சுடச்சுட:

ஆலயங்கள்

இலக்கியம்

ஆன்மிகம்

வியாழன், செப்டம்பர் 19, 2013

தினமணி: பத்திரிகை வரலாறில் ஒரு விநோதம்!


தினமணி நாளிதழ் துவக்க வரலாற்றில் ஒரு புதுமை, வித்தியாசம், விநோதம்... என்ன வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளலாம்.
அது என்ன விநோதம் என்றால்... முதல் நாள் இதழ் வெளிவந்து அந்நாளே பத்திரிகை அலுவலகத்துக்கு விடுமுறை விடப்பட்டிருப்பதுதான். அநேகமாக முதல் நாள் இதழ் வெளிவந்த அன்று, மாலை அலுவலகத்தில் அன்றைய முதல் பத்திரிகையை பார்த்திருக்க அலுவலகப் பணியாளர்களுக்கு வாய்ப்பு கிடைத்திருக்காது என்று தோன்றுகிறது.
தமிழர்க்காக தமிழர் நடத்தும் நாளிதழ் என்ற கொள்கை முழக்கத்துடன் துவங்கியது தினமணி. ஆசிரியர்- தென்காசி டி.எஸ்.சொக்கலிங்கம் (நானும் அந்த ஊருதானுங்கோ).
பாரதி தினத்தில் செப்.11 அன்று (1934ம் வருடம்) துவக்க விழா கண்டு முதல் இதழ் வெளியானது. முதல் நாள் தலையங்கத்தில் பாரதி குறித்த நினைவு அஞ்சலி, செய்தி, பாரதி விழா குறித்த செய்திகள் எல்லாம் வந்துள்ளன. (தொடர்ந்த வருடங்களில் - செப்டம்பர் 11ம் தேதியை ஒட்டி ஓரிரு நாட்கள்- பாரதி விழா நிகழ்ச்சிகள் என அரைப் பக்கம், முக்கால் பக்கத்துக்கு செய்திகள் வெளிவந்துள்ளன)
அன்றைய முதல்நாள் தலையங்கத்தில், சற்று மேலே ஒரு குறிப்பு இடம்பெற்றுள்ளது.
------------------------
அறிவிப்பு:
விநாயக சதுர்த்தியை முன்னிட்டு “தினமணி” காரியாலயத்திற்கு நாளைக்கு விடுமுறை. அடுத்த இதழ் 13-9-1934 வியாழக்கிழமை வெளிவரும்.
- மானேஜர்
-----------------------
இந்தக் குறிப்புப் படி, 10ம் தேதி பணியாளர்கள் வேலை செய்து, 11ம் தேதி காலை இதழ் வந்திருக்கும். அன்றைய தினம் அதாவது 11ம் தேதி விடுமுறை விடப்பட்டிருந்தால், 12ம் தேதி இதழ் வெளிவந்திருக்காது, 13ம் தேதி தொடர்ந்து வெளியாகியிருக்கும்.
அல்லது, இந்தக் குறிப்பில் கண்டபடி, 11ம் தேதி மாலை ஆசிரியர் குழுவில் உள்ள சிலர் குறிப்பிட்ட அளவில் பணிகளைச் செய்து முடித்துவைத்து, 12ம் தேதி விடுமுறை எடுத்துக் கொண்டு, சில பணியாளர்களை வைத்து அச்சகத்தை ஓட்டியிருக்கலாம்.
அல்லது, விநாயக சதுர்த்தியை முன்னிட்டு காரியாலயத்துக்கு நாளை விடுமுறை என்று 11ம் தேதி அறிவிப்பு வெளியாகியுள்ளதால், 12ம் தேதி காலை விநாயக சதுர்த்தியை முடித்து, அன்று மாலை பணியாளர்கள் வந்து பதிப்புப் பணியைத் தொடங்கியிருக்கலாம்.
1934 செப்.11 அன்று பஞ்சாங்கப்படி, காலை 8 மணி வரை த்விதியை என்றும் பின்னர் திரிதியை என்றும் உள்ளது. எனவே அன்று மாலையே விநாயகர் சதுர்த்தி பூஜைக்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு, செப்.12 அன்று காலை சதுர்த்தி பூஜைகள் கொண்டாடப் பட்டிருக்கலாம்.
இதையெல்லாம் குறிப்பிடக் காரணம், இந்த வருடம் செப்.9ம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று, தினமணியின் 9ம் பதிப்பு விழுப்புரத்தில் தொடங்கப்பட்டது என்பதே! விநாயக சதுர்த்தி நாளில் என்றில்லாமல் அதற்கு முந்தைய நாளாக இருந்தாலும், விநாயக சதுர்த்தியை ஒட்டியும் (விழாக் கால நாளில்) பாரதி தினத்திலும் தினமணி உதயமானது என்பதும், அடுத்த 80 ஆண்டுகளில் அதே நாளில் தினமணி 9ம் பதிப்பைக் கண்டுள்ளது என்பதும் இதழியல் வரலாற்றில் குறிப்பிடத்தக்க ஒன்று!!!
 
Copyright © 2013 செங்கோட்டை ஸ்ரீராம்
Shared by Alahappa Grafix