சுடச்சுட:

ஆலயங்கள்

இலக்கியம்

ஆன்மிகம்

From our Blog

புதன், ஆகஸ்ட் 26, 2015

வாதம் - விதண்டாவாதம்; தர்க்கம் - குதர்க்கம்!


செவ்வாய்க் கிழமை. நேற்று காலை திடீரென அழைப்பு... அடியேன் கல்லூரி தமிழ்ப் பேராசிரியர் சுபாஷ் ஐயாவிடம் இருந்து...
என்னப்பா எங்க இருக்க..? நான் சென்னை வந்திருக்கேன். எப்படி இருக்க சொல்லு..! என்றார்.
சார் நான் உங்களப் பாக்க வரேனே.. வீட்டுக்கு என்றேன்.
அதன்படி, நேற்று மாலை நந்தனம் செனடாப் சாலையில் உள்ள அவரது அடுக்கு மாடிக் குடியிருப்புக்கு சென்றேன் நண்பர் ராஜனுடன்!
சிறிது நேரம் கல்லூரி, சற்று நேரம் பேராசிரியர்கள், சற்று நேரம் பேஸ்புக் என்று பேச்சினூடே கல கலவெனச் சென்றது. அது யார் ஶ்ரீராம் உன்னோட நண்பர் பட்டியல்ல இருக்கற ஒருத்தர்... ஶ்ரீரங்கம் கோயில் பத்தி அவ்ளோ அக்குவேறா ஆணிவேறா தைரியமா புட்டு புட்டு வைக்கிறார் என்று கேட்கவும் செய்தார்...
ஊழல் பேர்வழிகளை இனங்காட்டுபவர்கள் எப்போதுமே  அதிகார பலத்தால் அடக்கப்பட்டு விடுகிறார்கள், அல்லது உயிர் எடுக்கப்பட்டு விடுகிறார்கள். பேஸ்புக் போராளிகளையே இனங்கண்டு தூக்கி விடுகிறார்கள் அரசியல்வாதிகள்.
அதுவும் பத்திரிகைத் துறை என்றால் கேட்கவே வேண்டாம். ஊரெல்லாம் ஊழல் என்று வாய்கிழியக் கத்துவார்கள், எழுதுவார்கள்... தங்கள் நிறுவனத்திலோ, தலைமையிடத்திலோ ஊழல் என்றால் வாயையும் வயிற்றையும் பொத்திக் கொண்டு பத்திரிகையாளருக்கே உரிய சுதந்திர உணர்வுடன் வீராவேசம் பொங்கி அமிழ்ந்துவிட... ஒதுங்கிவிடுவார்கள்.
ஆனால், அதையும் மீறி வாட்டர்கேட் ஊழல் உள்ளிட்டவற்றை வெளிப்படுத்தியவர்கள் குறித்தும், அந்தக் கால இண்டியன் எக்ஸ்பிரஸின் தைரியமான அணுகுமுறை குறித்தும் பேச்சு வளர்ந்தது. எல்லாம் வெறும் பேச்சாகவே இனி நீடித்திருக்கப் போகிறது. காரணம்... தமிழ்நாட்டின் ஊடகவியல் உருக்குலைந்து போய் ஆண்டுகள் பலவாயிற்று!
***

அடுத்து, திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் படித்த நாட்களுக்கு நினைவுகள் சென்றன...
கணித வகுப்பு சுவாரஸ்யமானது. நல்ல பேராசிரியர்கள். அவர்களில் ஶ்ரீனிவாசன் என்று ஒருவர். வகுப்பில் என்னை அடிக்கடி முறைத்தபடியே பாடம் எடுப்பார். அதனாலோ என்னவோ... அவர் வகுப்பில் மட்டும் சற்று கூடுதல் கவனம் செலுத்தினேன். கல்லூரியை விட்டு வெளிவந்த சில நாட்கள் கழித்துதான் உறவினர் ஒருவர் மூலம், அவரும் அடியேனுக்கு தூரத்து உறவினர் என்பதை அறிந்தேன்...
ஓரிருவர் சிடுமுகங்கள்தான். ஒரு வேளை கணிதப் பேராசிரியர் என்பதால் அப்படி கடுகடு என்று இருக்கிறார்களோ என்று தோன்றும். ஆனால் அடிப்படையில் நான் கலகல பேர்வழி. கிண்டல் கேலி அதிகம். சிலேடை பாணி நகைச்சுவையும் அதிகம் உண்டு. ஆகவே.. நண்பர் குழாம் எப்போதும் உடன் இருக்கும். சொல்ல வரும் விஷயத்தை நகைச்சுவை உணர்வுடனேயே சுட்டிக் காட்டுவேன். ஆகவே கடு கடு கணிதத்துக்கும் நம் கல கல இயல்புக்கும் ஒத்துவராதோ என்றுகூட சில நேரம் தோன்றும்.
அவர்களில் ஒரு பேராசிரியரை மட்டும் அடியேனால் மறக்க இயலாது. அவர் ஜெயகர் / ஜெயகுமார் என்று நினைவு. கர்ம வீரர் அவர். வகுப்பில் மாணவர்கள் எத்தனை பேர், யார் இருக்கிறார்கள், என்ன செய்கிறார்கள் என்பது பற்றி எல்லாம் கிஞ்சித்தும் கண்டுகொள்ள மாட்டார். அவருக்கு தன் பாடமே முக்கியம்.  வகுப்புக்கு வருவார். கரும்பலகையில் அந்த அந்தப் பகுதி கணக்குகளை எழுதுவார். சொல்லிக் கொண்டே செல்வார். நோட்ஸ் எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறிச் சென்றுவிடுவார். சிரிப்பு, கடுப்பு,  சிடுமுகம், கலகல முகம் எதுவும் கிடையாது. எவ்வித உணர்ச்சியையும் கொட்டாத அமைதிப் பேர்வழி. பல நேரங்களில் ஏதோ சிந்தனையில் ஆழ்ந்தபடி நகர்ந்து செல்வார். பிறர் அழைப்பையோ, சூழலையோகூட கண்டுகொள்ளாத ஒரு விதமான சிந்தனாவாதி...
1990 களில் கணினித் துறையில் பாஸ்கல், கோபால், சி-பிளஸ் என... சில மொழிகள் உலா வந்தன. டேடாபேஸ் என பாக்ஸ்ப்ரோ, டிபேஸ் 3 ப்ளஸ் என இருந்தது. அடியேனுக்கு கணிதப் பாடத்தினூடே, கணினி மொழி ஏதேனும் கற்க விருப்பம் இருந்தது. எனவே சிறப்பு வகுப்பு சென்றேன். யுனிக்ஸ் இன் சி. ஞாயிற்றுக் கிழமை வகுப்பு. ஞாயிறுகளில் கல்லூரி விடுமுறை தினம் என்பதால், பேராசிரியர்கள் வரமாட்டார்கள்...
அத்தகைய ஒரு ஞாயிறு நாளில்...
கட்டிய கைலியுடன் அவரின் ஸ்கூட்டரில் வந்தார் கல்லூரி வளாகத்துக்குள். ஆச்சரியத்துடன் பார்த்தேன்... ஸ்கூட்டரில் பின்னப்பட்ட ஒயர்கூடை இருந்தது. ஆகவே புரிந்து கொண்டேன். ஸ்கூட்டரை நிறுத்தியவரிடம் சென்று.. சார்... என்ன சார்... ஞாயித்துக்கிழமை இந்தப் பக்கம்...? - பவ்யமாகக் கேட்டேன்.
அட.. ம் .. ஒன்றுமில்லை என்று சற்று நேரம் நின்றவர், பிறகு ஸ்கூட்டரை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டார்.  குமரன் நகர் பகுதியில் இருந்து வருபவர். கல்லூரியைக் கடந்து புத்தூர் நால் ரோடு சென்று, சந்தைக்குச் செல்ல வேண்டியவர், வழக்கமான நினைவில் கல்லூரிக்குள் புகுந்துவிட்டார்.
இப்படி மிகச் சில முறை அடியேனுக்கும் நேர்ந்திருக்கிறது. மனத்தில் ஏதோ எண்ணம் ஓடும். கணக்குகளோ, கணக்கீடுகளோ... எதுவோ என்று வைத்துக் கொள்ளுங்கள். குறுக்கீடுகள் அற்ற நிலை என்றால், செயல்கள் தடங்கல் இன்றி செயலின் போக்கில் போய்க் கொண்டிருக்கும். மனத்தின் திட்டமிடல் வேறாக இருக்கும். என்ன இது என்று விழிப்பு வந்த பின் தோன்றும்... மனத்தை வசப்படுத்தாமல், நினைவின் வசத்தில் உடல் இயக்கம் இருப்பது சற்று அபாயகரமானதுதான்!
கணித மேதை செங்கோட்டை சிவசங்கரநாராயணப் பிள்ளை வாழ்வில் இதுபோன்றதொரு சம்பவம் உண்டு. ஒரு முறை அவர் பண்பொழி திருமலைக்கோவில் திருமலைக்குமார சுவாமி சந்நிதியில் பூஜை முடிந்த பிறகும் தன்னை மறந்த நிலையில் ஆலய மணியை அடித்துக் கொண்டே இருந்தாராம். கண்கள் மூடியிருக்க மனத்தில் ஏதோ புதிர். கை மட்டும் மணியின் கயிறை இழுத்து அடித்துக்  கொண்டே இருந்ததாம்!
***

கணித  மேதைகள் பலர் இப்படி இருந்துள்ளனர். பல நேரங்களில் கணக்கு புதிர்களே அவர்களை / அவர்களின் செயல்களைக் கட்டுப் படுத்தியிருக்கின்றன.  தத்துவவாதிகள், சிந்தனாவாதிகள், குதர்க்கவாதிகள் இப்படிப் பலர். கணித தர்க்கங்களையே வாழ்வில் முதன்மை எனக் கையாண்ட சிலர், தர்க்கவாதிகளாகவே இருந்து கொடி நாட்டியுள்ளனர்.
பிரெஞ்ச் கணிதமேதை ஆய்லர் (Euler) விசித்திரப் பேர்வழி. நகைச்சுவை உணர்வு கொண்டவர். அவரின் வாழ்க்கையில் ஒரு சம்பவம்.
ஒரு முறை சென்ட் பீட்டர்ஸ்பர்க் நகருக்கு காத்தரீன் (II) அரசியார் அழைப்பின் பேரில் ஆய்லர் சென்றிருந்தார். அங்கே கணிதத் துறையில் ஆராய்ச்சியும் பணியும் இருந்தது. அதே நேரம், அப்போதைய பிரெஞ்ச் தத்துவ அறிஞரும், கடவுள் மறுப்புக் கொள்கை கொண்டவருமான டெனிஸ் டிடேராட்டும் ஒரு நூலகம் தொடர்பான பணிக்காக அங்கே இருந்தார். அவர் தன் வேலையுடன், அரசியாரின் அவையில் இருந்த பலரை கடவுள் மறுப்புக் கொள்கைத் தத்துவத்தின் பால் இழுத்துக் கொண்டிருந்தார். அவையில் இருந்த இளைஞர்கள் சிலர் அவருடன் ஒத்தூதினர். வயதிற் பெரியோர் மனம் வருந்தி அரசியாரிடம் முறையிட்டனர். அரசிக்கு, அத்தகைய அறிஞரை அவமதிக்கவோ, திருப்பி அனுப்பவோ எண்ணம் எழவில்லை. ஆனால், இந்தச் சிக்கலை எப்படிக் கையாள்வது என்று யோசித்தார்.
அந்நேரம் ஆய்லர் நினைவுக்கு வந்தார். இருவரும் மோதுவதே சரி என்று சொல்லி, ஆய்லரிடம் டிடேரட்டை சமாளிக்குமாறு கோரி ஒதுங்கிக் கொண்டார்.
அவையில் ஒரு நாள்... டிடேராட்டிடம் ஆய்லர் ஒரு தர்க்கத்தை முன்வைத்தார்.
"ஐயா... (a+b^n)/n=x; எனவே கடவுள் இருக்கிறார்; பதில் கூறுங்கள்" என்றார்.
டிடேராட் .. என்ன சொல்வது என்று புரியாமல் விழித்தார். அவருக்கு கடவுள் உண்டு; இல்லை என காரிய காரணங்களைக் கூறி தர்க்கம் செய்து பழக்கம். அதே வகை தத்துவ தர்க்கத்தை இங்கேயும் எதிர்பார்த்தார். ஆனால் இந்தக் கணித வழிமுறை...?
அவரின் திரு திரு விழிப்பும், மௌனமும், அவையில் பலரை வாய்விட்டுச் சிரிக்கச் செய்துவிட்டது.  தன் தோல்வியை ஒப்புக்  கொண்டு, தான் நாடு திரும்புவதாகச் சொல்லி வெளியேறினார் டிடேராட்.
***

உண்மையில் இது ஏ ப்ளஸ் பி ஹோல் ஸ்கொயர் மாதிரியான, ஒரு குப்பை புதிர்தான். இது ஒரு குப்பை என்று புறந்தள்ளியிருக்க டிடேராட்டால் முடியும். ஆனால், ஆய்லர் சொன்னது சரி என்றால், கடவுள் இருக்கிறார் என்பதை அவரே ஒப்புக் கொண்டதாகிவிடும். சப்பை மேட்டரான (a+b^n)/n=x என்பதை,  நம் இஸ்கூல் மாணவர் போல்... a+b^2=2x என்றோ, இன்னும் இடது வலது மாற்றி மாற்றி ஏதோ ஒரு விடையைக் கொண்டு வர ஒரு சப்பை அணுகுமுறையை அவரும் கையாண்டிருக்கலாம். ஆனால், அதற்கான வழிமுறைக்கும் தர்க்கத்துக்கும் தொடர்பில்லாத நகைச்சுவை அணுகுமுறை ஆய்லருடையது. மேலும், இந்த சமன்பாடு பொய் என்றும் நிரூபிக்க இயலாதது. அதற்கான வழிமுறைக்கு தலையைப் பிய்த்துக் கொள்ளத்தான் வேண்டும். கடவுள் பொய் என்பதை நிரூபிப்பதற்காக, பொய்யாகாத ஒரு எளிய புதிரை பொய்யாக்க முடியுமா என்ன..? ஆகவே டிடேராட்...சரி சரி இது போதும் என்று முடிவு செய்து வெளியேறிவிட்டார்.
மேலும் தர்க்கம் செய்யும் இருவரில், இருவரும் புரிந்த மொழியில் தர்க்கம் செய்ய வேண்டும். ஒருவருக்கு ஒன்று தெரிந்து, மற்றவருக்கு அதன் அடிப்படை தெரியாமல் போய்... அப்போது தர்க்கம் நிகழ்ந்தால் அந்த வாதம் விதண்டாவாதத்தில் முடியும்.
***
இப்படித்தான் இன்று பல தர்க்கங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. டி.வி.க்களிலும், சமூக வலைத்தளங்களிலும்!
இவை உண்மையில் தர்க்கங்களே இல்லை... குதர்க்கங்கள்!
உண்மையில் அறிஞர்களாக இருந்தால்... டிடேராட்டைப் போல் சூழ்நிலையைப் பொறுத்து.. அமைதியாக இருப்பார்கள்.
மற்றவர்கள் அவையில் உள்ளோர் போல் கைகொட்டிச் சிரித்துக் கொண்டிருப்பார்கள்! அவ்வளவே!



வெள்ளி, ஆகஸ்ட் 21, 2015

குடும்ப அட்டை : தகவல் அறியும் உரிமை சட்டத்திற்கு விண்ணப்பிக்க வழிமுறைகள்!

குடும்ப அட்டை பெறுவது குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்திற்கு விண்ணப்பிக்க வழிமுறைகள்...

"தகவல் அறியும் சட்டம் 2005 ஒரு பார்வை"
அரசு துறைகள் மற்றும் அரசு சார்ந்தநிறுவனங்களிடம் இருந்து நமக்கு தேவையான விவரங்களை தகவல் பெரும் சட்டத்தின் கீழ்பெறுவது எப்படி? என்கிற கேள்வி பலருக்கும் பதில் தெரியவில்லை. அனைவருக்கும் பயன்அளிக்கும் வகையிலான இந்த சட்டத்தை எந்த வகையில் பயன்படுத்துவது என்பது குறித்த சில கேள்விகளும் பதில்களும் பற்றி பார்போம்.

யார் தகவல் கேட்கலாம்?
எந்த ஒரு இந்திய குடிமகனும் தகவல் பெறலாம்.
யாரிடம் தகவல் பெறலாம்?
அரசு நிறுவனங்கள், அரசு சார்ந்த நிறுவனங்கள், அரசு உதவி பெறும் அமைப்புகள் போன்றவைகளிடம் தகவல் கேட்கலாம்.
தகவல் அளிக்க யாருக்கெல்லாம் விலக்கு?
தகவல் அளிப்பதிலிருந்து ஒரு சில அமைப்புகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஒரு நாட்டின் பாதுகாப்பு, இறையான்மை, ஒருமைப்பாடு, ராணுவம் சார்ந்த தொழில் நுட்பம் போன்ற தகவல்களை தகவல் பெறும் சட்டத்தின் கீழ் அளிக்க தேவையில்லை. நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட தகவல், தனி நபர் மூன்றாம் நபர் தகவல்கள், காவல் புலனாய்வு போன்ற தகவல் தெரிவிக்க வேண்டியதில்லை.
தகவல் அளிப்பவர் யார்?
அனைத்து நரசு துறைகளும் போது தகவல் அலுவலரை நியமித்து அது குறித்த தகவல்களை பொது மக்கள் அறியும் வகையில் வெளியிடவேண்டும்.
கட்டணம் எவ்வளவு?
தகவல் பெற கட்டணம் ரூ.10 இதை ரொக்கமாகவோ, நீதி மன்ற வில்லையகவோ ஒட்டுவதன் மூலமாகவோ, வங்கி வரைவோலை, இந்திய போஸ்டல் ஆர்டர் மூலமாகவோ செலுத்த முடியும். ரயில்வே துறையில் தகவல் பெற ரூ.10ஒவ்வொரு நிமிடத்துக்கு ரூ.5 கட்டணம் செலுத்த வேண்டும்.
கேட்க கூடிய தகவல் அதிக பக்கங்களை கொண்டதாக இருக்கும் பொது தகவல் கேட்பவர் பக்கத்துக்கு ரூ.2 செலுத்த வேண்டியிருக்கும்.
தகவல்களை சி.டி., பிளாப்பி வடிவில் நகல எடுத்தது பெறுவதற்கு ரூ.50 செலுத்த வேண்டியிருக்கும். வறுமை கோட்டிற்குகீழ் இருப்பவர்கள் விண்ணப்பிக்க கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.
குடும்ப அட்டை பெறுவதில் சிக்கலா?
தகவல் அறியும் உரிமைச்சட்டம் மாதிரி கடிதம்
உங்களுக்கு குடும்ப அட்டை பெறுவதில் சிக்கலா? குடும்ப அட்டை வேண்டி விண்ணப்பிக்கும் வழிமுறை தெரியவில்லை? தகவல் பெறும் உரிமைச்சட்டம்2005ன் கீழ் உங்கள் அனைத்து சிக்கலும் தீர்வு காண முடியும். பின்வரும் மாதிரி விண்ணப்பத்தில் உங்களுக்கு தேவையான மாற்றங்களை செய்து பயன்படுத்துங்கள். சந்தேகங்களை கேட்டறியுங்கள்.

தகவல் அறியும் உரிமைச்சட்ட விண்ணப்பம்
(ஒப்புகை அட்டையுடன் கூடிய பதிவு அஞ்சல்)
அனுப்புநர்:
தங்கள் முழு முகவரி
பெறுநர்:
பொது தகவல் அலுவலர் அவர்கள் ,
மாவட்ட வட்ட வழங்கல் அலுவலகம்,
................மாவட்டம்.
வணக்கம்,
பொருள்: தகவல் பெறும் உரிமை சட்டம் 2005ன் கீழ் தகவல் பெறுவது சம்பந்தமாக

1)      புதிய குடும்ப அட்டை வாங்க ஒருவர் எந்த அலுவலகத்தில், யாரை அணுக வேண்டும் என்பதை தெரிவிக்கவும்.
2)      குடும்ப அட்டைக்கு விண்ணபிப்பதற்கான விண்ணப்பத்தை எந்த அலுவலகத்தில், எந்த அலுவலரிடம் பெற வேண்டும்? அதற்க்கு கட்டணம் ஏதேனும் உள்ளதா? இருந்தால் அது எவளவு என்று தெரிவிக்கவும்
3)      குடும்ப அட்டை பெற விண்ணபிக்கும்போது என்னென்ன ஆவணங்களை விண்ணபத்துடன் இணைக்க வேண்டும் என்ற விவரம் தெரிவிக்கவும்.
4)      குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்தால் எத்தனை நாட்களுக்குள் குடும்பத்தை வழங்கப்படும்? அரசு நிர்ணயித்துள்ள நாட்களுக்குள் வழங்கபடவில்லைஎன்றால் அதற்க்கு முழு பொறுப்பு யார் என்ற விவரத்தை தெரிவிக்கவும்.
5)      குடும்ப அட்டை அச்சிடப்பட்ட அலுவலகத்திற்கு வந்திருப்பதை விண்ணப்பதாரருக்கு எவ்வாறு தெரிவிக்க படும் ( எழுத்து மூலமாகவா அல்லது வாய்மொழி மூலமாகவா) என்ற விவரம் தெரிவிக்கவும்.
6)      குடும்ப அட்டை வழங்க தாமதமாக்கும் அரசு அலுவலர்கள் மீது அரசு என்னென்ன நடவடிக்கை எடுக்கும் என்ற விவரம் தெரிவிக்கவும். இது அரசின் எந்த சட்டத்தின் கீழ் வரும் என்ற விவரமும் தெரிவிக்கவும்.
7)      ஒருவர் தனது குடும்ப அட்டையை தொலைத்துவிட்டால் (நகல் ஏதும் இல்லை என்றால்) புதிய குடும்பட்டை பெற எந்த அலுவலகத்தில் எந்த அலுவலகத்தில் விண்ணபிக்க வேண்டும்? அப்படி விண்ணபித்தால் எத்தனை நாட்களுக்குள் புதிய குடும்பட்டை கிடைக்கும். அது பற்றி தகவல் தரவும்.
8)      ஒரு ஆண்(அ) பெண் தன்னுடைய பெயரை குடும்ப அட்டையிலுருந்து நீக்கம் செய்து பெயர் நீக்க சான்று பெற எந்த அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்? இதனோடு என்னென்ன ஆவணங்கள் சமர்பிக்க வேண்டும்?
9)      ஒருவருக்கு நியாய விலை கடையில் பொருள்கள் கிடைக்கவில்லை என்றால் எந்த அலுவலரிடம் புகார் கொடுக்க வேண்டும்? அப்புகார் மீது நடவடிக்கை எடுகாதபட்சதில் மேல் முறையீடு செய்ய வேண்டிய அலுவலர் முகவரி தெரிவிக்கவும்.
10)  எடையில் குறைபாடு, தேவையற்ற பொருள்களை திணித்தல் ஆகிய புகார்களுக்கு யாரை அணுக வேண்டும் என்ற விவரம் தெரிவிக்கவும்.
11)  நுகர்வோர் புகார் கூறியும், எந்த அலுவலரும் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் அந்த குறிப்பிட்ட அலுவலர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியுமா என்ற விவரம் தெரிவிக்கவும். முடியும் என்றால் எந்த பிரிவின்கீழ் வழக்கு தொடர முடியும் என்றும் தெரிவிக்கவும்.
12)  எத்தனை விதமான குடும்ப அட்டைகள் தற்போது தமிழ்நாட்டில் உள்ளன. அவை வருமானத்தின் அடிப்படையில் உள்ளதா அல்லாஹ்டு மக்கள் தொகையின் அடிப்படையில் உள்ளனவா என்ற விவரம் தெரிவிக்கவும்.
நான் மேலே கூறிய தகவல்கள் தங்கள் அலுவலகத்தில் இல்லை எனில் தகவல் தொடர்புடைய அலுவலகத்திற்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுகொள்கின்றேன். இந்த விண்ணப்பத்திற்கான கட்டணமாக 10 ரூபாய் மதிப்புள்ள நீதிமன்ற கட்டண வில்லையை ஒட்டியுள்ளேன். மேலும் தகவலுக்கு பணம் செலுத்த வேண்டியுரிப்பின், எத்தனை பக்கங்கள், அதற்க்கு பணம், எந்த தலைப்பில் செல்லுத்த வேண்டும் என்று தெரிவித்ததால், அதை நான் செலுத்த தயாராக உள்ளேன்.

இவ்வாறு தகவல் அறியும் உரிமை சட்டத்திற்கு விண்ணப்பித்து குடும்ப
அட்டை பெறுவதற்கான தகவலை அறிந்து கொள்ளலாம்...
நன்றி:உழவன்

செவ்வாய், ஜூலை 28, 2015

இதுவும் ஒரு மேலாண்மைப் பாடமே! அது விசுவாசத்தின் பெயர்!



தும்பா  ராக்கெட் ஏவுதளத்தில் விஞ்ஞானிகள் 12 மணி நேரம் முதல் 18 மணி நேரம் வரை ஓயாது உழைத்துக் கொண்டிருப்பார்கள். அந்தத் திட்டத்தில் சுமார் 70 விஞ்ஞானிகள் ஈடுபட்டிருந்தனர்.

தங்கள் வேலைப்பளுவின் காரணத்தாலும், பாஸின் (திட்டத் தலைவரின்) நெருக்குதலாலும் கிட்டத்தட்ட எல்லா விஞ்ஞானிகளுமே மனத்தளவில் வெறுத்துப் போயிருந் தார்கள்.  ஆனாலும் “பாஸின்’ மீது கொண்டிருந்த விசுவாசம் நம்பிக்கையால் யாரும் வேலையை விட்டு வெளியே செல்லவில்லை.

ஒருநாள் காலை ஒரு விஞ்ஞானி, பாஸிடம் வந்து, “”சார்! நம் டவுனில் நடக்கும் கண்காட்சிக்கு மாலை 6 மணிக்கு என் குழந்தைகளை அழைத்துப் போவதாக வாக்குக் கொடுத்திருக்கிறேன். அதனால் இன்று 5.30 க்கு நான் வீட்டிற்குச் செல்ல அனுமதிக்கவும்” என்றார்.

அவரும் “”சரி! நீங்கள் சீக்கிரமே வீட்டுக்குப் போகலாம்” என்று கூறிவிட்டார்.

அந்த விஞ்ஞானி தன் வேலையில் மூழ்கிவிட்டார். ஒரு சிறிய இடைவேளையில் சாப்பிட்டுவிட்டு மீண்டும் பணியில் மூழ்கினார். தன்னை மறந்து வேலையில் இருந்து, தனது அன்றைய பணி நிறைவடையும் சூழ்நிலையில், கடிகாரத்தைப் பார்த்தால்  மணி 8.30. திடீரென, குழந்தைகளுக்கு அவர் கொடுத்த வாக்கு நினைவுக்கு வந்தது. தனது பாஸைப் பார்க்கப் போனால், அவர் இல்லை!

பாஸிடம் அனுமதி வாங்கியிருந்தும் இப்படியாகிவிட்டதே என்று வருத்தம் கொண்டு, குழந்தைகளையும் இப்படி ஏமாற்றிவிட்டோமே என்ற குற்ற உணர்ச்சியோடு வீட்டினுள் நுழைந்தார்.  அவர் மனைவி மட்டும் ஒரு பத்திரிகையைப் படித்துக் கொண்டு கூடத்தில் அமர்ந்திருந்தார். நிசப்தமான அந்த வேளையில் இவர் வாயைத் திறந்து எதுகேட்டாலும் அது பூமராங்காக திருப்பித் தாக்குவது போல் இவருக்குத் தோன்றியது.

இவரைப் பார்த்துவிட்ட மனைவி கேட்டாள்… “”என்ன காப்பி போடட்டுமா? அல்லது இரவு உணவே சாப்பிட்டு விடுகிறீர்களா? பசி எப்படியிருக்கிறது?”

இவர் சொன்னார்… “”காபி போட்டாயானால் எனக்குக் காப்பி கொடு. சரி; குழந்தைகள் எங்கே?”

”உங்களுக்குத் தெரியாதா?” ஆச்சரியமாகக் கேட்டார் அவர் மனைவி. “”உங்கள் மேலாளர் 5.15 க்கு வீட்டுக்கு வந்தார். கண்காட்சிக்குக் குழந்தைகளை அழைத்துச் சென்றாரே!” என்று வியப்புடன் பதிலளித்தார்.

அப்போதுதான் இவர் தன் பாஸிடம் கேட்டது நினைவுக்கு வந்தது. இவர் பாஸின் மனதை அறிந்தவராதலால் நடந்ததை ஒருவாறு யூகித்துக் கொண்டார்.

5 மணி வரை இவர் தன் வேலையில் மிக உன்னிப்பாக இருப்பதைக் கண்ட பாஸ், “இவர் இப்போதைக்கு சீட்டை விட்டு எழுந்திருக்கப் போவதில்லை’ என்று முடிவு செய்து, இவர் வேலையையும் தொந்தரவு செய்யாமல், அதே நேரம் இவர் apj_kalamகுழந்தைகளுக்குக் கொடுத்த வாக்கையும் நிறைவேற்றி குழ்தைகளும் ஏமாற்றமடையாமல் இருக்க, தானே குழந்தைகளைக் கண்காட்சிக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்.

அவர் ஒவ்வொரு முறையும் இப்படிச் செய்ததில்லை! ஆனால் ஒரேயொரு முறை இப்படிச் செய்ததால், தன்னுடைய அன்பையும் விசுவாசத்தையும் உறுதிப்படுத்தினார்.

எனவேதான் தும்பாவில் உள்ள அந்த விஞ்ஞானிகள்  பல்வேறு மன உளைச்சல்களுக்கும் இடையில் அந்த பாஸின் தலைமையில் தொடர்ந்து வேலை செய்தனர்.

அந்த “பாஸ்’  நமது முன்னாள் ஜனாதிபதி அ.ப.ஜெ. அப்துல்கலாம் அவர்கள்!

திங்கள், ஜூன் 08, 2015

வடக்கும் தெற்கும்: தேய்ந்தது எதுவோ?


ஆயிரம்தான் சால்ஜாப்பு சொன்னாலும்.... தமிழன் தமிழன் என்று பீற்றிக் கொண்டாலும்....

தமிழ்நாட்டில் உள்ள வியாபாரிகள்/ மக்களைப் போல் பேராசைக்காரர்களை இந்தியாவில் வேறெங்கும் பார்க்க முடியாது. மிகக் குறுகிய காலத்தில் அதிக லாபம் பார்த்துவிட பேராசை கொண்டிருக்கிறார்கள்.

இவர்களில்... தமிழ்நாட்டு ஆட்டோக்காரர்களைப் போல், குறிப்பாக சென்னை ஆட்டோக்காரர்களைப் போல் உச்சபட்ச தொகைக்கு பேசுபவர்களை இந்தியாவில் வேறெங்கும் காண முடியாது. வாடிக்கையாளர்களை வாடிக்கையான ஏ.டி.எம்.மைப் போல் கருதும் கேவலம் இங்கே!

வில்லிவாக்கத்தில் இருந்து ஆட்டோவில் எழும்பூருக்குச் சென்றேன். வழக்கமாக ரூ.150 தான் என்று பேசியும், வீட்டு வாசலில் இருந்து ஏறியதால் ரூ.200ல் தொடங்கி, ரூ.180 பேரத்துக்கு வந்தார். கிளம்பும்போதே ஒப்புக்கு மீட்டரையும் போட்டுக் கொண்டார். கிளம்பும்போது சற்றே மழை பெய்தது. எழும்பூரில் நின்றபோது, மீட்டரில் ரூ.98.80ல் காட்டியது. எழும்பூரில் நின்றபோது, பின்னால் ஒரு கால்டாக்சி ஹார்ன் இருக்கிறது என்பதைக் காட்டிக் கொண்டிருந்தார். வேகவேகமாக இறங்க வேண்டிய நிலை. ஆட்டோவில் இருந்த ஒரு பையை கர்மசிரத்தையாக கீழே இறக்கி வைத்தார். ரூ.180 கொடுத்தேன். சார் நல்ல மழை. இப்படி பையை எல்லாம் வண்டியில் இருந்து யாரும் இறக்கி வைக்க மாட்டார்கள். இன்னும் ரூ. 20 கொடுங்க.. என்று மல்லுக்கு நின்றார். இன்னும் ரூ. 10ஆவது கொடுங்க என்றார். நானோ, மீட்டரை ஒரு எட்டு எட்டிப் பார்த்துவிட்டு... யப்பா... ரூ.180 கொடுத்திருக்கேன் சரியா இருக்கா பாரு.. என்று சொல்லிவிட்டு நகர்ந்தேன்.  இது போல் பல அனுபவம் இங்கே உண்டு.

இப்படி ஒரு நிலையை நான் வடக்கே பார்க்கவில்லை. அண்மையில் உத்தராகண்ட் மாநிலத்தில் அமைந்த யமுனோத்ரி, கங்கோத்ரி, கேதார், பத்ரி ஆகிய சார்தாம் யாத்திரை, ஐந்து பிரயாகைகள், உத்தரகாசி, ரிஷிகேஷ், ஹரித்வார், நைமிசாரண்யம், காசி, கயா, புவனேஸ்வர், புரி என ஒரு நீண்ட 18 நாள் ஆன்மிக யாத்திரையை நண்பர்கள் குழுவுடன் மேற்கொண்டிருந்தேன்.

அன்று...  குழுவாக வெளியில் கிளம்பினோம். காசியில்!

கால பைரவரை தரிசித்து, காசி நாயகர் விஸ்வநாதரையும் தரிசித்து இரவு 9 மணி அளவில் அங்கிருந்து சங்கர மடம் இருந்த ஹனுமன் காட்-க்கு ஆட்டோ பேசினோம். ஒருவர் ரூ.150 என்றார். ஒருவர் இதில் 6 பேர் ஏறலாம். தலைக்கு ரூ. 20. ஆனால் நீங்கள் 6 பேர் வரவேண்டும். 5 பேர் ஏறினாலும், என்னால் ரூ.100  பெற முடியாது. 6 பேருக்கு உண்டான ரூ.120ஐத்தான் தரவேண்டும் என்றார்.
என்ன கணக்கோ... ஆனால், அவரின் இந்த டீல் பிடித்திருந்தது. 16 பேர் இருந்தோம். 3 ஆட்டோக்களில் சென்றோம். ஹனுமன் காட் என்று கேட்டு ஏறினாலும், ஓரிரு சந்து பொந்து கடந்து சங்கர மட வாசலில் இறங்கினோம். இந்த முட்டுச் சந்து, முடுக்குக்கெல்லாம் கொண்டு வந்து விட்டிருக்கிறேன். மேல அஞ்சு பத்து போட்டுக் கொடுங்கண்ணு ... ம்..ஹும். வாயே திறக்கவில்லை. கொடுத்த ரூ.120 ஐ வாங்கிக் கொண்டு மறு பேச்சில்லாமல் திரும்பிப் போனார்கள்.. மூவரும்!

அடுத்து....
சங்கடமோசன ஹனுமான் கோயில் செல்ல ஸ்டாண்ட்களில் இருந்த இரண்டு ஆட்டோக்களில் ஏறினோம். சங்கடமோசன் ஆலயம் சென்றுவிட்டு... ஆட்டோக்காரர் தானே சொல்லி சோழியம்மன் கோயிலுக்குச் சென்று இறக்கி விட்டு, நாங்கள் கும்பிட்டு வரும்வரை சில நிமிடங்கள் காத்திருந்து, பின்னர் எங்களை மீண்டும் சங்கர மடத்தின் வாசலில் இறக்கி விட்டார். பேசிய தொகைக்கு மேலும் கேட்பாரோ என்று நான் எதிர்பார்க்க... இந்தக் கோவில் அங்கிருந்து வரும் வழிதான். மேற்கொண்டு நீங்கள் எதுவும் தரவேண்டாம் என்று பேசிய தொகையை மட்டுமே பெற்றுக் கொண்டார்கள்.

கயாவில்...
எல்லோரும் கோயிலுக்குச் சென்று விட்டு வந்தோம். எனக்கு சற்றே காய்ச்சல் கண்டிருந்ததால்.... அறையில் நான் ஓய்வெடுத்தேன். மதியம் கர்மா செய்பவர்கள் அட்சய வடம் சென்றுவிட்டு சாப்பிட வந்துவிட்டார்கள். பிறகுதான் எனக்கு தெரிந்தது எல்லோரும் அட்சய வடம் சென்று வந்துவிட்டார்கள் என.

எனக்கோ அதனைப் பார்க்காமல் ஊருக்கு செல்லக் கூடாதென எண்ணம். சீதையின் சாபம் பெற்ற பல்குனி ஆற்றைப் பார்த்தோம். சாபம் பெற்ற பண்டிதர்கள்/பிராமணர்களைப் பார்த்தோம். ஆனால், சீதையின் ஆசியைப் பெற்ற அட்சய வடத்தைப் பார்க்காமல் போவதாவது... என்று கூறினேன். நண்பன் கௌதம் உடனே, சங்கர மடத்தில் இருந்த ஒருவரிடம் சொல்லி வாசலில் நின்ற ஆட்டோவில் என்னை மட்டும் தனியாக ஏற்றி விட்டார். ஆட்டோக்காரர் அட்சயவட இடத்துக்கு அழைத்துச் சென்று, படிகளில் ஏறி வழிகாட்டி, சில நிமிடங்கள் காத்திருந்து, என்னை மீண்டும் மடத்தில் இறக்கி விட்டார். மடத்தில் எவ்வளவு கொடுக்கச் சொன்னார்கள் என்று ஆட்டோக்காரர் கேட்டார். எண்பது என்றேன். நான் கொடுத்த ரூ.100ஐப் பெற்றுக் கொண்டு மறு பேச்சில்லாமல் ரூ.20 ஐ திருப்பிக் கொடுத்தார்.

இதே போன்ற ஆட்டோ அனுபவம் இலாஹாபாத் என்ற பிரயாகையிலும் அமைந்தது. எந்த இடத்திலும் நம்மூர்க்காரர்கள் போன்ற அடாவடித்தனத்தை அவர்கள் வெளிப்படுத்தவில்லை.  ஆனால்.... தமிழ் தெரியாத வடநாட்டுக் காரர்கள் இங்கே ஆட்டோக்காரர்களிடம் தனியாக மாட்டிக் கொண்டால்... அவ்வளவுதான்!

இப்படி ஆட்டோ என்று மட்டும் இல்லை... பூ விற்பவராகட்டும், பிஸ்கட் விற்பவராகட்டும், கடை வைத்து டீ, காபி தருபவராகட்டும்... எல்லாவற்றிலும் சொல்லி வைத்தாற் போன்ற வணிக நேர்மை அவர்களிடம் இருந்ததைக் கண்டு என் கண்களில் பெருமித உணர்வு ~ ஆனந்தக் கண்ணீர்.

ரிஷிகேஷில்... திரிவேணி சங்கமப் பகுதிக்கு அருகே படித்துறையில் சில பெண்கள் ஒரு தொன்னையில் பூக்களை வைத்து, கங்கா மாதாவுக்கு ஆரத்தி செய்யுங்கள் என்று வரிசையாக அடுக்கி வைத்து விற்றுக் கொண்டிருந்தார். (இந்தச் சிறு கட்டுரைக்காக இடப்பட்டிருக்கும் படத்தில் - பூ விற்றுக் கொண்டிருப்பவர்). நம் ஊர்களில் கோயில்களுக்கு அருகே பிரசாத ஸ்டால், பூ, தேங்காய், ஊதுபத்தி விற்பவர்களைப் பார்த்து விட்ட எண்ணத்தில், அனேகமாக இது ரூ.20 இருக்கலாம் என்ற கணிப்பில், ஒரு பெண்மணியிடம் எவ்வளவு என்று கேட்டோம்.  ஐந்து ரூபாய் என்று அவர் சொன்னதைக் கேட்டு, ஆச்சரியப் பட்டோம். அப்படியே வந்திருந்த எல்லாரும் ஆரத்தி செய்யட்டும் என்ற எண்ணத்தில் 30 எண்ணம் வாங்கி, பூஜித்து கங்கையில் விட்டோம். இத்தனைக்கும் அந்த தொன்னையில் பூக்கள், சிறு பட்டி, நெய், திரி, ஒரு கற்பூரம், சாம்பிராணித் துண்டு எல்லாம் இருந்தது. உண்மையில், நம் ஊர்க்கார வியாபாரியாக இருந்திருந்தால், ரூ.25க்குக் குறையாமல் அதை தலையில் கட்டியிருப்பார்.

இதே போன்ற வணிக நேர்மையை ஹரித்வாரிலும், பத்ரியிலும், கங்கோத்ரியிலும் கண்டு வியந்தேன்.

இன்று காலை. குற்றாலம் பராசக்தி பள்ளியில் மருமான் அரவிந்தனைச் சேர்த்துவிட்டு... தாகத்தால் அருகில் இருந்த கடையில் என் ஃபேவரிட் சுதேசி பானம் பவன்டோ இருக்கிறதா என்று கேட்டேன்.  பாட்டிலில் இல்லை என்று சொல்லி, ஆப்பிள் பானம் appy fizz எடுத்துக் கொடுத்தார். அதன் விலை ரூ.15. இவர் கேட்டதோ ரூ.18. அதற்கான காரணம்... பிரிட்ஜில் வைத்து கூலாக தருவதாலாம்.

இன்னும் எத்தனை பஸ்-ஸ்டான்ட்களில் எம்.ஆர்.பி.யை காட்டிலும் ரூ.2 முதல் கூடுதலாக பிஸ்கட், குளிர்பானங்கள் உள்ளிட்ட இத்யாதிகள் இங்கே விற்கப் படுகின்றன. கேட்டால்... நகராட்சிக்கு கொடுக்கவேண்டும், வரி கட்ட வேண்டும், மாமூல் கொடுக்க வேண்டும். இன்னும் என்னவெல்லாம் சொல்லலாம் என புதிது புதிதாக கண்டுபிடித்தபடி இருப்பார்கள்....

ஆனால்...
இதே appy fizz நான் வாங்கிய உத்தரகாசி, தேவபிரயாகை, ருத்ரபிரயாகை, ஹரித்வார், யமுனோத்ரி, மானா கிராமம், குப்தகாசி, ரிஷிகேஷ் என எல்லா இடங்களிலும் ரூ.15க்கே கொடுத்தார்கள். எங்கேயும் இதனை ஏ டண்டா ஹை என்று சொல்லி கூடுதல் காசு கேட்க யாரும் முயலவில்லை. 5 ரூபாய் பார்லி ஜி பிஸ்கட்டை அதே 5 ரூபாய்க்கே கொடுத்தார்கள். நிம்பு பானி - எலுமிச்சை நீர் சர்பத் ரூ.10க்கே கொடுத்தார்கள். டீ ரூ.10 தான். கரும்புச் சாறு ரூ.10ம் ரூ.15ம்தான். சுட்டுத் தந்த மக்காச் சோளம் பத்து ரூபாய்தான்... அதுவும் யமுனோத்ரி கங்கோத்ரி போகும் வழியிலும் நடைபாதையிலும்! இத்தனைக்கும் அவர்கள் இவற்றை எல்லாம் கழுதையில் பொதியாகச் சுமந்து கொண்டு வரவேண்டும். வண்டி வசதி ஏதும் கிடையாது. இல்லாவிடில் தங்கள் முதுகிலோ, டோலி சுமப்பவர் மூலமோதான் இவற்றை அவர்கள் மலை உச்சிக்குக் கொண்டு சென்றாக வேண்டும். அவ்வளவு சிரமப் பட்டாலும், அவற்றில் அதிக லாபத்தைப் பார்க்க அவர்கள் முயலவில்லை. இந்த சுற்றுலா பயண சீசனும்கூட, 6 மாதம்தான். அடுத்த 6 மாதம் அவர்கள் குளிரில் நடுங்கியபடி வீட்டில் முடங்கிக் கிடந்தாக வேண்டும். இந்த 6 மாசம் சம்பாதிப்பதே, அடுத்த 6 மாதங்களுக்கு வீட்டில் அடுப்பு எரிக்க ... பயன்பட்டாக வேண்டும்.

யோசித்த போது, அவர்களின் நேர்மை நம் மனத்தில் தைத்தது என்பதை விட, எங்கிருந்தெல்லாமோ இந்த இடத்துக்கு வரும் யாத்ரீகர்களுக்கு உதவும் விதமாகவே அவர்கள் தங்கள் வாழ்க்கையைத் தியாகம் செய்வது தெரிந்தது. மானா கிராமத்தை ஒட்டி ஓர் இடத்தில், சரஸ்வதி நதி கோயிலுக்கு வழி கேட்டபோது, ஒரு மூதாட்டி... சொன்னார்... உங்களுக்கு வழி சொல்வதற்காகவே நாங்கள் இங்கே இருக்கிறோம். இது எங்கள் பாக்கியம். எங்கள் கிராமத்துக்கு வந்ததற்கு நன்றி... என்று பொக்கை வாய் திறந்து பல்லும் சொல்லும் போன ஹிந்தியில் அவர் சொன்ன அந்த விதம்.... உண்மையில் அந்த சரஸ்வதி அப்போது என் கண்களில்தான் பிரவாகமெடுத்திருந்தாள்.

புவனேஸ்வர் கடந்து பூரியில்... கோயில் எப்போது திறக்கும். தேரோட்டமாயிற்றே. ஸ்வாமி புறப்பாடு எப்போது...? என்றெல்லாம் நம் உணர்வில் சிலரிடம் விசாரிக்க....

மகாபிரபு 7 மணிக்கு எழுந்திருப்பார். மகாபிரபு 7.30க்கு ஸ்நானம் செய்வார். மகாபிரபு 8 மணிக்கு மண்டபம் வருவார்...நீங்கள் டிக்கெட் வாங்கவில்லை எனில் மகாபிரபுவைப் பார்க்க முடியாது.....

யார் அந்த மகாபிரபு...? நம் மனத்தில் தோன்றும் கேள்விக்கான விடை... யாரை நாம் புறப்பாடு கண்டருள்வார் என்றும், கோயில் என்றும் நம்மை விட்டு அன்னியராய் அது ஏதோ ஒன்று என்ற ரீதியில் அன்னியப் படுத்திக் கொண்டிருக்கிறோமோ.... அந்த ஜகந்நாதரைத்தான்!
ஜகந்நாதர் அவர்களுக்கு மகாபிரபு. எஜமானன். அவரே எல்லாவற்றையும் செய்கிறார். நாம் எதையும் செய்விக்கவில்லை.

இந்த உணர்வு தான்.... ஸ்ரீவல்லபாசார்யர் அருளிய புஷ்டி மார்க்கத்தின் வேர். இந்த அடிப்படை உணர்வுதான் அவர்களை ஆட்டிப் படைக்கிறது.
இந்த உணர்வு எல்லாம் பக்தர்களிடமும் வணிகர்களிடமும் கண்டேனே ஒழிய, அங்கிருந்த பண்டாக்களிடமோ, பண்டிட்களிடமோ, பிராமணர்களிடமோ.... ம்ஹும். காணவில்லை.

நேர்மையற்ற தன்மை அங்கிருந்த வேத பண்டிட்களிடம் இருந்தது. சில இடங்களில் இந்த பண்டிட்கள் என்ன தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்று சோதிக்கும்படியாய்... சூக்தாதிகளும், ருத்ர சமகங்களும் சொல்லி அவர்களின் அடிப்படையை ஒரு பார்வை பார்க்கும்படியாய் ஆனது.  அள்ளிக் கொடுத்தாலும் தகுதி அறிந்து கொடுக்க வேண்டும் என்ற எண்ணம்தான்.  சொல்லி வைத்தாற்போல், யமுனோத்ரியிலும், பத்ரியிலும், கங்கோத்ரியிலும், கயாவிலும், புவனேஸ்வர் லிங்கராஜா கோயிலிலும்..... அடடா!

வந்ததும் கையில் பூவைக் கொடுத்து, சங்கல்பம் சொல்லி, பேரைச் சொல்லுங்க என்று கூறி.... ஒரு கட்டத்தில் நிறுத்தி.... ம் இப்போது சொல்லுங்க... எவ்வளவு பணம்...? குறைந்தது 551 என்று கூறி....  புவனேஸ்வர் லிங்கராஜா கோயிலில் அந்த பண்டாக்கள் கேட்கும்போது....

காசி விஸ்வநாதர் கோயிலில், மாலை நேர சப்த ரிஷி பூஜை ஆகிக் கொண்டிருக்க.... கிடைக்கும் சிறிய இடைவெளியில் ஜஸ்ட் ஒரு நிமிசம் எட்டிப் பார்த்து சுவாமியை தரிசிக்க.... ஆளுக்கு தலா ரூ. நூறு பேரம் பேசிய ஒரு புரோகிதர்...

கலர் கலராக கயிறு வைத்துக் கொண்டு, ஏதோ மந்திரம் முணுமுணுத்து, கையில் கட்டி விட்டு, ரூ.10 போடுங்க என்று சொல்லும் சில புரோகிதர்கள்....  (நைமிசாரண்யத்தில் இந்தப் போக்கில் இருந்து மாறுபட்ட புஜாரிகளைப் பார்த்து சந்தோஷப் பட்டோம் என்றாலும்.... ) - தினுசு தினுசாகப் பார்த்தாயிற்று!

இப்போது...
எனக்கு இதன் சூட்சுமம் நன்றாகப் புரிந்தது. வெகுஜனங்களிடமும், அங்குள்ள வர்த்தகர்களிடமும் இருக்கும் அந்த உணர்வு.... இழையோடிய ஆன்மிக உணர்வு. கங்கா மையா கீ .. ஜெய் என்று கோஷம் எழுப்பும்போதும், ஜெய் பத்ரி விஷால் கீ, யமுனா மையா கீ, போலோ கேதார் பகவான் கீ... எனும் போதும்,  அவர்கள் எவருமே வியாபாரத்தை வெறும் வியாபாரமாகச் செய்யவில்லை. உள்ளுள் கரைந்த ஆன்மிக உணர்வுடன், அதே ஆன்மிக உணர்வில் யாத்திரை வரும் சக ஆன்மிகருக்கு உதவி புரியும் விதமாய் நடந்து கொள்கிறார்கள்.
இந்த ஆன்ம உணர்வுதான் அடுத்த 6 மாசத்துக்கு என்ன செய்யப் போகிறோம் என்ற கவலையைக் கூட அவர்களிடம் இருந்து அகற்றி விடுகிறது.

கொள்ளை லாபம் பார்க்கும் லாட்ஜ்-களை நாங்கள் பார்க்கவில்லை. பஸ்ஸில் பயணித்துக் கொண்டே இருக்கிறோம். மலைப் பாதை. இரவு 8 மணி. மேற் கொண்டு மலைப் பாதையில் போவது பாதுகாப்பற்றது என்று ஓட்டுநர் உணர்கிற போது,  ஓர் இடத்தில் நிறுத்துகிறார். அங்கிருக்கும் தங்கும் விடுதியில் அறைகளை வாடகைக்கு எடுக்கிறோம். நம் ஊர்களை யோசித்துப் பார்க்கும் போது, வாடகை வெகு சொற்பம். ஒரு படுக்கைக்கு ரூ.125. அல்லது சில இடங்களில் ரூ.150 என்று வருமாறு.... வாடகை. 4 பெட் போட்ட அறையில் ரூ. 600 வாடகைக்கு இரவு தங்கிக் கொள்ளலாம். கட்டில், மெத்தை, குளிருக்கு இதமாய் கம்பளி, கனத்த போர்வை... தேவைப்பட்டால் வென்னீர்.... இத்யாதிகள்.
உண்மையில் மலைப்பாகத்தான் உள்ளது.

உ.பி., பிகாரில் சாதாரண மனிதர்களின் கதை வேறென்றாலும், அவர்கள் அடாவடி செய்பவர்கள், ரயில்களில் அவர்களின் நடத்தை வேறு மாதிரி என்றாலும், ஆன்மிக உணர்வைப் பொறுத்தவரை நேர்மையாகவே இருக்கிறார்கள்.

இப்போது தமிழகத்தை யோசித்துப் பார்க்கிறேன்.

ஆன்மிகம் தழைத்த பூமி இதுவே. என்னதான் ராமனும் கிருஷ்ணனும் வடக்கே அயோத்யாவும் மதுராவும் என்று கொண்டிருந்தாலும், இந்தியா முழுவதும் வியாபித்திருக்கும் அத்வைதமும், விசிஷ்டாத்வைதமும் த்வைதமும் தோன்றியது தெற்கேதான். சங்கரரும் ராமானுஜரும் தமிழ் மண்ணில் தோன்றியவர்கள். அவர்களின் உபதேசங்களே பாரத தேசத்தை முழுதாக ஆண்டு கொண்டிருக்கிறது. ஆழ்வார்களின் பாசுரங்கள் வடக்கே நைமிசாரண்யம், பிரயாகை உள்ளிட்ட வடநாட்டு திவ்ய தேசங்களில் ஹிந்தியில் எழுதப்பட்டு, தமிழ் உச்சரிப்புடன் பாடப்படுகிறது. அதன் அர்த்தங்களை கோயில்களில் எழுதிப் போட்டிருக்கிறார்கள். அப்படியாக தமிழும் தமிழனும் பாரதத்தின் ஆன்மிக வேரைக் கொண்டிருக்கும் போது.... தமிழகம் எப்படி இருந்திருக்க வேண்டும்..???

மூவேந்தர்கள் கோலோச்சிய தமிழகம். அன்ன சத்திரம் ஆயிரம் நாட்டல்.... என்று ஆன்மிகப் பயணத்தை ஊக்குவித்து, வசதிகள் செய்து கொடுத்த மன்னர்கள். ஏன்... பல்லவனும் சாளுக்கியனும்கூட அன்ன சத்திரத்தையும், ஆலயங்களையும் போஷித்தார்கள். யாத்ரீகருக்கு மன்னர்கள் செய்த மரியாதை தனி.

தமிழகத்தில் உள்ள கோயில்களுக்கும் கட்டடக் கலைக்கும் பிரமாண்டத்துக்கும் ஏணி வைத்தாலும் வடக்கு எட்டாதுதான்! ஆனால்... யாத்ரீகர்களுக்கு வசதி செய்து  கொடுத்து, இதே ஆன்ம உணர்வுடன் பார்ப்பதில்....? ம்ஹும்! நாம் ஏணி வைத்தாலும் அவர்களின் உணர்வுக்கு எட்டவே மாட்டோம்.

சத்திரங்கள் வைத்து போஷித்த இடங்கள் எல்லாம் இன்று சுவடு தெரியாமல் அழிந்து போய் விட்டன.

இன்று..? வடக்கேயிருந்து ராமேஸ்வரத்துக்கோ அல்லது திருவரங்கம், மதுரை, பழனி என ஆலயங்களுக்கோ வருபவர்கள்... தங்குவதற்கு ஏற்ற அன்ன சத்திரங்கள் கிடையவே கிடையாது.

நாம் வடக்கே சென்றால், ரூ. 5க்கு ஒரு ரொட்டி கிடைக்கிறது. 4 ரொட்டி, ஒரு தயிர் சாப்பிட்டாலே வயிறு நிறைகிறது. ஆனால், இங்கே 2 இட்லி கூட ரூ.25க்கு குறைந்து இல்லை.

நாத்திகம் பேசி நாட்டை நாறடித்தவர்களால்... இன்று தமிழகம் தலை தொங்கித்தான் கிடக்கிறது. கோயில்கள் - வணிக கேந்திரங்கள் ஆகிவிட்டன. சாமியைப் பார்க்க காசு. நடக்க காசு. செருப்பைப் போட்டால் காசு. பூவெல்லாம் வாங்கிப் போய் சாமிக்குப் போடவே முடியாது. அது பணக்காரனுக்கான அடையாளம். இங்குள்ள சுவாமிகள் எல்லாம் ஏழைகளிடம் இருந்து அன்னியப் பட்டு விட்டார்கள். ஆலயங்கள் வகை தொகை இல்லாமல் சாதி பேதமற்று அனைவருக்கும் பொது என்று ஆகிவிட்டன. ஆனால், வர்க்க பேதம் ஒன்றிலேயே அவை தற்போது நிலை பெற்று விட்டன. காசேதான் கடவுளடா என்று பாடிப் பாடி, காசில்லை எனில் கடவுள் இல்லை என்ற வர்த்தகத்தை பெரிதாக வளர்த்தாயிற்று.

எப்போது பள்ளிகளில் ஆத்திசூடியும் கொன்றைவேந்தனும் ஒழுக்க நெறியும் என நல்போதனைகளை விட்டுவிட்டோமோ.... அப்போது முதல் ஒழுக்க நெறியை ஏளனப் படுத்தும் போக்கு பிஞ்சு நெஞ்சிலேயே நஞ்சாய் முளை விட்டாயிற்று. எல்லாவற்றிலும் தகிடுதத்தம். எல்லாரிடமும் நேர்மையற்ற தன்மை. எல்லாரிடத்தும் ஒழுக்கக்கேடு. பேச்சு ஒன்றும் செயல் ஒன்றுமாய் வயிற்றுப் பிழைப்புக்கு நடிக்கும் மக்கள். காசுக்கு ஆலாய்ப் பறக்கும் போக்கு. ஒழுக்கம் விழுப்பம் தரலான் என வெறுமனே பாடம் படித்து விளக்கிக் கொண்டிக்கும் மனப்பாங்கு....

எப்படி இருந்த தமிழகம். ... இப்படி ஆகிவிட்டதே என்ற துர்பாக்கிய நிலைதான்!

இப்போதெல்லாம் எனக்கு தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்று பொய்யாக வெற்று வார்த்தை சொல்லி பீற்றிக் கொண்டிருக்கத் தோன்றவில்லை.

நம் நெல்லை பரணிக்கரை பத்தமடையில் பிறந்து கங்கைக் கரை ரிஷிகேஷத்தில் ஐக்கியமான சுவாமி  சிவானந்தரின் வழியில்....

ரிஷிகேஷத்தையும் ஹரித்வாரையுமே என் மனம் இப்போது நாடுகிறது ! 

சொன்னது ஒன்று; புரிந்து கொண்டதோ வேறு: சம்ஸ்கிருத சிலேடை


பள்ளிப் பருவத்தில் ஒரு நாள். வகுப்பறையில் பாடம் எடுத்துக் கொண்டிருந்தார் ஆசிரியர்  பாடத்திட்டம் இல்லாமலே!  போன வருஷத்து அனுபவப் பாடமாம்! பள்ளி திறந்து மாதம் மூன்றாகி விட்டது; ஆனால் பாடத் திட்டம் வந்த பாடில்லை! அப்போது சொன்னார்… “நம்ம ஸ்கூலுக்கு சில ‘பஸ்’ தான் வருதேயொழிய, இன்னும் ‘சிலபஸ்’ வந்தபாடில்லை!”
அட! இந்த மாதிரி நாமும் பேசும்போது உபயோகித்தால் என்ன? என்ற ஆர்வம் அப்போது துளிர் விட்டது. அதன் பிறகு இருபொருள் தரும் சொல்லை அகராதியில் தேடத் தொடங்கியது மாணவ உள்ளம்.
இச் சொல் பயன்பாட்டில் சில நேரம் விபரீதம் தந்தாலும் பல நேரங்களில் சுகமாகத்தான் இருந்தது… காரணம் பலரும் பொருள் தெரிந்து ரசித்ததால். நம்மால் நாலுபேரை சந்தோஷப்படுத்த முடிகிறதே என்ற எண்ணம்தான்!
ஒரு நாள் இரவு பக்கத்து வீட்டு நண்பரிடம் “நாளை சீக்கிரம் எழுந்து நெல்லை ஜங்ஷனுக்குப்போகணும்…” என்று சொல்லி வைத்தேன். மறுநாள் காலை… வழக்கம் போல் சோம்பல். வியப்போடு பார்த்த நண்பர் கேட்டார்… “ஏ என்ன? போலயா?” கேள்வி கேட்ட வேகத்துக்கு ஈடு கொடுத்து “போல” என்றேன். விறுவிறுவென என் அப்பாவிடம் சென்ற நண்பர் சொன்னார்… “மாமா, உங்க பையன் என்னை ‘போல’ ண்ணு  சொல்லிட்டான்…”  ‘போகல’ என்ற சொல்லில் ‘க’ கண்ணாமூச்சி காட்டியதால் எழுந்த வினை இது!
சொலவடையா? சிலேடையா? எப்படி இருந்தால் என்ன? பயன்பாட்டில் கிடைக்கும் ஆனந்தமே தனிதான்! என்ன பேசுபவருக்கும்  கேட்பவருக்கும் மொழி நன்கு தெரிந்திருக்க வேண்டும் அவ்வளவுதான்! கி.வா.ஜ வின் சிலேடைகளைக் கேட்டு இன்புறாத தமிழர் உள்ளமும் உண்டோ?
தமிழில் மட்டுமல்ல, எல்லா மொழிகளிலும் இந்த உத்தி இருந்து வருகிறது. நம் இன்னொரு தொன்மையான மொழியான சம்ஸ்க்ருதத்திலும் சிலேடைக்கவிகள் ஏராளம். அவற்றில் பெரும்பாலும் உவமையாகவே கையாளப்பட்டிருக்கும். தமிழில் கடைசி முடிப்பு, இரண்டுக்கும் பொதுவாக அமைந்து அழகு காட்டுவது போல், பெரும்பாலும் சம்ஸ்க்ருதத்தில் பாடலின் முதல் வரியிலேயே சிலேடை இன்பம் வெளிப்படும். காளமேகப் புலவரின் சிலேடை வெண்பாக்களை எவ்வளவு தூரம் நாம் அசை போட்டிருப்போம்…? ‘எள்ளுக்கும் பாம்புக்கும்’ காட்டும் ‘ஆடிக்குடத்தடையும்’ பாடல் நம் காதுகளிலே ரீங்காரம் இடுகிறதே!
ஒரு சம்ஸ்க்ருதக் கவி…
ஜீவனக்ரஹணே நம்ரா: க்ருஹீத்வா புநருந்நதா:/
கிம் கனிஷ்டா: கிமு ஜ்யேஷ்டா: கடீயந்த்ரஸ்ய துர்ஜனா://
கடீ யந்த்ரம்  நீர் இறைக்கும் எந்திரம்  ஏற்றச்சால். துர்ஜனா  தீயோர். சந்தர்ப்பவாதி என்றும் கொள்ளலாம். இவ்விரண்டில் எந்திரம் தீயவனுக்கு இளையவனா? மூத்தவனா? என்று கேள்வி கேட்டு, இரண்டுக்குமான ஒப்புமையை இரு பொருள் தரும் வகையில் கவி கையாண்டிருக்கிறார். ‘ஜீவன க்ரஹணே’ என்றதில் ‘ஜீவனம்’ என்று, தண்ணீருக்கு ஒரு பெயர் உண்டு. ஜீவிகை என்றதான உயிர் வாழ்தலுக்கும் ஒரு பெயர் உண்டு. ஏற்றச் சாலில் தண்ணீர் மொண்டு கொள்வதற்காக அது கிணற்றில் இறங்கும்போது, தலை தாழ்த்தியிருக்கும். நீரை மொண்டு கொள்ளும் வரையில்தான் தலை வணங்கும்; மொண்டு கொண்ட பிறகு உடனே தலை தூக்கும். அதுபோல் தீயோர்(சுயநலவாதிகள்) பயன் அடையும் வரையில்தான் மற்றோர் காலில் விழுந்து கிடப்பர். பிறகு செருக்கோடு தலை நிமிர்ந்து அலைவர்.
இதுபோல் கத்திக்கும் கருமிக்குமான சிலேடை சுவையானது; உள்ளத்தை ஊடுருவுவதும் கூட!
த்ருடதர நிபத்தமுஷ்டே: கோச நிஷண்ணஸ்ய ஸஹஜமலிநஸ்ய/
க்ருபணஸ்ய க்ருபாணஸ்ய ச கேவலமாகாரதோ பேத://
க்ருபணன்  கருமி; க்ருபாணம்  கத்தி. இரண்டுக்கும் உச்சரிப்பில் ஒரு ‘ஆ’காரம்தான் வேற்றுமையே தவிர இரண்டின் சுபாவமும் ஒன்றுதான்! இவ்விரண்டின் சுபாவத்தை மூன்று விஷயங்கள் ஒற்றுமைப்படுத்தி, சிலேடை இன்பம் தருகிறது. ‘த்ருடதர நிபத்தமுஷ்டே’  கத்தியைக் கையில் பிடிக்க, நன்றாக முஷ்டி பிடித்து இறுக்கிப் பிடிக்க வேண்டும். கருமியும் அப்படியே! எங்கே கை திறந்தால் காசு விழுந்து விடுமோ என்று அஞ்சி கையை இறுக்கிப் பிடித்திருப்பான். ‘கோச நிஷண்ணஸ்ய’  கத்தி உறையையும் பொக்கிஷத்தையும் ‘கோசம்’ என்பர். கத்தி அதன் உறையில் தங்கும். கருமி எப்போதும் பொக்கிஷத்தைக் காவல் காத்து, பூட்டைப் பற்றியவாறு தொங்கிக் கொண்டு கிடப்பான். ‘ஸஹஜ மலிநஸ்ய’  கத்தி, இரும்பால் செய்யப்படுவதால் இயற்கையாகவே கருப்பாக இருக்கும்; அழுக்கடைந்து துருப்பிடித்து இருக்கும். கருமியோ வெள்ளைத் துணி அழுக்காகும்; அதை சலவைக்குக் கொடுத்தால் காசு செலவாகுமே என்று அஞ்சி அழுக்குத் துணியையே அணிந்திருப்பான். ஒரு அலங்காரமும் செய்து கொள்ளாமல் மலினனாகவே இருப்பான். அதனால் இவ்விரண்டுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை; ‘கேவலம் ஆகாரதோ பேத:’ என்றபடி ‘ஆ’கார சப்தத்தில் மட்டுமே வேற்றுமை என்பதை உணரலாம்.
இப்படி ஒரு பொருளுக்கும் மனிதனின் குணத்துக்கும் ஏற்ப ஒப்பிட்டு சிலேடை இன்பத்தைத் தருவது கவிகளுக்குக் கைவந்த கலையே!
கண்ணனைப் பாடிய கவிகள், எத்தனையோ சொல்லின்பத்தையும் பக்தி இன்பத்தையும் தந்திருக்கிறார்கள். கண்ணனின் குறும்புகளை தம் கவித்திறனால் அழகுற வெளிப்படுத்திய நம் பாரதியைப் போல், பிற இந்திய மொழிகளிலும் இச்சுவை உண்டு. ‘தீராத விளையாட்டுப் பிள்ளை’யில்,  ‘பின்னலைப் பின்னின்று இழுப்பான், தலை பின்னே திரும்புமுன்னே சென்று மறைவான்…’ என்று கோபியருடன் கண்ணன் செய்த குழந்தைத் தனக் குறும்புகளை பாரதி வெளிப்படுத்தியது போல், சம்ஸ்க்ருதக் கவிஞரும் இதைப் பாடியிருக்கிறார். அதிலே சிலேடை உண்டு; கண்ணனின் வார்த்தை சமத்காரமும் உண்டு.
அம்ஸே ஸலீலமதிரோப்ய சுகம் ஸ்வஹஸ்தாத்
கோப்யா பயாகுல த்ருச: குதுகீ முகுந்த:/
அம்ஸம்கதம் சுகமிஹா பநயேதி வாசம்
தஸ்யா நசம்ய ச ததம் சுகமாசகர்ஷ//
கண்ணனின் லீலா விநோதம் இந்தப் பாடலில் அனுபவிக்கப் படுகிறது. கண்ணன் ஒரு கோபியின் தோளில் விளையாட்டாக ஒரு கிளியை ஏறவிட்டான். திடீரென ஏதோ ஒன்று தோளில் தட்டுப்பட, பயந்து போன கோபி கண்ணனிடம் சொன்னாள்… “ஹே க்ருஷ்ணா, அம்ஸம் கதம் சுகம் அபநய…” என்று! அம்ஸம்  தோளை, கதம்  அடைந்திருக்கும், சுகம்  கிளியை, அபநய  அப்புறப்படுத்து… அதாவது, “கண்ணா! என் தோளின் மேல் ஏறியுள்ள இக் கிளியை அகற்று” என்ற பொருளில் சொன்னாள்.
ஆனால் அதை அப்படியே கேட்டுச் செய்தால் கண்ணனுக்கு என்ன சிறப்பு? கண்ணன் குறும்பு எப்படி வெளிப்படும்? கோபி சொன்ன வார்த்தைக்கு சிலேடையாகப் பொருள் கொண்டு, கண்ணன் ஒரு குறும்பைச் செய்கிறான்…
கோபி சொன்ன ‘அம்ஸம் கதம் சுகம் அபநய’  என்பதையே, ‘அம் ஸங்கதம் சுகம் அபநய’ என்று ஆக்கிக் கொண்டான் கண்ணன். அம் ஸங்கதம்  அம் என்ற எழுத்தோடே சேர்ந்த; சுகம் அபநய  சுகத்தைத் தள்ளு… அதாவது, அம் என்பதோடு சேர்ந்த சுகம்  அம்சுகம்! அதற்கு ‘ஆடை’ என்று பொருள்! இப்படிப் பொருள் கொண்டு, அம் என்ற சுகத்தோடு அம்சுகத்தைத் தள்ளு என்று பொருள் கொண்டு, கோபியின் தோளின் மேலேறியிருக்கும் மேலாடையைப் பிடித்திழுத்தான்… பிறகு “கோபி நீ சொன்னபடியேதான் நான் செய்தேன்…” என்று கள்ளச் சிரிப்பும் சிரித்தான்!
கட்டுரை: செங்கோட்டை ஸ்ரீ.ஸ்ரீராம்
 
Copyright © 2013 செங்கோட்டை ஸ்ரீராம்
Shared by Alahappa Grafix