சுடச்சுட:

ஆலயங்கள்

இலக்கியம்

ஆன்மிகம்

From our Blog

புதன், ஜூன் 05, 2013

பேரளியும்... பெருங்கதையும்!

பெரம்பலூருக்கு அருகில் உள்ள பேரளி... பெரம்பலூர் - அரியலூர் செல்லும் வழியில் உள்ள சிறிய கிராமம்.
மஞ்சரி இதழாசிரியராகப் பணியாற்றியபோது எனக்கு அறிமுகமான எழுத்தாள நண்பன் சக்ரவர்த்தியின் மூலம் அறிமுகமானவர் நண்பர் ஸ்ரீனிவாசன். இந்தப் பேரளியில் தொழில்முனைபவராகத் திகழ்கிறார். அவருடைய தந்தையார் நீலமேகம் ஐயங்கார் நல்லதொரு ஆன்மிகச் சொற்பொழிவாளராக, ஆன்மிக நிகழ்ச்சிகள், குடமுழுக்கு உள்ளிட்ட விழாக்களை நடத்தி அந்தப் பகுதியில் நற்பெயர் பெற்றவர். நான் எழுதியிருந்த புத்தகங்கள் ஓர் இரண்டைப் படித்துவிட்டு என் மீது நல்ல அபிமானம் கொண்டிருந்தாராம். நண்பர் ஸ்ரீனிவாசன் அடிக்கடி தொலைபேசியில் சொல்லிக்கொண்டே இருப்பார். எனக்கும் அவரைப் பார்த்து நமஸ்கரிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. ஆனால் துரதிருஷ்டம், சென்ற வருடம்(2012) அக்டோபர் மாதக் கடைசியில் அதே பேரளியில் ஒரு சாலை விபத்தில் சிக்கிய அவர் பின்னர் மருத்துவமனையில் வைத்து காலமானாராம். தந்தையார் மீது பெருமதிப்பு கொண்டிருந்தது நண்பரின் அந்தக் குடும்பம்.
அப்போது, நண்பர் ஸ்ரீனிவாசன் ஒரு செய்தி சொல்லியிருந்தார். அவர்கள் ஊரில், ஊரை விட்டு சற்றே ஒதுக்குப்புறத்தில், வயல்களின் ஊடே இரண்டு பாழடைந்த கோயில்களை இவர்கள் கண்டார்களாம். முட்புதர்கள் சூழ மிகவும் பாழடைந்து வெளித்தெரியாது இருந்த இரு கோயில்களை ஊர் மக்கள் ஒத்துழைப்பில் முட்புதர்களை அகற்றி உழவாரப் பணி மேற்கொண்டார்களாம். அப்போதுதான் தெரிந்தது, இரு கோயில்களும் சிவன் கோயிலும் பெருமாள் கோயிலும் என!  ஊரில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவு இருந்த அந்தக் கோயில்களில் உழவாரப் பணி செய்து, கோயில்களில் தினமும் விளக்கேற்றி, பூஜை செய்ய முயன்றபோது, எதிர்பாராத விதமாக நீலமேகம் ஐயங்கார் பரமபதித்துவிட, எல்லோருக்கும் ஓர் அதிர்ச்சி.
கோயில் பணிகளில் இருந்து சற்றே பின்வாங்கினார்கள் சிலர். நண்பர் ஸ்ரீனிவாசனுக்கோ அவரது இளைய சகோதரர்களுக்கோ பெரும் துயரம். இனி இந்தக் கோயில்களுக்கு பூஜை செய்யலாமா? கூடாதா? இறைவன் நம்மை ஏன் இப்படி சோதித்தான்... இப்படியாக உள்ளூர எண்ணம் அவர்களுக்கு!
இதனிடையே, கோயில் உழவாரப் பணிகள் குறித்து பரவலாக செய்தி வெளியான போது, சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் வந்து பார்க்கத் தொடங்கியுள்ளனர். தங்கள் பகுதியிலும் பழைமையான கோயில்கள் இருந்துள்ளனவே என்ற ஆச்சரியத்தில்!
ஆனால், இது அருகில் இருந்த வயல், தோப்பு தொரவு உரிமையாளர்களுக்கோ, அல்லது ஊர் நலன் விரும்பாத ஒரு சிலருக்கோ பிடிக்கவில்லையோ என்னவோ? கோயிலில் இருந்து எடுத்து வைத்த கற் சிலைகள் சில திடீரென காணாமல் போயின! இடையில் சிலர், அந்தக் கோயில்களுக்குள் சுரங்கப் பாதைகள் உள்ளன. அவற்றில் அந்தக் கால மன்னர்கள் தங்கம், வெள்ளி, நவரத்தினங்களை புதைத்து வைத்திருப்பார்கள் என்று கட்டி விட, புதையல்  ஆசையில் ஒரு கூட்டம் கோயில்களை நோட்டம் விடத் தொடங்கியது.
விடுவாரா.. நம் ஆவியின் சூவியார்?! இப்படி ஒரு கட்டுரையையும் எழுதி இதழில் வெளியிட்டும் விட்டார்கள்...
------
சுரங்கப் பாதையில் தங்கப் புதையலா?
தங்கப் புதையல் இருப்பதாகப் பரவிய செய்தி பெரம்பலூர் மாவட்டத்தை தகதகக்க​வைத்துள்ளது!  சமீபத்தில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பேரளி - மருவத்தூர் இடையே முட்புதர்களுக்குள் பழைமையான இரண்டு கோயில்களைக் கண்டு​பிடித்தனர் கிராம மக்கள். 'அந்தக் கோயில்களில் இருந்த சில சிலைகள் திருடப்பட்டுள்ளன என்றும் தங்கப் புதையல் இருக்கிறது’ என்றும் பரபர தகவல்கள் கிடைக்கவே, விசாரணையில் இறங்கினோம். காட்டுப் பாதைக்குள் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட சிவன் மற்றும் பெருமாள் கோயில் திடீர் பிரபலம் ஆகி விட்டதால், ஏராளமான மக்கள் கூட்டம்கூட்டமாக வந்து வணங்கிச் செல்கிறார்கள். கோயிலைச் சுற்றிப் பார்த்த பிறகு, ஊர்ப் பெரியவரான ஆறுமுகத்திடம் பேச்சுக் கொடுத்தோம். ''அந்தக் காலத்துல கோயில்களைச் சுற்றி பேரளி கிராமம் இருந்ததாகவும், அதன்பிறகு, பேரளி மருவத்தூர், பேரளி, பனங்கூர் என்று மூன்று ஊர்களாகப் பிரிஞ்சுட்டதாகவும் சொல்வாங்க. மக்கள் புழக்கம் இல்லாததால், நாளடைவில் கோயில்​களைச் சுற்றி முள்வளர்ந்துடுச்சு. ஒரு கட்டத்தில் கோயில்களையே மறைச்சிடுச்சு. -
--
என்று கட்டுரை நீண்டுகொண்டே போனது!
ஆட்சியருக்கு செய்தி பறந்தது. தொல்பொருள் இலாகா- தூக்கம் கலைந்தது. ஓடி வந்தார்கள் பேரளியில் பேரணியாக! கோயில்களின் சுவர்களை அளவெடுத்தார்கள். அங்குலம் அங்குலமாக அடியெடுத்து கற்களையும் சிலைகளையும் கணக்கெடுத்தார்கள்...
ஊர் மக்களுக்கு ஒரு நம்பிக்கை! சரி.. அரசு ஏதோ செய்கிறது. நம் ஊர் கோயில்கள் திரும்பவும் ஒரு நல்ல நிலையை அடைந்துவிடுமென்று!
இப்படியாக மூன்று நான்கு மாதங்கள் கழிந்த நிலையில்தான்....
நண்பர் ஸ்ரீனிவாசன் திரும்பவும் என்னை தொலைபேசியில் அழைக்கத் தொடங்கியிருந்தார். எங்கள் ஊருக்கு வாருங்கள். அந்தக் கோயில்களை நீங்கள் அவசியம் பார்க்க வேண்டும். என் அப்பா உங்களைப் பார்க்க ஆசைப்பட்டார்... உங்களை அழைத்துக் கொண்டு அந்தக் கோயில்களுக்குப் போய்க் காண்பிக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தார்... இப்படியாக நண்பர் அவரது அப்பா பெயரைச் (செண்டிமெண்டை) சொன்னதும் எனக்கும் ஆவல் அதிகமாயிற்று! சரி போய் வருவோமே என்று எண்ணி, அவரிடமும் நான் வருவதாகச் சொன்னேன்.
அதற்கு நான் தேர்ந்தெடுத்தது, என் பிறந்தநாளை! மார்ச் 14. ஸ்ரீரங்கத்திலிருந்து காலை கிளம்பி, திருப்பட்டூர் சென்றுவிட்டு, அங்கிருந்து பெரம்பலூர் சென்றேன். (இந்தக் கோயிலை மறு மாதமே தினமணி - வெள்ளிமணியில், தலையெழுத்தை மாற்றித்தரும் பிரம்மா கோவிலாகப் பதிவு செய்தேன்..)
மதியம் பேரளி சென்று அவர் வீட்டை அடைந்தது முதல் அப்பாவைப் பற்றியும், அந்தக் கோயில்களைப் பற்றியுமே சொல்லிக் கொண்டிருந்தார். உண்டு முடித்து சற்று நேரத்தில் அவருடன் அந்தக் கோயில்களைப் பார்க்கலாமே என்று கிளம்பினேன்!
எத்தனையோ பாழடைந்த கோயில்களைப் போய்ப் பார்த்து எழுதியிருக்கிறோம். அவற்றின் அவல நிலையை வெளிக்கொண்டு வந்திருக்கிறோம்... அதுபோல் எண்ணி இந்தக் கோயில்களுக்கும் சென்றேன். கிராமத்துச் சாலையின் இரு புறத்திலும் பார்த்தால்... கீழ்ப் பக்கம் சிவன் கோயிலும் மேற்புறத்தில் பெருமாள் கோயிலுமாக வெளித்தெரிந்தது. கோயில்களைச் சுற்றியிருந்த புதர்களை அப்புறப்படுத்தியிருந்தார்கள். கோயில் நன்றாகவே வெளியில் தெரிந்தது.
சிவன் கோயிலுக்கு முதலில் அழைத்துச் சென்றார் நண்பர். வௌவால்களின் வாசம்... அந்த வாசத்தால் வெளிப்பட்ட வாசம்... எல்லாம்தான்! கையில் எண்ணெய் திரியுடன் சென்ற நண்பர், உள்ளே விளக்கேற்றி, தீப ஆராதனையும் செய்து, கற்பூரத்தைக் கொளுத்தி வெளிச்சத்தை ஏற்படுத்தி வெளியில் வந்தார்.
கோயில் பகுதியைச் சுற்றிப்பார்த்து வந்தேன்.
சுரங்கம் இருப்பதாகச் சொன்ன ஒரு இடம்... பின்னப்பட்டுப்போன விக்ன விநாயகர் சிற்பம், கொடிமரம், இடிந்து விழுந்த நிலையில் அம்பாள் சந்நிதி, சுற்றிவலம் வரும்போது சண்டிகேசர் சந்நிதி, நந்தி, பலிபீடம்... எல்லாம் ஒரு பழமையின் செழுமையை கண்ணில் காட்டியது.
அடுத்து பெருமாள் கோவிலுக்குப் போனோம். நல்ல அமைப்பு. துவஜஸ்தம்பம், விளக்குத்தூண் போல்! பெருமாள் சந்நிதி. நல்ல அமைப்புடன் விக்ரஹம். பன்னிரு ஆழ்வார்கள் விக்ரகங்கள், தாயார் சந்நிதி உரு மாறாமல்.. தாயார் விக்ரஹம் மிகத் திருத்தமாக அழகுடன்! இப்படியே பார்த்து வந்தபோது, பெருமாள் சந்நிதி பின்புறத்தே மேற்சுவரில் ஒரு சிற்பம் மிக அழகாக இருந்ததைக் கண்டேன்.
மூன்று பேர் இருவர் போல்  தோற்றம் அளிக்கும்  வண்ணம் ஒட்டியபடி செதுக்கப்பட்ட சிற்பம், இடது புறத்தை மறைத்தால் வலது புறத்தில் ஒருவர் ஓடுவது போல், வலதுபுறத்தை மறைத்தால் இடது புற நபர் ஓடுவதுபோல், இரண்டு கைகளையும் மறைத்துப் பார்த்தால் நடுவில் ஒருவர் நிற்பதுபோல்... ஆசனத்தில் அமர்வதுபோல் என்று வித்தியாச சிற்பம்...
இப்படியாக இந்தக் கோவில்களைப் பார்த்துவிட்டு வெளிவந்தேன். ஏற்கெனவே இவர்கள் நம்பிக் கொண்டிருப்பதுபோல்....இந்தக் கோயில்களைப் பார்த்துவிட்டு வந்ததால் நம் ராசியும் தலைஎழுத்தும் எப்படி இருக்கப்போகிறதோ என்ற குதர்க்கமான (அல்லது நக்கல் கலந்த) எண்ண ஓட்டத்துடன் வண்டிபிடித்து, பெரம்பலூர் புறவழிச்சாலை அடைந்து, வந்து நின்றவுடனே விருட்டென வந்த சென்னை விரைவுப் பேருந்தில் ஏறி ஊர் வந்து சேர்ந்தேன்...
(ம்ஹும்... அப்பாடா....! ஒரே மூச்சு.. பெருமூச்சு!)




















புதன், மே 22, 2013

சர்ச்சைகளே! உம் பெயர்தான் ஐ.பி.எல்.லோ..?



ஐபிஎல்லும் சர்ச்சைகளும் ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தைகள் போல் நீங்காமல் இருப்பது அதிசயம் ஒன்றும் இல்லை. சொல்லப்போனால், ஐபிஎல் போட்டிகள் தொடங்கப்பட்டதே சர்ச்சைகளின் பின்னணியில்தானே. தொடர் தோல்விகளால் இந்திய கிரிக்கெட் அணியின் மீதும், இந்திய கிரிக்கெட் வீரர்கள் மீதும், அவ்வளவு ஏன்... கிரிக்கெட் விளையாட்டின் மீதுமே ரசிகர்கள் தங்கள் கோபத்தையும் புறக்கணித்தல் எண்ணத்தையும் வெளிப்படுத்தியபோது, கபில்தேவ் என்ற ஆபத்பாந்தவன் ஐசிஎல் என்ற அமைப்பின் மூலம் மீண்டும் உயிர்கொடுக்க முனைந்தார். ஜீ டிவி தயவில் வர்த்தக ரீதியில் உள்ளூர் கவுண்டி கிரிக்கெட்கள் ஐசிஎல் என்ற பேனரில் மீண்டும் உலா வரத் தொடங்கியபோது, பணக்குவியலில் சுக போக வாழ்க்கையை  நடத்தி வந்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஆடித்தான் போனது. தங்களுக்கு இதனால் பெரும் வர்த்தக இழப்பு வந்துவிடுமே என்ற கவலையில், கவாஸ்கரையும் கபில்தேவையும் மோத விட்டு, ஐசிஎல் அமைப்புக்கு எதிராக போட்டி அமைப்பையும் ஏற்படுத்தி, அதற்கு ஐபிஎல் என்ற நாமகரணமும் சூட்டி... எல்லாம் நடந்துவிட்ட பழங்கதைதான்!
இன்று பணம் பெருக்கெடுத்து ஆறாய் கடலாய் பொங்கி வழியும் ஒரே துறையாக ஐபிஎல் இருப்பது கண்கூடு! எங்கே பணம் மிதமிஞ்சிப் பெருக்கெடுத்துக் குவிகிறதோ அங்கே முறைகேடுகளும் சூதாட்டமும் சமூக விரோதச் செயல்களும் இயல்புதானே! ஐபிஎல் மட்டும் இதற்கு விதிவிலக்கா என்ன? தேர்ந்த நாடகமாக, மூன்று மணி நேரத்  திரைப்படமாக ஐபிஎல் டி20 போட்டிகள் உருவான பின்னே, திரைப்படங்களின் மவுசு எல்லாம் தூசாகிவிட்டது இந்த மே மாதங்களில்! பள்ளிப் பிள்ளிகளில் படிப்பு கெடுகிறது என்றார்கள் பெற்றோர்கள்! இளைஞர்களின் எத்தனை மணி நேர உழைப்பு வீணாகிறது என்றார்கள் சமூகத்தில் அக்கறை உள்ளவர்கள். இரவெல்லாம் விழித்திருந்து சிறுவர்கள் உடல் நலனைக் கெடுத்துக் கொள்கிறார்களே என்று வருத்தப்பட்டார்கள் வீட்டின் பெரியவர்கள். இதெல்லாம் யாருக்குக் கேட்கப் போகிறது..?
சூதாட்டம் பெரும் குற்றம்தான் நம் நாட்டில்! சீட்டுக் கட்டுகளை வைத்து ஆடுகின்ற சிறிய அளவாக இருந்தால் என்ன..? அல்லது ஐபிஎல்,.லில் லட்சக் கணக்கில் பணம் வைத்து ஆடும் பெரிய அளவாக இருந்தால் என்ன...? எல்லாம் குற்றம் தான்! ஆனால், இந்தியாவில் சூதாட்டத்தை சட்டபூர்வமாக்கினால் குற்றங்கள் குறைந்துவிடும் என்கிறார் ஒரு வெளிநாட்டு வீரர். இத்தகைய அறிவுரைகள் நம் நாட்டுக்கு ஒரு வெளிநாட்டு வீரரிடம் இருந்து தேவைதானா?
பணம் பண்ணுவது என்று வந்துவிட்டால், சூதாட்டமும், போட்டி பொறாமைகளும் தலைதூக்காமல் இருக்குமா? பாலிவுட்டில் எடுத்த பணத்தை மேலும் பெருக்கிக் கொள்ள நடிகர்களும் நடிகைகளும் தங்கள் திறனைக் காட்டி வருகிறார்கள் என்றால், இங்கே மலின அரசியல் களத்தில் ஏமாற்று வித்தைகளால் பணம் பெருக்கியவர்கள் டிவி., சினிமா, ஊடகம் என்று கால் பரப்பி ஒரு அணியை பேரம் பேசி எடுத்து நடத்துகிறார்கள் என்றால்..?
இருப்பதைப் பெருக்குவதும், சில நேரம் அதனை இழப்பதும் சூதாட்டத்தில் இயல்புதானே! அப்படித்தான் கொச்சி அணி காணாமல் போனது. டெக்கான் சார்ஜஸ் அணி பெயரும் சரி, உருவமும் சரி கரைந்து போனது. ஊடக உலகில் கோலோச்சிய நிறுவனம் திவாலாகும் அளவுக்கு உரு கரைந்து போனது!
இப்படியெல்லாம் பார்த்துவிட்ட சூதாட்ட ஐபிஎல் குழந்தைக்கு ஆறு வயதுதான் என்றாலும், அதன் அசுர வளர்ச்சி இந்த நாட்டையே கபளீகரம் செய்து விடுமோ என்று தேசப் பற்றாளர்கள் கவலை கொள்ளத் தொடங்கியிருக்கிறார்கள்! இந்த அசுரக் குழந்தையின் வளர்ச்சியைப் பார்த்தால் இதன் எதிர்காலப் பரிணாமம் எப்படி இருக்கும் என்பதை
ஐபிஎல் சீஸன் 1 முதல் போட்டி தொடங்கியபோது அனைவரும் ஆச்சரியப் பட்டார்கள். வீரர்களை ஏலம் எடுக்கும் விவகாரம், ஒப்பந்தம் என்ற பெயரில் அடிமை சாசனம் அளிப்பது, அதற்காக விலை போக மாட்டோமா என்று வீரர்கள் ஏங்குவது.. எல்லாம் இந்தியாவுக்குப் புதிதுதான்!
வெளிநாட்டு வீரர்களின் எல்லையற்ற எதிர்பார்ப்பு, அவர்களுக்குக் கிடைத்த வரவேற்பு, இந்திய வீரர்களே ஊர் ஊராக, அணி அணியாக, மாநிலம் மாநிலமாகப் பிரிந்து போய் நின்ற காட்சி  இந்தியர்களுக்கு ஆச்சரியமாகத்தான் இருந்தது.
ரஞ்சி டிராபி போட்டிகளும், கவுண்டி போட்டிகளும், மண்டல அணிகளாகப் பிரிந்து மோதிய போது இல்லாத பிரிவினை எண்ணங்கள் எல்லாம், ஐபிஎல் துளிர்விட்டபோது, கூடவே மக்கள் மனங்களில் துளிர்விட்டன. காரணம், இந்தியாவில் கிரிக்கெட்டும் தேசபக்தியும் பிரிக்க முடியாமல் போய்விட்டதுதான்!
கிரிக்கெட் என்னும் விளையாட்டுக்குக் கொடுக்கும் மரியாதை ஏதோ, நாட்டின் போர்களுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவமாக மாறிப்போன இந்தியாவில், மாநில உணர்வுகளோடு இந்திய தேசிய உணர்வு சிதைந்து போனபோது வருத்தப்படாத நெஞ்சமே இல்லை!
இதற்கு முதல் வித்தாக அமைந்தது -  முதல் ஐபிஎல் போட்டியில் வீரேந்திர சேவாக் மீது கல் எறிந்த நிகழ்ச்சி!
அது 2008 மே 16. முகமெங்கும் பூரிப்புடனும் மகிழ்ச்சிப் பெருக்குடனும் களத்தில் நின்று கொண்டிருந்த டில்லி அணியின் கேப்டன் வீரேந்திர சேவாக், தனது சொந்த மைதானத்தில் சொந்த மக்களால் கல்லடி பெற்றார் என்றால்...? ஆம்.. பெரோஷ் ஷா கோட்லா மைதானத்தில், அன்றைய டெக்கான் சார்ஜஸ் அணியை 12 ரன் வித்தியாசத்தில் பந்தாடி, வெற்றிப் பாதையில் சென்றது டெல்லி அணி. அன்றைய போட்டிக்குப் பிந்தைய செய்தியாளர் சந்திப்பில், வெற்றி பூரிப்பு முகத்தில் தெரிய உற்சாகமாக இருக்க வேண்டிய சேவாக், வருத்தத்தின் உச்சத்தில் காணப்பட்டார். காரணம் அன்றைய 19 வது ஓவரின் போது, களத்தில் எல்லைக்கோட்டின் அருகே நின்று கொண்டிருந்த சேவாக் மீது கல்லை எறிந்து காயப்படுத்தியிருந்தனர் சிலர். உடனே நடுவர் பிரைன் ஜெர்லிங்கிடம் புகார் அளித்த சேவாக், "டெல்லியில் டெல்லி அணி ஆட்டக்காரர் மீது, அதுவும் டெல்லிக்காரரான ஓர் இந்தியர் மீது, கல்லை எறிந்தது துரதிருஷ்ட வசமானது” என்று எச்சரிக்கை மணி அடித்தார்.
அடுத்து, 2008 ஏப்.25ல் ஹர்பஜனுக்கும் ஸ்ரீசாந்துக்கும் இடையே நடந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க களப் போர், இந்திய ரசிகர்களை பெரிதும் காயப்படுத்தியது என்றே சொல்ல வேண்டும். மும்பை அணிக்காக ஆடிய ஹர்பஜன், பஞ்சாப் அணிக்காக ஆடிய ஸ்ரீசாந்த்.. இருவருமே உணர்ச்சி வசப்படுபவர்கள்தான்! ஆனால், அதனை அனைவர் முன்னிலையிலும் களத்தில் காட்டியது, மற்றவர் உணர்ச்சியைத் தட்டியெழுப்பிவிட்டது. இந்திய வீரர்களாக ஒற்றுமையுடன் செயல்பட வேண்டிய இருவரும், பஞ்சாப் அணி 66 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பெருமிதத்தில் ஸ்ரீசாந்த் வாயெடுக்க, தோல்வி சோகத்தில் ஹர்பஜன் கையெடுக்க, ஸ்ரீசாந்தின் கன்னத்தில் ஓர் பளார் அறை விட்டு ஹர்பஜன் தன் வீரத்தைக் காண்பித்து விட்டார். விளைவு - அடுத்து வந்த 11 போட்டிகளில் ஹர்பஜனுக்கு தடை! அழுது தீர்த்த ஸ்ரீசாந்த், மீடியாக்களின் வெளிச்சத்தில்! அனுதாபம் கிடைப்பதற்குப் பதிலாக அறுவெறுப்புதான் மிஞ்சியது!
அதே வருடம் ஏப்.19. மொஹாலி, சென்னை அணிகளுக்கு இடையிலான முதல் போட்டியின் துவக்க நிகழ்ச்சி.  சியர்லீடர்ஸ் என ரசிகர்களை உற்சாகப் படுத்தும் பணிக்கு அமர்த்தப்பட்ட பெண்களில் இருவர் கருப்பாக இருக்கின்றனர் என்ற நிறவேறுபாடு காரணத்தால், மேடையில் அவர்களுக்கு இடம் கொடுக்காமல், கீழே இருத்தி வைத்தது. இந்தச் சர்ச்சை இந்தியாவில் எழுந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது! மொஹாலி அணிக்காக விஸ்க்ராப்ட் இண்டர்நேஷனல் நிறுவனத்தால் பணி அமர்த்தப்பட்ட அந்தப் பெண்கள் இருவரும்,  மொஹாலி மைதானத்தை விட்டே வெளியேறச் செய்த கொடுமையும் நடந்தது!
ஐபிஎல் சீஸன் 2ல் கோல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி உரிமையாளர் ஷாருக் கான் தன் அணி பங்குகளை விற்பனை செய்வது தொடர்பாகப் பேசியதில் எழுந்த சர்ச்சை, தொடர் பிரச்னைகளால் தவித்த கோல்கத்தா அணியில் விளையாட்டு வீர்ர்களிடம் இன வேற்றுமை பாராட்டிய புகார், அதற்கு முன்னாள் இந்திய வீரர் அஜய் ஜடேஜா தன்னிடம் ஆதாரம் இருப்பதாகக் கூறியது, அப்போதைய கேப்டன் கங்குலியை குறிவைத்து புகார் கூறப்பட்டது. அவர் அணியில் பிளவு ஏற்படுத்தினார் என்றார் ஜடேஜா.
ஐபிஎல் சீஸன் 3 சோகமான தொடராக அமைந்துவிட்டது. ஐபிஎல் தலைவர் லலித் மோடியால் வெடித்த விவகாரம் அது. கிரிக்கெட் வாரியம் லலித் மோடியை நீக்கியதுடன், கிரிக்கெட் நிர்வாகத்துக்கு பெரும் அவப்பெயரைத் தந்து விட்டார் என்று வர்ணித்தது. அடுத்து, 2010 ஏப்.23ல் ஐபிஎல் போட்டிகளின் ஒளிபரப்பு உரிமையை வைத்திருந்த வோர்ல்ட் ஸ்போர்ட்ஸ் க்ரூப்புக்கும் சோனி மல்டி ஸ்கிரீன் மீடியாவுக்கும் ஒளிபரப்பு தொடர்பாக நிகழ்ந்த சண்டைகள்! ஏப்.22ல், அரசியல் தொடர்பான சர்ச்சைகள் எழுந்தன. ஐபிஎல்லில் ஆதிக்கம் செலுத்திய வேளாண் துறை அமைச்சர் சரத் பவார், விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் பிரபுல் படேல், சசி தரூர் ஆகியோருக்கு இடையே நிகழ்ந்த பிரச்னைகள் பெரிதும் எதிரொலித்தது.
ஏப்.20ல் லலித் மோடியின் உறவினருக்கு எங்கள் அணியில் எந்தவித மறைமுகப் பங்குகளும் இல்லை என்று ராஜஸ்தான் ராயல்ஸ் உரிமையாளர் மனோஜ் படாலே கூறியதால் எழுந்த சர்ச்சை! 
ஏப்.19ல் ஐபிஎல்- இணையதளத்தில் அதிகாரபூர்வ பெயராக லலித் மோடியின் பெயர் இருந்ததும், அணி உரிமையாளர்களின் பெயர்கள் மறைக்கப்பட்டதும் சர்ச்சையைக் கிளப்பியது. பிசிசிஐக்கும், ஐபிஎல்லுக்கும் என்ன தொடர்பு எனக் கேள்வி எழுப்பினார் ராஜஸ்தான் கிரிக்கெட் அசோஷியேஷன் செயலாளர் சஞ்சய் தீக்‌ஷித். மேலும், 2005-2008 வரை மட்டுமே தலைவராக இருந்த லலித் மோடியின் பெயர் ரூ.800 கோடி மதிப்புள்ள ஐபிஎல் இணையதளத்தில் தொடர்ந்து இடம்பெறுவது ஏன் என்றும் சர்ச்சையைக் கிளப்பினார்.
அதே நாளில் சசிதரூர் அமைச்சரவையில் இருந்து வெளியேற்றப்பட்டார். அரசு அதிகாரத்தை தனது தனிப்பட்ட வியாபாரத் தொடர்புகளுக்குப் பயன்படுத்திக் கொண்ட குற்றச்சாட்டைத் தொடர்ந்து இந்த நடவ்கை மேற்கொள்ளப்பட்டது. கொச்சி டஸ்கர்ஸ் அணி பங்குகளை மனைவி பெயரில் வாங்கிய குற்றச்சாட்டின் கீழ் சசி தரூர் பெரும் சர்ச்சையை அந்த ஆண்டில் கிளப்பியிருந்தார். இவை எல்லாம் அரசியல்வாதிகளால் கிளம்பியது என்றால், அணி உரிமையாளர்களோ தேசியத்தின் மடியில் கைவைத்தனர்.
2010 மார்ச் 22ல் பஞ்சாப் அணியின் உரிமையாளரும் பாலிவுட் நடிகையுமான பிரீத்தி ஜிந்தா, அதன் இன்னொரு உரிமையாளர் நெஸ் வாடியா இருவருக்கும் எதிராக ஐபிஎல் அணி விளம்பரங்களில் பகத் சிங், ராஜகுரு உள்ளிட்ட விடுதலைப் போராட்ட வீரர்களின் படங்களைப் பயன்படுத்தியது தொடர்பாக சண்டிகர் நீதிமன்றம் சம்மன் அனுப்பிய விவகாரம் பெரிதும் பேசப்பட்டது. மக்களின் உணர்வுகளை காயப்படுத்தியதாக எழுந்த சர்ச்சை அது!
அதே ஆண்டு பிப்ரவரியில், சிவ சேனாத் தலைவரான பால்தாக்கரே, ஆஸ்திரேலிய வீரர்களை மும்பை மண்ணில் விளையாட அனுமதிக்க மாட்டேன் என்றார். ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் வரிசையாகத் தாக்கப்பட்டு வருவதால், ஆஸ்திரேலியர்கள் விளையாட வந்தால் ஐபிஎல் நடத்த விட மாட்டோம் என்றார் அவர். இருப்பினும் பின்னர் இந்திய சகோதரர்கள் ஆஸ்திரேலியாவில் வசிப்பதால், இந்த முடிவைக் கைவிடுவதாக அறிவித்தார்.
அதே நேரத்தில், கோல்கத்தா அணி உரிமையாளர் ஷாருக் கான், பாகிஸ்தான் வீரர்களுக்கு தனி சலுகைகளைக் காட்டுவதாக பால் தாக்கரே கூறிய குற்றச்சாட்டும் பெரிதும் எதிரொலித்தது. 
ஐபிஎல் சீஸன் 4ல் பிசிசிஐயுடன் கொச்சி டஸ்கர்ஸ் அணி வைத்திருந்த உறவு பொசுங்கிப் போனது. பண விவகாரத்தால், கொச்சி அணி நீக்கப்பட்டு, இனி ஐபிஎல் சீஸன் 5 முதல், 9 அணிகளே விளையாடும் என்று அறிவிக்கப்பட்டது.
ஐசிஎல்லுக்குப் போட்டியாகத் தொடங்கப்பட்ட ஐபிஎல் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, ஐசிஎல் நடத்தும் போட்டிகளுக்கு மைதானங்களைத் தரக்கூடாது என்று பிசிசிஐ விதித்த கட்டுப்பாடு. அதைத் தொடர்ந்து ஐசிஎல் அமைப்பைத் தடை செய்தது, ஐசிஎல் அமைப்பில் இருக்கும் விளையாட்டு வீரர்கள் பிசிசிஐயின் அணியில் இடம்பெற இயலாது என்ற அறிவிப்பு எல்லாம் சர்ச்சையோ சர்ச்சைகள்தான்! தாங்கள் உருவாக்கிய அமைப்பு என்பதால் பிசிசிஐ, ஐபிஎல்லை மட்டுமே முன்னிறுத்துவது என்று முடிவானது. அதற்காக ஐசிஎல் குறித்து மோடி சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு கடிதம் எழுதிய விவகாரம், அதே வருடத்தில் ஐபிஎல் ஆணையர் பதவியில் இருந்து லலித் மோடி கழற்றிவிடப்பட்ட விவகாரம் எல்லாம் ஐபிஎல்லின் பணத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் மகிமையைப் பறை சாற்றியது.
அதே ஆண்டில், ஐபிஎல் அணிக்காக தேசிய அணியில் இடம்பெறாமல் தவிர்க்க எண்ணிய காம்பிரின் செயல்பாடு, அந்த வருடத்தில் மிக அதிகத் தொகை கொடுத்து வாங்கப்பட்ட காம்பிர், மேற்கு இந்தியத் தீவுகள் சுற்றுப் பயணத்தில் தேசிய அணியில் இடம்பெறாமல் விட்டது எல்லாம் வீரர்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தியது. உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் காயம் பட்டபோதும், காயத்துடன் ஐபிஎல் போட்டியில் விளையாடுவேன் என்று காம்பிர் அடம்பிடித்தது... அப்போது, காம்பிரின் உடல் காயம் குறித்த மருத்துவ அறிக்கை கூட விவாதப் பொருளானது.
2011 மே மாதத்தில் தென் ஆப்பிரிக்காவில் இருந்து மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பெற்ற சியர்லீடர் பெண் ஒருவர், பின்னணியில் நடைபெற்ற தனிப்பட்ட அந்தரங்க விஷயங்களைக் குறித்து இணைய வலைப்பூவில் தகவல் வெளியிட்டார் என்பதற்காக அவர் நாட்டுக்கே திருப்பி அனுப்பப் பட்டார். அப்போது அவர், நான் பார்த்த அளவில், கிரிக்கெட் வீரர்கள்தான் விளையாட்டு வீரர்களிலேயே அறிவிலிகளாகவும் மோசமான நடத்தையாளர்களாகவும் அறிகிறேன் என்று குறிப்பிட்டிருந்தார்.
ஐபிஎல் சீஸன் 5ல், அனைவரையும் உலுக்கிய சர்ச்சையாக அமைந்தது, பெங்களூர் அணியில் இடம்பெற்ற ஆஸ்திரேலிய வீர்ர் லுக் போமர்ஸ்பெக்கின் செயல். இந்திய அமெரிக்கரான பெண் ஒருவர், தில்லி ஹோட்டல் மௌர்யா ஷெர்ட்டனில் இருந்தபோது, தவறாக நடந்துகொண்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அளவுக்கு போமர்ஸ்பெக்கால் தாக்கப்பட்டார் என்று கிளம்பிய சர்ச்சை. அவருக்கு ஐபிசி சட்டப்படி தண்டனையும் வழங்கப்பட்டது.
2012 மே 18ல் கோக்கத்தா அணியின் உரிமையாளர் ஷாருக் கான் வெற்றிக் களிப்பில் மும்பை வாங்க்டே மைதானத்தில் ரகளையில் ஈடுபட்டு அதிகாரிகளை கேவலப்படுத்தினார் என்பதால், அவருக்கு மைதானத்துக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டது.
மே 15ல் ஐந்து வீரர்கள் மீது ஸ்பாட் பிக்ஸிங் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. டெக்கான் சார்ஜஸ் அணியின் டிபி சுதிந்திரா, புனே அணியின் மோனிஷ் மிஸ்ரா, பஞ்சாப் அணியின் அமித் யாதவ் மற்றும் சுலப் ஸ்ரீவஸ்தவா, தில்லியைச் சேர்ந்த அபினவ் பாலி ஆகியோர் மீது ஸ்பாட் பிக்ஸிங் புகார்கள் முன்வைக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து முறைகேடுகளைக் களைய குழு அமைக்கப்பட்டது. தொடர்ந்து தனியார் தொலைக்காட்சி ஒன்று ஸ்டிங் ஆபரேஷன் என்ற முறையில், ஸ்பாட் பிக்ஸிங்கை அம்பலப்படுத்தியது.
ஏப்.18ல் நடந்த கோல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில், பஞ்சாப் அணியின் உரிமையாளர் ப்ரீத்தி ஜிந்தா, தனது அணியின் பேட்ஸ்மென் ஷான் மார்ஷ் ஆட்டம் இழந்த விதம் குறித்து நடுவருக்கு தன் அதிருப்தியைத் தெரிவிக்கும் விதத்தில் ஸ்ட்ராடஜிக் டைம் அவுட் நேரத்தின் போது, நடந்து கொண்டது, அதைத்தொடந்து, நடுவருக்கு விளக்கம் எதிர்பார்த்து ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா அறிக்கை அனுப்பியது எல்லாம் சர்ச்சை மயமே!
இது அல்லாமல், முனாப் படேல், ஹர்பஜன் சிங் ஆகியோர் சூடான பேச்சுகளால் மைதானத்தில் சண்டையிட்டது போன்ற செயல்களுக்கு அபராதமும் கண்டனமும் விதிக்கப்பட்டது சாதாரண நிகழ்வாகிவிட்டது.
ஏப். 8ம் தேதி, பஞ்சாப் அணியினர் அறையை சேதப்படுத்திவிட்டார்கள் என்று கூறி, மகாராஷ்டிர கிரிக்கெட் அசோஷியேஷன் புகார் பதிவு செய்தது போன்ற சம்பவங்களும் ஐபிஎல்லின் பாரம்பரியத்தை தொடர்ந்து கொண்டு செல்லும் போலும்!

புதன், ஏப்ரல் 03, 2013

தமிழ் தேசியம் என்ற பிரிவினைவாதக் குழுக்களின் பின்னணியில் இந்த நாட்டுக்கு எதிரான, பாரத நாட்டின் வல்லமை வளர்ச்சிக்கு எதிரான ஏதோ ஒரு சக்தி பின்னால் இருந்து இயங்குவது நன்றாகத் தெரிகிறது. அந்த சக்தி, இளைஞர் சக்தியை அழிவுப் பாதைக்குக் கொண்டு செல்கிறது. மாணவப் பருவத்தை திசை திருப்பி, ஏற்கெனவே என் தலைமுறை உள்ளிட்ட இரண்டு தலைமுறையை நாசமாக்கிவிட்ட அரசியல் இயக்கங்களின் சக்தியை விட வலிமையானதாகத் தெரிகிறது. சாதிக் கட்சிகளின் சுயலாபத்தில், சாதீயம் பேசும் சாக்கடைகளின் பின்னணியில் இயங்குவது நன்றாகத் தெரிகிறது.  இந்த நிலையில்தான் இந்தக் கடிதத்தையும் கட்டுரையையும் படிக்க நேர்ந்தது. அதனால், ஜெ.மோ.வின் வாசகனாக இதை அப்படியே எடுத்துப் போட்டுவிட்டேன்!  

 

இந்தியாவில் தமிழ்தேசிய​த்தின் செல்திசை

அன்புக்குரிய ஜெயமோகன் அண்ணாவிற்கு,
தமிழக அரசியல் களத்தில் தமிழ்த்தேசியம் ஒரு தவிர்க்க முடியாத உந்துசக்தியாக மாறக்கூடிய காலகட்டத்தில் அதை எவ்வாறு சரியான திசையில் வழிப்படுத்துவது என்பது குறித்த சிந்தனைகள் அவசியம் என்பதனால் இதை எழுதுகிறேன்.
உலகெங்கும் பரந்துவிரிந்துள்ள தமிழினத்தின் ஆதி ஊற்றாக தமிழகம் விளங்குவதால் அத்தமிழர்களின் உரிமைகளை உறுதி செய்யவேண்டிய உணர்வு மற்றும் அறம் சார்ந்த கடப்பாட்டை அது கொண்டுள்ளது.அதை எவ்வாறு நிறைவேற்றுவது என்பதே இன்று தமிழகத்திற்கு முன்னுள்ள சவாலாகும்.அதற்குரிய அரசநயம்(diplomacy) தமிழ் நாட்டு அரசியல் தலைவர்களுக்கு உள்ளதா என்பதுதான் நேர்மையுடன் எழுப்பவேண்டிய கேள்வியாகும்.
உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தமிழர்நலன்கள் பாதிக்கப்படும்போது தமிழகத்திலுள்ள தமிழ் உணர்வாளர்கள் தமிழ்நாடு தனியாகப் பிரிந்துவிடும் என்று கூறுவதை வழமையாகவே வைத்துள்ளனர்.இன்று இவ்வாறான சிந்தனை தமிழக இளையதலைமுறையினரிடையேயும் பரவ ஆரம்பித்துள்ளமை இணையத்தளங்களை நோக்கும்போது தெரிகின்றது.இது சரியானதுதானா?பயனுடையதுதானா என்று அவர்களில் எவரும் சிந்தித்துப்பார்ப்பதில்லை.
இலங்கையில் தமிழர்களுடைய தனிநாட்டுக்கான நியாயங்களும் இந்தியாவில் பிரிவினைக்கான கோரிக்கையும் எவ்வாறு வேறுபடுகின்றன என ஆராய்ந்தால் அவற்றுக்கிடையிலுள்ள பெரும் வேறுபாடுகளை அறியலாம்.
1)இலங்கை ஒரு தனிப்பெரும்பான்மை இனத்தைக் கொண்டநாடு.இலங்கையின் மக்கள் தொகையில் சிங்களவர்கள் 75 சதவீதமானவர்கள்.இந்தியா அவ்வாறு எந்த ஒரு தனிப்பெரும்பான்மை இனத்தையும் கொண்ட நாடு அல்ல.இந்தியாவில் அதிகமானோர் பேசும் ஹிந்தியைத் தாய்மொழியாகக் கொண்டோரை ஒரு மொழிவாரி இனமாகக்கொண்டால் கூட(அவ்வாறு மொழிவாரி இனமாக ஹிந்திபேசுவோர் அடையாளப்படுத்தப்படுவதில்லை என்பது வேறுவிடயம்) அவர்கள் இந்திய மக்கள் தொகையில் 40 சதவீதத்தினர் மட்டுமே.ஹிந்தி அல்லாத மற்றைய மொழிச்சமூகங்கள் மிகச்சாதாரணமான அரசியல் ஒற்றுமை மூலமே ஹிந்தி தொடர்பான எந்த ஆதிக்கத்தையும் முறியடித்துவிட முடியும்.
2)மதம்.சிங்களவர்களில் பெரும்பான்மையோர் பௌத்தர்களாகவும்(தீவின் மொத்த மக்கள் தொகையில் 70 சதவீதம்)தமிழர்களில் பெரும்பான்மையோர் இந்துக்களாகவும்(மொத்த மக்கள் தொகையில் 1981 ஆம் ஆண்டு குடித்தொகை மதிப்பீட்டின்படி 15.48 சதவீதம்.இது போரிற்கு பிந்திய தற்போதைய மதிப்பீட்டின்படி 12.61 சதவீதமாக குறைந்துவிட்டது.)இருப்பது மட்டுமன்றி சிங்களவர்களில் இந்துக்களோ தமிழர்களில் பௌத்தர்களோ கிடையாது.அதாவது இலங்கையில் இரு இனங்களுக்கும் மதத்தினாலான இணைப்பு அமையவில்லை.ஆனால் இந்தியாவிலோ காஷ்மீர்,நாகாலாந்து போன்ற சில மாநிலங்களைத்தவிர ஏனைய மாநிலங்களில் பெரும்பான்மை மதமாக இந்துமதம் இருப்பதனால் அது ஒரு பலமான இணைப்பு சக்தியாக விளங்குகின்றது.
3)பொருளாதாரவளம்.இலங்கைதீவில் தமிழர்களின் தாயகத்தைவிட சிங்களப்பிரதேசங்கள் அதிக இயற்கை வளங்கள் உடையன.இது சிங்களவர்களின் கரங்களை மேலும் வலுப்படுத்துகிறது.ஆனால் இந்தியாவில் ஹிந்தி பேசும் மாநிலங்கள் அரசியலில் முக்கிய இடத்தை வகித்த போதும் அவற்றிற்குப் பொருளாதாரரீதியான மட்டுப்பாடுகள் உள்ளன.ஹிந்திபேசும் மாநிலங்கள் நிலத்தால் சூழப்பட்டவை.இவற்றிற்குக் கடற்கரையே கிடையாதென்பது பொருளாதாரத்தில் அவை மற்றைய மாநிலங்களைச் சார்ந்து இயங்கவேண்டிய தேவையை ஏற்படுத்தியுள்ளதால் அவற்றிற்கு இடையே ஒருவிதமான சமநிலை பேணப்படுவதைக்காணலாம்.
4)பொது உளவியல்.ஒரு தேசத்தின் கட்டமைப்பில் புறநிலைக் காரணங்களுக்கு இணையாக முக்கியபங்கை ஆற்றுவது பொதுவகமாகும்.அதாவது பொதுமனநிலை.முறைப்படி தமது வரலாற்றை எழுதிப்பேணிய மிகச்சில பண்டை சமூகங்களில் சிங்கள இனமும் ஒன்றாகும்.கிபி மூன்றாம் நான்காம் நூற்றாண்டளவில் சிங்களவர்களின் முதல் வரலாற்றுப்பதிவான தீபவம்சம் தொகுக்கப்படுகிறது.ஆறாம் நூற்றாண்டில் மகாநாமதேரர் மகாவம்சத்தை எழுதுகிறார்.இதன் தொடர்ச்சியாக சூளவம்சம்,ராஜாவலிய என்று பௌத்தபிக்குகள் சிங்கள பௌத்த வரலாற்றை பத்தொன்பதாம் நூற்றாண்டுவரை எழுதிவந்துள்ளார்கள்.மகாவம்சத்தின்படி சிங்கள இனத்தின் மூதாதையரான விஜயனும் அவனுடைய 700 தோழர்களும் லாட்ட என்ற நாட்டிலிருந்து கப்பலில் நாடுகடத்தப்பட்டு கரையோரமாக இந்தியாவின் பல பகுதிகளிலும் தரையிறங்கி அங்கிருந்தும் விரட்டப்பட்டு இறுதியாக இலங்கையை வந்தடைகின்றார்கள்.இதில் முக்கியமானது எப்போது அவர்கள் வந்தடைந்தார்கள் என்பதுதான் .சரியாக புத்தர் பரிநிர்வாணம் அடைந்த அதேநாளில் அவர்கள் இத்தீவில் காலடி எடுத்து வைத்தார்கள் என்று மகாவம்சம் கூறுகின்றது..விஜயனும் அவனுடைய தோழர்களும் வருவதற்கு முன்பு இலங்கைக்கு மூன்று முறை புத்தர் வருகைதந்ததாகவும் இத்தீவு மக்கள் பௌத்த தர்மத்தை பேணிப்பாதுகாப்பார்கள் என்று அவர் பிரகடனப்படுத்தியதாகவும் மகாவம்சம் தெரிவிக்கிறது.
சிங்களப்பொதுமனதில் மகாவம்சம் இரண்டு முக்கிய விடயங்களை கட்டியெழுப்பியுள்ளது.முதலாவது தமது மூதாதையர் நாட்டைவிட்டுவிரட்டப்பட்டவர்கள் என்பதால் அவர்கள் இந்தியாவின் எந்தவொரு பிரதேசத்தினும் நிலப்பகுதியினும் நீட்சியாக தம்மைக்கருதுவதில்லை.அவ்வாறான பூர்வீக இடம் தொடர்பான பற்றுதலும் அவர்களுக்கு இருப்பதுமில்லை.இரண்டாவது இலங்கைத்தீவென்பது பௌத்தத்தை பேணிப்பாதுகாத்து உலகிற்கு பரப்பவேண்டிய நிலமென்பதும் அதனை நிறைவேற்றவேண்டிய பொறுப்பை புத்தர் அவர்களிடம் ஒப்படைத்துவிட்டு சென்றுள்ளார் என்பதுமான அவர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.
புத்தர் மறைந்ததினத்தன்று விஜயனும் அவனுடைய தோழர்களும் இலங்கையை வந்தடைந்தமை அவர்களைப் பொறுத்தவரை பெரும் குறியீட்டு முக்கியத்துவம் கொண்ட நிகழ்வு.மகாநாமதேரர் வாழ்ந்த ஆறாம் நூற்றாண்டு இந்துமத மறுமலர்ச்சியின் ஆரம்பகாலகட்டம் என்பதும் பௌத்தம்,சமணம் என்பன இந்தியாவில் செல்வாக்கு இழக்க ஆரம்பித்த காலகட்டமென்பதையும் கருதும்போது மகாநாமதேரரின் எழுத்துக்களின் நோக்கங்களைப் புரிந்து கொள்வதொன்றும் கடினமானதல்ல.இலங்கையின் சிங்கள பௌத்தமக்களின் மனதில் இந்திய உபகண்டத்தில் பௌத்தமதத்தின் வீழ்ச்சி பிராமணர்களின் சதியினாலேயே ஏற்பட்டது என்ற நம்பிக்கை ஆழமாகப்பதிக்கப்பட்டுள்ளது.இந்தியாவில் பௌத்தம் செல்வாக்கிழந்தமை தொடர்பாக சிங்கள பௌத்த பிக்குகளின் கருத்துகளை அவதானித்தால் இதை அறியலாம்.அவற்றின் சாரமாக பிராமணர்களின் சதி என்ற கோட்பாடே வலியுறுத்தப்படும்.இதிலிருந்தே இந்தியாமீதான வெறுப்பும் தமிழர்கள் மீதான வெறுப்பும் தொடங்குகின்றது.சிங்கள பொதுமனத்தின் உளவியலில் இருந்து சிறுவயதில் இருந்தே ஊட்டப்படும் மகாவம்ச சிந்தனைகளை அகற்றுவதென்பது மிகவும் கடினமாகும்.அத்துடன் அப்பொதுவகமே மகாவம்சத்தினைக்கொண்டுதான் கட்டியெழுப்பபட்டதென்பதை கவனத்தில் கொள்ளாமல் சிங்கள மக்களையோ,அவர்களின் அரசியலையோ புரிந்து கொள்ளமுடியாது.மறுபுறமாக இலங்கைத்தமிழர்களின் பொதுமனம் தன்னை இந்தியாவின் நீட்சியாக கருதுவதையும் குறிப்பிட்டே ஆகவேண்டும்.1987 ஆம் ஆண்டிற்கு முற்பட்ட காலப்பகுதியில் தமிழ்வீடுகளில் விவேகானந்தர்,காந்தி,சுபாஷ் சந்திரபோஸ்,நேரு,ராஜாஜி என்று இந்தியத் தலைவர்களின் படங்களையே காணலாம்.பெரும்பாலான வீடுகளில் குறைந்தபட்சம் யாராவது ஒரு இந்தியத்தலைவரின் படமாவது சுவரில் கொழுவப்பட்டிருக்கும்.இது அவர்களின் மனச்சாய்வுக்கு ஒரு எடுத்துக்காட்டு மட்டுமே.இலங்கையின் அரசியலை புரிந்துகொள்வதற்கு இந்த உளவியலையும் புரிந்து கொள்வது மிகமுக்கியமானது.
இதற்கு நேரெதிராக இந்தியப் பொதுமனம் இந்தியாவின் பல்வேறு பிரதேசங்களையும் ஒரு பண்பாட்டுவெளியாகக் காணுகின்றது.மகாவம்சத்திற்கு முரணாக இந்தியாவின் ஆரம்பகால இதிகாசங்களான இராமாயணம்,மகாபாரதம் என்பன பலவேறு மக்களையும் பிரதேசங்களையும் தொடர்புபடுத்துவதில் பெரும்பங்கை ஆற்றியுள்ளன.இராமாயணம் தெற்குநோக்கி ப் பிரதேசங்களையும் மக்களையும் தொடர்புபடுத்தியே செல்கின்றது.மறுபுறத்தில் மகாபாரதம் இந்தியாவின் பல்வேறுபிராந்தியங்களின் மன்னர்களை குருசேத்திரத்தில் ஒன்று குவிக்கின்றது.தூரதெற்கிலிருந்து பாண்டியமன்னனும் போரிற்கு சென்று உயிர்துறக்கிறான் என்ற காட்சியையும் மகாபாரதம் காட்டுகின்றது.இவ்வாறாகப் பல்வேறு வேற்றுமைகளுக்கு இடையிலும் பண்பாட்டு இணைவுகளினூடாக இந்திய பொதுமனம் உருவாகிவந்துள்ளது.அதன் உளவியல் என்பது இலங்கையின் மக்களினங்களின் உளவியலைப்போன்று ஒன்றுடன் ஒன்று முரண்படக்கூடியதல்ல என்பதை புரிந்துகொள்ளவேண்டும்.
5)வரலாற்றுப்போக்கு.இன,மொழி,மத,பண்பாட்டு வேறுபாடுகள் மட்டுமே ஒருதனிநாட்டுக்கான தேவையையோ உரிமையையோ உருவாக்கிவிடுவதில்லை.இலங்கைத் தீவின் வரலாற்றுப்போக்கு தமிழ் மக்களின் உரிமைகளை அழித்து,திட்டமிட்ட சிங்களக்குடியேற்றங்கள் மூலம் பாரம்பரியதாயகத்தில் தமிழர் இருப்பைக் கேள்விக்குள்ளாக்கி,அவர்களை ஒரு இன அழிப்புக்கு உள்ளாக்கிய திசையினூடாக நகர்ந்திருக்கின்றது.மறுபுறத்தில் தமிழகத்தமிழர்கள் இந்தியா சுதந்திரம் பெற்றகாலத்திலிருந்து தமது வரலாற்று நிலத்தில் தங்களைத்தாங்களே ஆட்சிசெய்துவருகின்றார்கள்.இந்தியாவில் மாநிலங்கள் மேலும் அதிக அதிகாரங்களைப் பெற்று கூட்டாட்சியை செழுமைப்படுத்தக் கூடிய வாய்ப்பும் காணப்படுகின்றது.அத்துடன் கடந்த அறுபது ஆண்டுகளில் தமிழர்களின் அரசியல் பலம் நடுவண் அரசில் அதிகரித்தே வந்துள்ளதுடன் தமிழ்நாடு பொருளாதாரவளர்ச்சியில் முன்னணி மாநிலங்களில் ஒன்றாக மாறியுள்ளது.அவர்களின் வரலாற்றுப்போக்கு வேறொருதிசையினூடாக நகர்ந்திருக்கிறது.
தமிழகத்தமிழர்களின் நிலைக்கும் ஈழத்தமிழர்களின் நிலைக்கும் மலைக்கும் மடுவிற்குமான வேறுபாடு உள்ளது.இதனைக் கருத்திற்கொள்ளாது தமிழ்நாடு தனிநாடாகும் என்பதுபோன்ற பேச்சுக்கள் தமிழகத்தமிழரிற்கு பிழையான புரிதலை ஏற்படுத்துவதுடன் ஈழத்தமிழர்களின் விடியலுக்கும் தடைக்கல்லாகவே மாறிவிடும்.
சரி,ஒருவாதத்திற்காக இவர்கள் கூறுவதுபோன்று தமிழ்நாடு தனிநாடாக உருவாகிவிடுகின்றது என்று வைத்துக்கொள்வோம்.அதனால் தமிழர்களின் நலன்கள் பாதுகாக்கப்படுமா?அல்லது மேலும் பாதிக்கப்படுமா எனப்பார்ப்போம்.
இந்தியாவில் காஷ்மீரிலும் சில வடகிழக்கு மாநிலங்களிலும் தவிர ஏனைய மாநிலங்களில் தனிநாட்டுக்கான முனைப்பு என்பது இல்லை.அப்படி இருந்தாலும் அது ஒருசிலரால் முன்வைக்கப்படும் மக்களாதரவற்ற நிலைப்பாடாகவே இருக்கிறது.இவ்வாறான நிலையில் தமிழ்நாடு தனியாகப்பிரிந்தால் கூட இந்தியாவின் ஏனைய பகுதிகள் தொடர்ந்து ஒரே நாடாகவே நீடிக்கும்.இந்தியாவின் ஒருமாநிலமாக இருக்கும்போதே தமிழ் நாட்டின் நலனை உறுதி செய்வதற்கு எவ்வளவுதூரம் போராடவேண்டியுள்ளது என்று காவிரி,முல்லைப் பெரியாறு பிரச்சனைகளில் அறியலாம்.இவ்வாறிருக்கையில் தனிநாடு என்பது இவ்வாறான பிரச்சனைகளில் தமிழகத்திற்கு இருக்கக்கூடிய ஓரளவு சாதகமான நிலையையும் இல்லாமற் செய்வதற்கே வழிவகுக்கும்.அத்துடன் இதேபோன்ற புதிய பிரச்சனைகளையும் உருவாக்குவதற்கு ஊக்குவிக்கும்.
தமிழ்நாடு தன்னில் ஒரு மாநிலமாக இருக்கும்போதே சிங்களவர்களுடன் ஒத்துழைக்கும் இந்தியா அது தனிநாடானால் எவ்வாறுநடந்து கொள்ளும் என்பதற்கு பதிலளிப்பது கடினமானதல்ல.
இந்தச் சூழ்நிலை தமிழர்களை ஒருபுறம் பலம்வாய்ந்த இந்தியநாட்டிற்கும் மறுபுறம் இனவாதத்திலேயே ஊறிப்போன சிங்களநாட்டிற்கும் இடையில் பாக்குவெட்டிக்கு நடுவில் வைக்கப்பட்ட பாக்கிற்கு இணையாக மாற்றிவிடும் என்பதே உண்மையாகும்.
இந்தியா மொழிரீதியான தேசிய இனங்களைக் கொண்ட நாடு.இத்தேசிய இனங்கள் பிரிந்து தனிநாடுகளை உருவாக்கவேண்டும் என்றும் சிலகுரல்கள் கேட்கின்றன.இந்தக்காட்சியையும் பார்த்துவிடுவோம்.மொழியடிப்படையிலான தேசிய இனங்கள் எல்லாம் தனிநாடுகளாக மாறிவிட்டால் என்ன நடைபெறும்?வடமேற்கில் மதவாதத்தில் ஊறிய பாகிஸ்தான் போன்ற நாடுகளும்,வடக்கில் தொடர்ச்சியாக ஆதிக்க எண்ணத்துடன் செயற்பட்டுவரும் சீனாவும்,வடகிழக்கில் தனது நிலப்பரப்புக்கு பொருந்தாத விகிதத்தில் சனத்தொகை பெருத்துத்தடுமாறும் பங்களாதேஷும் அந்நாடுகளை சுதந்திரமாக இருக்க விட்டுவிடுமா?ஆட்டுக்கொட்டகையை ஓநாய்களுக்கு திறந்துவிட்டது போன்றதாகிவிடும்.இவ்வாறான ஆபத்தெல்லாம் வட இந்திய பிரதேசங்களுக்குதான் ஏற்படும் என்பதில்லை.பதின்மூன்றாம் நூற்றாண்டில் வடமேற்கிலிருந்து வந்த படையெடுப்பாளர்களிடம் தில்லி வீழ்ந்து ஒருநூற்றாண்டு காலத்தில் மதுரை மாலிக்கபூரிடம் வீழ்ந்தது என்ற வரலாற்றை நாம் மறந்துவிடக்கூடாது.எனவே இந்தியாவில் உள்ள மொழிவாரித்தேசிய இனங்கள் பிரிந்து சென்று தனிநாடுகளாகவேண்டும் என்பது அடிப்படை விவேகமற்றதென்பதுடன் அனைவரையும் பேரழிவிற்குள் தள்ளிவிடக்கூடிய சிந்தனையாகும்.
அப்படியானால் இந்தியாவில் தமிழ்தேசியம் தேவையற்றதா என்ற கேள்வி எழலாம்.உண்மையில் தமிழ்த்தேசியத்திற்கான அவசியம் உள்ளது.ஆனால் தமிழ்த்தேசியம் என்றால் என்ன என்பதை சரியாகப்புரிந்து வரையறுத்துக்கொள்ளவேண்டும்.தமிழ்த்தேசியம் என்றால் தமிழர்நல அரசியல் என்பதுதான்.அதில் இருந்துதான் சமஷ்டியா,சுயாட்சியா,தனிநாடா என்பதெல்லாம் தீர்மானமாகின்றதே தவிர தமிழ்த்தேசியம் என்றாலே பிரிந்து சென்று தனிநாட்டை உருவாக்குதல் என்று சிந்திப்பது அறியாமையே தவிர வேறொன்றில்லை.இந்தியாவை பொறுத்தவரைத் தமிழர்களின் நலன்கள் தனித்தமிழ் நாட்டுக்கோரிக்கையால் பேணப்படப்போவதில்லை.மேலும்,அது தமிழர்களின் நலன்களை பாதிக்கக்கூடியது என்பதே உண்மையாகும்.
தற்போது பரவலாகவுள்ள சிந்தனையில் மிகமுக்கியமான மாற்றம் ஏற்படவேண்டும்.தமிழ்த்தேசியம் என்றால் இந்தியத்தேசியத்திற்கு எதிரானது என்று கருதுவதோ அல்லது இந்தியத்தேசியம் என்றால் தமிழ்த்தேசியத்திற்கு எதிரானது எனக் கருதுவதோ ஒருபோதுமே பலனளிக்கப்போவதில்லை.இன்றுள்ள பலசிக்கல்களுக்கு அவை இரண்டும் ஒன்றுக்கொன்று எதிரானதாக மாற்றப்பட்டுள்ளதே முக்கியகாரணமாகியுள்ளது.அடிப்படையில் இந்தியத்தேசியமும் தமிழ்த்தேசியமும் ஒன்றின் நலன்களை ஒன்றுபாதுகாக்க கூடியவையாகவே இருக்கின்றன.ஆனால் குறுங்குழு மனப்பான்மையுடைய கொள்கை வகுப்பாளர்களும்,சிந்தனையற்ற உணர்வாளர்களும் இவை இரண்டையும் முரண்பாடானதாகக்கருதி தமது செயற்திட்டங்களை உருவாக்குவதே தற்போதைய அனைத்து நலன்சார் பிரச்சனைகளுக்கும் காரணமாகும்.
இந்தியத்தேசியம் என்பது ஒரு பண்பாட்டுத்தேசியம்.இந்தப்பண்பாட்டிலிருந்து தமிழர்களை தனியே பிரித்துவிடமுடியாது.அவ்வாறே தமிழர்கள் இல்லாமல் இந்தியப்பண்பாட்டையே புரிந்துகொள்ளமுடியாது.
இந்தியா இன,மொழி,மத,சாதி எனப்பல்வேறு அடையாளங்களைக்கொண்ட சமூகங்களால் ஆனதென்பதால் ஏதாவது ஒரு அடையாளத்தை மையப்படுத்திய ஆதிக்க அரசியல் என்பதை உருவாக்குவது மிகவும் கடினமாகும்.இவ்வாறான ஒரு சாதகமான சூழலில் அரசனயத்துடன் புத்திசாலித்தனமாகத் திட்டமிட்டு தமது அரசியல் பலத்தை பயன்படுத்தும் எந்தவொரு சமூகமும் தனது நலன்களை வென்றெடுப்பது சாத்தியமே.தமிழ்நாட்டுத்தமிழர்கள் இந்தத்திசையிலேயே சிந்திக்கவேண்டும்.
அமெரிக்காவின் மக்கள் தொகையில் யூதர்கள் ஏறத்தாழ 2 சதவீதத்தினர் மட்டுமே.ஆனால் அவர்களால் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்க வெளியுறவுக் கொள்கையை தீர்மானிக்கமுடிகின்றது.இத்தனைக்கும் யூதர்கள் அமெரிக்காவின் பெரும்பான்மை சமூகத்தினரான வெள்ளையர்களுடன் இனரீதியாகவும் மதரீதியாகவும் முற்றிலும் வேறுபட்டவர்கள்.அவ்வாறிருந்தபோதும் அமெரிக்காவின் நலன்களுடன் தமது நலன்களையும் வெற்றிகரமாக இணைத்து முன்னெடுக்ககூடிய புத்திசாலித்தனம் அவர்களிடம் இருக்கின்றது.நோபல் பரிசுகளில் 20 சதவீதத்திற்கு அதிகமானவற்றைப்பெற்ற உலகமக்கள் தொகையில் 0.2 சதவீதம் மட்டுமேயுள்ள அச்சமூகத்திடம் இருந்து நாம் கற்றுக்கோள்ளவேண்டிய சிறந்த விடயங்களில் இதுவும் ஒன்றாகும்.
அமெரிக்காவில் நேரடியான அரசியல் பலமற்ற யூதர்களால் அந்நாட்டின் கொள்கைவகுப்பில் செல்வாக்கு செலுத்தமுடியுமாயின் ஏறத்தாழ இந்தியமக்கள் தொகையில் 6 சதவீதத்தையுடைய 7 கோடி மக்களையும்,சக்திவாய்ந்த ஒரு மாநிலத்தையும்,ஒரு யூனியன் பிரதேசத்தையும் உடைய தமிழினத்தால் இந்தியாவின் கொள்கைவகுப்பில் செல்வாக்கு செலுத்தமுடியாதா?
நெடுமாறன்,வைகோ,சீமான் போன்ற தலைவர்களில் ஈழத்தமிழர்கள் பெருமதிப்பையும் பேரன்பையும் கொண்டிருக்கிறார்கள் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.பாரததேசத்தின் அழிந்துவிடாத தர்மத்தின் குரலாக அவர்கள் வரலாற்றில் இடம்பெறுவார்கள் என்பதிலும் எவ்வித ஐயமும் இல்லை.ஆனாலும் அவர்கள் தொடர்ச்சியாக விடக்கூடிய ஒரு தவறை,அரசியல் விவேகமற்றதன்மையை,தந்திரோபாயச்சறுக்கலை சுட்டிக்காட்டியே ஆகவேண்டும்.
தமிழர்களின் நலன்கள் பாதிக்கப்படும்போது அவர்கள் உணர்ச்சிவசப்பட்டோ அல்லது இந்திய அரசிற்கு அழுத்தம் கொடுப்பதாக நினைத்தோ இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசுகிறார்கள்.அவ்வாறான முடிவுகளை எடுத்த,எடுக்கின்ற ஆட்சியாளர்களிலும் அதிகாரவர்க்கத்தினரிலும் எத்தனைபேர் இந்தியாவின் நலன்களில் உண்மையான அக்கறையுடையவர்கள் என்று சிந்திப்பதில்லை.ஊழலையும்,அதிகாரத்துஷ்பிரயோகத்தையும் வாழ்க்கைமுறையாகக்கொண்டு நாட்டின்நலன்களை விற்று பிழைப்பவர்களே அவர்களில் பெரும்பான்மையானோர் என்பது தெரியாதா?இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியவுடன் இப்படிப்பட்டவர்கள் அதைப்பற்றி கவலையடைந்து தங்களின் கோரிக்கைகளின் பக்கம் கவனம் திருப்புவார்கள் என்று நினைப்பதைவிட முட்டாள்தனம் வேறொன்றும் இல்லை.இவ்வாறான ஆட்சியாளர்கள்,அதிகாரவர்க்கத்தினர்,அரசியல் தரகர்கள்,ஊடகவியலாளர்கள் ஆகியோரிடமிருந்து இந்தியதேசத்தையும் அதன் மக்களையும் வேறுபடுத்திப்பார்த்தேயாக வேண்டும்.
தமிழ் உணர்வுடைய சிறு அமைப்புகள் தமிழகத்தில் கடந்த இரண்டு தேர்தல்களில் தமது தீவிர எதிர்ப்பிரச்சாரத்தின் மூலம் காங்கிரஸ் கட்சியின் வாக்குகளை கரைத்துவிட்டதுடன் அதனுடன் கூட்டணியமைத்திருந்த திமுகவையும் பலவீனப்படுத்தி தற்காப்பு நிலைக்கு தள்ளிவிட்டுள்ளன.இது தமிழகத்தின் அரசியல் சமன்பாடுகளை மாற்றியுள்ளது.தமிழ்த்தேசிய அமைப்புகள் தமது அரசியல் பலத்தைப் பெருக்கிகொண்டால் ஜனநாயக வழியினூடாகவே தமது இலக்குகளை அடையமுடியும் என்பதற்கு இது ஒரு வெள்ளோட்டமாகவும் அமைந்துள்ளது.
இந்தியா என்பது ஒரு யானை அதன் பாகனாக யார்யாரோ ஆதிக்கம் செலுத்துகிறார்கள்.அதனால் அந்த யானையின் தும்பிக்கை என்னுடையது,தலை என்னுடையது,கால் என்னுடையது என்று வேறுவேறாக வெட்டி எடுப்பதால் எவருக்கும் பயனில்லை.
தமிழ்த்தேசியவாதிகளின் நோக்கம் எப்படி அந்த யானையின் பாகனாவது அல்லது குறைந்தபட்சம் அந்தப்பாகனை தமிழர் நலன்களையும்,இலக்குகளையும் எட்டுவதற்குரிய விதத்தில் யானையை செலுத்துபவனாக மாற்றுவதற்கு எவ்வாறு அரசியல் பலத்தை பயன்படுத்துவது என்பதாகவே இருக்கவேண்டும்.
வளமான வலிமையான இந்தியா அதில் முதன்மையான தமிழகம் என்பதே குறிக்கோளாக இருக்கவேண்டும்.
“ இமிழ் கடல் வேலித் தமிழகம் விளங்க … ”
ந.சிவேந்திரன்
அன்புள்ள சிவேந்திரன்
ஈழத்திலிருந்து இப்படி ஒரு கடிதம் வந்திருப்பது நிறைவை அளிக்கிறது. வெறும் உணர்ச்சிவேகங்களுக்கு அப்பாற்பட்டு யோசிப்பதன் விளைவு இது. இன்று ஈழம் என்ற சொல் இந்தியாவுக்கு எதிரான பிரிவினைச் சக்திகளின் ஆயுதமாக ஆகியிருக்கும் நிலையில் இந்தப்பார்வை முக்கியமான ஒன்று
நான் எப்போதும் நம்பி சொல்லிவருவது, வலிமையான இந்தியா என்பது மட்டுமே வலிமையான தமிழ்ச்சமூகத்தின் பீடமாக இருக்க முடியும். தமிழர்கள் இந்தியா எங்கும்பரவி வலிமையாக இருக்கிறார்கள். அவர்களின் வெற்றி இந்தியாவின் கூட்டு அதிகாரத்தை தன் வசம் திருப்பும் முகமாக ஒருங்கிணைக்கப்படுவதே இன்றைய தேவையாக இருக்க முடியும். பிரிவினை கோரிக்கைகளுக்குப்பின்னால் நாமறியா ஐயத்திற்குரிய சக்திகள் இருக்கின்றன. அவை தமிழகத்தையும் இந்தியாவையும் அழிவை நோக்கிக் கொண்டுசெல்லும் நோக்கம் கொண்டவை
நீங்கள் சொல்லும் கடைசி வரி ஈராயிரம் வருடம் முன்பே சொல்லப்பட்டுவிட்டது. நமக்குக் கிடைக்கும் பழந்தமிழிலக்கியத்தின் ஆகப்பழைய பகுதி என்பது புறநாநூற்றின் முதல் இருபது பாடல்கள். அவற்றிலேயே இந்தியா என்ற பண்பாட்டு தேசத்தின் நிலவியல் எல்லைகள் தெளிவாகச் சொல்லப்பட்டுவிட்டன. அதில் உள்ள ஓர் சிறந்த கூறாகத் தமிழ்கூறும் நல்லுலகம் அடையாளப்படுத்தப்படுவது மேலும் பல நூற்றாண்டுகள் கழித்து சிலப்பதிகாரத்திலும் தொல்காப்பியத்துக்கு பனம்பாரனார் அளித்த பாயிரத்திலும்தான்
ஜெ

தமிழக அரசே! தமிழக அரசே! ஆலயங்களை விட்டு வெளியேறு!

ஆலயங்கள் அரசின் கட்டுப் பாட்டில் இருந்து விடுபட வேண்டும்!
ஆலயங்களை அரசு அலுவலகங்கள் ஆக்கிய தமிழக அரசே... தமிழக அரசே! ஆலயங்களை விட்டு வெளியேறு!
ஆலய கருவறையை அருங்காட்சியகம் ஆக்கிய தமிழக அரசே தமிழக அரசே..! கோயில்களை விட்டு வெளியேறு!
உண்டியல் இருக்கும் இடமெல்லாம் அரசு கஜனா என்று எண்ணிச் செயல்படும் தமிழக அரசே தமிழக அரசே! ஆலயங்களை விட்டு வெளியேறு வெளியேறு!
மதச்சார்பற்ற அரசுக்கு இந்துமத கோயில்கள் கட்டுப்பாடு மட்டும் எதற்கு?
ஆலய பூஜை உரிமைகளில் அரசு தலையிட அனுமதிக்கக் கூடாது! நாத்திகர்கள் கோயில் செயல் அலுவலர்களாக செயல்பட அனுமதிக்கக் கூடாது!
இப்படிச் சொல்லும்போது, ஆலயங்களை விட்டு அரசு வெளியேறினால், அது மிராசுதாரர்களின் கீழ் வந்துவிடுமே! பின்னர், ஏழைகள் நுழைய அனுமதி கிடைக்குமா? அல்லது, தமிழில்தான் அர்ச்சனைகள் நடக்குமா? என்று கேள்வி எழுப்பப் படுகிறது.
இப்போது மட்டும் என்ன வாழுகிறது என்றே இதற்குப் பதிலாகக் கேட்கத்தோன்றுகிறது.
காசு உள்ளவன் மட்டுமே பெரிய கோயில்களில் சென்று சாமி கும்பிடும் நிலை உள்ளது. ரூ.50ம் 250ம், 300ம், 500ம் டிக்கெட் வாங்கிச் சென்று கருவறைக் கடவுளை தரிசிக்க வேண்டிய நிலை உள்ளதே!~
இதில் மாற்றம் கொண்டு வரவேண்டும். ஆட்கள் அதிகம் வரும், அல்லது வருமானம் வரும் கோயில்தான் மிராசுதார்களின் கண்களில் படும் அல்லவா? ஆட்கள் வராத கிராமத்துக் கோயிலைச் சீண்டுவார் யாருமில்லை. எனவே, கிராமக் கோயில்கள் பெரிய கோயில்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட வேண்டும். இதற்கு, கோயில்கள் மக்கள் சபையின் மூலம் நடத்தப் படவேண்டும். மக்களால் தேர்வு செய்யப்படும் ஒரு குழு, ஒவ்வொரு பெரிய கோயிலையும் கட்டுப் படுத்த வேண்டும். அவற்றின் கீழ் அவற்றை அடுத்த சிறிய கோயில்கள் கொண்டு வரப்படவேண்டும். இநதக் குழுவில் ஆன்மிகப் பெரியவர்கள், மடத்தின் அதிபதிகள், உள்ளூர் பிரமுகர்கள்(குறிப்பாக ஏழையர்கள்) இருக்க வேண்டும். எதிர்காலத்தில் இது நடக்கும். காரணம் இன்றைய கூத்துகள் எல்லை மீறிவிட்டனவே.
இப்படிச் சொல்லும்போது, நாத்திகர்கள் கோயில் அலுவலராக செயல்பட அனுமதிக்கக் கூடாது என்பது சரி; ஆனால், மறுபடியும் சாதாரண மக்களை அல்லது எளியவர்களை சாதீய ரீதியாக தனிமைப் படுத்தி, வெளியில் நிற்கச் சொல்ல மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்? என்ற கேள்வி பிறக்கிறது.
அதனால்தான் மீண்டும் மீண்டும் ஒரு விஷயத்தை நாம் எடுத்துச் சொல்ல வேண்டியிருக்கிறது. நம்பிக்கை உள்ளவர்கள் ஒழுங்காக இருப்பார்கள். யார் யாருக்கு எந்த வேலை என்று கோயில்களில் சீர்திருத்தம் செய்தார் ஸ்ரீராமானுஜர். அங்கே சாதிப் பாகுபாடு கிடையாது. பூக்கட்ட ஒருவன், நந்தவனம் அமைக்க ஒருவன், துணிகளைத் துவைக்க ஒருவன், காவலுக்கு ஒருவன், கணக்குப் பார்க்க ஒருவன், மேலதிகாரி ஒருவன், கண்க்கு வழக்குகளை செய்ய ஒருவன், பிரச்னை வந்தால் தீர்த்து வைக்க அரசன்போல் ஒருவன். பூசை செய்வதற்கு ஒருவர், நைவேத்தியப் பொருள்களைத் தயாரிக்கும் மடப்பள்ளிக்கு ஒருவன் என்று... இதில் வேறு யாரும் மற்றவர்கள் வேலையில் தலையிட முடியாது. யார் யார் எந்த வேலையைச் செய்யத் தகுதி வாய்ந்தவனோ அவன் அங்கே இருக்க வேண்டும். இந்த சீர்திருத்தங்களை, கோயில்களில் நம்பிக்கை இல்லாதவர்கள், வெறுமனே நுகர்வோர் கண்ணோட்டத்தில் பார்ப்பவர்கள், சம்பாதிக்க நினைப்பவர்கள், தர்மத்தில் பற்றில்லாதவர்கள், தர்மத்தின் வழியில் நடக்க நினைக்காதவர்கள் நிச்சயமாகப் புரிந்துகொள்ள மாட்டார்கள்.
அதென்னவோ தெரியவில்லை... சூடன் தட்டு ஏந்தி பக்தர்களுக்கு காண்பிக்கும் பூசாரியின் இடத்தை மட்டுமே எல்லாரும் குறிவைக்கிறார்கள்.
இப்படிக் குறி வைத்துதானே தமிழக அரசியலில் ஆட்சி பீடத்தில் ஏறி கஜானாவைக் கொள்ளை அடித்து குடும்பத்துக்கு சொத்து சேர்த்திருக்கிறார்கள்.
ஏன் இவர்களுக்கு மடப்பள்ளியில் சமைக்கும் பார்ப்பனன் கண்ணுக்குத் தெரியவில்லை?! காசு பேறாது என்பதால்தானே! அஞ்சுக்கும் பத்துக்கும் அல்லாடும் இவர்களின் அடிமடியில் கைவைத்து இவர்கள் எந்த சமத்துவத்தைக் கொண்டு வரப்போகிறார்கள்?
சரி... இப்படி. இதில் யார் யார் எந்த வேலையைச் செய்ய தகுதி வாய்ந்தவனோ அவன் அங்கே இருக்க வேண்டும் என்று சொல்லும்போது, இங்கேதான் பிரச்சினையே தொடங்குகிறது என்கிறார்கள். எங்களை வெளியில் நிறுத்த யார் உரிமை தந்தது என்றும், நாங்கள் தரும் வருமானத்தில் நடக்குது கோவில் நிர்வாகம். ஆனா உள்ளே போக அனுமதிக்கறது யாரோ? என்றும், அப்படி ஒரு கோவில் தேவையா என்பதுதான் கேள்வியே என்றும் கேட்கிறார்கள் சிலர்.
அப்படிப் பார்த்தால், நான் கொடுக்கும் வரியிலும் காசிலும்தான் இந்த அரசாங்கம் நடக்கிறது. கல்வித் தகுதி இருந்தும், திறமையிருந்தும், எனக்கு ஒரு ஆர்.டி.ஓ.வாகவோ, கலெக்டராகவோ, முதலமைச்சராகவோ, நீதிபதியாகவோ, உயர்நீதிமன்ற நீதிபதியாகவோ ஆகத்தான் ஆசை. ஆனால் என் போன்றவர்களை ஏன் வெளியில் நிறுத்தி வேடிக்கை பார்க்கிறது இந்த அரசும், சட்டமும், சமூகமும்?!
எல்லாப் பதவிகளிலும், பொறுப்புகளிலும், அரசாங்க வேலைகளிலும் இட ஒதுக்கீட்டை ரத்து செய்துவிட்டு, ஆலயங்களில்யார் வேண்டுமானாலும் அர்ச்சகர் ஆகலாம் என்று இந்த அரசும் நீதிமன்றங்களும் கருத்து தெரிவித்தால் வரவேற்கலாம்.
அரசுப் பணிக்கு விளம்பரம் வெளியிடும்போதே எஸ்.சி.எஸ்.டி பிரிவுக்கு மட்டும்... அவ்வளவு ஏன்... நீதிபதி நியமன ஒதுக்கீட்டு கோட்டா என்று அதிலும் சாதிப் பிரிவைச் சொல்லி நியமனம் செய்துவிட்டு,... இவர்களிடம் பொதுவான தீர்ப்பை எதிர்பார்க்க வேண்டும்?
ஆங்கிலேயன் காலத்தில், நீதிபதிகளின் பங்களாக்களும் கலெக்டர் உள்ளிட்ட அரசு அதிகாரிகளின் பங்களாக்களும் ஊரை விட்டு வெளியே ஒதுக்குப்புறமாக இருந்தன,. காரணம் அவர்கள் எந்த மக்களிடமும் ஒட்டிக் கொண்டு அவர்கள் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு, அந்த அந்த மக்கள் சார்பாக தீர்ப்புகளை பாரபட்சத்துடன் கொடுக்கக் கூடாது என்று ஒழுங்குமுறையை வைத்திருந்தார்கள்... ஆனால் இன்று..? நீதிபதிகள்தான் பொதுநிகழ்ச்சிகளில் அதிகம் பங்கு பெறுகிறார்கள். எங்கே போயிற்று நம் ஒழுங்குமுறை? எங்கேபோயிற்று நம் நேர்மை எல்லாம்...?
இப்படிச் சொன்னால், இதனை விதண்டாவாதம் என்பர்.
உண்மையில் பதில் சொல்ல முடியாவிட்டால் விதண்டாவாதம் என்று கூறிவிடுவர். மிகச் சுலபம். கோயிலுக்குள் செல்வது மட்டுமல்ல, அங்கிருப்பவர்களை, சாமி சிலைகளை, பூஜைப் பொருள்களை நாங்களும் தொட வேண்டும், அதில் என்ன குற்றம் என்று கேள்வி எழுப்புபவர் பலர். உண்மையில் எல்லோரும் அப்படி உள்ளே சென்று பூஜைப் பொருள்களையோ, சாமி சிலைகளையோ தொட்டுவிட முடியாது. ஏன்..! நாமும்தான் தொடமுடியாது...! நம்மிடம் என்ன கேடு கண்டார்கள் கோயில்காரர்கள்? அதற்காக நாம் என்ன கோயிலுக்குள் போய் சாமியை வேரோடு பிடுங்கிக் கொண்டு வரவேண்டும் என்று கோஷமா போடுகிறோம். உண்மையான பக்தி இருப்பவர்கள்... வெளியில் இருந்து கூட கடவுளைக் கண்டுகொண்டு செல்வார்கள். அப்படித்தான் நாமும் நடந்துகொள்கிறோம். நானும் கூட, எந்தக் கோயிலிலும் பத்திரிகையாளன் என்ற சலுகையைக்கூட எதிர்பார்ப்பதில்லை., வெளியில் எங்கும் சொல்லிக் கொள்வதுமில்லை!
அரசாங்கம் கையில் இருப்பதால்தான் எல்லோரும் உள்ளே போக முடிகிறது என்று ஒரு கருத்தைச் சொல்கிறார்கள். சிதம்பரம் கோயில் பிரச்னையை ஏன் தீர்க்க முடியவில்லை என்றும் கேட்கிறார்கள்.
சில தினங்களுக்கு முன்னர் மகாலிங்கபுரம் ஐயப்பன் கோவிலுக்கு சென்றேன். ஐயப்பன் சந்நிதியில் பூஜை நடந்து கொண்டிருந்தது. கிருஷ்ணன் சந்நிதியில் இரவு நேர பூஜை நடந்து கொண்டிருந்தது. நான் கிருஷ்ணன் சந்நிதியில் அந்த கம்பியின் பக்கமாகச் சென்றேன். ஒருவர் ஓடோடி வந்தார். என்னைத் துரத்தாத குறை. இவிடே ... நிக்க.... ம்... ஒன்றும் பேசாமல் நம்தவறு தெரிந்து விலகிச் சென்றேன். காரணம் அது அவர்கள் வழிமுறை. சந்தனம் கொடுக்கும்போது தூக்கி வீசுவதுபோல்தான் அள்ளித் தெளிப்பார்கள்! அது அவர்கள் வழிமுறை. அதற்காக அவர் கழுத்தைப் பிடித்து உலுக்கவா முடியும்! அப்படி உலுக்கும்போதுதான் பிரச்னை எழுகிறது.
சிதம்பரம் கோவிலுக்குப் போய் கோவிந்தராஜன் சந்நிதியை கும்பிட்டுவிட்டு, அங்கேதான் நான் அமர்ந்து பாசுரம் பாட வேண்டுமே தவிர, நடராஜர் திருச்சிற்றம்பல மேட்டில் ஏறி நின்று... பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டுன்னு பாடினால்...! அங்கே நடராஜர் சந்நிதிக்கு இருக்கும் வெளிச்சமும் பார்வையும் - கோவிந்தராஜன் சந்நிதிக்கு இல்லை! இருள் அடைந்து கிடக்கிறது. எதிரே இருக்கும் கொடிமரத்தில் முட்டி மோதி இரவு வெளிவர வேண்டியிருக்கிறது. ... அதற்காக, நான் நடராஜர் திருச்சிற்றம்பல மேட்டில் ஏறி பாடத் தொடங்கினால்... என் செயலைக் கண்டு என் மீது நாலு பேர் கவனம் விழும், பத்திரிகைகளில்... இருக்கவே இருக்கிறீர்கள்... பொழுதுபோகாமல் 24 மணி நேர செய்தி சேனல்கள்... பத்த வைக்க என்னடா நியூஸ் கிடைக்கலாம்னு உப்பு சப்பில்லாத மேட்டரையெல்லாம் சினிமா மாதிரி ஓட்டுவதற்கு.... உங்கள் கவனத்தைக் கவர்ந்து அரசியல் செய்ய வேண்டுமானால் பயன்படுமே தவிர,.... இந்த சமுக்கத்துக்கு பைசா பிரயோசனம் இல்லை!
கட்டு திட்டங்களை மதிக்காமல் அரசியல் செய்பவனுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இந்த(ஊடக) சமுதாயம் - கேடு கெட்ட சமுதாயம்!

ஆண்டவன்முன் அனைவரும் சமம்! இந்த உறுதி அனைவருக்கும் வேண்டும். ஆலயங்கள் அனைவருக்கும் பொது! இது அனைவரின் மனதிலும் உறுதியாகப் பதிவு செய்யப்பட வேண்டும். ஆலயத்துக்குள் நுழைய அனைத்து சாதியினருக்கும் உரிமை உண்டு. இது இந்து மதத்தில் மத ஆச்சாரியர்களால் உறுதி செய்யப்பட்டு வழிகாட்டப்பட்டுள்ளது. சில சமூக விரோதிகள் பிரச்னை செய்கிறார்கள் என்றால் அவர்களின் அறிவு களை எடுக்கப்பட வேண்டும். ஆனால்... நாங்களும் போய் பூசை செய்வோம் என்று அடம்பிடிப்பது... புரட்சிகரமான கருத்து அல்ல... சமநோக்கமுள்ள செயலும் அல்ல... சமத்துவக் கருத்தும் அல்ல! மதத்தின் கட்டமைப்பை வேரோடு அழிக்கும் வேற்று மத பிரசாரகர்களின் குயுக்திகளுக்கு பலியாகும் கோடரிக் காம்பு செயல் என்பதை அனைவரும் நிலை நிறுத்திக் கொள்வோம்.
உன் கோயிலுக்குள் என்னை விடவில்லை என்றால், என் சமுதாயத்துக்காக நான் கோயில் கட்டி, அதில் உன் ஆண்டவனை குடியேற்றுவேன் என்று சொன்ன நாராயண குருவின் பாதங்களில் சிரம் பணிவேன். அவர்தான் உண்மையில் சீர்திருத்தவாதி. சமூக சீர்திருத்தவாதி. அவர் கட்டிய கோயில்கள் இன்றும் ஆண்டவன் தெய்வீக அழகுடன் குடியிருக்கிறான். அங்கே மக்கள் மனம் நிறைந்த வழிபாட்டில் ஈடுபடுகிறார்கள். இந்த உறுதி நமக்கு எப்போது வரப்போகிறது!
கோடிக்கணக்கான சிதம்பரம் நடராஜருக்குச் சொந்தமான சொத்தினை, நிலத்தை தீட்சிதர்கள் அனுபவிக்கிறார்கள் என்று சொல்கிறார்கள். பார்த்தசாரதி கோயிலுக்குச் சொந்தமான வீட்டில் அவர்கள் குறைந்த வாடகை கொடுத்து இருக்கிறார்கள் என்று சொல்கிறீர்கள் சிலர்.
அப்படிப் பார்த்தால், அறிவாலயம் என்ன கோடிக்கணக்கான இழப்பீட்டைக் கொடுத்து கட்டி முடிக்கப்பட்டதா? (அரசுக்கு).
எத்தனை சர்ச்சுகள் இங்கே கோயில் நிலங்களில் வெறூம் சிலநூறு ரூபாய்கள் வாடகைக்கு 99 வருடம் 999 வருடம் குத்தகைகளுக்கு விடப்பட்டிருக்கின்றன... இவற்றை எல்லாம் எங்கே போய்ச் சொல்வது? இதற்காக யார் போராட்டம் நடத்துவது...
இன்னும் சொல்லப்போனால்.... நாடு சுதந்திரம் பெற்ற போதும், சென்னை போன்ற இடங்களில் எவ்வளவு கோடிக்கணக்கானமதிப்புள்ள நிலங்களை சர்ச்சுகளுக்கு தாரை வார்த்திருக்கிறார்கள். இன்று ரியல் எஸ்டேட்தொழிலில் ஆதிக்கம் செலுத்துவது... அவர்கள் தானே! இதை எல்லாம் யார் கேட்பது?
சும்மாவா சொன்னார்கள்.. ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி என்று! அவன் மட்டும் கையில் பீரங்கியும், துப்பாக்கியும், வைத்திருந்தால்,.... இப்படி எல்லாம் பேசுவீர்களா? எல்லாவற்றையும் கடவுள் பார்த்துப்பான் என்று அவன் கடவுள் கைகளில் ஆயுதங்களைக் கொடுத்துவிட்டு... இவன் அழுது கொண்டிருக்கிறானல்லவா? நீங்கள் குட்டுவீர்கள் குட்டுவீர்கள் இன்னும் குட்டிக் கொண்டு இருப்பீர்கள்...! ஆனால் இவற்றுக்கு எல்லாம் ஒரு முடிவு பிறக்காமல் போகாது!
ஆலயச் சொத்தை தனி நபர்கள் யாரும் விற்க முடியாது. பத்திரப் பதிவுத் துறை அரசாங்கம் எல்லாம் கண்காணித்துக் கொண்டுதான் இருக்கிறது என்ற நிலை. இப்போது, அரசே அல்லவா அதைச் செய்து கொண்டிருக்கிறது. கோயில் சொத்துகளை அந்தத் திட்டம், இந்தத் திட்டம் என்று புறம்போக்கு நிலம் போல் அதை தீர்மானித்து, அடிவிலைக்கு விற்றுக் கொண்டிருக்கிறார்கள்..?!
இதற்கு, ஒரு குழு அல்லது, அறக்கட்டளை அமைக்கப்பட்டு, கோயில் சொத்துகள் முறைப்படுத்தப்பட்டு, அவற்றைக் கண்காணித்து, ஒழுங்காக வாடகை, குத்தகை வசூலித்து கோயிலை சிறப்பான முறையில் பராமரிக்கலாம். அவர்களைக் கட்டுப்படுத்தும் பொறுப்பை நீதிமன்றங்களும் அரசும் ஏற்கலாம். அதை விட்டுவிட்டு, எல்லாவற்றையும் அரசே வைத்துக் கொள்வது மிகத் தவறு என்பதே நமது எண்ணம்!

ஞாயிறு, பிப்ரவரி 17, 2013

என்னவெல்லாம் நடக்கப் போகிறதோ..?



அலுவலகத்துக்கும் வீட்டுக்கும் வண்டி சண்டிங் அடித்ததில், வெளி உலக விவகாரங்களில் இருந்து சற்றே விலகியது போலிருந்தது!
ஞாயிற்றுக் கிழமை மாலை நேரம் அப்படியே கடைத்தெருவுக்கு மளிகைப் பொருள்கள் வாங்கச் சென்றேன்!
தெரிந்த வியாபாரிகளிடம் அப்படியே கொஞ்சம் பேச்சுக் கொடுத்துக்கொண்டே வியாபார நிலை, விலை நிலவரம் எல்லாம் விசாரித்துக் கொண்டிருந்தேன். வழக்கம்போல் அரிசி வாங்கும் கடைக்குச் சென்றேன். முகத்தை தொங்கப் போட்டிருந்தார் அந்தத் தாத்தா! என்னைக் கண்டதும் என்ன சார் எப்படி இருக்கீங்க? என்று என்னிடம் நலம் விசாரித்தார். பதிலுக்கு விசாரிக்க வாயெடுத்தால்... சரளமாக வந்தது அன்னாரிடம் இருந்து!
என்ன சார் பண்றது? அரிசி மூட்டையா குமிச்சி வெச்சிருப்பேன்... இப்ப பாருங்க..? லோடு டம்ப் பண்ண முடியலே! வியாபாரமும் டல்! போன மாசம் இட்லி அரிசி 20 ரூபாய்க்கு இருந்தது. இப்போ 33ம் 35ம்! பிரியாணி அரிசி நிறைய வாங்குவாங்க... இப்போ கிலோ ரூ.120. நீங்க வழக்கமா வாங்கற 42 ரூபாய் பச்சரிசி இன்னிக்கு ரூ.56. எப்படி போடட்டுமா உங்களுக்கு...? என்றார்.
போடுங்க ... போடுங்க...  என்றேன்.
பின்னர் பச்சரிசி புழுங்கரிசி என்று எல்லா அரிசி விலை நிலவரத்தையும் விசாரித்தேன். குறைந்தது, கிலோவுக்கு ரூ. 8ல் இருந்து 14 வரை உயர்ந்திருக்கிறது. அதுவும் குறுகிய காலத்தில்!
பொதுவாக தை மாதம் பிறந்தால் விலை குறையும்! ஆனால்.. இப்போது  எகிறிப் போயுள்ளது!
காவிரி நீர் இன்மை, பருவ மழை பொய்த்தது, விவசாயிகளுக்கான ஊக்கம் இல்லாதது, வெளி மாநில வரத்தை நம்பியிருப்பது... இப்படி பல காரணங்கள் இருந்தாலும்....
கடந்த பத்து வருடங்களாக நான் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டு வரும் சில காரணிகள் இன்னும் தீர்க்கப்படாமல் இருப்பது...
* இளைய தலைமுறை - கணினி தொடர்பான வேலைகளுக்கே முக்கியத்துவம் கொடுப்பது! விவசாயம் சார்ந்த, உணவுப் பொருள் சார்ந்த அறிவியல் ரீதியான நவீன வேளாண்மைக்கு முக்கியத்துவம் கொடுக்கப் படாதது!
* சில வருடங்களுக்கு முன்னர் டபிள்யுடிஓ வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்து நாம் அதிகம் பேசியபோது, ஐ.நா.வின் ஜெனீவா மாநாடுகளில் வளர்ந்த நாடுகள் தங்கள் விவசாய இடுபொருள்கள், உரங்கள் உள்ளிட்டவற்றுக்கு மானியத்தை அதிகப் படுத்திக் கொண்டு, வளரும் நம் போன்ற நாடுகளுக்கு விவசாய மானியங்களைக் குறைக்குமாறு வலியுறுத்தியது... இது எப்படிப்பட்ட பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை பத்தாண்டுகளுக்கு முன்னர் நாம் அதிகம் விவாதித்தோம்! இன்று கண்கூடாகப் பார்க்கிறோம்.
* விளைபொருள்களை பாதுகாப்பதற்கான எந்த கட்டமைப்பையும் நம் அரசுகள் மேற்கொள்ளாதது. இன்று கூட ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்குக் கொண்டுவரப்பட்ட நெல்மூட்டைகள், குடோன்களில் அடுக்க வழியின்றி வெளியில் வைக்கப்பட்டபோது, மழைநீரில் நனைந்து வீணானது... எத்தனை மாத காலம் கஷ்டப்பட்டு ஒவ்வொரு நெற்கதிரையும் தடவிக் கொடுத்து ஆசையோடு அறுவடை செய்து விற்பனைக்கு வரும் நேரத்தில் இப்படி என்றால்... தவறு மழை என்ற இயற்கையினுடையது அல்ல! விவசாயிகளுக்கு இடம்தராமல் ஏஜெண்டுகளுக்கு இடம்தந்து கோல்மால் செய்யும் அதிகாரிகளுடையது... தகுந்த கட்டுமான ஏற்பாடுகளைச் செய்துதராத அரசுகளுடையது!
* இந்த ரியல் எஸ்டேட் பிஸினஸ் வேணாம் வேணாம்... என்று அடித்துக் கொண்டாலும், கேட்பார் யாருமில்லை! விளை நிலத்தை மலடாக்கிப் போட்டு வைத்து, மனைப் பிரிவாக்கி, விவசாயத்தைப் பாழ்படுத்தி... இன்னும் என்னவெல்லாம் நடக்கப் போகிறதோ?
 
Copyright © 2013 செங்கோட்டை ஸ்ரீராம்
Shared by Alahappa Grafix