சுடச்சுட:

ஆலயங்கள்

இலக்கியம்

ஆன்மிகம்

திங்கள், நவம்பர் 03, 2014

மஞ்சரி டைஜஸ்ட் : ஓர் அறிமுகம்


மஞ்சரி டைஜஸ்ட் : ஓர் அறிமுகம்
-----------------------------------------------
மஞ்சரி தொடங்கப்பட்ட ஆண்டு :
1947 நவம்பர்
இதழ் நிறுவுனர் : என்.ராமரத்னம்.

தற்போதைய ஆசிரியர் வெளியீட்டாளர் : ஆர்.நாராயணஸ்வாமி

வெளியாகும் காலம் : மாத இதழ், ஆங்கில மாதத்தின் முதல் தேதி

இதழ் தொடங்கப்பட்ட நோக்கம்: டைஜெஸ்ட் பாணி
பல நாடுகள் பல மொழிகளில் வெளியாகும் பத்திரிகைகளில் இருந்து சிறந்த செய்திகள் கலைஇலக்கியப் படைப்புகள், மனித நேய நிகழ்ச்சிகள் ஆகியவற்றை சுவை குன்றாமல் சுருக்கித் தருதல்.

பாரத நாட்டின் கலை இலக்கியம் வரலாறு சமூகம் மருத்துவம் மனத் தத்துவம் விஞ்ஞானம், பொருளாதாரம் போன்ற பலதரப்பட்ட கட்டுரைகளை தமிழில் தருதல், உலகப் புகழ்பெற்ற நாவல்கள், சுயசரிதங்களின் புத்தகச் சுருக்கங்களை தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தல்...

இதழ் ஆசிரியர்களாக இருந்தவர்கள் :
தி.ஜ.ரங்கநாதன், த.நா.சேனாபதி, எஸ்.லட்சுமணன் (லெமன்), செங்கோட்டை ஸ்ரீராம், கார்த்திகேயன்...

தற்போதைய இதழாசிரியர் : குரு.மனோகரவேல்

மொழி ஆசிரியர்களாக இருந்தவர்கள் :
கி.வா.ஜகன்னாதன், த.நா.குமாரஸ்வாமி, வி.எச்.சுப்பிரமணிய சாஸ்திரிகள், சீதாதேவி, கௌரி அம்மாள், கா.ஸ்ரீ.ஸ்ரீ, குமுதினி, கி.சாவித்திரி அம்மாள், ஆர்.வி, டி.வி.பரமேஸ்வரன், மோ.ஸ்ரீ.செல்லம்...

ஓவியங்களை வரைந்தவர்கள் : ஸாமி, சங்கர், மகான், சுப்பு இன்னும் பலர்.

மஞ்சரி இதழில் வெளிவந்த பிரபலமான தொடர்கள்:
இதிகாசத் தொடர்கள் : ராமாயணம் , மகாபாரதம்
பாகவதத் தொடர்கள் : ஹரிவம்சம்
என்னைக் கேளுங்கள் : மருத்துவ பதில்கள், கேப்டன் சேஷாத்ரிநாதன் பதிலகள்.
டாக்டரைக் கேளுங்கள்: டாக்டர் ஜகதீசன் பதில்கள்
கி.வா.ஜ தொடர்கள் : கவிபாடலாம் தலைப்பில் கவிபாடப் பயிற்சி, சங்க நூல்கள் அறிமுகக் கட்டுரைகள்.
தேவி பாகவதக் கதைகள்
விநாயகர் விஜயம்
நேயர் கேள்விகளுக்கு பதில்கள் : தென்கச்சி பதில்கள்
தையல் கலை கட்டுரைகள்
ஃபிலோ இருதயநாத் மானிடவியல் கட்டுரைகள்
ஓவியர் சுசியின் அறிவியல் கட்டுரைகள்
மின்னணு எலக்டிரானிக் கட்டுரைத் தொடர்கள்,
ரேடியோ, டி.வி.போன்ற மின்னணு சாதனங்கள் குறித்த விளக்கங்கள், செய்முறை விளக்கப் பயிற்சிக் கட்டுரைகள்.
காந்தி\வாழ்வும் வாக்கும்
ரமணர்\வாழ்வும் வாக்கும்
கவி தாகூர் \ வாழ்வும் வாக்கும்
விவேகானந்தர் \ வாழ்வும் வாக்கும்
பல மொழி புத்தகச் சுருக்கங்கள்...
ஜோதிடக் கலைத் தொடர்கள், நியூமராலஜி தொடர்கள்...


மஞ்சரி இதழ் தோன்றிய விதம் :

1947இல் பாரத நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்த ஆண்டு. அந்த ஆண்டில், நவம்பர் மாதம் மஞ்சரி இதழ் தோன்றியது.
தமிழ் இலக்கிய உலகில் தனி இடம் பெற்றுத் திகழும் கலைமகள் மாத இதழை நல்ல முறையில் நடத்தி வந்த அதன் உரிமையாளர் என்.ராமரத்னம், தங்கள் நிறுவனத்தில் இருந்து தமிழ் வாசகர்களுக்கு உலக அனுபவமும் உலகச் செய்திகளையும் உலக இலக்கியங்களையும் தெரிந்து கொள்ள வைக்கும் வகையில் ஒரு இதழை தொடங்க வேண்டும் என்ற விருப்பம் இருந்தது. அதற்கு அவருக்கு உந்துதலாக இருந்தது, ஆங்கிலத்தில் புகழ் பெற்ற இதழாக வாசகர்களின் ஏகோபித்த ஆதரவு பெற்று வெளிவந்துகொண்டிருந்த ரீடர்ஸ் டைஜஸ்ட் இதழ்தான். அதுபோல் தமிழில் டைஜஸ்ட் இதழ் ஒன்றைக் கொண்டுவரவேண்டும் என்று எண்ணினார் என்.ராமரத்னம்.

ஏற்கெனவே கலைமகள் இதழ் தவிர எம்.எல்.ஜே என்ற சட்டப் பத்திரிகையையும் அவர் நடத்தி வந்தார். எனவே புதிதாக பத்திரிகை தொடங்குவது ஒன்றும் அவருக்கு கடினமாக இருக்கவில்லை. தன் குடும்பத்தாரிடம் அவர் இதற்கான தன் கனவைச் சொன்னவுடன் அனைவருமே அதற்கு செயல் வடிவம் கொடுக்க முனைந்தார்கள். காரணம், என்.ராமரத்னம் குடும்பத்தார், தமிழ், ஆங்கிலம், சம்ஸ்கிருதம் ஆகிய மூன்று மொழிகளில் நன்கு தேர்ச்சி பெற்றவர்களாக இருந்தார்கள். எனவே பல நாடுகள், பல மொழிகளில், பல்வேறு பத்திரிகைகளில் வெளியாகும் செய்திகளை, கட்டுரைகளை, இலக்கிய அறிவியல் செய்திகளை மொழிபெயர்த்து வெளியிடுவதில் சிரமம் பெரிதாக இருந்திருக்கவில்லை. இந்தக்கனவுப் பத்திரிகைக்கு அழகான பெயராக மஞ்சரி என்ற பெயரை என்.ராமரத்தினத்தின் சிறிய தாயாரும், பிரபல எழுத்தாளருமான கி.சாவித்திரி அம்மாள் தேர்ந்தெடுத்துக் கொடுத்தாராம்.

இதழின் முதல் ஆசிரியர் :

மஞ்சரி இதழுக்கு முதல் ஆசிரியராக நியமிக்கப்பட்டவர் தி.ஜ.ரங்கநாதன். இவரது பெயரை இதற்கு சிபாரிசு செய்தவர் பன்மொழி அறிஞர், மொழிபெயர்ப்பில் கைதேர்ந்தவராக இருந்த கா.ஸ்ரீ.ஸ்ரீ. அப்போது கா.ஸ்ரீ.ஸ்ரீ கலைமகள் பத்திரிகையில் துணை ஆசிரியராக இருந்துள்ளார்.
தி.ஜ.ர., பிரபல தமிழ் பதிப்பாளராக இருந்த சக்தி வை.கோவிந்தன் நடத்திவந்த சக்தி பத்திரிகையில் ஆசிரியராக இருந்தவர். அருமையான சிறுகதைகளும் கட்டுரைகளும் எழுதிப் புகழ்பெற்றிருந்தார். மொழிபெயர்ப்பில் சாதனை பெற்றவராகத் திகழ்ந்தவர். தமிழில் வரவேண்டிய கருத்துகளையும் கட்டுரைகளையும் மிகச் சரியாகத் தேர்ந்தெடுத்டு, அவற்றை சரியான நபர்களிடம் கொடுத்து மொழிபெயர்த்து வாங்கி வெளியிட்டார். நாட்டு விடுதலைக்காகச் சிறை சென்ற தேசபக்தர் அவர்.
இவருக்குத் துணையாக, தமிழிலும் வங்காளி மொழியிலும் புலமை பெற்றிருந்த த.நா.சேனாபதி நியமிக்கப்பட்டார். பிரபல எழுத்தாளரான த.நா.குமாரஸ்வாமியின் இளைய சகோதரர் இவர்.

மொழி ஆசிரியர் குழு :

மஞ்சரி இதழுக்கு மொழி ஆசிரியர்கள் என்று கதை கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்துக் கொடுக்கவும், மொழி பெயர்த்துத் தரவும் ஒரு குழு அமைக்கப்பட்டிருந்தது. அந்தக் குழுவில் பல மொழிகளில் தேர்ச்சி பெற்றவர்களும் பத்திரிகைத் தொடர்புள்ளவர்களும் இருந்திருக்கிறார்கள். அவர்களில் முக்கியமானவர்கள்...

கி.சந்திரசேகரன்
மொழி ஆசிரியர் குழுவில் இருந்த இவர், தமிழ், ஆங்கிலம், சம்ஸ்கிருதம் ஆகிய மும்மொழிகளிலும் எழுதக்கூடிய ஆற்றல் பெற்றிருந்தவர். கவி ரவீந்திர தாகூர், கவி காளிதாசன், ஷேக்ஸ்பியர் உள்ளிட்டவர்களைப் பற்றி எழுதவும் பேசவும் வல்லவராயிருந்தார். சிறுகதைகள் மற்றும் வாழ்க்கை வரலாறுகள் நிறைய எழுதியிருக்கிறார்.

கி.சாவித்திரி அம்மாள்
என்.ராமரத்தினம் அவர்களின் தாயாரின் இளைய சகோதரி இவர். தாகூரின் நாவலை வீடும் வெளியும் என்ற பெயரில் சிறப்பாக மொழிபெயர்த்தார். மகாகனம் சீனிவாச சாஸ்திரியின் ராமாயணப் பேருரைகளைத் திறம்படத் தமிழாக்கி வழங்கியிருக்கிறார். ஆங்கிலத்தில் பிரபல எழுத்தாளரான கே.எஸ்.வேங்கடரமணியின் முருகன் ஓர் உழவன் என்ற நாவலை கிருஷ்ணகுமாரி என்ற பெயரில் மொழிபெயர்த்திருக்கிறார்.

கா.ஸ்ரீ.ஸ்ரீ
இவர் சம்ஸ்கிருதம், இந்தி, மராட்டி, குஜராத்தி ஆகிய மொழிகளை நன்கு கற்றறிந்தவர். வேத உபநிஷத்துகளையும் நாலாயிர திவ்யப் பிரபந்தம் முதலான வைணவ இலக்கியங்களையும் முறையாகப் பயின்றவர். மராட்டி நாவலாசிரியரும் சாகித்திய அகாதமி விருது பெற்றவருமான வி.ஸ.காண்டேகரின் நாவல்களைத் தமிழில் மொழிபெயர்த்து, தமிழ் ரசிகர்களைக் கவர்ந்தவர். பிரேம்சந்த்தின் புகழ்பெற்ற சிறுகதைகளையும் நாவல்களையும் மொழிபெயர்த்து தமிழுக்குத் தந்த பெருமை இவரையே சேரும்.

பிரம்மஸ்ரீ வி.எச்.சுப்பிரமணிய சாஸ்திரி
சென்னை சம்ஸ்கிருதக் கல்லூரியின் முதல்வராக இருந்த இவர், மஞ்சரி மொழியாசிரியர் குழுவிலும் ஒருவராக இருந்தார். இவர் ராமாயணம், பாரதம் போன்ற தொடர் பகுதிகளை எழுதி வந்ததோடு, மலையாளப் பத்திரிகைகளில் வெளியான சிறந்த விஷயங்களை மொழிபெயர்த்துக் கொடுத்துள்ளார்.

மோ.ஸ்ரீ.செல்லம்.
தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாத ஐயரவர்களிடம் தமிழ் பயின்ற மாணவர்களில் இவரும் ஒருவர். இவரும் மஞ்சரி மொழியாசிரியர் குழுவில் இருந்துள்ளார். இவருடைய மனைவி திருமதி சீதாதேவி, தெலுங்கு, கன்னட மொழிகளில் புலமை பெற்றவர். அவற்றில் இருந்து சிலவற்றை இவர் மஞ்சரிக்காக மொழிபெயர்த்துள்ளார்.

திருமதி குமுதினி மற்றும் திருமதி கௌரி அம்மாள்
ஆங்கிலத்திலும் சம்ஸ்கிருதத்திலும் புலமை கொண்ட குமுதினி, மற்றும் கௌரி அம்மாள் இருவரும் குடும்பப் பாங்கான நாவல்களை, கதைகளைப் படைப்பதில் வல்லவர்களாக இருந்தனர். காஞ்சி மகாசுவாமிகள் மற்றும் மகான் ஸ்ரீ ரமணர் ஆகியோரிடம் உரையாடி, அவ்வப்போது பெற்றபதில்களைக் கொண்டு இரண்டு தொடர்களை எழுதியுள்ளனர்.
இவர்களோடு டி.வி.பரமேஸ்வரன் மற்றும் ஆர்.வெங்கட்ராமன் ஆகியோரும் மொழியாசிரியர் குழுவில் இருந்துள்ளனர்.
 
Copyright © 2013 செங்கோட்டை ஸ்ரீராம்
Shared by Alahappa Grafix