சுடச்சுட:

ஆலயங்கள்

இலக்கியம்

ஆன்மிகம்

வியாழன், ஜூன் 12, 2014

திருப்பமாவது... ஒண்ணாவது...!?



என் நம்பிக்கையை சிதைத்த நாயகர் இவர். அதற்காக இவருக்கு ஒரு தூற்றி!
அட இவருக்குத்தான் என்னவெல்லாம் தலைப்பு கொடுத்து கட்டுரை எழுத வேண்டியிருக்கிறது? திருப்பம் தரும் திருப்பட்டூர் ('தினாவுக்குதினா !?) தலையெழுத்தை மாற்றி அருளும் பிரம்மா!..... இப்படி சில பல கவர்ச்சிகர தலைப்பு கொடுத்து எழுதி...!!??
சென்ற வருடம் மார்ச் 14ல் இவரைப் போய் தரிசித்து மனக்குறை கொட்டி வந்தேன். கற் பிம்பமாய் சலனமற்று இருந்த இந்த பிரம்மா, அதே மஞ்சள் பொடி பூசி, ஆழ்ந்த மயக்கத்தில் கிடந்தார் போலும்!
தெய்வம் என்று உயரத்தில் வைத்திருக்கும் அவர் ஏமாற்றினாலும், மனித நிலையில் இருக்கும் நானோ எந்த மாற்றமுமின்றி இவரைப் பற்றி போற்றி எழுதினேன்...


நாளைக்கு குரு பெயர்ச்சியாம். இவுஹளுக்கு பெசல் பூசையெல்லாம் செய்யிதாவளாம்...! செய்தி வேற போட்டிருக்கு!

ஜூன் 13-ல் பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் குரு பெயர்ச்சி

பெரம்பலூர் பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் குரு பெயர்ச்சி விழா வெள்ளிக்கிழமை (ஜூன் 13) நடைபெறுகிறது.

குரு பகவான் மிதுன ராசியிலிருந்து கடக ராசிக்கு ஜூன் 13-ம் தேதி மாலை 5.57 மணிக்கு பெயர்ச்சி அடைகிறார். இந்த குரு பெயர்ச்சியை முன்னிட்டு மேஷம், ரிஷபம், கடகம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம் ஆகிய ராசிக்காரர்கள் பரிகாரம் செய்து கொள்ள கோயிலில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
---------------------------

அதாகப்பட்டது... குரு-பகவானுக்கு இவுஹ அதிதேவதையாம்! ஆவையினாலே... குருவுக்கு செய்யிற பூசையை எல்லாம் இவுஹளுக்குச் செய்யலாமாம்!
இப்டி ஒரு சங்கதியை அந்தக் காலத்துல சோசியக்காரப் பயலுவ... ஏற்படுத்தி வெச்சிட்டானுவ!
அந்தக் காலத்துல எல்லாம் எல்லா எடத்துலயும் நவகிரக சந்நிதி இருக்க வாய்ப்பிருந்துருக்காதுல்லா...! அதான்... எதுனா பரிகாரம்னு எவனாச்சும் போய் நின்னா.. இந்த சோசியக் காரனுவ... எலேய் அங்கிட்டு இந்த சிவங்கோயில் இருக்குல்லா... அங்கன போய் தச்சினாமூத்திக்கு அர்ச்சனய செஞ்சிட்டு வா... எல்லாம் சரியாப்போயிடும்னு... சொல்லி வெச்சிருப்பானுங்க...
ஏன்னா... குரு'பகவானுக்கு அதிதேவதை, பிரத்யதிதேவதைன்னு தட்சிணாமூர்த்தியையும் (தென்முகக் கடவுள்) அதான்... இந்த பிரம்மாவையும் ஆக்கி வெச்சிருக்காங்க..
இந்த ஆளுக்கு... அதான் இந்த பிரம்மாவுக்கு மத்தவன் தலை எழுத்தை எழுதறதே வேலையாம்! ஆனா... இந்த கோயில் பிரம்மாவுக்கு தலை எழுத்தை மாத்தினதே நம்ம மாதிரி பேனா புடிச்சவன் எழுத்துதானோன்னு தோணுது!
ஆனா... சாதாரண மக்கள் இவ்ளோ தூரம் இவுரு மேல நம்பிக்கை வெச்சி கும்பிடப் போனா...  கல்லு மாதிரி அப்டியே இருக்குறாரே ஒழிய.. செயல் ஒண்ணுத்தையும் காணோம்! ஒரு வேளை நாம நம்பிக்கை வெச்சதுதான் தப்போ?
அப்டித்தான் தோணுது!
ஒரு கதை... சின்ன வயசில் கேட்டது....
ஒரு குரு. நன்றாக கதை பிரவசனம் செய்வார். ஒருநாள் அவருக்கு உடல் நலக் குறை. அவரால் எழுதிருக்க முடியவில்லை. ஆனால், கதை சொல்லப் போயாகணும்...
வேறு வழியில்லை. அப்போ ஒரு சீடன் ஆர்வமா வந்தான். குருவே இன்னிக்கு நான் போய் கதை சொல்றேன்னு!
சரின்னார் குரு.
அன்னிக்கு சொல்ல வேண்டிய கதையை பிரமாதமா இருந்து உருப் போட்டு, சொல்லிப் பாத்தான். எத்தனை பேர் கேட்பார்கள். எத்தனை பேர் நம்மை புகழ்வார்கள். ஆஹா.. பேஷ் பேஷ் எல்லாம் காதுல கேட்கும்....
இப்டி ஒரு கற்பனையில கதை நடக்கற கோயில் சந்நிதிக்கு போனான். அதிர்ச்சியும் பயமுமா கதை சொல்லி முடிச்சான்..  ஆச்ரமம் திரும்பினான்.
குரு கேட்டார்... என்ன? கதை சொன்னதுக்கு வரவேற்பு எப்டி?ன்னார்.
... நல்லாருந்தது. ஆனா கேட்டவாள்லாம் பிரம்மாவின் பாட்டிகளாச்சே!ன்னு குமுறிட்டு உள்ளே ஓடிட்டானாம்.
விவரம் புரிஞ்ச குரு சிரிச்சிட்டே, பய இன்னும் பக்குவப் படணும்னு யோசிச்சிட்டிருந்தாராம்.
அதென்னா... பிரம்மாவின் பாட்டிகள்!
பிரம்மாவுக்கு அப்பா விஷ்ணு. அதாவது... சயனத்தில் இருந்த விஷ்ணுவின் நாபிக் கமலத்தில் இருந்து பிரம்மா தோன்றினாராம். அந்த விஷ்ணு ஒருவாட்டி நரசிம்ம அவதாரம் எடுக்கயில... தூணைப் பிளந்து தோன்றினாராம். ஆகையினாலே... பிரம்மாவுக்கு பாட்டியானது அந்தத் தூணாம்.
இந்த சீடப் புள்ளையாண்டான் சொன்ன கதையை அந்த சந்நிதில இருந்த தூண்கள்லாந்தான் கேட்டுதாம்... ரொம்ப சமத்காரத்துடனே சீடன் சொன்னான். குரு கேட்டு சிரிச்சார்ன்னு ஒரு கதையை அவுத்து விடுவாங்க! 
இப்படியாக பாட்டி குணம் பேரனுக்கும் வரும்னு ஒரு சொலவடை நம்மூர் பக்கங்கள்ல இருக்கறதாலே... அந்த தூணுக்கு உள்ள குணமும் இந்த பிரம்மாவுக்கு வந்துட்டுதோன்னு சந்தேகமா இருக்கறதாலே....
யாருக்கும் நான் ரெக்கமெண்ட் செய்வதாக இல்லே! தலையெழுத்தை மாத்தி... திருப்பம் தந்து... விருப்பம் நிறைவேத்தி... அப்டி இப்டில்லாம் மாய்மால வார்த்தை ஜாலத்தையெல்லாம் இட்டு நிரப்பவும் தயாராயில்லே!
அவர் மீது நான் வைத்த நம்பிக்கையைக் காப்பாத முடியாத ஒரே காரணத்தாலேயே... அதுவும்... அட.. இந்தப் பையன் நம்மள பத்தி என்னவெல்லாம் புகழ்ந்து எழுதியிருக்கான்... எப்டில்லாம் பாராட்டி போற்றியிருக்கான்.. ஆனா, நாம அவன் வேண்டுதலை நிறைவேத்த முடியலியேங்கிற இயலாமை உணர்ச்சியில் கழுத்தில் கிடக்கிற பூமாலையையே சுருக்கு போட்டுக் கொண்டு இவுஹ தொங்கிவிடலாம்!
ஏற்கெனவே - பூலோகத்திலே உனக்கு கோயிலே இருக்கப்படாது; வழிபாடுல்லாம் இருக்கப்படாதுன்னு துர்வாச சாபமும், சிவபெருமான் சாபமும் சேர்ந்து தொரத்தறதுனாலே.... அதையும் மீறி ஏதோ ஓரிரண்டு இடங்கள்லே இப்டி தனியா உக்காந்து தியானம் தவம்னு இந்த பிரம்மா சந்நிதி கொண்டிருக்கறதாலே... அந்த சாபங்களையும் மீறி நம்ம சாப விமோசனத்துக்கு இந்த பிரம்மா கிட்டே நாம போய் முறையிடறதனாலே.... அட... ஒண்ணும் செய்யாம தேமேன்னு ரெண்டு கையையும் இறுக்கக் கட்டிட்டிருக்காரோன்னு தோணுது!
(பின் குறிப்பு:
*1: நம்ம மதத்துலதான் இப்டில்லாம் போற்றியோ தூற்றியோ சாற்றியோ பாடலும் வசனங்களும் கதைகளும் எழுத அனுமதி உண்டு. எத்தனையோ பெரியவர்கள் இதைச் செய்து காட்டி முன்னோடியாயிருக்கிறார்கள். நம்ம மனநிலைக்கு ஏத்தபடி சாமியைப் பேசுறதுக்கு உரிமையிருக்கற ஒரே காரணத்தாலேயே.... அந்த ஒன்றுக்காகவே.... அட... அதுக்காகவே நான் ஒரு ஹிந்துவாக இருப்பதில் பெருமைப் படுகிறேன். என்ன ஒரு சுதந்திரம்! என்ன ஒரு சனநாயகம்!
*2: இதற்காகத்தான் வைணவப் பெரியோர்கள், ஆலயங்களை பரிகாரக் கேந்திரங்களாக முன்னிறுத்தவில்லை. பக்தியை பேரம் பேசும் வியாபாரம் ஆக்கவில்லை!)
suriyan சொன்னது…


வைணவப் பெரியார்கள் மட்டுமல்ல எனக்குத்தெரிந்து எந்த சைவப் பெரியார்களும் கோவில்களை பரிகாரத்தலங்களாக கூறவில்லை. ஆன்மீகம் என்ற பெயரில் வியாபாரம் ஆரம்பித்ததன் விளைவு;

 
Copyright © 2013 செங்கோட்டை ஸ்ரீராம்
Shared by Alahappa Grafix