சுடச்சுட:

ஆலயங்கள்

இலக்கியம்

ஆன்மிகம்

From our Blog

திங்கள், செப்டம்பர் 14, 2015

தமிழன்னை இழந்துவிட்ட தவமகன்: கௌதம நீலாம்பரன்


என் மீது மிகுந்த அக்கறை கொண்ட நண்பர் ...
எப்போதும் என் நலன் குறித்து விசாரிக்கும் மூத்த எழுத்தாளர்...
கைலாசம் என்ற கௌதம நீலாம்பரன் காலமாகிவிட்டார்.

திருச்சிராப்பள்ளி என்ற மண்ணையும் காவிரி என்ற நீரையும் தொட்டுத் துலங்கிய, துவங்கிய பாசமிகு நட்பு எங்களுடையது. அவை எல்லாவற்றையும் விட எங்களுக்குள் முக்கியமான பிணைப்பாக இருந்த பெயர் - நா.பா.

சிராப்பள்ளி மலையில் கோயில் கொண்ட தாயுமானவன் தாள் தொட்டு பூசித்த பாரமபரிய தீட்சிதக் குடும்பம். கைலாசம் - எழுத்துலகுக்கு கௌதம நீலாம்பரனாக மாறிப்போனார்.

என் இதழியல் துறைப் பணியின் துவக்க கால கட்டத்தில், எனக்கு அறிமுகமான முக்கிய எழுத்தாளர்களில் இவரும் ஒருவர். அப்போது நான் விஜயபாரதம் வார இதழில் உதவி ஆசிரியராகப் பணியாற்றி வந்தேன். தீபாவளி மலர் ஒன்றே அப்போது எழுத்தாளர்கள் பலரையும் சென்று பார்க்க வைத்து, எங்களை இணைத்தது என்றே சொல்லலாம்.

பத்திரிகை - எழுத்துலக நண்பர்களாக / என் நலன் நாடும் பெரியோர்களாக - திருப்பூர் கிருஷ்ணன், கீழாம்பூர் சங்கரசுப்ரமணியன், பாலகுமாரன், கௌதம நீலாம்பரன் உள்ளிட்ட பலர்  கிடைத்தார்கள்.

கௌதம நீலாம்பரன் - ஓர் அதிசயப் பிறவிதான். அதிகம் பேசமாட்டார். அமைதியாகவே இருப்பார். முகம் அமைதியில் தோய்ந்திருக்கும். அவருடைய ஜிப்பாவும் பட்டையான பிரேம் போட்ட கண்ணாடியும் அவரை எழுத்தாள அடையாளத்துக்குள் புகுத்தியிருக்கும்.

ஓர் இதழாளன் படும் அத்தனை சிரமங்களையும் அனுபவித்தவர். சிலவற்றை என்னிடம் வெளிப்படையாகவே பகிர்ந்து கொண்டுள்ளார்.

அவருடைய விகடன் தொடர்பான அனுபவம்,  முதுநிலை ஆசிரியர்களிடம் அவர் பட்ட பாடு, ஓர் இதழ் நடத்திய போட்டியில் இவருடைய கதை வென்று பிரசுரமாக, அதனால் உடனிருந்தோர் பொறாமையில் அலுவலகத்தில் பட்ட அவமானங்கள்... எல்லாம்தான்!

இவை எல்லாவற்றையும் மீறி, எழுத்துலகில் தனக்கென ஓர் இடம் பிடித்துக் கொண்டார்.

15 வருடங்களுக்கு முன்னர் முதல் முதல் அறிமுகத்தில், இலக்கிய உலகம் குறித்த தகவல்களைக் கேட்டுக் கொண்டிருந்தேன். அப்போது, தாம் தீபம் இதழில் பணியாற்றிய அனுபவத்தைச் சொன்னபோது, நா.பா., ஒரு வகையில் எங்கள் குடும்ப உறவு; என் தாய்வழி மாமா தாத்தாவின் சகலை அவர் என்றேன். அது முதல் பேச்சின் நெருக்கம் இன்னும் அதிகமானது.

தீபம், இதயம் பேசுகிறது, குங்குமம், முத்தாரம், ஞானபூமி, விகடன் என அவருடைய பணி நீண்டது. சுமார் 40 வருடங்கள். இதழியல் பணியில் இருந்துவிட்டார். பின்னாளில் குங்குமச் சிமிழுக்கு எழுதிவந்தார்.

சிறுகதைகள் அதிகம் எழுதியவர். வானொலி, தூர்தர்ஷன் எழுத்துத் தொடர்புகள் என எழுத்தாள இலக்கணத்துடன் திகழ்ந்தவர். சரித்திர நாவல்களில் அவருக்கிருந்த தணியாத ஆர்வம்...  அவருடைய சரித்திர நாவல்களின் பட்டியலைச் சொல்லும்! சேது பந்தனம், மாசிடோனிய மாவீரன், விஜய நந்தினி, சோழ வேங்கை, ராஜ கங்கனம், மோகினிக் கோட்டை, நிலா முற்றம்...

கலைமகள் இதழில் கதைகள் எழுதியுள்ளார். கி.வா.ஜ. காலத்தில் அவர் எழுதிய கதைகள் குறித்த அனுபவங்களையும் பகிர்ந்திருக்கிறார். கிட்டத்தட்ட என் வயதைக் காட்டிலும் சில வருடங்கள் அவருடைய எழுத்து / இதழியல் உலகப் பணி அதிகமானதுதான்.

சில வருடங்களுக்கு முன் வேளச்சேரியில் நெடிதுயர்ந்த கட்டடத்தில் குடியேறினார். அவர் வீட்டுக்குச் சென்றிருந்தேன். லிப்ட் இல்லாமல் இல்லத்து இலக்கை அடைதல் கடினம்தான்! இப்போது மிக உயரத்தில் வந்துவிட்டதாக சிரித்துக் கொண்டே சொன்னார். அந்தக் குறு நகைப்பு என்னையும் தொற்றிக் கொண்டது.

பல நேரங்களில் எனக்கு உரிய கௌரவம் கிட்டாது போயின் துச்சமென எதையும் தூக்கிப் போட்டு வந்துவிடுவேன். அப்போது தோன்றும்... நான் என்ற அகம்பாவத்துக்கும், உரிய கௌரவத்தை எதிர்பார்த்தலுக்கும் எத்தகைய வேறுபாடு இருக்கிறது என...?! மானம் பெரிதென எண்ணுவேன். அவமரியாதைகளை, அவமானங்களை தாங்கிக் கொள்ளும் பக்குவம் எனக்கு மிகக் குறைவுதான்! பூணூல் அணிவித்து, வேத வித்யா கர்வம் மேலேறிவிடக் கூடாதென்பதற்கே பவதி பிட்சாந் தேஹி என கைநீட்டி பிட்சை ஏற்கும் தத்துவத்தை இளவயதில் புகட்டியிருந்தாலும், உரிய மதிப்பை எதிர்நோக்கும் மனம் மட்டும் என்னிடம் மாறவில்லை. கிட்டத்தட்ட அதே குணாதிசயம் கௌதம நீலாம்பரனிடமும் இருந்ததை உணர்ந்தேன். அதனாலேயே அவர் பட்ட துயர்களையும் கேட்டறிந்தேன்.

அண்மைக் காலமாக பொற்றாமரை இயக்கத்தில் அதி தீவிர ஈடுபாடு காட்டினார். திருவாளர் இல.கணேசனார் தலைமையிலான பொற்றாமரை இலக்கிய அமைப்பில் அவருக்கு உரிய இடம் கிடைத்தது. மிகுந்த மன மகிழ்ச்சியோடு பணிகளில் ஈடுபட்டிருந்தார். சில கூட்டங்களில் நான் பார்வையாளனாகச் சென்றபோது, வயதையும் மீறி என் கை பிடித்து சிநேகத்தை வெளிப்படுத்தி வாழ்த்துவார். அவர் மேடை ஏறி மைக் பிடித்துப் பேசும்போது பெருமிதமாக இருக்கும்.

அண்மையில் ஒரு முறை ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டோம். இருவரும் அருகருகே அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். தனக்கு பார்வை பலவீனமடைந்து வருவதை கவலையுடன் சொன்னார். நிகழ்ச்சி முடிந்து திரும்பியபோது ஏதாவது ஒரு பேருந்து நிறுத்தத்தில் இறக்கிவிடுமாறு சொன்னார். அவரை என் பைக்கில் ஏற்றி, வீட்டின் அருகே இறக்கி விட்டு விடைபெற்றேன். இப்போது அவர் நம்மிடம் இருந்து நிரந்தரமாக விடைபெற்றுச் சென்றுவிட்டார். நினைக்கும் போது துயரம் மேலிடுகிறது. தமிழன்னை தன் புகழ்பாடிய ஒரு புதல்வனை இழந்துவிட்டாள்!

வெள்ளி, செப்டம்பர் 04, 2015

சரணாகதியின் பொருள் உரைத்தவன்!


அஷ்டமி, நவமி திதிகள் என்றால் எந்தக் கார்யத்திலும் இறங்காமல் வெறுமனே அமர்ந்திருக்கும் மக்களைப் பார்க்கும்போது எனக்கு இந்த விஷயம்தான் தோன்றும். இந்தத் திதிகளை மக்கள் ஒதுக்கவே, அவை இறைவனிடம் சென்று, “மக்கள் எங்களை ஒதுக்குகின்றனரே” என்று வருந்தினவாம். அதற்கு இறைவன் “உங்களுக்கு ஏற்றம் தருகிறேன். மக்கள் உங்கள் இருவரையும் கொண்டாடச் செய்கிறேன்” என்று வாக்களித்தாராம். பகவான் உறுதியளித்தபடி, நவமி திதியில் ராமனாகவும், அஷ்டமி திதியில் கிருஷ்ணனாகவும் அவதரித்து, மக்கள் அவ்விரு திதிகளையும் கொண்டாடச் செய்தாராம்.
ஸ்ரீகிருஷ்ணர் நடு இரவில் சிறைக் கதவுகளுக்குப் பின்னே பிறந்தாரென்றால், ஸ்ரீராமனோ நடுப்பகலில் அரண்மனையில் சித்திரை மாதம் புனர்பூச நட்சத்திரம் 4 – ஆம் பாதத்தில் அவதரித்தார். ஸ்ரீராமர் பிறந்த தினத்தைக் கொண்டாடுவதுதான் ஸ்ரீராம ஜன்மோத்ஸவம் – ஸ்ரீராமநவமி என்று நாட்டு மக்களால் விமரிசையாகக் கொண்டாடப்படும் திருநாள்.
ஸ்ரீராமர் பிறந்ததே அனல் கொளுத்தும் வெய்யில் காலத்தில். அவர் பால பருவத்தில் விஸ்வாமித்திரருடன் கானகம் சென்றதும், வனவாசத்திற்காகப் பதினான்கு ஆண்டுகள் கானகத்தில் அலைந்ததும் நல்ல வெய்யிலில் தான். எனவேதான் ஸ்ரீராமநவமியன்று பானகம், நீர்மோர், வடைபருப்பு, விசிறி போன்றவற்றைத் தானமாகக் கொடுப்பதுண்டு. ஸ்ரீராமர் பிறந்ததை தசரதர் அரண்மனையில் கோலாகலமாகக் கொண்டாடினார். மக்களுக்கு நிறைய தான தர்மங்கள் செய்தார். அதை மனதில் கொண்டு இன்றும் கிராமங்களில் பல வீடுகளில் நெல் மணிகளும் பணமும் வைத்து தானமளிப்பது வழக்கமாக உள்ளது.
இராமரைப் பற்றி எத்தனையோ பக்தகவிகள் பாடி இருக்கிறார்கள். புரந்தரதாஸர், தியாகராஜர், முத்துஸ்வாமி தீக்ஷிதர் என்ற மும்மூர்த்திகளைப் போல பல்வேறு புகழ்பெற்ற கீர்த்தனைகளைக் கொடுத்தவர் திருவாங்கூர் மகாராஜா. அவர் பிறந்ததுகி.பி.1813 ஆம் ஆண்டு ஏப்ரல் 16 – ஆம் தேதி18 ஆண்டுகள் அவர் சமஸ்தானத்தைப் பரிபாலித்தார். ஸம்ஸ்க்ருதம், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி, தமிழ் ஆகிய மொழிகளில் 300 -க்கும் மேற்பட்ட கிருதிகளை இயற்றியுள்ளார். அவரது பட்டாபிஷேக கீர்த்தனையான “பாவயாமி ரகுராமம் பவ்ய ஸுகுணா ராமம்” என்ற கீர்த்தனை. இன்றும் இந்தக் கீர்த்தனையைக் கேட்டு அதில் லயிக்காதவர் யாருளர்?
ஸ்ரீராமர் என்று சொன்னாலே சரணாகதித் தத்துவம் தான் அனைவர் நினைவுக்கும் வரும். தஞ்சமென்று வந்தவரைத் தன் சரண கமலத்தில் வைத்து அபயம் அளித்தவர் ஸ்ரீராமபிரான். பாலகாண்டத்தில் இராவணனால் அல்லலுற்ற தேவர்கள் பரமனடியே பரிகாரம் என்று சரணடைந்தனர். அயோத்யா காண்டத்தில் பரதன், ஸ்ரீராமபிரானைச் சரணடைந்து அவர் அடித்தலம் இரண்டையும் அழுத கண்களோடு பற்றினவனாய்த் தன் முடித்தலத்திற்கு இவையே கிரீடம் என்று சூட்டிக் கொண்டான். ஆரண்ய காண்டத்தில்தண்டகவனத்து ரிஷிகள் எல்லாரும் அரக்கர்களின் தாங்கவொண்ணாக் கொடுமைக்கு அஞ்சி சக்ரவர்த்தித் திருமகனைச் சரணடைந்தனர். கிஷ்கிந்தா காண்டத்தில் சுக்ரீவன் ஸ்ரீராமபிரானைச் சரணடைந்தான். சுந்தரகாண்டத்திலும் சரணாகதிக் கதை வருகிறது. சீதை அசோகவனத்தில் சிறையிருந்தபோது, ஸ்ரீராமபிரானுடனான தம் இளமைக்கால நிகழ்வுகளை மனதில் அசைபோட்டுக் கொண்டிருக்கிறார். அப்போது காகாசுரன் கதை வருகிறது. ராமபாணத்துக்கு அஞ்சி உலகெல்லாம் சுற்றிவிட்டு இறுதியில் ஸ்ரீராமபிரானது திருவடிகளையே தஞ்சம் என்று சரணடைந்தான் காகாசுரன்.
அடைக்கலம் என்று வந்தவர்க்கு “அஞ்சேல்” என்று அபயம் அளித்த ஸ்ரீராமபிரான் சரணாகதிச் சிறப்பிற்கு விபீஷண சரணாகதியைச் சிறந்த உதாரணமாகச் சொல்லலாம்.
சரணாகதியை விளக்குவதை சரம ஸ்லோகம் என்பார்கள்.  இராமாயணத்தில் வரும் சரண கட்டம் விபீக்ஷண சரணாகதி.
ஸக்ருதவ ப்ரபந்நாய தவாஸ்மீதிச யாசதே
அபயம் ஸர்வ பூதேப்ய: ததாம் யேதத் வ்ரதம் மம
ஆநாயைநம் ஹரிச்ரேஷ்ட தத்தமஸ்யாபயம் மயா
விபிஷணோ வா ஸுக்ரீவ யதி வா ராவண ஸ்வயம்
பகைவனுக்கும் அருளும் பண்பாளன் அல்லவா ஸ்ரீராமபிரான். அதை சரணாகதியின் உச்சத்தை விளக்கும் இந்த ஸ்லோகத்தில் அறிந்து கொள்ளலாம்.
விபீஷணனை ஏற்றுக்கொள்ள சுக்ரீவன் உள்ளிட்டோர் தயக்கம் காட்டியபோது ஸ்ரீராமபிரான் கூறுகிறார்…
நான் உன்னுடையவன், என்னைக் காப்பாற்று” என்று கூறிச் சரணடைந்தவனுக்கும், அனைத்து பிராணிகளுக்கும் நான் அபயம் அளிக்கிறேன். இது என் விரதம். ஆகையால் சுக்ரீவா இவனை அழைத்துவா. இவன் விபீஷணனாக இருக்கட்டும் அல்லது அந்த இராவணனாகவேதான் இருக்கட்டும்… இவனுக்கு அபயம் அளிக்கப்பட்டுவிட்டது” என்று திருவாய் மலர்ந்தருளுகிறார் ஸ்ரீராமபிரான்.
இராமாயணம் படித்தால் சகல நலன்களும் வந்து சேரும் என்ற நம்பிக்கை நம்நாட்டில் உண்டு. மணமாகாத கன்னியர் சுந்தரகாண்டத்தைப் பாராயணம் செய்தால் உடனே மணமாகும் என்பர். வேறு சில பரிகாரங்களுக்கும் சுந்தர காண்டத்தைப் படிக்கச் சொல்வதுண்டு. இராமாயணத்தைப் பாராயணம் செய்து தசமி அன்று பட்டாபிஷேகத்தைப் படித்து முடிப்பது ஒரு வகை. ஸ்ரீராமர் பிறந்த இந்த நவமியிலிருந்து பத்து தினங்களுக்குப் பாராயணம் செய்து பட்டாபிஷேகத்தைப் படித்து முடிப்போரும் உண்டு. இராமனின் கதையைக் கேட்டாலும் படித்தாலும் புண்ணியம் சேரும் என்பது ஆன்றோர் கருத்து.
ஸ்ரீராமபிரானை எண்ணும்போது நம் நினைவில் உடனே வருபவர் குலசேகராழ்வார். சேரமான் பெருமாளாக மன்னர் குலத்தில் ஸ்ரீராமபிரான் பிறந்த அதே புனர்பூச நட்சத்திரத்தில் உதித்தார் குலசேகராழ்வார். மன்னராயினும் ஸ்ரீராமபிரானிடம் அளவற்ற பக்தி அவருக்கு. இராமாயணத்தைக் கேட்பதில் தனி ஆனந்தம். ஒரு முறை வைணவப் பெரியார் ஒருவர், குலசேகரருக்கு வால்மீகி ராமாயணத்தைச் சொல்லிக் கொண்டு வந்தார். இவரும் கண்களில் ஆனந்தக் கண்ணீர் கங்கையெனப் பொங்கும் வண்ணம் மனம் லயித்துக் கேட்டு வந்தார். ஒருநாள் இராமபிரான் அரக்கர்களோடு போர்புரிந்த நிகழ்ச்சியை விவரித்தார் அந்த வைணவப் பெரியார்.
இலக்குமணன் வில்லேந்திக் கவசம் தரித்து இராமனிடம் வந்து, அரக்கர்களுடன் போர் புரிய விடை கேட்டான். ஸ்ரீராமரோ, நீ சீதையைக் காத்துக் கொண்டிரு, நான் போய் அரக்கர்களை அழித்து வருகிறேன் என்று கூறிப் பர்ண சாலையினின்றும் வெளிக் கிளம்பி விட்டார். அதுகண்ட சூர்ப்பணகை, இவனே அரக்கர் குலத்தின் பகைவன் என்று கத்தினாள். அம்மொழிகேட்ட அரக்கர்கள் நாலாத்திசைகளிலிருந்தும் இராமபிரானைத் தாக்கினார்கள். அவர்களின் படைக்கலன்கள் இராமபிரானின் மீது பட்டு விழுந்தன” என்று கதை கூறிக் கொண்டிருந்தார் அவர்.
இதைக் கேட்டுக் கொண்டிருந்த குலசேகரரோ அந்தக் கட்டத்தில் மனம் லயித்து, “ஆ! அரக்கர்கள் மாயப் போர் புரிவதில் வல்லவர்களாயிற்றே. கரன், தூஷணன், திரிசரன் போன்ற அரக்கர்கள் மாயத்தந்திரங்களால் தனியராய் இருக்கும் ஸ்ரீராமபிரானைத் தாக்குகிறார்களே! இப்பெரும் படையை தனி ஆளாய் இருக்கும் ஸ்ரீராமபிரான் எப்படி சமாளிக்கப் போகிறாரோ!” என்று எண்ணி, தம் படையைப் போருக்கு ஆயத்தமாகுமாறு படைத் தளபதிகளுக்குக் கட்டளையிட்டார்.
படைத்தளபதிகளோ, ஆச்சர்யம் அடைந்தனர். நம்மை எதிர்த்த சோழ, பாண்டியர்கள் மூலையில் முடங்கிக் கிடக்கிறார்கள். எதிரிகளே நமக்கில்லையே. பின் யார் மீது போர்? என்று குழம்பித் தவித்தனர். ஆனால் அரச கட்டளையாயிற்றே! அவர்கள் பெரும் படையைத் திரட்டித் தயாராயினர். குலசேகரரும் போர்க்கோலம் பூண்டு நிற்கையில், காரணம் அறிந்த அமைச்சர் இராமாயணக் கதை சொல்லிக் கொண்டிருந்த அப்பெரியாரை அழைத்து, இச்சூழ்நிலையைச் சமாளிக்க வேண்டினர்.
அப்பெரியவரும், “ஸ்ரீராபிரான் தனியொருவராக நின்று, மாயங்கள் புரிந்த அரக்கர்களை அழித்து வெற்றி வாகைசூடி, பர்ணசாலையடைந்தார். சீதாதேவி எம்பெருமானின் மார்பில் பட்ட புண்களுக்கெல்லாம் மருந்தாக அவரைத் தழுவி மகிழ்ந்தாள்” என்று கதையைச் சொல்லி ஸ்ரீராம பட்டாபிஷேகம் வரை, சொல்லி முடித்த பிறகே குலசேகரர் தெளிவு பெற்றார். தம் படையை மீண்டும் தத்தம் இடம் திரும்புமாறு கட்டளையிட்டு அரண்மனை திரும்பினார்.
ஸ்ரீராமாயணக் கதை கேட்டாலும் மனம் லயித்துக் கேட்டால் தான் அதன் அருமையும் பலனும் நமக்குக் கிடைக்கும். எங்கெல்லாம் ஸ்ரீராமாயணம் ஒலிக்கிறதோ அங்கெல்லாம் ஆஞ்சநேயரும் அமர்ந்து கதை கேட்பார் என்பது பெரியோர் வாக்கு. வேடனான குகனையும், வானரனான சுக்ரீவனையும், அரக்கனான விபீஷணனையும் தம் சகோதரர்களாக ஏற்றவர் ஸ்ரீராமர். ஒரே வில் (பாணம்). ஒரே சொல். ஒரே இல். (மனைவி) என்று வாழ்ந்துகாட்டிய ஸ்ரீராமபிரானின் வழியில் சிந்தித்து சுகம் பெறுவோமே!

புதன், ஆகஸ்ட் 26, 2015

வாதம் - விதண்டாவாதம்; தர்க்கம் - குதர்க்கம்!


செவ்வாய்க் கிழமை. நேற்று காலை திடீரென அழைப்பு... அடியேன் கல்லூரி தமிழ்ப் பேராசிரியர் சுபாஷ் ஐயாவிடம் இருந்து...
என்னப்பா எங்க இருக்க..? நான் சென்னை வந்திருக்கேன். எப்படி இருக்க சொல்லு..! என்றார்.
சார் நான் உங்களப் பாக்க வரேனே.. வீட்டுக்கு என்றேன்.
அதன்படி, நேற்று மாலை நந்தனம் செனடாப் சாலையில் உள்ள அவரது அடுக்கு மாடிக் குடியிருப்புக்கு சென்றேன் நண்பர் ராஜனுடன்!
சிறிது நேரம் கல்லூரி, சற்று நேரம் பேராசிரியர்கள், சற்று நேரம் பேஸ்புக் என்று பேச்சினூடே கல கலவெனச் சென்றது. அது யார் ஶ்ரீராம் உன்னோட நண்பர் பட்டியல்ல இருக்கற ஒருத்தர்... ஶ்ரீரங்கம் கோயில் பத்தி அவ்ளோ அக்குவேறா ஆணிவேறா தைரியமா புட்டு புட்டு வைக்கிறார் என்று கேட்கவும் செய்தார்...
ஊழல் பேர்வழிகளை இனங்காட்டுபவர்கள் எப்போதுமே  அதிகார பலத்தால் அடக்கப்பட்டு விடுகிறார்கள், அல்லது உயிர் எடுக்கப்பட்டு விடுகிறார்கள். பேஸ்புக் போராளிகளையே இனங்கண்டு தூக்கி விடுகிறார்கள் அரசியல்வாதிகள்.
அதுவும் பத்திரிகைத் துறை என்றால் கேட்கவே வேண்டாம். ஊரெல்லாம் ஊழல் என்று வாய்கிழியக் கத்துவார்கள், எழுதுவார்கள்... தங்கள் நிறுவனத்திலோ, தலைமையிடத்திலோ ஊழல் என்றால் வாயையும் வயிற்றையும் பொத்திக் கொண்டு பத்திரிகையாளருக்கே உரிய சுதந்திர உணர்வுடன் வீராவேசம் பொங்கி அமிழ்ந்துவிட... ஒதுங்கிவிடுவார்கள்.
ஆனால், அதையும் மீறி வாட்டர்கேட் ஊழல் உள்ளிட்டவற்றை வெளிப்படுத்தியவர்கள் குறித்தும், அந்தக் கால இண்டியன் எக்ஸ்பிரஸின் தைரியமான அணுகுமுறை குறித்தும் பேச்சு வளர்ந்தது. எல்லாம் வெறும் பேச்சாகவே இனி நீடித்திருக்கப் போகிறது. காரணம்... தமிழ்நாட்டின் ஊடகவியல் உருக்குலைந்து போய் ஆண்டுகள் பலவாயிற்று!
***

அடுத்து, திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் படித்த நாட்களுக்கு நினைவுகள் சென்றன...
கணித வகுப்பு சுவாரஸ்யமானது. நல்ல பேராசிரியர்கள். அவர்களில் ஶ்ரீனிவாசன் என்று ஒருவர். வகுப்பில் என்னை அடிக்கடி முறைத்தபடியே பாடம் எடுப்பார். அதனாலோ என்னவோ... அவர் வகுப்பில் மட்டும் சற்று கூடுதல் கவனம் செலுத்தினேன். கல்லூரியை விட்டு வெளிவந்த சில நாட்கள் கழித்துதான் உறவினர் ஒருவர் மூலம், அவரும் அடியேனுக்கு தூரத்து உறவினர் என்பதை அறிந்தேன்...
ஓரிருவர் சிடுமுகங்கள்தான். ஒரு வேளை கணிதப் பேராசிரியர் என்பதால் அப்படி கடுகடு என்று இருக்கிறார்களோ என்று தோன்றும். ஆனால் அடிப்படையில் நான் கலகல பேர்வழி. கிண்டல் கேலி அதிகம். சிலேடை பாணி நகைச்சுவையும் அதிகம் உண்டு. ஆகவே.. நண்பர் குழாம் எப்போதும் உடன் இருக்கும். சொல்ல வரும் விஷயத்தை நகைச்சுவை உணர்வுடனேயே சுட்டிக் காட்டுவேன். ஆகவே கடு கடு கணிதத்துக்கும் நம் கல கல இயல்புக்கும் ஒத்துவராதோ என்றுகூட சில நேரம் தோன்றும்.
அவர்களில் ஒரு பேராசிரியரை மட்டும் அடியேனால் மறக்க இயலாது. அவர் ஜெயகர் / ஜெயகுமார் என்று நினைவு. கர்ம வீரர் அவர். வகுப்பில் மாணவர்கள் எத்தனை பேர், யார் இருக்கிறார்கள், என்ன செய்கிறார்கள் என்பது பற்றி எல்லாம் கிஞ்சித்தும் கண்டுகொள்ள மாட்டார். அவருக்கு தன் பாடமே முக்கியம்.  வகுப்புக்கு வருவார். கரும்பலகையில் அந்த அந்தப் பகுதி கணக்குகளை எழுதுவார். சொல்லிக் கொண்டே செல்வார். நோட்ஸ் எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறிச் சென்றுவிடுவார். சிரிப்பு, கடுப்பு,  சிடுமுகம், கலகல முகம் எதுவும் கிடையாது. எவ்வித உணர்ச்சியையும் கொட்டாத அமைதிப் பேர்வழி. பல நேரங்களில் ஏதோ சிந்தனையில் ஆழ்ந்தபடி நகர்ந்து செல்வார். பிறர் அழைப்பையோ, சூழலையோகூட கண்டுகொள்ளாத ஒரு விதமான சிந்தனாவாதி...
1990 களில் கணினித் துறையில் பாஸ்கல், கோபால், சி-பிளஸ் என... சில மொழிகள் உலா வந்தன. டேடாபேஸ் என பாக்ஸ்ப்ரோ, டிபேஸ் 3 ப்ளஸ் என இருந்தது. அடியேனுக்கு கணிதப் பாடத்தினூடே, கணினி மொழி ஏதேனும் கற்க விருப்பம் இருந்தது. எனவே சிறப்பு வகுப்பு சென்றேன். யுனிக்ஸ் இன் சி. ஞாயிற்றுக் கிழமை வகுப்பு. ஞாயிறுகளில் கல்லூரி விடுமுறை தினம் என்பதால், பேராசிரியர்கள் வரமாட்டார்கள்...
அத்தகைய ஒரு ஞாயிறு நாளில்...
கட்டிய கைலியுடன் அவரின் ஸ்கூட்டரில் வந்தார் கல்லூரி வளாகத்துக்குள். ஆச்சரியத்துடன் பார்த்தேன்... ஸ்கூட்டரில் பின்னப்பட்ட ஒயர்கூடை இருந்தது. ஆகவே புரிந்து கொண்டேன். ஸ்கூட்டரை நிறுத்தியவரிடம் சென்று.. சார்... என்ன சார்... ஞாயித்துக்கிழமை இந்தப் பக்கம்...? - பவ்யமாகக் கேட்டேன்.
அட.. ம் .. ஒன்றுமில்லை என்று சற்று நேரம் நின்றவர், பிறகு ஸ்கூட்டரை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டார்.  குமரன் நகர் பகுதியில் இருந்து வருபவர். கல்லூரியைக் கடந்து புத்தூர் நால் ரோடு சென்று, சந்தைக்குச் செல்ல வேண்டியவர், வழக்கமான நினைவில் கல்லூரிக்குள் புகுந்துவிட்டார்.
இப்படி மிகச் சில முறை அடியேனுக்கும் நேர்ந்திருக்கிறது. மனத்தில் ஏதோ எண்ணம் ஓடும். கணக்குகளோ, கணக்கீடுகளோ... எதுவோ என்று வைத்துக் கொள்ளுங்கள். குறுக்கீடுகள் அற்ற நிலை என்றால், செயல்கள் தடங்கல் இன்றி செயலின் போக்கில் போய்க் கொண்டிருக்கும். மனத்தின் திட்டமிடல் வேறாக இருக்கும். என்ன இது என்று விழிப்பு வந்த பின் தோன்றும்... மனத்தை வசப்படுத்தாமல், நினைவின் வசத்தில் உடல் இயக்கம் இருப்பது சற்று அபாயகரமானதுதான்!
கணித மேதை செங்கோட்டை சிவசங்கரநாராயணப் பிள்ளை வாழ்வில் இதுபோன்றதொரு சம்பவம் உண்டு. ஒரு முறை அவர் பண்பொழி திருமலைக்கோவில் திருமலைக்குமார சுவாமி சந்நிதியில் பூஜை முடிந்த பிறகும் தன்னை மறந்த நிலையில் ஆலய மணியை அடித்துக் கொண்டே இருந்தாராம். கண்கள் மூடியிருக்க மனத்தில் ஏதோ புதிர். கை மட்டும் மணியின் கயிறை இழுத்து அடித்துக்  கொண்டே இருந்ததாம்!
***

கணித  மேதைகள் பலர் இப்படி இருந்துள்ளனர். பல நேரங்களில் கணக்கு புதிர்களே அவர்களை / அவர்களின் செயல்களைக் கட்டுப் படுத்தியிருக்கின்றன.  தத்துவவாதிகள், சிந்தனாவாதிகள், குதர்க்கவாதிகள் இப்படிப் பலர். கணித தர்க்கங்களையே வாழ்வில் முதன்மை எனக் கையாண்ட சிலர், தர்க்கவாதிகளாகவே இருந்து கொடி நாட்டியுள்ளனர்.
பிரெஞ்ச் கணிதமேதை ஆய்லர் (Euler) விசித்திரப் பேர்வழி. நகைச்சுவை உணர்வு கொண்டவர். அவரின் வாழ்க்கையில் ஒரு சம்பவம்.
ஒரு முறை சென்ட் பீட்டர்ஸ்பர்க் நகருக்கு காத்தரீன் (II) அரசியார் அழைப்பின் பேரில் ஆய்லர் சென்றிருந்தார். அங்கே கணிதத் துறையில் ஆராய்ச்சியும் பணியும் இருந்தது. அதே நேரம், அப்போதைய பிரெஞ்ச் தத்துவ அறிஞரும், கடவுள் மறுப்புக் கொள்கை கொண்டவருமான டெனிஸ் டிடேராட்டும் ஒரு நூலகம் தொடர்பான பணிக்காக அங்கே இருந்தார். அவர் தன் வேலையுடன், அரசியாரின் அவையில் இருந்த பலரை கடவுள் மறுப்புக் கொள்கைத் தத்துவத்தின் பால் இழுத்துக் கொண்டிருந்தார். அவையில் இருந்த இளைஞர்கள் சிலர் அவருடன் ஒத்தூதினர். வயதிற் பெரியோர் மனம் வருந்தி அரசியாரிடம் முறையிட்டனர். அரசிக்கு, அத்தகைய அறிஞரை அவமதிக்கவோ, திருப்பி அனுப்பவோ எண்ணம் எழவில்லை. ஆனால், இந்தச் சிக்கலை எப்படிக் கையாள்வது என்று யோசித்தார்.
அந்நேரம் ஆய்லர் நினைவுக்கு வந்தார். இருவரும் மோதுவதே சரி என்று சொல்லி, ஆய்லரிடம் டிடேரட்டை சமாளிக்குமாறு கோரி ஒதுங்கிக் கொண்டார்.
அவையில் ஒரு நாள்... டிடேராட்டிடம் ஆய்லர் ஒரு தர்க்கத்தை முன்வைத்தார்.
"ஐயா... (a+b^n)/n=x; எனவே கடவுள் இருக்கிறார்; பதில் கூறுங்கள்" என்றார்.
டிடேராட் .. என்ன சொல்வது என்று புரியாமல் விழித்தார். அவருக்கு கடவுள் உண்டு; இல்லை என காரிய காரணங்களைக் கூறி தர்க்கம் செய்து பழக்கம். அதே வகை தத்துவ தர்க்கத்தை இங்கேயும் எதிர்பார்த்தார். ஆனால் இந்தக் கணித வழிமுறை...?
அவரின் திரு திரு விழிப்பும், மௌனமும், அவையில் பலரை வாய்விட்டுச் சிரிக்கச் செய்துவிட்டது.  தன் தோல்வியை ஒப்புக்  கொண்டு, தான் நாடு திரும்புவதாகச் சொல்லி வெளியேறினார் டிடேராட்.
***

உண்மையில் இது ஏ ப்ளஸ் பி ஹோல் ஸ்கொயர் மாதிரியான, ஒரு குப்பை புதிர்தான். இது ஒரு குப்பை என்று புறந்தள்ளியிருக்க டிடேராட்டால் முடியும். ஆனால், ஆய்லர் சொன்னது சரி என்றால், கடவுள் இருக்கிறார் என்பதை அவரே ஒப்புக் கொண்டதாகிவிடும். சப்பை மேட்டரான (a+b^n)/n=x என்பதை,  நம் இஸ்கூல் மாணவர் போல்... a+b^2=2x என்றோ, இன்னும் இடது வலது மாற்றி மாற்றி ஏதோ ஒரு விடையைக் கொண்டு வர ஒரு சப்பை அணுகுமுறையை அவரும் கையாண்டிருக்கலாம். ஆனால், அதற்கான வழிமுறைக்கும் தர்க்கத்துக்கும் தொடர்பில்லாத நகைச்சுவை அணுகுமுறை ஆய்லருடையது. மேலும், இந்த சமன்பாடு பொய் என்றும் நிரூபிக்க இயலாதது. அதற்கான வழிமுறைக்கு தலையைப் பிய்த்துக் கொள்ளத்தான் வேண்டும். கடவுள் பொய் என்பதை நிரூபிப்பதற்காக, பொய்யாகாத ஒரு எளிய புதிரை பொய்யாக்க முடியுமா என்ன..? ஆகவே டிடேராட்...சரி சரி இது போதும் என்று முடிவு செய்து வெளியேறிவிட்டார்.
மேலும் தர்க்கம் செய்யும் இருவரில், இருவரும் புரிந்த மொழியில் தர்க்கம் செய்ய வேண்டும். ஒருவருக்கு ஒன்று தெரிந்து, மற்றவருக்கு அதன் அடிப்படை தெரியாமல் போய்... அப்போது தர்க்கம் நிகழ்ந்தால் அந்த வாதம் விதண்டாவாதத்தில் முடியும்.
***
இப்படித்தான் இன்று பல தர்க்கங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. டி.வி.க்களிலும், சமூக வலைத்தளங்களிலும்!
இவை உண்மையில் தர்க்கங்களே இல்லை... குதர்க்கங்கள்!
உண்மையில் அறிஞர்களாக இருந்தால்... டிடேராட்டைப் போல் சூழ்நிலையைப் பொறுத்து.. அமைதியாக இருப்பார்கள்.
மற்றவர்கள் அவையில் உள்ளோர் போல் கைகொட்டிச் சிரித்துக் கொண்டிருப்பார்கள்! அவ்வளவே!



வெள்ளி, ஆகஸ்ட் 21, 2015

குடும்ப அட்டை : தகவல் அறியும் உரிமை சட்டத்திற்கு விண்ணப்பிக்க வழிமுறைகள்!

குடும்ப அட்டை பெறுவது குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்திற்கு விண்ணப்பிக்க வழிமுறைகள்...

"தகவல் அறியும் சட்டம் 2005 ஒரு பார்வை"
அரசு துறைகள் மற்றும் அரசு சார்ந்தநிறுவனங்களிடம் இருந்து நமக்கு தேவையான விவரங்களை தகவல் பெரும் சட்டத்தின் கீழ்பெறுவது எப்படி? என்கிற கேள்வி பலருக்கும் பதில் தெரியவில்லை. அனைவருக்கும் பயன்அளிக்கும் வகையிலான இந்த சட்டத்தை எந்த வகையில் பயன்படுத்துவது என்பது குறித்த சில கேள்விகளும் பதில்களும் பற்றி பார்போம்.

யார் தகவல் கேட்கலாம்?
எந்த ஒரு இந்திய குடிமகனும் தகவல் பெறலாம்.
யாரிடம் தகவல் பெறலாம்?
அரசு நிறுவனங்கள், அரசு சார்ந்த நிறுவனங்கள், அரசு உதவி பெறும் அமைப்புகள் போன்றவைகளிடம் தகவல் கேட்கலாம்.
தகவல் அளிக்க யாருக்கெல்லாம் விலக்கு?
தகவல் அளிப்பதிலிருந்து ஒரு சில அமைப்புகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஒரு நாட்டின் பாதுகாப்பு, இறையான்மை, ஒருமைப்பாடு, ராணுவம் சார்ந்த தொழில் நுட்பம் போன்ற தகவல்களை தகவல் பெறும் சட்டத்தின் கீழ் அளிக்க தேவையில்லை. நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட தகவல், தனி நபர் மூன்றாம் நபர் தகவல்கள், காவல் புலனாய்வு போன்ற தகவல் தெரிவிக்க வேண்டியதில்லை.
தகவல் அளிப்பவர் யார்?
அனைத்து நரசு துறைகளும் போது தகவல் அலுவலரை நியமித்து அது குறித்த தகவல்களை பொது மக்கள் அறியும் வகையில் வெளியிடவேண்டும்.
கட்டணம் எவ்வளவு?
தகவல் பெற கட்டணம் ரூ.10 இதை ரொக்கமாகவோ, நீதி மன்ற வில்லையகவோ ஒட்டுவதன் மூலமாகவோ, வங்கி வரைவோலை, இந்திய போஸ்டல் ஆர்டர் மூலமாகவோ செலுத்த முடியும். ரயில்வே துறையில் தகவல் பெற ரூ.10ஒவ்வொரு நிமிடத்துக்கு ரூ.5 கட்டணம் செலுத்த வேண்டும்.
கேட்க கூடிய தகவல் அதிக பக்கங்களை கொண்டதாக இருக்கும் பொது தகவல் கேட்பவர் பக்கத்துக்கு ரூ.2 செலுத்த வேண்டியிருக்கும்.
தகவல்களை சி.டி., பிளாப்பி வடிவில் நகல எடுத்தது பெறுவதற்கு ரூ.50 செலுத்த வேண்டியிருக்கும். வறுமை கோட்டிற்குகீழ் இருப்பவர்கள் விண்ணப்பிக்க கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.
குடும்ப அட்டை பெறுவதில் சிக்கலா?
தகவல் அறியும் உரிமைச்சட்டம் மாதிரி கடிதம்
உங்களுக்கு குடும்ப அட்டை பெறுவதில் சிக்கலா? குடும்ப அட்டை வேண்டி விண்ணப்பிக்கும் வழிமுறை தெரியவில்லை? தகவல் பெறும் உரிமைச்சட்டம்2005ன் கீழ் உங்கள் அனைத்து சிக்கலும் தீர்வு காண முடியும். பின்வரும் மாதிரி விண்ணப்பத்தில் உங்களுக்கு தேவையான மாற்றங்களை செய்து பயன்படுத்துங்கள். சந்தேகங்களை கேட்டறியுங்கள்.

தகவல் அறியும் உரிமைச்சட்ட விண்ணப்பம்
(ஒப்புகை அட்டையுடன் கூடிய பதிவு அஞ்சல்)
அனுப்புநர்:
தங்கள் முழு முகவரி
பெறுநர்:
பொது தகவல் அலுவலர் அவர்கள் ,
மாவட்ட வட்ட வழங்கல் அலுவலகம்,
................மாவட்டம்.
வணக்கம்,
பொருள்: தகவல் பெறும் உரிமை சட்டம் 2005ன் கீழ் தகவல் பெறுவது சம்பந்தமாக

1)      புதிய குடும்ப அட்டை வாங்க ஒருவர் எந்த அலுவலகத்தில், யாரை அணுக வேண்டும் என்பதை தெரிவிக்கவும்.
2)      குடும்ப அட்டைக்கு விண்ணபிப்பதற்கான விண்ணப்பத்தை எந்த அலுவலகத்தில், எந்த அலுவலரிடம் பெற வேண்டும்? அதற்க்கு கட்டணம் ஏதேனும் உள்ளதா? இருந்தால் அது எவளவு என்று தெரிவிக்கவும்
3)      குடும்ப அட்டை பெற விண்ணபிக்கும்போது என்னென்ன ஆவணங்களை விண்ணபத்துடன் இணைக்க வேண்டும் என்ற விவரம் தெரிவிக்கவும்.
4)      குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்தால் எத்தனை நாட்களுக்குள் குடும்பத்தை வழங்கப்படும்? அரசு நிர்ணயித்துள்ள நாட்களுக்குள் வழங்கபடவில்லைஎன்றால் அதற்க்கு முழு பொறுப்பு யார் என்ற விவரத்தை தெரிவிக்கவும்.
5)      குடும்ப அட்டை அச்சிடப்பட்ட அலுவலகத்திற்கு வந்திருப்பதை விண்ணப்பதாரருக்கு எவ்வாறு தெரிவிக்க படும் ( எழுத்து மூலமாகவா அல்லது வாய்மொழி மூலமாகவா) என்ற விவரம் தெரிவிக்கவும்.
6)      குடும்ப அட்டை வழங்க தாமதமாக்கும் அரசு அலுவலர்கள் மீது அரசு என்னென்ன நடவடிக்கை எடுக்கும் என்ற விவரம் தெரிவிக்கவும். இது அரசின் எந்த சட்டத்தின் கீழ் வரும் என்ற விவரமும் தெரிவிக்கவும்.
7)      ஒருவர் தனது குடும்ப அட்டையை தொலைத்துவிட்டால் (நகல் ஏதும் இல்லை என்றால்) புதிய குடும்பட்டை பெற எந்த அலுவலகத்தில் எந்த அலுவலகத்தில் விண்ணபிக்க வேண்டும்? அப்படி விண்ணபித்தால் எத்தனை நாட்களுக்குள் புதிய குடும்பட்டை கிடைக்கும். அது பற்றி தகவல் தரவும்.
8)      ஒரு ஆண்(அ) பெண் தன்னுடைய பெயரை குடும்ப அட்டையிலுருந்து நீக்கம் செய்து பெயர் நீக்க சான்று பெற எந்த அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்? இதனோடு என்னென்ன ஆவணங்கள் சமர்பிக்க வேண்டும்?
9)      ஒருவருக்கு நியாய விலை கடையில் பொருள்கள் கிடைக்கவில்லை என்றால் எந்த அலுவலரிடம் புகார் கொடுக்க வேண்டும்? அப்புகார் மீது நடவடிக்கை எடுகாதபட்சதில் மேல் முறையீடு செய்ய வேண்டிய அலுவலர் முகவரி தெரிவிக்கவும்.
10)  எடையில் குறைபாடு, தேவையற்ற பொருள்களை திணித்தல் ஆகிய புகார்களுக்கு யாரை அணுக வேண்டும் என்ற விவரம் தெரிவிக்கவும்.
11)  நுகர்வோர் புகார் கூறியும், எந்த அலுவலரும் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் அந்த குறிப்பிட்ட அலுவலர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியுமா என்ற விவரம் தெரிவிக்கவும். முடியும் என்றால் எந்த பிரிவின்கீழ் வழக்கு தொடர முடியும் என்றும் தெரிவிக்கவும்.
12)  எத்தனை விதமான குடும்ப அட்டைகள் தற்போது தமிழ்நாட்டில் உள்ளன. அவை வருமானத்தின் அடிப்படையில் உள்ளதா அல்லாஹ்டு மக்கள் தொகையின் அடிப்படையில் உள்ளனவா என்ற விவரம் தெரிவிக்கவும்.
நான் மேலே கூறிய தகவல்கள் தங்கள் அலுவலகத்தில் இல்லை எனில் தகவல் தொடர்புடைய அலுவலகத்திற்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுகொள்கின்றேன். இந்த விண்ணப்பத்திற்கான கட்டணமாக 10 ரூபாய் மதிப்புள்ள நீதிமன்ற கட்டண வில்லையை ஒட்டியுள்ளேன். மேலும் தகவலுக்கு பணம் செலுத்த வேண்டியுரிப்பின், எத்தனை பக்கங்கள், அதற்க்கு பணம், எந்த தலைப்பில் செல்லுத்த வேண்டும் என்று தெரிவித்ததால், அதை நான் செலுத்த தயாராக உள்ளேன்.

இவ்வாறு தகவல் அறியும் உரிமை சட்டத்திற்கு விண்ணப்பித்து குடும்ப
அட்டை பெறுவதற்கான தகவலை அறிந்து கொள்ளலாம்...
நன்றி:உழவன்

செவ்வாய், ஜூலை 28, 2015

இதுவும் ஒரு மேலாண்மைப் பாடமே! அது விசுவாசத்தின் பெயர்!



தும்பா  ராக்கெட் ஏவுதளத்தில் விஞ்ஞானிகள் 12 மணி நேரம் முதல் 18 மணி நேரம் வரை ஓயாது உழைத்துக் கொண்டிருப்பார்கள். அந்தத் திட்டத்தில் சுமார் 70 விஞ்ஞானிகள் ஈடுபட்டிருந்தனர்.

தங்கள் வேலைப்பளுவின் காரணத்தாலும், பாஸின் (திட்டத் தலைவரின்) நெருக்குதலாலும் கிட்டத்தட்ட எல்லா விஞ்ஞானிகளுமே மனத்தளவில் வெறுத்துப் போயிருந் தார்கள்.  ஆனாலும் “பாஸின்’ மீது கொண்டிருந்த விசுவாசம் நம்பிக்கையால் யாரும் வேலையை விட்டு வெளியே செல்லவில்லை.

ஒருநாள் காலை ஒரு விஞ்ஞானி, பாஸிடம் வந்து, “”சார்! நம் டவுனில் நடக்கும் கண்காட்சிக்கு மாலை 6 மணிக்கு என் குழந்தைகளை அழைத்துப் போவதாக வாக்குக் கொடுத்திருக்கிறேன். அதனால் இன்று 5.30 க்கு நான் வீட்டிற்குச் செல்ல அனுமதிக்கவும்” என்றார்.

அவரும் “”சரி! நீங்கள் சீக்கிரமே வீட்டுக்குப் போகலாம்” என்று கூறிவிட்டார்.

அந்த விஞ்ஞானி தன் வேலையில் மூழ்கிவிட்டார். ஒரு சிறிய இடைவேளையில் சாப்பிட்டுவிட்டு மீண்டும் பணியில் மூழ்கினார். தன்னை மறந்து வேலையில் இருந்து, தனது அன்றைய பணி நிறைவடையும் சூழ்நிலையில், கடிகாரத்தைப் பார்த்தால்  மணி 8.30. திடீரென, குழந்தைகளுக்கு அவர் கொடுத்த வாக்கு நினைவுக்கு வந்தது. தனது பாஸைப் பார்க்கப் போனால், அவர் இல்லை!

பாஸிடம் அனுமதி வாங்கியிருந்தும் இப்படியாகிவிட்டதே என்று வருத்தம் கொண்டு, குழந்தைகளையும் இப்படி ஏமாற்றிவிட்டோமே என்ற குற்ற உணர்ச்சியோடு வீட்டினுள் நுழைந்தார்.  அவர் மனைவி மட்டும் ஒரு பத்திரிகையைப் படித்துக் கொண்டு கூடத்தில் அமர்ந்திருந்தார். நிசப்தமான அந்த வேளையில் இவர் வாயைத் திறந்து எதுகேட்டாலும் அது பூமராங்காக திருப்பித் தாக்குவது போல் இவருக்குத் தோன்றியது.

இவரைப் பார்த்துவிட்ட மனைவி கேட்டாள்… “”என்ன காப்பி போடட்டுமா? அல்லது இரவு உணவே சாப்பிட்டு விடுகிறீர்களா? பசி எப்படியிருக்கிறது?”

இவர் சொன்னார்… “”காபி போட்டாயானால் எனக்குக் காப்பி கொடு. சரி; குழந்தைகள் எங்கே?”

”உங்களுக்குத் தெரியாதா?” ஆச்சரியமாகக் கேட்டார் அவர் மனைவி. “”உங்கள் மேலாளர் 5.15 க்கு வீட்டுக்கு வந்தார். கண்காட்சிக்குக் குழந்தைகளை அழைத்துச் சென்றாரே!” என்று வியப்புடன் பதிலளித்தார்.

அப்போதுதான் இவர் தன் பாஸிடம் கேட்டது நினைவுக்கு வந்தது. இவர் பாஸின் மனதை அறிந்தவராதலால் நடந்ததை ஒருவாறு யூகித்துக் கொண்டார்.

5 மணி வரை இவர் தன் வேலையில் மிக உன்னிப்பாக இருப்பதைக் கண்ட பாஸ், “இவர் இப்போதைக்கு சீட்டை விட்டு எழுந்திருக்கப் போவதில்லை’ என்று முடிவு செய்து, இவர் வேலையையும் தொந்தரவு செய்யாமல், அதே நேரம் இவர் apj_kalamகுழந்தைகளுக்குக் கொடுத்த வாக்கையும் நிறைவேற்றி குழ்தைகளும் ஏமாற்றமடையாமல் இருக்க, தானே குழந்தைகளைக் கண்காட்சிக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.

அவர் ஒவ்வொரு முறையும் இப்படிச் செய்ததில்லை! ஆனால் ஒரேயொரு முறை இப்படிச் செய்ததால், தன்னுடைய அன்பையும் விசுவாசத்தையும் உறுதிப்படுத்தினார்.

எனவேதான் தும்பாவில் உள்ள அந்த விஞ்ஞானிகள்  பல்வேறு மன உளைச்சல்களுக்கும் இடையில் அந்த பாஸின் தலைமையில் தொடர்ந்து வேலை செய்தனர்.

அந்த “பாஸ்’  நமது முன்னாள் ஜனாதிபதி அ.ப.ஜெ. அப்துல்கலாம் அவர்கள்!
 
Copyright © 2013 செங்கோட்டை ஸ்ரீராம்
Shared by Alahappa Grafix