சுடச்சுட:

ஆலயங்கள்

இலக்கியம்

ஆன்மிகம்

புதன், அக்டோபர் 02, 2013

ஸ்வதர்மம்!


கற்பிளவோடு ஒப்பர் கயவர் கடுஞ்சினத்து
பொற்பிளவோடு ஒப்பாரும் போல்வரே - விற்பிடித்து
நீர் கிழிய எய்த வடு போல மாறுமே
சீர் ஒழுகு சான்றோர் சினம்
- என்றொரு வெண்பாவை படித்த நினைவு.

சான்றோரின் சினம் எத்தகையது என்பதை ஔவை இந்தப் பாட்டில் சொல்லியிருப்பதாக பாடம் படித்த நினைவு.

கற்களை வெட்டிப் பிளந்தால் மீண்டும் அதே பழைய நிலையில் ஒட்ட வைக்க முடியாது. அது போன்றது கயவர்களின் சினமும் அதனால் விளையும் பிளவும்.

ஆனால், பொன்னை வெட்டியோ உருக்கியோ பிளந்தால் எப்படி மீண்டும் அது நல்லதொரு ஆபரணமாக அணிகலனாக அல்லது பொன் கட்டியாகவோ உருமாறுமோ அதுபோன்றது சான்றோரின் சினம். அந்த சினமும் கூட, தண்ணீரில் வேகமாக விர் என்று எய்யப் படும் அம்பானது தண்ணீரைக் கிழித்துக் கொண்டு பாயும். அப்போது இரண்டாகப்  பிரியும் தண்ணீர், அம்பு போனபின்னே மீண்டும் ஒன்றாகிவிடுதல் இயல்பு. அதுபோன்றது சான்றோரின் சினத்தால் விளையும் பாதிப்பு.
- என்ன அருமையான உவமை!

உவமைகள் மட்டும் இல்லாதிருந்தால், நம் வாழ்வில் சுவையேயிராது. கானல் நீராகக் கரைந்து போகும் கண நேர வாழ்க்கையில், வாழ்வீன் முழுமையை ரசித்து அனுபவிக்க உவமைகள் எப்படிக் கைகொடுக்கின்றன.

பார்க்கும் ஒரு பொருளை சொல்ல வரும் பொருளோடு பொருத்திப் புரிய வைக்க முயலுதல் உவமையின் பலன்!

அதுபோன்றதே, சிறு கதைகள் உதாரணக் கதைகள் வழியே விளக்குதல்....
சான்றோர் சினத்தைச் சொல்ல வந்துவிட்டு, சான்றோர் சினத்தின் இயல்பைக் கூறிவிட்டு, சான்றோர் குணத்தைக் கூறாது விட்டால்...? முழுமை பெறாதல்லவா?!!

ஸ்ரீராமகிருஷ்ணர் முதற்கொண்டு பலரும் எடுத்துக் காட்டியிருக்கும் ஒரு கதை...

துறவி ஒருவர்... ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது மரத்தின் மேலிருந்து நீரில் தேள் ஒன்று தவறி விழுந்தது.
குளித்துக் கொண்டிருந்த துறவி, நீரில் விழுந்த தேளை கையில் எடுத்துத் தூக்கி கரையில் போடப் போனார். சாகக் கிடக்கும் தன்னைக் கைதூக்கிக் காப்பாற்றுகிறார் இந்தத் துறவி என்ற ஞானம் அந்தத் தேளுக்கு இல்லை. வழக்கம்போல் தன் இயல்பான குணத்தைக் காட்டி, துறவியின் கையில் நறுக்கென்று கொட்டியது தேள்.
வலியால் துடித்த துறவி, தவறிப்போய் தேளை நீரில் தவறவிட்டார். இருப்பினும் தன் இயல்பு குணமான கருணையைக் கைக் கொண்டு, மீண்டும் கையில் எடுத்துத் தூக்கி கரையில் போடப் போனார்... தேளோ மறுபடியும் கொட்டியது.
மீண்டும் அதே கதை. இதனைக் கரையிலிருந்து பார்த்துக் கொண்டிருந்த ஒருவர், துறவியிடம் கேட்டார்...
துறவியாரே... தேள்தான் வலி ஏற்படுத்தும் விதமாய்க் கொட்டுகிறதே… நீங்கள் ஏன் அதைத் திரும்பத் திரும்ப கையில் எடுத்து கொட்டுப் படுகிறீர்கள்.
அப்படியே விட்டுவிட வேண்டியதுதானே என்றார்!
அதற்கு துறவி கூறினார்...
“கொட்டுவது தேளின் குணம்; துடிக்கும் உயிரைக் காப்பது மனிதனின் குணம். அதன் இயல்பை அது விடாத போது என் இயல்பை மட்டும் ஏன் நான் விட வேண்டும்?”. என்றார்.
இங்கே துறவி கூறியதே, ஸ்வதர்மம் என்ற பொருளில் முன்னோர் உரைத்தனர்.
இது நம் ஸ்வதர்மம் என்று நாம் கைக்கொண்ட பின், நம் இயல்பை விட்டு நாம் மீறலாமோ?!

(இதே விளக்கமாக ஸ்ரீவைஷ்ணவம் காட்டும் கதை ஒன்றும் கூரத்தாழ்வான் - கிருமிகண்ட சோழன் விஷயத்தில் உண்டு.)

என் வாழ்நாளில்... இந்தக் கதையில் கொட்டிய தேளைப் போல் எத்தனையோ மனிதர்களைப் பார்த்திருக்கிறேன்... பதிலுக்குக் கொட்டாமல் தூக்கிக் கரையேற்ற முற்பட்டதால், தேள்களெல்லாம் காப்பாற்றுபவனைப் பார்த்து ஏளனச் சிரிப்பை வெளிப்படுத்துகின்றன. பதிலுக்குக் கொட்டியிருந்தால், முதிர்ச்சி அடைந்த மனிதன் என்றும், ராஜ தந்திரி என்றும் சாணக்கியன் என்றும் பட்டம் கிடைத்திருக்கும். நம் ஸ்வதர்மம் காத்த பலன் சின்னப் பையன் என்றும், அப்பாவி என்றும்தான் பட்டம் கொடுக்கிறது இந்த உலகம்!

காந்தி ஜயந்தி சிந்தனை: இது என் சுயசரிதை


1988 - மறக்க முடியாத வருடம். அந்த வருடத்தில் இதே நாளில்தான், முதல் முதலாக மேடையேறி 'மைக்’ முன் நின்று, உதறலெடுக்காமல் என் ஒப்பனைப் பேச்சை முழங்கித் தள்ளினேன்.

இடம்: தென்காசி திருவள்ளுவர் கழகம். தென்காசி பெரிய கோவில் கோபுரம் அப்போது கட்டப்பட்டு வந்தது. குற்றால மலைக் காற்று சுகமாய் மோதித் தலை கோதும்! நான் அப்போது தென்காசி கீழப்புலியூர் இந்து உயர்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு மாணவன். அதற்கு முன்னர் பள்ளிகள் அளவிலான சிறு சிறு போட்டிகளில் பங்கு பெற்றிருந்தேன் என்றாலும், அவை எல்லாம் மைக் இல்லாமல் சிறிய அறைகளில் மாணவர்கள் முன்னிலையில் பேசும் பேச்சுப் போட்டிகளாகத்தான் இருந்தன! அன்று... அக்.2. காந்தி ஜயந்தி!

தென்காசி திருவள்ளுவர் கழகம், பொதிகைத் தென்றலுடன் அகத்தியம் கண்ட தமிழ் ஒலிக்கும் திருக்கூடம்! இலக்கியவாதிகள் பலர் களம் கண்ட புனிதமான மேடை!

காந்தி ஜயந்தி என்பதால் அன்று மாணவர்கள், பெரியவர்களின் பேச்சுக்கு திருவள்ளுவர் கழகத்தில் ஏற்பாடு செய்திருந்தார்கள். எல்லாரும் காந்தியைப் பற்றியே பேசுகிறார்களே... நாம் வேறு ஏதாவது பேசலாமே என்று தலைப்பை யோசித்தேன். காந்தியைப் போல் தென்னகத்தில் தாக்கம் ஏற்படுத்தியவர் கர்மவீரர் காமராஜர். அவருடைய அரசியல் குருவாகத் திகழ்ந்தவர் தீரர் சத்தியமூர்த்தி. அவர் குறித்தே பேசலாமே என்றார் ஆசிரியர் ராமலிங்கம். குறிப்பெடுத்தேன். முதல் ’மைக் பிடித்து’ மேடையேற்றம் கண்டேன்!

பேசி முடித்த பின்னர் ஒரு புத்தகத்தைப் பரிசளித்தார்கள். "இந்திய சுயராஜ்யம்” என்ற புத்தகம். மதுரை காந்தி இலக்கியப் பண்ணை வெளியிட்ட புத்தகம். அதில், காந்திஜி ஒரு வாசகரும் ஆசிரியரும் பேசுவது போல் பல கருத்துகளை விதைத்திருப்பார். இந்தியாவின் நிலைமை, ஹிந்துக்களும் முஸ்லிம்களும், சுயராஜ்யம் என்றால் என்ன, இந்தியா எப்படி விடுதலை அடைய வேண்டும், மிருக பலத்தால் என்ன சாதிக்க முடியும், சாத்வீக எதிர்ப்பை பதிவு செய்வது எப்படி, கல்வி, இயந்திரம் போன்றவற்றைப் பற்றி தமது கருத்துகளை அலசியிருப்பார். இயந்திரம் பற்றி அவர் குறிப்பிடும் ஓர் இடத்தில், இயந்திரங்களால் மனிதனின் பணிகள் பாதிக்கப்படுவதையும், மனித உழைப்புக்கு மதிப்பில்லாது போவதையும் குறிப்பிடுவார். அதில், ரயில்களுக்கும் டிராம் வண்டிகளுக்கும் எதிரான அவரின் அதீத எதிர்ப்பு எனக்கு ஆச்சரியத்தைத் தந்தது. எந்த ரயில் வண்டியில் ஏறி இந்தியா முழுமைக்கும் ஊர் சுற்றி மக்களைச் சந்தித்தாரோ, அதே ரயில் வண்டியின் மீதான கோபம், ஆலைகளுக்கு எதிரான கொள்கை, இயந்திரங்கள் வேண்டாம் என்ற கருத்து... எல்லாம் 13 வயது மாணவனாக இருந்த எனக்குள் ஒரு தீவிர யோசனையைக் கிளப்பியிருந்தது. எனக்கு எழுந்த அதே சந்தேகத்தை அவரே ஒரு கேள்வியில் கேட்டு பதிலாகவும் ஆக்கியிருந்தார்.

நீங்கள் குறிப்பிடும் இந்த எதிர்ப்பு உணர்வையெல்லாம் அதே இயந்திரத்தின் மூலம்தான் அச்சிட்டு வாசகர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டியுள்ளது.. என்று கேள்வியும் கேட்டு, அதற்கு பதிலாக, “விஷத்தைக் கொல்ல விஷம்தான் பயன்படும்” என்றும் கூறியிருப்பார் மகாத்மா காந்தி.
சிறு வயதிலேயே வேறு பொழுது போக்குகள் இல்லாத காலம் என்பதால், புத்தகங்களைப் படிப்பதே ஒரே பொழுது போக்கு! இந்த இந்திய சுயராஜ்யம் புத்தகத்தை நீண்ட நாட்கள் பத்திரமாக வைத்திருந்தேன். அதில் என் பெயரும் வருடமும் திருவள்ளுவர் கழக இலச்சினையும் இருக்கும்.

ஏழெட்டு வருடங்களுக்கு முன்னர் ஒரு நாள் மயிலாப்பூர் ராமகிருஷ்ண மடத்திலிருந்து அழைப்பு வந்தது. அழைத்தவர் ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் ஆசிரியர் சுவாமி விமூர்த்தானந்தர். காந்திஜியின் கிராம சுயராஜ்யம் குறித்து குறிப்புகளைக் கேட்டார். கைவசம் இருந்த இதே நூலை அவரிடம் கொடுத்து உங்களிடமே பத்திரமாக இருக்கட்டும் என்று சொல்லிவந்தேன். ஆண்டுகள் பலவானாலும் காந்திஜியின் தர்ம சிந்தனைகள் மட்டும் உள்ளத்தில் பதிந்து விட்டன.

(பின் குறிப்பு: இலக்கிய தாகத்தை வளர்த்தது திருவள்ளுவர் கழகமும் ரசிகமணி டி.கே.சி., வாரிசுகளாய் தமிழ் கற்பித்த (பள்ளி சாராத) பெரியவர்களும் என்றால், அரசியல் வாசனையை வெறுக்க வைத்ததும்கூட அதை ஒட்டிய இடமும் தமிழாசிரியர்கள் என்ற போர்வையில் கட்சிப் பணிகளுக்கு அழைத்துச் சென்ற வாத்தியார்களும்தான்! திமுக கூட்டத்துக்கு ஆள் சேர்க்க எங்களை அழைத்துச் சென்றார்கள். தென்காசி பெரிய  கோயில் எதிரே நடக்கும் திமுக கூட்டத்தில், வை.கோபால்சாமி அடுக்கு மொழியில் பேசினால் அடுத்தடுத்து கை தட்ட நாங்கள் வேண்டும்! தேர்தல் நோட்டீஸ் கொடுக்க நாங்கள் பயன்படுத்தப் பட்டோம். கருணாநிதியைத் தவிர வேறு தமிழறிஞர்களே தமிழகத்தில் தோன்றியதில்லை என்று கற்பிக்கப்பட்டோம். அண்ணாத்துரையைத் தவிர வேறு மேடைப் பேச்சாளரே கிடையாது என்று பாடம் புகட்டப்பட்டோம். இப்போது நினைத்துப் பார்க்கிறேன்... அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது சரிதானே!)

(இந்தப் படம், ஓவிய நண்பர் ஜெ.பிரபாகர் வரைந்து கொடுத்தது.)
 
Copyright © 2013 செங்கோட்டை ஸ்ரீராம்
Shared by Alahappa Grafix