கூடலில் பாலாறு, செய்யாறு, வேகவதி ஆறு ஆகிய மூன்று ஆறுகள் கூடுகின்றன. இந்தக் கூடுதுறையில், ஆற்றங்கரையோரம் அமைந்துள்ளது அப்பன் வேங்கடேசப் பெருமாள் கோயில். இங்கு ஆண்டுதோறும் மாட்டுப் பொங்கலன்று பார்வேட்டை உற்சவம் நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டு பார்வேட்டை உற்சவம் சனிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள், பழையசீவரம் லட்சுமி நரசிம்மப் பெருமாள், சாலவாக்கம் சீனிவாச பெருமாள், காவான்தண்டலம் லட்சுமி நாராயண ஸ்வாமி, திருமுக்கூடல் அப்பன் வேங்கடேசப் பெருமாள் என ஐந்து பெருமாள்களும் பக்தர்களுக்கு ஒரே நேரத்தில் தரிசனம் அளித்தனர்.
இந் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு, சிறப்பு வழிபாடு நடத்தினர். இவ் விழாவின்போது பக்தர்கள் கோயிலுக்கு செல்லவும், திரும்ப வெளியே வரவும் ஏதுவாக இரு வழிகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன.
இவ் விழாவையொட்டி முன்னதாக வெள்ளிக்கிழமை காஞ்சிபுரத்தில் இருந்து வரதராஜ பெருமாள் பழையசீவரம் லட்சுமி நரசிம்மர் கோயிலை வந்தடைந்தார். அங்கு வரதராஜப் பெருமாளுக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து வரதராஜ பெருமாள், லட்சுமி நரசிம்மருடன் மலையில் இருந்து கீழே இறங்கி வந்து திருமுக்கூடல் சென்று பார்வேட்டை உற்ஸவத்தில் பங்கேற்றார்.
இவ் விழா முடிந்து சனிக்கிழமை இரவு புறப்பட்டு அவளூர், ஏரிவாய், படப்பம், தேனம்பாக்கம், அம்மன்காரத் தெரு வழியாக ஞாயிற்றுக்கிழமை காலை வரதராஜ பெருமாள் காஞ்சிபுரம் கோயிலை சென்றடைந்தார்.

சனி, அக்டோபர் 31, 2015

சிருஷ்டி தோஷம்

அடேய் பிரம்ம தேவா…
எந்த நேரத்திலடா
எம்மை இங்கு அனுப்பி வைத்தாய்?
உன் படைப்புகளின்
ஜனனக் குறிப்பு கண்டு
ஒருவன் சொல்கிறான்…
கர்ப்ப தோஷம்…
ஒருவன் சொல்கிறான்…
சர்ப்ப தோஷம்!
இன்னும்…
எத்தனை எத்தனை தோஷங்கள்?
செவ்வாய் தோஷமாம்..
நாக தோஷமாம்!
மாங்கல்ய தோஷமாம்!
மங்கள தோஷமாம்!
சயன தோஷமாம்
சங்கட தோஷமாம்!
பிதுர் தோஷமாம்…
புத்ர தோஷமாம்!
அட…
இன்னும் சிலரின்
உருவத்தை உருக்குலைத்து
குற்றுயிராய்க் கிடத்துகிறாய்…
தோஷங்கள் இல்லையென்று
சிரித்துச் சொன்ன சோசியன்
பொடிவைத்துச் சொல்கிறான்…
உங்களுக்கு
திருஷ்டி தோஷம்!
அடேய்..
இது திருஷ்டி தோஷம் இல்லையடா..
உன் பார்வைக் குறைபாடு!
உன் படைப்புத் திறனின் குறைபாடு…
எங்கள் பணியில் குறைபாடு இருந்தால்
பணியிடை நீக்கம் செய்து
பழியை விலக்கிக் கொள்ளும்
மேலதிகாரிகள் சிலர் உண்டு!
ஆனால்…
உன் அதிகாரிகளும்
உதவாக்கரையாய்ப்
போய்விட்டார்களோ!?
அடேய் பிரம்ம தேவா..
திருஷ்டி தோஷம்
எமக்கு இல்லையடா..
உமக்கே..!
அது உம்
சிருஷ்டி தோஷம்!

சனி, அக்டோபர் 10, 2015

திருவரங்கத்தமுதனார் அருளிச் செய்த இராமாநுச நூற்றந்தாதி

ஸ்ரீ:

திருவரங்கத்தமுதனார் அருளிச் செய்த இராமாநுச நு}ற்றந்தாதி


தனியன்கள்

முன்னை வினையகல மூங்கிற் குடியமுதன்
பொனங்கழற்கமலப் போதிரண்டும், - என்னுடைய
சென்னிக்கணியாகச் சேர்த்தினேன் தென்புலத்தார்க்கு,
என்னுக்கடவுடையேன் யான்! 1

நயந்தரு பேரின்பமெல்லாம் பழுதென்று நண்ணினர்பால்,
சயந்தரு கீர்த்தி இராமானுசமுனி தாளிணைமேல்,
உயர்ந்த குணத்துத் திரவரங்கத்தமுது ஓங்கும், அன்பால்
இயம்பும் கலித்துறை அந்தாதி ஓத இசை நெஞ்சமே!. 2

சொல்லின் தொகைகொண்டுஉனதடிப்போதுக்குத் தொண்டுசெய்யும்,
நல்லன்பர் ஏத்துமுன் நாமமெல்லாம் என்தன் நாவினுள்ளே,
அல்லும் பகலும் அமரும்படி நல்கு அறுசமயம்
வெல்லும் பரம, இராமானுச! இதென் விண்ணப்பமே. 3


பாசுரங்கள் தொடக்கம்:

பூமன்னுமாது பொருந்தியமார்பன், புகழ்மலிந்த
பாமன்னு மாறன், அடிபணிந்துய்ந்தவன் ஃ
பல்கலையோர் தாம்மன்னவந்த இராமாநுசன்,
சரணாரவிந்தம் நாம்மன்னிவாழ,
நெஞ்சே சொல்லுவோம் அவன் நாமங்களே. 1

ழூகள்ளார்பொழில் தென்னரங்கன், கமலப்பதங்கள்
நெஞ்சிற் கொள்ளா, மனிசரை நீங்கிக் ஃ
குறையல்பிரானடிக்கீழ் விள்ளாத அன்;பன் இராமாநுசன்,
மிக்கசீலமல்லால் உள்ளாதென்நெஞ்சு,
ஒன்றறியேன் எனக்குற்றபேரியல்வே 2

பேரியல்நெஞ்சே!, அடிபணிந்தேனுன்னைப், பேய்ப்பிறவிப்
ப10ரியரோடுள்ளசுற்றம் புலர்த்திப் ஃ
பொருவருஞ்சீர் ஆரியன்செம்மை
இராமானுசமுனிக்கன்பு செய்யும், சீரியபேறுடையார்,
அடிக்கீழென்னைச்சேர்த்ததற்கே. 3

என்னைப்புவியில் ஒரு பொருளாக்கி, மருள்சுரந்த
முன்னைப்பழவினைவேறறுத்து, ஃ
ஊழிமுதல்வனையே பன்னப்பணித்த இராமானுசன்,
பரன்பாதமுமென் சென்னித்தரிக்கவைத்தான்,
எனக்கேதும் சிதைவில்லையே. 4

எனக்குற்ற செல்வம் இராமானுசனென்று, இசையகில்லா
மனக்குற்றமாந்தர் பழிக்கில்புகழ் ஃ
அவன் மன்னிய சீர் தனக்குற்ற அன்பர் அவன்
திருநாமங்கள் சாற்றுமென்பா, இனக்குற்றம்
காணகில்லார், பத்தி ஏய்ந்த இயல்விதென்றே. 5

இயலும் பொருளும் இசையத்தொடுத்து, ஈன்கவிகளன்பால்
மயல்கொண்டுவாழ்த்தும் இராமானுசனை ஃ
மதியின்மையால் பயிலும் கவிகளில் பத்தியில்லாத
என்பாவிநெஞசால், முயல்கின்றனன்,
அவன்றன் பெருங்கீர்த்தி மொழிந்திடவே 6

ழூமொழியைக் கடக்கும் பெரும்புகழான்,
வஞ்சமுக்குறும்பாம் குழியைக்கடக்கும்,
நம்கூரத்தாழ்வான் சரண்கூடியபின் ஃ
பழியைக்கடத்தும் இராமாநுசன் புகழ்பாடி,
அல்லா வழியைக்கடத்தல்,
எனக்கினியாதும்வருத்தமன்றே 7

வருத்தும் புறவிருள் மாற்ற, எம்பொய்கைப்பிரான்
மறையின் குருத்தின் பொருளையும்,
செந்தமிழ் தன்னையும்கூட்டி ஃ
ஒன்றத் திரித்தன்றெரித்த திருவிளக்கைத்
தன் திருவுள்ளத்தே, இருத்தும்பரமன்,
இராமானுசனெம் இறையவனே. 8

இறைவனைக் காணும் இதயத்திருள்கெட,
ஞானமென்னும் நிறைவிளக்கேற்றிய,
பூதத்திருவடித்தாள்கள் ஃ
நெஞ்சத்துறையவைத்தாளும் இராமானுசன்
புகழ்ஓதும் நல்லோர், மறையினைக்காத்து,
இந்த மண்ணகத்தே மன்னவைப்பவரே. 9

மன்னியபேரிருள் மாண்டபின், கோவலுள் மாமலராள்
தன்னொடு மாயனைக், கண்டமைகாட்டும் ஃ
தமிழ்த்தலைவன் பொன்னடிபோற்றும்
இராமானுசற்கன்புபூண்டவர் தாள்,
சென்னியிற்சூடும், திருவுடையாரென்றும் சீரியரே. 10
சீரியநான்மறைச் செம்பொருள், செந்தமிழாலளித்த
பாரியலும் புகழ்ப்பாண்பெருமாள் ஃ
சரணாம்பதுமத்தாரியல் சென்னி இராமானுசன்றன்னைச்
சார்ந்தவர்தம், காரியவண்மை,
என்னால் சொல்லொணாதிக்கடலிடத்தே 11

இடங்கொண்டகீர்த்தி மழிசைக்கிறைவன்,
இணையடிப்போதடங்கும் இதயத்திராமானுசன் ஃ
அம்பொற்பாதமென்றும் கடங்கொண்டிறைஞ்சும்
திருமுனிவர்க்கன்றிக்காதல் செய்யாத், 12
திடங்கொண்டஞானியர்க்கே, அடியேனன்பு செய்வதுவே
செய்யும் பசுந்தளபத் தொழில்மாலையும், செந்தமிழில்
பெய்யும் மறைத் தமிழ்மாலையும் ஃ
பேராத சீரரங்கத்தையன் கழற்கணியும் பரன்தாளன்றி,
ஆதரியாமெய்யன்,
இராமானுசன் சரணேகதிவேறெனக்கே. 13

கதிக்குப்பதறி, வெங்கானமும் கல்லும் கடலுமெல்லாம்
கொதிக்கத், தவம்செய்யும்கொள்கையற்றேன், ஃ
கொல்லிகாவலன் சொல் பதிக்கும் கலைக்கவிபாடும்
பெரியவர் பாதங்களே, துதிக்கும்பரமன்,
இராமானுசனென்னைச் சோர்விலனே. 14

சோராதகாதல் பெருஞ்சுழிப்பால், தொல்லை மாலையொன்றும்
பாராதவனை, பல்லாண்டென்று காப்பிடும் ஃ
பான்மையன்தாள் பேராதவுள்ளத்திராமானுசன்றன்
பிறங்கியசீர், சாராமனிசரைச் சேரேன்,
எனக்கென்ன தாழ்வினியே? 15


ழூதாழ்வொன்றில்லா மறைதாழ்ந்து, தலமுழுதும் கலியே
ஆள்கின்றநாள்வந்து, அளித்தவன்காண்மின், ஃ
அரங்கர்மௌலி சூழ்கின்றமாலையைச் சூடிக்கொடுத்தவள்
தொல்லருளால், வாழ்கின்றவள்ளல்,
இராமானுசனென்னும் மாமுனியே. 16

முனியார் துயரங்கள் முந்திலும், இன்பங்கள் மொய்த்திடினும்
கனியார்மனம், கண்ணமங்கை நின்றானைக் ஃ
கலைபரவும் தனியானைத் தண்டமிழ்செய்த
நீலன்றனக்கு, உலகில் இனியானை,
எங்கள் இராமானுசனைவந்து எய்தினரே 17

எய்தற்கரியமறைகளை, ஆயிரம்இன்தமிழால் செய்தற்
குலகில்வரும், சடகோபனைச், ஃ
சிந்தையுள்ளே பெய்தற்கிசையும் பெரியவர்சீரை
உயிர்களெல்லாம், உய்தற்குதவும்,
இராமானுசனெம்உறுதுணையே 18

உறுபெருஞ்செல்வமும் தந்தையும்தாயும், உயர்குருவும்
வெறிதருபூமகள் நாதனும், ஃ
மாறன் விளங்கியசீர் நெறிதரும் செந்தமிழ்
ஆரணமேயென்றிந்நீணிலத்தோர், அறிதரநின்ற,
இராமானுசன் எனக்கு ஆரமுதே. 19

ஆரப்பொழில் தென்குருகைப்பிரான், அமுதத்திருவாய்
ஈரத்தமிழின், இசையுணர்ந்தோர்கட்கு, ஃ
இனியவர்தம் சீரைப்பயின்றுய்யும் சீலங்கொள்
நாதமுனியை, நெஞ்சால் வாரிப்பருகும்,
இராமானுசனென்றன்மாநிதியே. 20


நிதியைப் பொழியும்முகிலென்று, நீசர்தம்வாசல்பற்றித்
துதிகற்றுலகில் துவள்கின்றிலேன் ஃ
இனித்து}ய்நெறிசேர் எதி;கட்கிறைவன் யமுனைத்துறைவன்
இணையடியாம், கதிபெற்றுடைய,
இராமானுசனென்கைக்காத்தனனே. 21

கார்த்திகையானும் கரிமுகத்தானும், கனலும்முக்கண்
மூர்த்தியும் மோடியும் வெப்பும் முதுகிட்டு, ஃ
மூவுலகும் ©த்தவனே! என்றுபோற்றிடவாணன்
பிழைபொறுத்த, தீர்த்தனையேத்தும்,
இராமானுசனென்றன்சேமவைப்பே 22

வைப்பாயவான்பொருளென்று, நல்லன்பர்மனத்தகத்தே
எப்போதும்வைக்கும் இராமானுசனை, ஃ
இருநிலத்தில் ஒப்பார் இலாதஉறுவினையேன்
வஞ்ச நெஞ்சில்வைத்து, முப்போதும்வாழ்த்துவன்,
என்னாம் இது அவன் மொய்புகழ்க்கே. 23

மொய்த்தவெந்தீவினையால் பல்லுடல்தொறும்மூத்து,
அதனால் எய்த்தொழிந்தேன், முனநாள்களெல்லாம்,ஃ
இன்று கண்டுயர்ந்தேன் பொய்த்தவம்
போற்றும்புலைச்சமயங்கள்நிலத்தவியக், 24
கைத்தமெய்ஞ்ஞானத்து, இராமானுசனென்னும்கார்தன்னையே.
காரேய் கருணையிராமாநுச, இக்கடலிடத்தில்
ஆரேயறிபவர், நின்னருளின்தன்மை, ஃ
அல்லலுக்கு நேரேயுறைவிடம் நான்வந்து
நீயென்னைஉய்த்தபின், உன் சீரேயுயிர்க்குயிராய்,
அடியேற்கின்றுதித்திக்குமே. 25


திக்குற்ற கீர்த்தியிராமாநுசனை, என் செய்வினையாம்
மெய்க்குற்றம் நீக்கி, விளங்கியமேகத்தை, ஃ
மேவும்நல்லோர் எக்குற்றவாளர்
எதுபிறப்பேதியல்வாகநின்றோர், அக்குற்றம்அப்பிறப்பு,
அவ்வியல்வேநம்மையாட்கொள்ளுமே 26

கொள்ளக்குறைவற்றிலங்கிக், கொழுந்துவிட்டோங்கியவுன்
வள்ளல் தனத்தினால், வல்வினையேன் மனம்
நீ புகுந்தாய் ஃ வெள்ளைச்சுடர்விடும்உன்பெருமேன்மைக்கு இழுக்கிதென்று, தள்ளுற் றிரங்கும்,
இராமானுச! என்தனிநெஞ்சமே! 27

நெஞ்சில்கறைகொண்ட கஞ்சனைக்காய்ந்தநிமலன், நங்கள்
பஞ்சித்திருவடி, பின்னைதன்காதலன், ஃ
பாதம் நண்ணா வஞ்சர்க்கரிய இராமானுசன்புகழ்
அன்றியென்வாய், கொஞ்சிப்பரவகில்லாது,
என்னவாழ்வின்றுகூடியதே! 28

கூட்டும் விதியென்றுகூடுங்கொலோ, தென்குருகைப்பிரான்
பாட்டென்னும்,வேதப்பசுந்தமிழ்தன்னைத், ஃ
தன்பத்தியென்னும் வீட்டின்கண்வைத்த இராமானுசன்
புகழ்மெய்யுணர்ந்தோர், ஈட்டங்கள்தன்னை,
என்நாட்டங்கள்கண்டின்பமெய்திடவே. 29

இன்பம்தருபெருவீடுவந்தெய்திலென்? எண்ணிற்த
துன்பந்தரு நிரயம்பலசூழிலென்? ஃ
தொல்லுலகில் மன்பல்லுயிர்கட்கிறையவன்
மாயன்எனமொழிந்த, அன்பன் அனகன்,
இராமானுசனென்னை ஆண்டனனே. 30


ழூஆண்டுகள் நாள் திங்களாய், நிகழ்காலமெல்லாம்மனமே!
ஈண்டு, பல்யோனிகள்தோறுழல்வோம், ஃ
இன்றோரெண்ணின்றியே காண்டகுதோளண்ணல்
தென்னத்தியூரர்கழலிணைக்கீழ்ப், ப10ண்டவன்பாளன்,
இராமானுசனைப்பொருந்தினமே. 31

பொருந்தியதேசும் பொறையும் திறலும்புகழும், நல்ல
திருந்தியஞானமும், செல்வமும் சேரும் ஃ
செருகலியால் வருந்தியஞாலத்தை,
வண்மையினால்வந்தெடுத்தளித்த அருந்தவன்,
எங்கள் இராமானுசனை அடைபவர்க்கே. 32

அடையார் கமலத்தலர்மகள் கேள்வன், கையாழியென்னும்
படையோடுநாந்தகமும் படர்தண்டும் ஃ
ஒண்சார்ங்கவில்லும் புடையார்புரிசங்கமுமிந்தப்
பூதலம்காப்பதற்கு, என்னிடையே,
இராமானுசமுனியாயின இந்நிலத்தே 33

நிலத்தைச் செறுத்துண்ணும் நீசக்கலியை, நினைப்பரிய
பலத்தைச்செறுத்தும், பிறங்கியதில்லை, ஃ
என்பெய்வினைதென் புலத்தில்பொறித்த வப்புத்தகச்சும்மை
பொறுக்கியபின், நலத்தைப்பொறுத்தது,
இராமானுசன்றன் நயப்புகழே 34

நயவேனொருதெய்வம்நானிலத்தே, சிலமானிடத்தைப்
புயலேஎன, கவிபோற்றிசெய்யேன், ஃ
பொன்னரங்கமென்னில் மயலேபெருகும் இராமானுசன்,
மன்னுமாமலர்த்தாள் அயரேன்,
அருவினை என்னையெவ்வாறின்றடர்ப்பதுவே? 35


அடல்கொண்ட நேமியன் ஆருயிர்நாதன், அன்றாரண்ச்சொல்
கடல்கொண்டஒண்பொருள் கண்டளிப்பப், ஃ
பின்னும் காசினியோர் இடரின்கண்வீழ்ந்திடத் தானும்
அவ்வொண்பொருள்கொண்டு, அவர்பின்படரும்குணன்,
எம்இராமானுசன்றன் படியிதுவே 36

படிகொண்டகீர்த்தி இராமாயணமென்னும்பத்திவெள்ளம்,
குடிகொண்டகோயில், இராமானுசன்குணங்கூறும், ஃ
அன்பர் கடிகொண்டமாமலர்த்தாள் கலந்துள்ளங்கனியும்
நல்லோர், அடிகண்டுகொண்டுகந்து,
என்னையும் ஆளவர்க்காக்கினரே. 37

ஆக்கியடிமை நிலைப்பித்தனை, யென்னை இன்றவமே
போக்கிப்புறத்திட்டது என்பொருளாமுன்பு, ஃ
புண்ணியர்தம் வாக்கிற்பிரியா இராமானுச!
நின்அருளின்வண்ணம், நோக்கில்தெரிவரிதால்,
உரையாயிந்தநுண்பொருளே. 38

பொருளும் புதல்வரும்பூமியும், ப10ங்குழலாருமென்றே
மருள்கொண்டிளைக்கும், நமக்குநெஞ்சே! ஃ
மற்றுளார்தரமோ? இருள்கொண்டவெந்துயர்
மாற்றித்தன்ஈறில்பெரும்புகழே, தெருளும்தெருள்தந்து,
இராமானுசன்செய்யும் சேமங்களே. 39

சேமநல்வீடும் பொருளும் தருமமும்,
சீரியநற்காமமும் என்றிவைநான்கென்பர், ஃ
நான்கினும் கண்ணனுக்கே ஆமதுகாமம் அறம்பொருள்
வீடிதற்கென்றுரைத்தான், வாமனன்சீலன்,
இராமானுசனிந்தமண்மிசையே 40


மண்மிசையோனிகள் தோறும்பிறந்து, எங்கள்மாதவனே
கண்ணுறநிற்கிலும் காணகில்லா, ஃ
உலகோர்களெல்லாம் அண்ணல் இராமானுசன்வந்து தோன்றியஅப்பொழுதே, நண்ணருஞானம்
தலைக்கொண்டு, நாரணற்காயினரே. 41

ஆயிழையார்கொங்கைதங்கும் - அக்காதல்அளற்றழுந்தி
மாயுமென் ஆவியை, வந்தெடுத்தானின்று, ஃ
மாமலராள் நாயகன் எல்லாவுயிர்கட்கும்நாதன்,
அரங்கனென்னும் தூயவன்,
தீதில் இராமானுசன் தொல்லருள்சுரந்தே. 42

சுரக்கும் திருவும்உணர்வும், சொலப்புகில்வாயமுதம்
பரக்கும், இருவினைபற்றறவோடும், ஃ
படியிலுள்ளீர்! உரைக்கின்றனனுமக்கு
யானறஞ்சீறும் உறுகலியைத்,துரக்கும்பெருமை,
இராமானுசனென்று சொல்லுமினே. 43

சொல்லார் தமிழொருமூன்றும், சுருதிகள்நான்குமெல்லை
இல்லா, அறநெறியாவும்தெரிந்தவன், ஃ
எண்ணருஞ்சீர்நல்லார்பரவும் இராமானுசன்
திருநாமம்நம்பிக்கு அல்லார் அகலிடத்தோர்,
எதுபேறென்றுகாமிப்பரே. 44

பேறொன்றுமற்றில்லைநின்சரண்அன்றி, அப்பேறளித்தற்
காறொன்றுமில்லை, மற்றைச்சரண்அன்றி, ஃ
என்றிப்பொருளைத் தேறுமவர்க்கும் எனக்கும்
உனைத்தந்தசெம்மை சொல்லால், கூறும்பரம்மன்று,
இராமானுச! மெய்ம்மைகூறிடிலே. 45


கூறுஞ்சமயங்கள் ஆறும்குலையக், குவலயத்தே
மாறன்பணித்த, மறையுணர்ந்தோனை, ஃ
மதியிலியேன் தேறும்படியென்மனம் புகுந்தானைத்,
திசையனைத்தும் ஏறும்குணனை,
இராமானுசனை இறைஞ்சினமே. 46

இறைஞ்சப்படும்பரன் ஈசன் அரங்கனென்று, இவ்வுலகத்-
தறம்செப்பும், அண்ணல் இராமானுசன், ஃ
என்அருவினையின் திறம்செற்றிரவும்பகலும் விடாதென்றன்
சிந்தையுள்ளே, நிறைந்தொப்பறவிருந்தான்,
எனக்காரும்நிகரில்லையே! 47

நிகரின்றி நின்றவென்நீசதைக்கு, நின்னருளின்கணன்றிப்
புகலொன்றுமில்லை, அருட்குமஃதேபுகல், ஃ
புன்மையிலோர் பகரும்பெருமைஇராமானுச!
இனிநாம்பழுதே, அகலும்பொருளென்,
பயனிருவோமுக்குமானபின்னே? 48

ஆனது செம்மையறநெறி, பொய்ம்மை அறுசமயம்
போனது பொன்றி, இறந்ததுவெங்கலி, ஃ
பூங்கமலத் தேநதிபாய்வயல் தென்னரங்கன்
கழல் சென்னிவைத்துக், தானத்தில்மன்னும்,
இராமானுசனித்தலத்துதித்தே. 49

உதிப்பனவுத்தமர்சிந்தையுள், ஒன்னலர் நெஞ்சமஞ்சிக்
கொதித்திட, மாறிநடப்பன, ஃ
கொள்ளைவன்குற்றமெல்லாம் பதித்தவென்புன்கவிப்பாவினம்
பூண்டனபாவுதொல்சீர், எதித்தலைநாதன்,
இராமனுசன்றன் இணையடியே. 50


அடியைத் தொடர்ந்தெழும்ஐவர்கட்காய், அன்றுபாரதப்போர்
முடியப், பரிநெடுந்தேர்விடுங்கோனை, ஃ
முழுதுணர்ந்த அடியார்க்கமுதம் இராமானுசன்
என்னைஆளவந்து, இப்படியிற்பிறந்தது,
மற்றில்லைகாரணம்பார்த்திடிலே. 51

பார்தானறுசமயங்கள்பதைப்ப,
இப்பார்முழுதும் போர்த்தான் புகழ்கொண்டு,
புன்மையினேனிடைத்தான்புகுந்து ஃ
தீர்த்தானிருவினை தீர்த்து,
அரங்கன்செய்யதாளிணையோடார்த்தான்,
இவையென் இராமானுசன்செய்யும் அற்புதமே. 52

அற்புதன் செம்மை இராமானுசன், என்னைஆளவந்த
கற்பகம்கற்றவர், காமுறுசீலன், ஃ
கருதரிய பற்பல்லுயிர்களும் பல்லுலகு யாவும்
பரனதென்னும், நற்பொருள்தன்னை,
இந்நானிலத்தேவந்துநாட்டினனே. 53

நாட்டியநீசச்சமயங்கள்மாண்ட்ன,
நாரணனைக் காட்டியவேதம்களிப்புற்றது, ஃ
தென்குருகைவள்ளல் வாட்டமிலாவண்டமிழ்மறை
வாழ்ந்தது, மண்ணுலகில் ஈட்டியசீலத்து,
இராமானுசன்றன் இயல்வுகண்டே. 54

கண்டவர் சிந்தைகவரும், கடிபொழில்தென்னரங்கன்,
தொண்டர்குலாவும் இராமானுசனைத், ஃ
தொகையிறந்த பண்தருவேதங்கள் பார்மேல்நிலவிடப் பார்த்தருளும், கொண்டலைமேவித்தொழும்,
குடியாமெங்கள் கோக்குடியே. 55

கோக்குலமன்னரைமூவெழுகால், ஒருகூர்மழுவால்
போக்கியதேவனைப், போற்றும்புனிதன், ஃ
புவனமெங்கும் ஆக்கியகீர்த்தி இராமானுசனை
அடைந்தபின், என் வாக்குரையாது,
என்மனம் நினையாதினி மற்றொன்றையே. 56

மற்றொரு பேறுமதியாது, அரங்கன்மலரடிக்காள்உற்றவரே, தனக்குற்றவராக்கொள்ளும் உத்தமனை, ஃ
நற்றவர் போற்றுமிராமாநுசனை,
இந்நானிலத்தே பெற்றனன்,
பெற்றபின் மற்றறியேனொரு பேதைமையே. 57

பேதையர்வேதப்பொருளிதென்றுன்னிப், பிரமம்நன்றென்றோதி
மற்றெல்லாஉயிரும் அஃதென்று, ஃ
உயிர்கள் மெய்விட்டு ஆதிப் பரனொடொன்றாமென்று
சொல்லுமவ்வல்லலெல்லாம்,
வாதில்வென்றான், எம்இராமானுசன் மெய்மமதிக்கடலே. 58

கடலளவாயதிசையெட்டினுள்ளும், கலியிருளே
மிடைதருகாலத்திராமானுசன், ஃ
மிக்கநான்மறையின் சுடரொளியாலவ்விருளைத்
துரந்திலனேல், உயிரை உடையவன்,
நாரணன்என்றறிவாரில்லை உற்றுணர்ந்தே. 59

உணர்ந்தமெய்ஞ்ஞானியர்யோகந்தொறும், திருவாய்மொழியின்
மணந்தரும், இன்னிசைமன்னும் இடந்தொறும், ஃ
மாமலராள் புணர்ந்தபொன்மார்பன் பொருந்தும்
பரிதொறும் புக்குநிற்கும், குணந்திகழ்கொண்டல்,
இராமானுசனெங் குலக்கொழுந்தே. 60


கொழுந்துவிட்டோடிப்படரும் வெங்கோள்வினையால்,
நிரயத்தழுந்தியிட்டேனை, வந்தாட்கொண்டபின்னும்,ஃ
அருமுனிவர் தொழுந்தவத்தோனெம்இராமானுசன்
தொல்புகழ், சுடர்மிக்கெழுந்தது
அத்தால் நல்லதிசயங்கண்ட திருநிலமே. 61

இருந்தேனிருவினைப்பாசம்கழற்றி, இன்றியான்
இறையும் வருந்தேன், இனியெம்இராமானுசன், ஃ
மன்னுமாமலர்த்தாள் பொருந்தாநிலையுடைப்
புன்மையினோர்க்கு ஒன்றும்நன்மைசெய்யாப்,
பெருந்தேவரைப்பரவும், பெரியோர் தம்கழல்பிடித்தே. 62

பிடியைத்தொடரும்களிறென்ன, யானுன்பிறங்கியசீர்
அடியைத்தொடரும்படி நல்கவேண்டும், ஃ
அறுசமயச் செடியைத் தொடரும் அருள்செறிந்தோர்
சிதைந்தோடவந்து இப்படியைத்தொடரும்,
இராமானுச! மிக்கபண்டிதனே. 63

பண்டருமாறன்பசுந்தமிழ், ஆனந்தப்பாய்மதமாய்
விண்டிட, எங்கள் இராமானுசமுனிவேழம் ஃ
மெய்ம்மைகொண்ட நல்வேதக்கொழுந்தண்டமேந்திக்,
குவலயத்தே மண்டிவந்தேன்றது,
வாதியர்காள்! உங்கள்வாழ்வற்றதே. 64

வாழ்வற்றது தொல்லைவாதியர்க்கு, என்றும்மறையவர்தம்
தாழ்வற்றது, தவம் தாரணிபெற்றது, ஃ
தத்துவ நு}ல் கூழற்றது குற்றமெல்லாம்
பதித்தகுணத்தினர்க்கு, அந்நாழற்றது,
நம்இராமானுசன் தந்தஞானத்திலே. 65


ஞானங்கனிந்தநலங்கொண்டு, நாடொறும்நைபவர்க்கு
வானம்கொடுப்பதுமாதவன், ஃ
வல்வினையேன் மனத்தில் ஈனம்கடிந்தஇராமானுசன்
தன்னைஎய்தினர்க்கு, அத்தானம்கொடுப்பது,
தன்தகவென்னும்சரண்கொடுத்தே. 66

சரணமடைந்ததருமனுக்காப், பண்டுநூற்றுவரை
மரணம் அடைவித்தமாயவன் தன்னை, ஃ
வணங்கவைத்த கரணம்இவையுமக்கன்றென்றிராமானுசன்,
உயிர்கட்(கு) அரணங்கமைத்திலனேல்,
அரணர்மற்றிவ்வாருயிர்க்கே? 67

ஆரெனக்கின்றுநிகர்சொல்லின், மாயனன்றைவர்
தெய்வத் தேரினிற்செப்பியகீதையின், ஃ
செம்மைப்பொருள்தெரியப் பாரினிற்சொன்ன
இராமானுசனைப் பணியும்நல்லோர்,
சீரினிற்சென்றுபணிந்தது, என்னாவியும்சிந்தையுமே. 68

சிந்தையினொடுகரணங்கள்யாவும்சிதைந்து,
முன்னாள் அந்தமுற்றாழ்ந்ததுகண்டு, ஃ
அவைஎன்றனக்கன்றருளால் தந்தஅரங்கனும்
தன்சரண்தந்திலன், தானதுதந்து, எந்தைஇராமானுசன்
வந்தெடுத்தனன் இன்றென்னையே. 69

என்னையம் பார்த்தென்இயல்வையும்பார்த்து, எண்ணில்
பல்குணத்த உன்னையும் பார்க்கில்,
அருள்செய்வதேநலம், ஃ அன்றியென்பால் பின்னையும்
பார்க்கில்நலமுளதே? உன்பெருங்கருணை, தன்னை யென்பார்ப்பர், இராமானுச! உன்னைச்சார்ந்தவரே. 70


சார்ந்ததென் சிந்தையுன் தாளிணைக்கீழ், அன்புதான்மிகவும்
கூர்ந்தது, அத்தாமரைத்தாள்களுக்கு, ஃ
உன்றன் குணங்களுக்கே தீர்ந்ததென்செய்கை
முன்செய்வினை நீசெய்வினையே, அதனால்பேர்ந்தது,
வண்மைஇராமானுச! எம்பெருந்;தகையே. 71

கைத்தனன் தீயசமயக்கலகரைக்,
காசினிக்கேஉய்த்தனன், தூயமறைநெறிதன்னை, ஃ
என்றுன்னியுள்ளம் நெய்த்தவன்போடிருந்தேத்தும்
நிறைபுகழோருடனே, வைத்தனன்என்னை,
இராமானுசன் மிக்கவண்மைசெய்தே. 72

வண்மையினாலுந்தன்மாதகவாலும், மதிபுரையும்
தண்மையினாலும், இத்தாரணியோர்கட்குத், ஃ
தான்சரணாய் உண்மை நன்ஞானம்உரைத்தஇராமானுசனை,
உன்னும் திண்மையல்லாலெனக்கில்லை,
மற்றோர்நிலைதேர்ந்திடிலே. 73

தேரார் மறையின்திறமென்று, மாயவன்தீயவரைக்
கூராழிகொண்டுகுறைப்பது, ஃ கொண்டலனையவண்மை ஏரார்குணத்தெம்இராமானுசன்.
அவ்வெழில்மறையில் சேராதவரைச்சிதைப்பது,
அப்போதொருசிந்தைசெய்தே. 74

செய்த்தலைச்சங்கம்செழுமுத்தம்ஈனும், திருவரங்கர்
கைத்தலத்தாழியும்சங்கமுமேந்தி, ஃ
நங்கண் முகப்பேமொய்த்தலைத்துன்னைவிடேனென்றிருக்கிலும்,
நின்புகழே மொய்த்தலைக்கும்வந்து,
இராமானுச! என்னைமுற்றுநின்றே. 75


ழூநின்றவண்கீர்த்தியும்நீள்புனலும், நிறைவேங்கடப்பொற்
குன்றமும், வைகுந்தநாடும் குலவியபாற்கடலும்,ஃ
உன்தனக்கெத்தனையின்பந்தரும்
உன்இணைமலர்த்தாள், என்றனக்கும்அது,
இராமானுச! இவையீந்தருளே. 76

ஈந்தனனீயாதஇன்னருள், எண்ணில்மறைக்குறும்பைப்
பாய்ந்தனன், அம்மறைப்பல்பொருளால், ஃ
இப்படியனைத்தும் ஏய்ந்தனன்கீர்த்தியினாலென் வினைகளை,
வேர்பறியக் காய்ந்தனன், வண்மை
இராமானுசற்கென்கருத்தினையே? 77

கருத்திற்புகுந்துள்ளிற்கள்ளம்கழற்றிக், கருதரிய
வருத்தத்தினால்மிகவஞ்சித்து, ஃ
நீயிந்தமண்ணகத்தே திருத்தித்திருமகள் கேள்வனுக்கு
ஆக்கியபின், என்னெஞ்சில்பொருத்தப்படாது,
எம்இராமானுச! மற்றோர் பொய்ப்பொருளே. 78

பொய்யைச்சுரக்கும் பொருளைத்துரந்து, இந்தப்பூதலத்தே
மெய்யைப்புரக்கும் இராமானுசன் நிற்க, ஃ
வேறுநம்மை உய்யக்கொள்ளவல்ல தெய்வம்
இங்கியாதென்றுலர்ந்தவமே, ஐயப்படாநிற்பர்,
வையத்துள்ளோர்நல்லறிவிழ்தே. 79

நல்லார் பரவும்இராமநுசன், திருநாமம்நம்ப
வல்லார்திறத்தை, மறவாதவர்கள்யவர், ஃ
அவர்கே எல்லாவிடத்திலும் என்றுமெப்போதிலும்
எத்தொழும்பும், சொல்லால்மனத்தால், கருமத்தினால்,
செய்வன் சோர்வின்றிறே. 80


சோர்வின்றி உன்றன்துணையடிக்கீழ்த், தொண்டுபட்டவர்பால்
சார்வின்றி நின்றஎனக்கு, ஃ
அரங்கன்செய்யதாளிணைகள் பேர்வின்றியின்றுபெறுத்தும்
இராமானுச!, இனியுன் சீரொன்றியகருணைக்கு,
இல்லைமாறுதெரிவுறிலே. 81

தெரிவுற்ற ஞானம்செறியப்பெறாது, வெந்தீவினையால்
உருவற்றஞானத்துழல்கின்றஎன்னை, ஃ
ஒருபொழுதில் பொருவற்றகேள்வியனாக்கிநின்றான்
என்னபுண்ணியனோ!, தெரிவுற்றகீர்த்தி,
இராமானுசனென்னும் சீர்முகிலே. 82

சீர்கொண்டுபேரறம்செய்து, நல்வீடுசெறிதுமென்னும்
பார்கொண்டமேன்மையர்கூட்டனல்லேன், ஃ
உன்பதயுகமாம் ஏர்கொண்டவீட்டைஎளிதினில்எய்துவன்,
உன்னுடைய கார்கொண்டவண்மை,
இராமானுச! இதுகண்டுகொள்ளே. 83

கண்டுகொண்டேனெம்இராமானுசன்றன்னைக், காண்டலுமே
தொண்டுகொண்டேன், அவன் தொண்டர்பொற்றாளில்,
அவன்சீர் வெள்ளவாரியை, வாய்மடுத்தின்(று) உண்டுகொண்டேன்,
இன்னம் உற்றன ஓதில் உலப்பில்லையே. 84

ஓதியவேதத்தின் உட்பொருளாய், அதன்உச்சிமிக்க
சோதியை, நாதன்எனவறியா துழல்கின்றதொண்டர் ஃ
பேதைமை தீர்த்தவிராமாநுசனைத்தொழும்பெரியோர்,
பாதமல்லாலென்றன் ஆருயிர்க்கு,
யாதொன்றும்பற்றில்லையே. 85


பற்றாமனிசரைப்பற்றி, அப்பற்றுவிடாதவரே
உற்றாரெனவுழன்று, ஓடிநையேனினி, ஃ
ஒள்ளிய நு}ல் கற்றார் பரவும் இராமானுசனைக,
கருதுமுள்ளம் பெற்றார்யவர்,
அவரெம்மைநின்றாளும்பெரியவரே. 86

பெரியவர் பேசிலும்பேதையர் பேசிலும், தன்குணங்கட்-
குரியசொல்என்றும், உடையவன்என்றென்று, ஃ
உணர்வில்மிக்கோர் தெரியும்வண்கீர்த்திஇராமானுசன்,
மறைதேர்ந்துலகில் புரியுநன்ஞானம்,
பொருந்தாதவரைப்பொரும்கலியே. 87

கலிமிக்கசெந்நெல் கழனிக்குறையல், கலைப்பெருமான்
ஒலிமிக்கபாடலைஉண்டு, தன்னுள்ளம்தடித்து, ஃ
அதனால்வலிமிக்க சீயம் இராமானுசன்
மறைவாதியராம், புலிமிக்கதென்று,
இப்புவனத்தில் வந்தமை போற்றுவனே. 88

போற்றருஞ்சீலத்திராமானுச, நின்புகழ்தெரிந்து
சாற்றுவனேல், அதுதாழ்வதுதீரில், ஃ
உன்சீர்தனக்கோர் ஏற்றமென்றேகொண்டிருக்கிலும்,
என்மனம்ஏத்தியன்றி ஆற்றகில்லாது,
இதற்கென்னினைவாயென்றிட்டஞ்சுவனே. 89

நினையார் பிறவியைநீக்கும்பிரானை, இந்நீணிலத்தே
எனையாளவந்த இராமானுசனை, ஃ
இருங்கவிகள்புனையார்புனையும்பெரியவர்தாள்களில்,
பூந்தொடையல் வனையார்,
பிறப்பில்வருந்துவர் மாந்தர்மருள்சுரந்தே. 90

மருள் சுரந்தாகமவாதியர்கூறும், அவப்பொருளாம்
இருள்சுரந்தெய்த்த, உலகிருள்நீங்கத், ஃ
தன்ஈண்டியசீர்அருள்சுரந்தெல்லாவுயிர்கட்கும்நாதன்,
அரங்கனென்னும் பொருள்சுரந்தான்,
எம்இராமானுசன் மிக்கபுண்ணியனே. 91

புண்ணியநோன்பு புரிந்துமிலேன், அடிபோற்றிசெய்யும்
நுண்ணருங்கேள்வி, நுவன்றுமிலேன், ஃ
செம்மைநு}ற்புலவர்க்கெண்ணருங்கீர்த்தி இராமானுச!
இன்றுநீபுகுந்து, என்கண்ணுள்ளும்நெஞ்சுள்ளும்,
நின்றவிக்காரணம்கட்டுரையே. 92

கட்டப்பொருளைமறைப்பொருளென்று, கயவர்சொல்லும்
பெட்டைக்கெடுக்கும்பிரானல்லனே, ஃ
என்பெருவினையைக் கிட்டிக்கிழங்கொடு
தன்னருள்என்னுமொள்வாளுருவி, வெட்டிக்களைந்த,
இராமானுசனென்னும்மெய்த்தவனே. 93

தவம்தரும் செல்வும்தகவும்தரும், சலியாப்பிறவிப்
பவந்தரும் , தீவினைபாற்றித்தரும், ஃ
பரந்தாமமென்னும் திவந்தரும்தீதில் இராமானுசன்தன்னைச்
சார்ந்தவர்கட்(கு), உவந்தருந்தேன்,
அவன்சீரன்றியானொன்றும்உள்மகிழ்ந்தே. 94

உண்ணின்றுயிர்களுக்குற்றனவேசெய்து, அவர்க்குயவே
பண்ணும்பரனும் பரிவிலனாம்படி, ஃ
பல்லுயிர்க்கும் விண்ணின்தலைநின்றுவீடளிப்பான்
எம் இராமானுசன், மண்ணின்தலத்துதித்து,
உய்மறைநாலும்வளர்த்தனனே. 95


வளரும் பிணிகொண்டவல்வினையால், மிக்கநல்வினையில்
கிளரும்துணிவுகிடைத்தறியாது, ஃ
முடைத்தலையூன்தளரும்அளவும்தரித்தும்விழுந்தும்
தனிதிரிவேற்(கு), உளரெம்இறைவர்,
இராமானுசன்றன்னைஉற்றவரே. 96

தன்னையுற்றாட்செய்யவும்தன்மையினோர், மன்னுதாமரைத்தாள்
தன்னையுற்றாட்செய்ய, என்னையுய்த்தானின்று, ஃ தன்தகவால் தன்னையுற்றாரன்றித்தன்மையுற்றாரில்லை என்றறிந்து,
தன்னையுற்றாரை, இராமானுசன்குணம்சாற்றிடுமே. 97

ழூஇடுமே இனிய சுவர்க்கத்தில், இன்னம்நரகிலிட்டுச்
சுடுமேயவற்றைத், தொடர்தருதொல்லைச், ஃ
சுழல் பிறப்பில் நடுமேயினிநம்இராமானுசன்
நம்மைநம்வசத்தே, விடுமேசரணமென்றால்,
மனமே! நையல்மேவுதற்கே. 98

தற்கச் சமணரும் சாக்கியப்பேய்களும், தாழ்சடையோன்
சொற்கற்றசோம்பரும், சூனியவாதரும், ஃ
நான்மறையும் நிற்கக்குறும்புசெய் நீசரும்மாண்டனர்,
நீணிலத்தே பொற்கற்பகம்,
எம்இராமானுசமுனிபோந்தபின்னே. 99

போர்ந்ததென்னெஞ்சென்னும் பொன்வண்டு, உனதடிப்போதில்
ஒண்சீராம் தெளிதேனுண்டமர்ந்திடவேண்டி, ஃ
நின்பாலதுவே ஈந்திடவேண்டும்இராமானுச!
இதுஅன்றியொன்றும், மாந்தகில்லாது,
இனிமற்றொன்றுகாட்டி மயக்கிடலே. 100


மயக்குமிருவினைவல்லியிற்பூண்டு, மதிமயங்கித்
துயக்கும்பிறவியில், தோன்றியஎன்னைத், ஃ
துயரகற்றி உயக்கொண்டுநல்கும் இராமானுச!
என்றதுன்னையுன்னி, நயக்குமவர்க்கிது இழுக்கென்பர்,
நல்லவர்என்றுநைந்தே. 101

நையுமனமுன்குணங்களைஉன்னி, என்நாவிருந்தெம்
ஐயன்இராமானுசனென்றழைக்கும், ஃ
அருவினையேன் கையுந்தொழும்கண்கருதிடுங்காணக்
கடல்புடைசூழ், வையம்இதனில்,
உன்வண்மையென்பாலென்வளர்ந்ததுவே? 102

வளர்ந்தவெங்கோப மடங்கலொன்றாய், அன்றுவாளவுணன்
கிளர்ந்;த, பொன்னாகம்கிழித்தவன், ஃ
கீர்த்திப்பயிரெழுந்து விளைந்திடும்சிந்தைஇராமானுசன்
என்றன் மெய்வினைநோய், களைந்துநன்ஞானம்
அளித்தனன், கையிற்கனியென்னவே. 103

104. கையிற்கனியென்னகண்ணனைக்காட்டித்தரிலும், உன்றன்
மெய்யிற்பிறங்கிய, சீரன்றிவேண்டிலன்யான், ஃ
நிரயத் தொய்யிற்கிடக்கினும்சோதிவிண்சேரினும்
இவ்வருள்நீ, செய்யில்தரிப்பன்,
இராமானுச! என்செழுங்கொண்டலே! 104

ழூசெழுந்திரைப்பாற்கடல்கண்டுயில்மாயன், திருவடிக்கீழ்
விழுந்திருப்பார்நெஞ்சில், மேவுநன்ஞானி, ஃ
நல்வேதியர்கள் தொழுந்திருப்பாதன்
இராமானுசனைத்தொழும்பெரியோர்,
எழுந்திரைத்தாடும்இடம், அடியேனுக்கிருப்பிடமே. 105


ழூஇருப்பிடம் வைகுந்தம்வேங்கடம், மாலிருஞ்சோலையென்னும்
பொருப்பிடம், மாயனுக்கென்பர்நல்லோர், ஃ
அவைதன்னொடும் வந்திருப்பிடம் மாயனிராமானுசன்
மனத்து, இன்றவன்வந் திருப்பிடம்,
என்றன் இதயத்துள்ளேதனக்கின்புறவே. 106

ழூஇன்புற்ற சீலத்திராமானுச, என்றும்எவ்விடத்தும்
என்புற்றநோய், உடல்தோறும்பிறந்திறந்து, ஃ
எண்ணரிய துன்புற்றுவீயினும்சொல்லுவதொன்றுண்டு,
உன்தொண்டர்கட்கே அன்புற்றிருக்கும்படி,
என்னையாக்கியங்காடபடுத்தே. 107

ழூஅங்கயல்பாய்வயல்தென்னரங்கன், அணிஆகமன்னும்
பங்கயமாமலர்ப், பாவையைப்போற்றதும், ஃ
பத்தியெல்லாம் தங்;கியதென்னத்தழைத்துநெஞ்சே!
நந்தலைமிசையே, பொங்கியகீர்த்தி,
இராமானுசனடிப்பூமன்னவே. 108

( பூமன்னுமாதுபொருந்தியமார்பன், புகழ்மலிந்த
பாமன்னுமாறன், அடிபணிந்துய்ந்தவன், ஃ
பல்கலையோர் தாம்மன்னவந்தஇராமானுசன்,
சரணாவிந்தம் நாம்மன்னிவாழ,
நெஞ்சேசொல்லுவோமவன்நாமங்களே. )

ஆழ்வார் திருவடிகளே சரணம்

ஔஷதகிரி ஶ்ரீநித்யகல்யாண ப்ரசன்ன வேங்கடேசப் பெருமாள் ஆலயம்

ஒவ்வொரு நாள் காலையிலும் கண்விழித்து எழுந்தபின்னே ஜன்னலைத் திறந்து பார்த்தால்... கருத்தைக் கவரும் அந்தக் குன்று.

அதன் உச்சியில் ஒரு முருகன் சந்நிதியோ அல்லது பெருமாள் சந்நிதியோ அமைத்து,  அங்கே போய் உட்கார்ந்துவிடலாம் என்று அடிக்கடி மனசில் தோன்றும்...

வியாழக்கிழமை ஸ்ரீபெரும்புதூர் சென்றுவிட்டு, ஒரகடம் வழியாகத் திரும்பி வந்தபோது, யதேச்சையாக அந்த மலைப் பகுதியை உற்றுப் பார்த்தேன். அழகாகப் படிகள் அமைக்கப் பட்டிருந்தது தெரிந்தது. ஒரகடம் - சிங்கப்பெருமாள் கோயில் பிரதான சாலையில் இருந்து இடதுபுறம் ஒரு சிமின்ட் சாலை உள்ளே திரும்பியது. அதன் வழியே சென்று மலை அடிவாரத்தை அடைந்தேன். மலை மேல் பெருமாள் கோயில் இருப்பதை அறிந்தேன். ஆனால் கோயில் இப்போது திறந்திருக்காது; பூசை செய்யறவர் வரலை என்று கீழே சீட்டாடிக் கொண்டிருந்த சில மஹானுபாவர்கள் சொன்னதால்... ஒரு பெருமூச்சோடு வீடு திரும்பினேன்.

இன்று புரட்டாசி சனிக்கிழமை காலை என்பதால்... அடியேன் இருக்கும் இடத்தில் இருந்து 9 கி.மீ. தொலைவு உள்ள அந்த மலைக்குச் சென்றேன்.
மறைமலைநகர் ரயில் நிலைய கேட் கடந்து உள்ளே சுமார் 6 கி.மீ. செல்ல வேண்டும். இது மருந்துமலை என்னும் பெயருடன் ஔஷதகிரியாகத் திகழ்கிறது.
இந்த இடம் ஆப்பூர் என்பதாம்..

508 படிகள். சரியாக கணக்கு எழுதியிருக்கிறார்கள் படிகளில்...!
மூலிகை வாசனை நாசியின் நுகர்வில் உணரமுடிகிறது. படிகளில் மேலும் கீழும் மூச்சிரைக்க ஏறும்போது,  நன்றாக மூச்சை உள்வாங்கி சுவாசிக்கும்போது... வித்தியாசமான நறுமணம். புத்துணர்ச்சி.
முன்னால் சிறுவர்கள் சிலர் படிகளில் ஏறிக் கொண்டிருந்தார்கள்.

மலை உச்சியில் அருமையாக உள்ளது  பெருமாளின் சந்நிதி. தனித்திருக்கும் பெருமாள். மார்பில் மஹாலட்சுமியைத் தாங்கியபடி! அழகிய சிறிய திருமேனி.
இங்கே பிரசன்னமாகியுள்ளதால் அவர் பிரசன்ன வேங்கடேசர்! ஏழுமலையானப் பார்த்த அதே உற்சாகம். அவர் ஏழுமலையான் என்றால்... இவர் ஏகமலையான்! அவ்வளவுதான்!

மனிதர்களிடம் பேசிப்பேசி நொந்து போன மனநிலையில்... இவரிடம்தான் சற்று நேரம் மனசால் பேசிக் கொண்டிருந்தேன். ஓய் ஆப்பூராரே... உம்ம நேரடிப் பார்வையில் இப்போ ஜாகை வந்திருக்கேன். கவனிச்சிக்கோரும். நித்ய திருவாராதன அமுதுபடி இனி உமக்கும் சேர்த்து அடியேன் இருப்பிடத்தில் இருந்தே மானசீகமாக ஆகும்... என்று சொல்லி வந்தேன்.

இந்த ஔஷதகிரியில் அகத்தியரும் பல சித்தர்களும் எழுந்தருள்கின்றனராம். குறிப்பாக பௌர்ணமி. அனேகமாக பௌர்ணமியில் கிரிவலம் போல், இந்த மலையில் ஏறி சந்நிதியை வலம் வரவேண்டும் என்று மனத்தில் சங்கல்பித்துக் கொண்டேன். நம் ஊனக் கண்ணுக்கு சித்தபுருஷர்கள் தெரியாவிட்டாலும்... அந்த யா(ஞா)னக் கண்ணுக்கு என்றாவது காட்டிச் செல்ல மாட்டார்களா என்ன?

ஒளஷதகிரி அருகேயுள்ள திருக்கச்சூர் மலைக்கோயில் சிவ பெருமானும் ஒளஷதகிரீஸ்வரர் (மருந்தீஸ்வரர்) என்ற திருநாமத்துடன் திகழ்கிறாராம். ஒருவர் சொன்னார்.

மலை மேல் மூச்சிரைக்க ஏறிச் சென்றதால் வியர்வை பெருகி தாகம் எடுத்தது. கையில் தண்ணீர் போத்தல் ஒன்றும் கொண்டு செல்லவில்லை. நல்லவேளை... கைங்கர்யபரர் பாலாஜி மோட்டர் போட்டு தண்ணீர் எடுத்துக் கொடுத்தார். மலைமேல் அந்தத் தண்ணீர் அவ்வளவு சுவை. மூலிகைச் சுவையுடன் வேர்களின் வாசனை கலந்து இருந்தது.

இங்கே வற்றாத தீர்த்தக் கிணறு ஒன்று உள்ளது. பெருமாளுக்கான திருமஞ்சனாதிகளுக்கு தங்குதடையின்றி நீர் சுரந்து தரும் அற்புதக்கிணறாம்.

ஓய் இங்கே மக்கள் என்ன பிரார்த்தனை செய்து கொள்கிறார்கள்...? கைங்கர்யபரர் பாலாஜியிடம் கேட்டேன். அண்ணா... பெருமாள் திருநாமம் நித்ய கல்யாண பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் என்பது. இங்கே திருமணம் கைகூட வேண்டிக் கொள்கிறார்கள். இந்தப் பெருமாள் எப்போ இங்கே வந்தார். எத்தனை வருசம் இருக்கும் இதெல்லாம் அடியேனுக்குத் தெரியாது. இதற்கான கல்வெட்டோ, வேறு சான்றோ இங்கே இல்லை. ஆனால் 800 வருஷத்தில் இருந்து ஆயிரம் வரை இருக்கலாம் என்று சொல்லலாம். இங்குள்ள கிராமப் பகுதிகளில் பெருமாளை மனத்தில் நினைத்து திருமண பாக்கியத்துக்கு வேண்டிக் கொள்கிறார்கள். திருமணம் கைகூடியதும் பெருமாளுக்கு புடவை எடுத்து சாற்றுகிறார்கள். அதாவது கல்யாண ஜவுளி எடுக்கும் போது, முதல் புடவை பெருமாளுக்கு எடுக்கிறார்கள். அதை நிச்சயதார்த்தத்தின் போது கொண்டு வந்து பெருமாளுக்கு சாற்றுகிறார்கள்... என்றார்.

என்னது..? பெருமாளுக்கு புடவையா? என்ன ஓய் சொல்றீர்? என்றேன்.. ஆமாண்ணா.. இங்கே தாயார் பெருமாளுடன் சேர்ந்து மார்பில் குடியிருக்கிறார். மேலும், தாயாரே பெருமாள் ஸ்வரூபியாய் எழுந்தருளியிருப்பதாய் இங்கே ஐதீகம். அதனால் அப்படி என்றார். சரிதான்...! என்ன கலர் புடவை எடுப்பார்கள் என்று கேட்டேன். அதெல்லாம் அவரவர் இஷ்டம். பெரும்பாலும் நீலம், பச்சை, மஞ்சள் கலரில் எடுத்து சமர்ப்பிப்பார்கள் என்றார்.

இந்துசமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில். சிங்கப் பெருமாள் கோயில் செயல் அலுவலர்தான் இதற்கும் பொறுப்பு. இங்கே பூஜை செய்பவர் ஒருவர் மட்டுமே உள்ளார். மேலும், இவ்வளவு தொலைவுக்கு அதிகம் மக்கள் வருவதில்லை. அதைவிட... 508 படிகள் மலை ஏறி வரவேண்டுமா என்ற மலைப்பு! ஆனால்... பட்டாச்சாரியார் பாவம்.. யார் வந்தாலும் வராவிட்டாலும் மலை ஏறி வந்துதானே ஆகவேண்டும்.! சேட்டைக் குரங்குகளும் இங்கே மிக அதிகம்!

ஆகவே... சனி ஞாயிறுகளில் கோயிலுக்கு செல்வது உசிதம். செல்லும் முன்பாக, 90031 26183 என்ற கைபேசி எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசி... ஐயா... நாங்க கோயிலுக்கு வரப்போறோம்.. கோயிலுக்கு வரப்போறோம்... நீங்க அங்க இருக்கீஹளா என்று கேட்டு உறுதிப்  படுத்தி... பின்னர் செல்லலாம்.

நமக்கு வழக்கம்போல் ஆப்பூர் காலனிப் பகுதி சிறுவர்கள் நண்பர்கள் ஆகிவிட்டார்கள். செங்கல்பட்டு ராமகிருஷ்ணா பள்ளியில் படிக்கிறார்களாம். தினமும் பஸ் பயணம்தான்!

விஸ்வநாதன், சபரி இருவரும் நெற்றியைக் காட்டி... ஸ்ரீராம் அண்ணா... குங்குமம் மேலபாத்து வரமாதிரி இழுத்து தீட்டிவுடுங்க என்றார்கள். பளிச்சென ஸ்ரீசூர்ண ரேஞ்சுக்கு இழுத்துவிட்டு... சற்று நேரம் அளவளாவினேன். அதற்குள் அண்ணா இப்படியே ஒரு செல்ஃபி என்றான். சரிதான் என்று ஒரு க்ளிக் க்ளிக்கினால்... மற்றவர்கள் எல்லாம் சேர்ந்து அண்ணா.. நான் நான்.. என்றார்கள்! எல்லோரையும் ஒன்றாக அமரவைத்து க்ளிக்கி... டேய் பசங்களா... கட்டாயம் இதை பேஸ்புக்கில் போடுவேன் என்றேன். விஸ்வநாதன் சொன்னான்.. அண்ணா பேஸ்புக் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு லைக் பிச்சிக்கிட்டு போகும் பாருங்க என்றான். சரிடாப்பா.. அதையும் பாப்போமே என்றேன். அந்தச் சிறார்களின் "கோவிந்தா கோவிந்தா" சப்தம் மலை முழுதும் எதிரொலித்தது.

ஆக ... இப்படியாக இன்றைய புரட்டாசி சனிக்கிழமை, அடியேனுக்கு ஒரு பெருமாளையும் சில பக்த சிரோமணி சிறார்களையும் அறிமுகப் படுத்திவிட்ட நாளாக அமைந்துவிட்டது!


















 
Copyright © 2013 செங்கோட்டை ஸ்ரீராம்
Shared by Alahappa Grafix