சுடச்சுட:

ஆலயங்கள்

இலக்கியம்

ஆன்மிகம்

திங்கள், செப்டம்பர் 14, 2015

தமிழன்னை இழந்துவிட்ட தவமகன்: கௌதம நீலாம்பரன்


என் மீது மிகுந்த அக்கறை கொண்ட நண்பர் ...
எப்போதும் என் நலன் குறித்து விசாரிக்கும் மூத்த எழுத்தாளர்...
கைலாசம் என்ற கௌதம நீலாம்பரன் காலமாகிவிட்டார்.

திருச்சிராப்பள்ளி என்ற மண்ணையும் காவிரி என்ற நீரையும் தொட்டுத் துலங்கிய, துவங்கிய பாசமிகு நட்பு எங்களுடையது. அவை எல்லாவற்றையும் விட எங்களுக்குள் முக்கியமான பிணைப்பாக இருந்த பெயர் - நா.பா.

சிராப்பள்ளி மலையில் கோயில் கொண்ட தாயுமானவன் தாள் தொட்டு பூசித்த பாரமபரிய தீட்சிதக் குடும்பம். கைலாசம் - எழுத்துலகுக்கு கௌதம நீலாம்பரனாக மாறிப்போனார்.

என் இதழியல் துறைப் பணியின் துவக்க கால கட்டத்தில், எனக்கு அறிமுகமான முக்கிய எழுத்தாளர்களில் இவரும் ஒருவர். அப்போது நான் விஜயபாரதம் வார இதழில் உதவி ஆசிரியராகப் பணியாற்றி வந்தேன். தீபாவளி மலர் ஒன்றே அப்போது எழுத்தாளர்கள் பலரையும் சென்று பார்க்க வைத்து, எங்களை இணைத்தது என்றே சொல்லலாம்.

பத்திரிகை - எழுத்துலக நண்பர்களாக / என் நலன் நாடும் பெரியோர்களாக - திருப்பூர் கிருஷ்ணன், கீழாம்பூர் சங்கரசுப்ரமணியன், பாலகுமாரன், கௌதம நீலாம்பரன் உள்ளிட்ட பலர்  கிடைத்தார்கள்.

கௌதம நீலாம்பரன் - ஓர் அதிசயப் பிறவிதான். அதிகம் பேசமாட்டார். அமைதியாகவே இருப்பார். முகம் அமைதியில் தோய்ந்திருக்கும். அவருடைய ஜிப்பாவும் பட்டையான பிரேம் போட்ட கண்ணாடியும் அவரை எழுத்தாள அடையாளத்துக்குள் புகுத்தியிருக்கும்.

ஓர் இதழாளன் படும் அத்தனை சிரமங்களையும் அனுபவித்தவர். சிலவற்றை என்னிடம் வெளிப்படையாகவே பகிர்ந்து கொண்டுள்ளார்.

அவருடைய விகடன் தொடர்பான அனுபவம்,  முதுநிலை ஆசிரியர்களிடம் அவர் பட்ட பாடு, ஓர் இதழ் நடத்திய போட்டியில் இவருடைய கதை வென்று பிரசுரமாக, அதனால் உடனிருந்தோர் பொறாமையில் அலுவலகத்தில் பட்ட அவமானங்கள்... எல்லாம்தான்!

இவை எல்லாவற்றையும் மீறி, எழுத்துலகில் தனக்கென ஓர் இடம் பிடித்துக் கொண்டார்.

15 வருடங்களுக்கு முன்னர் முதல் முதல் அறிமுகத்தில், இலக்கிய உலகம் குறித்த தகவல்களைக் கேட்டுக் கொண்டிருந்தேன். அப்போது, தாம் தீபம் இதழில் பணியாற்றிய அனுபவத்தைச் சொன்னபோது, நா.பா., ஒரு வகையில் எங்கள் குடும்ப உறவு; என் தாய்வழி மாமா தாத்தாவின் சகலை அவர் என்றேன். அது முதல் பேச்சின் நெருக்கம் இன்னும் அதிகமானது.

தீபம், இதயம் பேசுகிறது, குங்குமம், முத்தாரம், ஞானபூமி, விகடன் என அவருடைய பணி நீண்டது. சுமார் 40 வருடங்கள். இதழியல் பணியில் இருந்துவிட்டார். பின்னாளில் குங்குமச் சிமிழுக்கு எழுதிவந்தார்.

சிறுகதைகள் அதிகம் எழுதியவர். வானொலி, தூர்தர்ஷன் எழுத்துத் தொடர்புகள் என எழுத்தாள இலக்கணத்துடன் திகழ்ந்தவர். சரித்திர நாவல்களில் அவருக்கிருந்த தணியாத ஆர்வம்...  அவருடைய சரித்திர நாவல்களின் பட்டியலைச் சொல்லும்! சேது பந்தனம், மாசிடோனிய மாவீரன், விஜய நந்தினி, சோழ வேங்கை, ராஜ கங்கனம், மோகினிக் கோட்டை, நிலா முற்றம்...

கலைமகள் இதழில் கதைகள் எழுதியுள்ளார். கி.வா.ஜ. காலத்தில் அவர் எழுதிய கதைகள் குறித்த அனுபவங்களையும் பகிர்ந்திருக்கிறார். கிட்டத்தட்ட என் வயதைக் காட்டிலும் சில வருடங்கள் அவருடைய எழுத்து / இதழியல் உலகப் பணி அதிகமானதுதான்.

சில வருடங்களுக்கு முன் வேளச்சேரியில் நெடிதுயர்ந்த கட்டடத்தில் குடியேறினார். அவர் வீட்டுக்குச் சென்றிருந்தேன். லிப்ட் இல்லாமல் இல்லத்து இலக்கை அடைதல் கடினம்தான்! இப்போது மிக உயரத்தில் வந்துவிட்டதாக சிரித்துக் கொண்டே சொன்னார். அந்தக் குறு நகைப்பு என்னையும் தொற்றிக் கொண்டது.

பல நேரங்களில் எனக்கு உரிய கௌரவம் கிட்டாது போயின் துச்சமென எதையும் தூக்கிப் போட்டு வந்துவிடுவேன். அப்போது தோன்றும்... நான் என்ற அகம்பாவத்துக்கும், உரிய கௌரவத்தை எதிர்பார்த்தலுக்கும் எத்தகைய வேறுபாடு இருக்கிறது என...?! மானம் பெரிதென எண்ணுவேன். அவமரியாதைகளை, அவமானங்களை தாங்கிக் கொள்ளும் பக்குவம் எனக்கு மிகக் குறைவுதான்! பூணூல் அணிவித்து, வேத வித்யா கர்வம் மேலேறிவிடக் கூடாதென்பதற்கே பவதி பிட்சாந் தேஹி என கைநீட்டி பிட்சை ஏற்கும் தத்துவத்தை இளவயதில் புகட்டியிருந்தாலும், உரிய மதிப்பை எதிர்நோக்கும் மனம் மட்டும் என்னிடம் மாறவில்லை. கிட்டத்தட்ட அதே குணாதிசயம் கௌதம நீலாம்பரனிடமும் இருந்ததை உணர்ந்தேன். அதனாலேயே அவர் பட்ட துயர்களையும் கேட்டறிந்தேன்.

அண்மைக் காலமாக பொற்றாமரை இயக்கத்தில் அதி தீவிர ஈடுபாடு காட்டினார். திருவாளர் இல.கணேசனார் தலைமையிலான பொற்றாமரை இலக்கிய அமைப்பில் அவருக்கு உரிய இடம் கிடைத்தது. மிகுந்த மன மகிழ்ச்சியோடு பணிகளில் ஈடுபட்டிருந்தார். சில கூட்டங்களில் நான் பார்வையாளனாகச் சென்றபோது, வயதையும் மீறி என் கை பிடித்து சிநேகத்தை வெளிப்படுத்தி வாழ்த்துவார். அவர் மேடை ஏறி மைக் பிடித்துப் பேசும்போது பெருமிதமாக இருக்கும்.

அண்மையில் ஒரு முறை ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டோம். இருவரும் அருகருகே அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். தனக்கு பார்வை பலவீனமடைந்து வருவதை கவலையுடன் சொன்னார். நிகழ்ச்சி முடிந்து திரும்பியபோது ஏதாவது ஒரு பேருந்து நிறுத்தத்தில் இறக்கிவிடுமாறு சொன்னார். அவரை என் பைக்கில் ஏற்றி, வீட்டின் அருகே இறக்கி விட்டு விடைபெற்றேன். இப்போது அவர் நம்மிடம் இருந்து நிரந்தரமாக விடைபெற்றுச் சென்றுவிட்டார். நினைக்கும் போது துயரம் மேலிடுகிறது. தமிழன்னை தன் புகழ்பாடிய ஒரு புதல்வனை இழந்துவிட்டாள்!

வெள்ளி, செப்டம்பர் 04, 2015

சரணாகதியின் பொருள் உரைத்தவன்!


அஷ்டமி, நவமி திதிகள் என்றால் எந்தக் கார்யத்திலும் இறங்காமல் வெறுமனே அமர்ந்திருக்கும் மக்களைப் பார்க்கும்போது எனக்கு இந்த விஷயம்தான் தோன்றும். இந்தத் திதிகளை மக்கள் ஒதுக்கவே, அவை இறைவனிடம் சென்று, “மக்கள் எங்களை ஒதுக்குகின்றனரே” என்று வருந்தினவாம். அதற்கு இறைவன் “உங்களுக்கு ஏற்றம் தருகிறேன். மக்கள் உங்கள் இருவரையும் கொண்டாடச் செய்கிறேன்” என்று வாக்களித்தாராம். பகவான் உறுதியளித்தபடி, நவமி திதியில் ராமனாகவும், அஷ்டமி திதியில் கிருஷ்ணனாகவும் அவதரித்து, மக்கள் அவ்விரு திதிகளையும் கொண்டாடச் செய்தாராம்.
ஸ்ரீகிருஷ்ணர் நடு இரவில் சிறைக் கதவுகளுக்குப் பின்னே பிறந்தாரென்றால், ஸ்ரீராமனோ நடுப்பகலில் அரண்மனையில் சித்திரை மாதம் புனர்பூச நட்சத்திரம் 4 – ஆம் பாதத்தில் அவதரித்தார். ஸ்ரீராமர் பிறந்த தினத்தைக் கொண்டாடுவதுதான் ஸ்ரீராம ஜன்மோத்ஸவம் – ஸ்ரீராமநவமி என்று நாட்டு மக்களால் விமரிசையாகக் கொண்டாடப்படும் திருநாள்.
ஸ்ரீராமர் பிறந்ததே அனல் கொளுத்தும் வெய்யில் காலத்தில். அவர் பால பருவத்தில் விஸ்வாமித்திரருடன் கானகம் சென்றதும், வனவாசத்திற்காகப் பதினான்கு ஆண்டுகள் கானகத்தில் அலைந்ததும் நல்ல வெய்யிலில் தான். எனவேதான் ஸ்ரீராமநவமியன்று பானகம், நீர்மோர், வடைபருப்பு, விசிறி போன்றவற்றைத் தானமாகக் கொடுப்பதுண்டு. ஸ்ரீராமர் பிறந்ததை தசரதர் அரண்மனையில் கோலாகலமாகக் கொண்டாடினார். மக்களுக்கு நிறைய தான தர்மங்கள் செய்தார். அதை மனதில் கொண்டு இன்றும் கிராமங்களில் பல வீடுகளில் நெல் மணிகளும் பணமும் வைத்து தானமளிப்பது வழக்கமாக உள்ளது.
இராமரைப் பற்றி எத்தனையோ பக்தகவிகள் பாடி இருக்கிறார்கள். புரந்தரதாஸர், தியாகராஜர், முத்துஸ்வாமி தீக்ஷிதர் என்ற மும்மூர்த்திகளைப் போல பல்வேறு புகழ்பெற்ற கீர்த்தனைகளைக் கொடுத்தவர் திருவாங்கூர் மகாராஜா. அவர் பிறந்ததுகி.பி.1813 ஆம் ஆண்டு ஏப்ரல் 16 – ஆம் தேதி18 ஆண்டுகள் அவர் சமஸ்தானத்தைப் பரிபாலித்தார். ஸம்ஸ்க்ருதம், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி, தமிழ் ஆகிய மொழிகளில் 300 -க்கும் மேற்பட்ட கிருதிகளை இயற்றியுள்ளார். அவரது பட்டாபிஷேக கீர்த்தனையான “பாவயாமி ரகுராமம் பவ்ய ஸுகுணா ராமம்” என்ற கீர்த்தனை. இன்றும் இந்தக் கீர்த்தனையைக் கேட்டு அதில் லயிக்காதவர் யாருளர்?
ஸ்ரீராமர் என்று சொன்னாலே சரணாகதித் தத்துவம் தான் அனைவர் நினைவுக்கும் வரும். தஞ்சமென்று வந்தவரைத் தன் சரண கமலத்தில் வைத்து அபயம் அளித்தவர் ஸ்ரீராமபிரான். பாலகாண்டத்தில் இராவணனால் அல்லலுற்ற தேவர்கள் பரமனடியே பரிகாரம் என்று சரணடைந்தனர். அயோத்யா காண்டத்தில் பரதன், ஸ்ரீராமபிரானைச் சரணடைந்து அவர் அடித்தலம் இரண்டையும் அழுத கண்களோடு பற்றினவனாய்த் தன் முடித்தலத்திற்கு இவையே கிரீடம் என்று சூட்டிக் கொண்டான். ஆரண்ய காண்டத்தில்தண்டகவனத்து ரிஷிகள் எல்லாரும் அரக்கர்களின் தாங்கவொண்ணாக் கொடுமைக்கு அஞ்சி சக்ரவர்த்தித் திருமகனைச் சரணடைந்தனர். கிஷ்கிந்தா காண்டத்தில் சுக்ரீவன் ஸ்ரீராமபிரானைச் சரணடைந்தான். சுந்தரகாண்டத்திலும் சரணாகதிக் கதை வருகிறது. சீதை அசோகவனத்தில் சிறையிருந்தபோது, ஸ்ரீராமபிரானுடனான தம் இளமைக்கால நிகழ்வுகளை மனதில் அசைபோட்டுக் கொண்டிருக்கிறார். அப்போது காகாசுரன் கதை வருகிறது. ராமபாணத்துக்கு அஞ்சி உலகெல்லாம் சுற்றிவிட்டு இறுதியில் ஸ்ரீராமபிரானது திருவடிகளையே தஞ்சம் என்று சரணடைந்தான் காகாசுரன்.
அடைக்கலம் என்று வந்தவர்க்கு “அஞ்சேல்” என்று அபயம் அளித்த ஸ்ரீராமபிரான் சரணாகதிச் சிறப்பிற்கு விபீஷண சரணாகதியைச் சிறந்த உதாரணமாகச் சொல்லலாம்.
சரணாகதியை விளக்குவதை சரம ஸ்லோகம் என்பார்கள்.  இராமாயணத்தில் வரும் சரண கட்டம் விபீக்ஷண சரணாகதி.
ஸக்ருதவ ப்ரபந்நாய தவாஸ்மீதிச யாசதே
அபயம் ஸர்வ பூதேப்ய: ததாம் யேதத் வ்ரதம் மம
ஆநாயைநம் ஹரிச்ரேஷ்ட தத்தமஸ்யாபயம் மயா
விபிஷணோ வா ஸுக்ரீவ யதி வா ராவண ஸ்வயம்
பகைவனுக்கும் அருளும் பண்பாளன் அல்லவா ஸ்ரீராமபிரான். அதை சரணாகதியின் உச்சத்தை விளக்கும் இந்த ஸ்லோகத்தில் அறிந்து கொள்ளலாம்.
விபீஷணனை ஏற்றுக்கொள்ள சுக்ரீவன் உள்ளிட்டோர் தயக்கம் காட்டியபோது ஸ்ரீராமபிரான் கூறுகிறார்…
நான் உன்னுடையவன், என்னைக் காப்பாற்று” என்று கூறிச் சரணடைந்தவனுக்கும், அனைத்து பிராணிகளுக்கும் நான் அபயம் அளிக்கிறேன். இது என் விரதம். ஆகையால் சுக்ரீவா இவனை அழைத்துவா. இவன் விபீஷணனாக இருக்கட்டும் அல்லது அந்த இராவணனாகவேதான் இருக்கட்டும்… இவனுக்கு அபயம் அளிக்கப்பட்டுவிட்டது” என்று திருவாய் மலர்ந்தருளுகிறார் ஸ்ரீராமபிரான்.
இராமாயணம் படித்தால் சகல நலன்களும் வந்து சேரும் என்ற நம்பிக்கை நம்நாட்டில் உண்டு. மணமாகாத கன்னியர் சுந்தரகாண்டத்தைப் பாராயணம் செய்தால் உடனே மணமாகும் என்பர். வேறு சில பரிகாரங்களுக்கும் சுந்தர காண்டத்தைப் படிக்கச் சொல்வதுண்டு. இராமாயணத்தைப் பாராயணம் செய்து தசமி அன்று பட்டாபிஷேகத்தைப் படித்து முடிப்பது ஒரு வகை. ஸ்ரீராமர் பிறந்த இந்த நவமியிலிருந்து பத்து தினங்களுக்குப் பாராயணம் செய்து பட்டாபிஷேகத்தைப் படித்து முடிப்போரும் உண்டு. இராமனின் கதையைக் கேட்டாலும் படித்தாலும் புண்ணியம் சேரும் என்பது ஆன்றோர் கருத்து.
ஸ்ரீராமபிரானை எண்ணும்போது நம் நினைவில் உடனே வருபவர் குலசேகராழ்வார். சேரமான் பெருமாளாக மன்னர் குலத்தில் ஸ்ரீராமபிரான் பிறந்த அதே புனர்பூச நட்சத்திரத்தில் உதித்தார் குலசேகராழ்வார். மன்னராயினும் ஸ்ரீராமபிரானிடம் அளவற்ற பக்தி அவருக்கு. இராமாயணத்தைக் கேட்பதில் தனி ஆனந்தம். ஒரு முறை வைணவப் பெரியார் ஒருவர், குலசேகரருக்கு வால்மீகி ராமாயணத்தைச் சொல்லிக் கொண்டு வந்தார். இவரும் கண்களில் ஆனந்தக் கண்ணீர் கங்கையெனப் பொங்கும் வண்ணம் மனம் லயித்துக் கேட்டு வந்தார். ஒருநாள் இராமபிரான் அரக்கர்களோடு போர்புரிந்த நிகழ்ச்சியை விவரித்தார் அந்த வைணவப் பெரியார்.
இலக்குமணன் வில்லேந்திக் கவசம் தரித்து இராமனிடம் வந்து, அரக்கர்களுடன் போர் புரிய விடை கேட்டான். ஸ்ரீராமரோ, நீ சீதையைக் காத்துக் கொண்டிரு, நான் போய் அரக்கர்களை அழித்து வருகிறேன் என்று கூறிப் பர்ண சாலையினின்றும் வெளிக் கிளம்பி விட்டார். அதுகண்ட சூர்ப்பணகை, இவனே அரக்கர் குலத்தின் பகைவன் என்று கத்தினாள். அம்மொழிகேட்ட அரக்கர்கள் நாலாத்திசைகளிலிருந்தும் இராமபிரானைத் தாக்கினார்கள். அவர்களின் படைக்கலன்கள் இராமபிரானின் மீது பட்டு விழுந்தன” என்று கதை கூறிக் கொண்டிருந்தார் அவர்.
இதைக் கேட்டுக் கொண்டிருந்த குலசேகரரோ அந்தக் கட்டத்தில் மனம் லயித்து, “ஆ! அரக்கர்கள் மாயப் போர் புரிவதில் வல்லவர்களாயிற்றே. கரன், தூஷணன், திரிசரன் போன்ற அரக்கர்கள் மாயத்தந்திரங்களால் தனியராய் இருக்கும் ஸ்ரீராமபிரானைத் தாக்குகிறார்களே! இப்பெரும் படையை தனி ஆளாய் இருக்கும் ஸ்ரீராமபிரான் எப்படி சமாளிக்கப் போகிறாரோ!” என்று எண்ணி, தம் படையைப் போருக்கு ஆயத்தமாகுமாறு படைத் தளபதிகளுக்குக் கட்டளையிட்டார்.
படைத்தளபதிகளோ, ஆச்சர்யம் அடைந்தனர். நம்மை எதிர்த்த சோழ, பாண்டியர்கள் மூலையில் முடங்கிக் கிடக்கிறார்கள். எதிரிகளே நமக்கில்லையே. பின் யார் மீது போர்? என்று குழம்பித் தவித்தனர். ஆனால் அரச கட்டளையாயிற்றே! அவர்கள் பெரும் படையைத் திரட்டித் தயாராயினர். குலசேகரரும் போர்க்கோலம் பூண்டு நிற்கையில், காரணம் அறிந்த அமைச்சர் இராமாயணக் கதை சொல்லிக் கொண்டிருந்த அப்பெரியாரை அழைத்து, இச்சூழ்நிலையைச் சமாளிக்க வேண்டினர்.
அப்பெரியவரும், “ஸ்ரீராபிரான் தனியொருவராக நின்று, மாயங்கள் புரிந்த அரக்கர்களை அழித்து வெற்றி வாகைசூடி, பர்ணசாலையடைந்தார். சீதாதேவி எம்பெருமானின் மார்பில் பட்ட புண்களுக்கெல்லாம் மருந்தாக அவரைத் தழுவி மகிழ்ந்தாள்” என்று கதையைச் சொல்லி ஸ்ரீராம பட்டாபிஷேகம் வரை, சொல்லி முடித்த பிறகே குலசேகரர் தெளிவு பெற்றார். தம் படையை மீண்டும் தத்தம் இடம் திரும்புமாறு கட்டளையிட்டு அரண்மனை திரும்பினார்.
ஸ்ரீராமாயணக் கதை கேட்டாலும் மனம் லயித்துக் கேட்டால் தான் அதன் அருமையும் பலனும் நமக்குக் கிடைக்கும். எங்கெல்லாம் ஸ்ரீராமாயணம் ஒலிக்கிறதோ அங்கெல்லாம் ஆஞ்சநேயரும் அமர்ந்து கதை கேட்பார் என்பது பெரியோர் வாக்கு. வேடனான குகனையும், வானரனான சுக்ரீவனையும், அரக்கனான விபீஷணனையும் தம் சகோதரர்களாக ஏற்றவர் ஸ்ரீராமர். ஒரே வில் (பாணம்). ஒரே சொல். ஒரே இல். (மனைவி) என்று வாழ்ந்துகாட்டிய ஸ்ரீராமபிரானின் வழியில் சிந்தித்து சுகம் பெறுவோமே!
 
Copyright © 2013 செங்கோட்டை ஸ்ரீராம்
Shared by Alahappa Grafix