சுடச்சுட:

ஆலயங்கள்

இலக்கியம்

ஆன்மிகம்

புதன், மே 22, 2013

சர்ச்சைகளே! உம் பெயர்தான் ஐ.பி.எல்.லோ..?



ஐபிஎல்லும் சர்ச்சைகளும் ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தைகள் போல் நீங்காமல் இருப்பது அதிசயம் ஒன்றும் இல்லை. சொல்லப்போனால், ஐபிஎல் போட்டிகள் தொடங்கப்பட்டதே சர்ச்சைகளின் பின்னணியில்தானே. தொடர் தோல்விகளால் இந்திய கிரிக்கெட் அணியின் மீதும், இந்திய கிரிக்கெட் வீரர்கள் மீதும், அவ்வளவு ஏன்... கிரிக்கெட் விளையாட்டின் மீதுமே ரசிகர்கள் தங்கள் கோபத்தையும் புறக்கணித்தல் எண்ணத்தையும் வெளிப்படுத்தியபோது, கபில்தேவ் என்ற ஆபத்பாந்தவன் ஐசிஎல் என்ற அமைப்பின் மூலம் மீண்டும் உயிர்கொடுக்க முனைந்தார். ஜீ டிவி தயவில் வர்த்தக ரீதியில் உள்ளூர் கவுண்டி கிரிக்கெட்கள் ஐசிஎல் என்ற பேனரில் மீண்டும் உலா வரத் தொடங்கியபோது, பணக்குவியலில் சுக போக வாழ்க்கையை  நடத்தி வந்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ஆடித்தான் போனது. தங்களுக்கு இதனால் பெரும் வர்த்தக இழப்பு வந்துவிடுமே என்ற கவலையில், கவாஸ்கரையும் கபில்தேவையும் மோத விட்டு, ஐசிஎல் அமைப்புக்கு எதிராக போட்டி அமைப்பையும் ஏற்படுத்தி, அதற்கு ஐபிஎல் என்ற நாமகரணமும் சூட்டி... எல்லாம் நடந்துவிட்ட பழங்கதைதான்!
இன்று பணம் பெருக்கெடுத்து ஆறாய் கடலாய் பொங்கி வழியும் ஒரே துறையாக ஐபிஎல் இருப்பது கண்கூடு! எங்கே பணம் மிதமிஞ்சிப் பெருக்கெடுத்துக் குவிகிறதோ அங்கே முறைகேடுகளும் சூதாட்டமும் சமூக விரோதச் செயல்களும் இயல்புதானே! ஐபிஎல் மட்டும் இதற்கு விதிவிலக்கா என்ன? தேர்ந்த நாடகமாக, மூன்று மணி நேரத்  திரைப்படமாக ஐபிஎல் டி20 போட்டிகள் உருவான பின்னே, திரைப்படங்களின் மவுசு எல்லாம் தூசாகிவிட்டது இந்த மே மாதங்களில்! பள்ளிப் பிள்ளிகளில் படிப்பு கெடுகிறது என்றார்கள் பெற்றோர்கள்! இளைஞர்களின் எத்தனை மணி நேர உழைப்பு வீணாகிறது என்றார்கள் சமூகத்தில் அக்கறை உள்ளவர்கள். இரவெல்லாம் விழித்திருந்து சிறுவர்கள் உடல் நலனைக் கெடுத்துக் கொள்கிறார்களே என்று வருத்தப்பட்டார்கள் வீட்டின் பெரியவர்கள். இதெல்லாம் யாருக்குக் கேட்கப் போகிறது..?
சூதாட்டம் பெரும் குற்றம்தான் நம் நாட்டில்! சீட்டுக் கட்டுகளை வைத்து ஆடுகின்ற சிறிய அளவாக இருந்தால் என்ன..? அல்லது ஐபிஎல்,.லில் லட்சக் கணக்கில் பணம் வைத்து ஆடும் பெரிய அளவாக இருந்தால் என்ன...? எல்லாம் குற்றம் தான்! ஆனால், இந்தியாவில் சூதாட்டத்தை சட்டபூர்வமாக்கினால் குற்றங்கள் குறைந்துவிடும் என்கிறார் ஒரு வெளிநாட்டு வீரர். இத்தகைய அறிவுரைகள் நம் நாட்டுக்கு ஒரு வெளிநாட்டு வீரரிடம் இருந்து தேவைதானா?
பணம் பண்ணுவது என்று வந்துவிட்டால், சூதாட்டமும், போட்டி பொறாமைகளும் தலைதூக்காமல் இருக்குமா? பாலிவுட்டில் எடுத்த பணத்தை மேலும் பெருக்கிக் கொள்ள நடிகர்களும் நடிகைகளும் தங்கள் திறனைக் காட்டி வருகிறார்கள் என்றால், இங்கே மலின அரசியல் களத்தில் ஏமாற்று வித்தைகளால் பணம் பெருக்கியவர்கள் டிவி., சினிமா, ஊடகம் என்று கால் பரப்பி ஒரு அணியை பேரம் பேசி எடுத்து நடத்துகிறார்கள் என்றால்..?
இருப்பதைப் பெருக்குவதும், சில நேரம் அதனை இழப்பதும் சூதாட்டத்தில் இயல்புதானே! அப்படித்தான் கொச்சி அணி காணாமல் போனது. டெக்கான் சார்ஜஸ் அணி பெயரும் சரி, உருவமும் சரி கரைந்து போனது. ஊடக உலகில் கோலோச்சிய நிறுவனம் திவாலாகும் அளவுக்கு உரு கரைந்து போனது!
இப்படியெல்லாம் பார்த்துவிட்ட சூதாட்ட ஐபிஎல் குழந்தைக்கு ஆறு வயதுதான் என்றாலும், அதன் அசுர வளர்ச்சி இந்த நாட்டையே கபளீகரம் செய்து விடுமோ என்று தேசப் பற்றாளர்கள் கவலை கொள்ளத் தொடங்கியிருக்கிறார்கள்! இந்த அசுரக் குழந்தையின் வளர்ச்சியைப் பார்த்தால் இதன் எதிர்காலப் பரிணாமம் எப்படி இருக்கும் என்பதை
ஐபிஎல் சீஸன் 1 முதல் போட்டி தொடங்கியபோது அனைவரும் ஆச்சரியப் பட்டார்கள். வீரர்களை ஏலம் எடுக்கும் விவகாரம், ஒப்பந்தம் என்ற பெயரில் அடிமை சாசனம் அளிப்பது, அதற்காக விலை போக மாட்டோமா என்று வீரர்கள் ஏங்குவது.. எல்லாம் இந்தியாவுக்குப் புதிதுதான்!
வெளிநாட்டு வீரர்களின் எல்லையற்ற எதிர்பார்ப்பு, அவர்களுக்குக் கிடைத்த வரவேற்பு, இந்திய வீரர்களே ஊர் ஊராக, அணி அணியாக, மாநிலம் மாநிலமாகப் பிரிந்து போய் நின்ற காட்சி  இந்தியர்களுக்கு ஆச்சரியமாகத்தான் இருந்தது.
ரஞ்சி டிராபி போட்டிகளும், கவுண்டி போட்டிகளும், மண்டல அணிகளாகப் பிரிந்து மோதிய போது இல்லாத பிரிவினை எண்ணங்கள் எல்லாம், ஐபிஎல் துளிர்விட்டபோது, கூடவே மக்கள் மனங்களில் துளிர்விட்டன. காரணம், இந்தியாவில் கிரிக்கெட்டும் தேசபக்தியும் பிரிக்க முடியாமல் போய்விட்டதுதான்!
கிரிக்கெட் என்னும் விளையாட்டுக்குக் கொடுக்கும் மரியாதை ஏதோ, நாட்டின் போர்களுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவமாக மாறிப்போன இந்தியாவில், மாநில உணர்வுகளோடு இந்திய தேசிய உணர்வு சிதைந்து போனபோது வருத்தப்படாத நெஞ்சமே இல்லை!
இதற்கு முதல் வித்தாக அமைந்தது -  முதல் ஐபிஎல் போட்டியில் வீரேந்திர சேவாக் மீது கல் எறிந்த நிகழ்ச்சி!
அது 2008 மே 16. முகமெங்கும் பூரிப்புடனும் மகிழ்ச்சிப் பெருக்குடனும் களத்தில் நின்று கொண்டிருந்த டில்லி அணியின் கேப்டன் வீரேந்திர சேவாக், தனது சொந்த மைதானத்தில் சொந்த மக்களால் கல்லடி பெற்றார் என்றால்...? ஆம்.. பெரோஷ் ஷா கோட்லா மைதானத்தில், அன்றைய டெக்கான் சார்ஜஸ் அணியை 12 ரன் வித்தியாசத்தில் பந்தாடி, வெற்றிப் பாதையில் சென்றது டெல்லி அணி. அன்றைய போட்டிக்குப் பிந்தைய செய்தியாளர் சந்திப்பில், வெற்றி பூரிப்பு முகத்தில் தெரிய உற்சாகமாக இருக்க வேண்டிய சேவாக், வருத்தத்தின் உச்சத்தில் காணப்பட்டார். காரணம் அன்றைய 19 வது ஓவரின் போது, களத்தில் எல்லைக்கோட்டின் அருகே நின்று கொண்டிருந்த சேவாக் மீது கல்லை எறிந்து காயப்படுத்தியிருந்தனர் சிலர். உடனே நடுவர் பிரைன் ஜெர்லிங்கிடம் புகார் அளித்த சேவாக், "டெல்லியில் டெல்லி அணி ஆட்டக்காரர் மீது, அதுவும் டெல்லிக்காரரான ஓர் இந்தியர் மீது, கல்லை எறிந்தது துரதிருஷ்ட வசமானது” என்று எச்சரிக்கை மணி அடித்தார்.
அடுத்து, 2008 ஏப்.25ல் ஹர்பஜனுக்கும் ஸ்ரீசாந்துக்கும் இடையே நடந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க களப் போர், இந்திய ரசிகர்களை பெரிதும் காயப்படுத்தியது என்றே சொல்ல வேண்டும். மும்பை அணிக்காக ஆடிய ஹர்பஜன், பஞ்சாப் அணிக்காக ஆடிய ஸ்ரீசாந்த்.. இருவருமே உணர்ச்சி வசப்படுபவர்கள்தான்! ஆனால், அதனை அனைவர் முன்னிலையிலும் களத்தில் காட்டியது, மற்றவர் உணர்ச்சியைத் தட்டியெழுப்பிவிட்டது. இந்திய வீரர்களாக ஒற்றுமையுடன் செயல்பட வேண்டிய இருவரும், பஞ்சாப் அணி 66 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பெருமிதத்தில் ஸ்ரீசாந்த் வாயெடுக்க, தோல்வி சோகத்தில் ஹர்பஜன் கையெடுக்க, ஸ்ரீசாந்தின் கன்னத்தில் ஓர் பளார் அறை விட்டு ஹர்பஜன் தன் வீரத்தைக் காண்பித்து விட்டார். விளைவு - அடுத்து வந்த 11 போட்டிகளில் ஹர்பஜனுக்கு தடை! அழுது தீர்த்த ஸ்ரீசாந்த், மீடியாக்களின் வெளிச்சத்தில்! அனுதாபம் கிடைப்பதற்குப் பதிலாக அறுவெறுப்புதான் மிஞ்சியது!
அதே வருடம் ஏப்.19. மொஹாலி, சென்னை அணிகளுக்கு இடையிலான முதல் போட்டியின் துவக்க நிகழ்ச்சி.  சியர்லீடர்ஸ் என ரசிகர்களை உற்சாகப் படுத்தும் பணிக்கு அமர்த்தப்பட்ட பெண்களில் இருவர் கருப்பாக இருக்கின்றனர் என்ற நிறவேறுபாடு காரணத்தால், மேடையில் அவர்களுக்கு இடம் கொடுக்காமல், கீழே இருத்தி வைத்தது. இந்தச் சர்ச்சை இந்தியாவில் எழுந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது! மொஹாலி அணிக்காக விஸ்க்ராப்ட் இண்டர்நேஷனல் நிறுவனத்தால் பணி அமர்த்தப்பட்ட அந்தப் பெண்கள் இருவரும்,  மொஹாலி மைதானத்தை விட்டே வெளியேறச் செய்த கொடுமையும் நடந்தது!
ஐபிஎல் சீஸன் 2ல் கோல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி உரிமையாளர் ஷாருக் கான் தன் அணி பங்குகளை விற்பனை செய்வது தொடர்பாகப் பேசியதில் எழுந்த சர்ச்சை, தொடர் பிரச்னைகளால் தவித்த கோல்கத்தா அணியில் விளையாட்டு வீர்ர்களிடம் இன வேற்றுமை பாராட்டிய புகார், அதற்கு முன்னாள் இந்திய வீரர் அஜய் ஜடேஜா தன்னிடம் ஆதாரம் இருப்பதாகக் கூறியது, அப்போதைய கேப்டன் கங்குலியை குறிவைத்து புகார் கூறப்பட்டது. அவர் அணியில் பிளவு ஏற்படுத்தினார் என்றார் ஜடேஜா.
ஐபிஎல் சீஸன் 3 சோகமான தொடராக அமைந்துவிட்டது. ஐபிஎல் தலைவர் லலித் மோடியால் வெடித்த விவகாரம் அது. கிரிக்கெட் வாரியம் லலித் மோடியை நீக்கியதுடன், கிரிக்கெட் நிர்வாகத்துக்கு பெரும் அவப்பெயரைத் தந்து விட்டார் என்று வர்ணித்தது. அடுத்து, 2010 ஏப்.23ல் ஐபிஎல் போட்டிகளின் ஒளிபரப்பு உரிமையை வைத்திருந்த வோர்ல்ட் ஸ்போர்ட்ஸ் க்ரூப்புக்கும் சோனி மல்டி ஸ்கிரீன் மீடியாவுக்கும் ஒளிபரப்பு தொடர்பாக நிகழ்ந்த சண்டைகள்! ஏப்.22ல், அரசியல் தொடர்பான சர்ச்சைகள் எழுந்தன. ஐபிஎல்லில் ஆதிக்கம் செலுத்திய வேளாண் துறை அமைச்சர் சரத் பவார், விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் பிரபுல் படேல், சசி தரூர் ஆகியோருக்கு இடையே நிகழ்ந்த பிரச்னைகள் பெரிதும் எதிரொலித்தது.
ஏப்.20ல் லலித் மோடியின் உறவினருக்கு எங்கள் அணியில் எந்தவித மறைமுகப் பங்குகளும் இல்லை என்று ராஜஸ்தான் ராயல்ஸ் உரிமையாளர் மனோஜ் படாலே கூறியதால் எழுந்த சர்ச்சை! 
ஏப்.19ல் ஐபிஎல்- இணையதளத்தில் அதிகாரபூர்வ பெயராக லலித் மோடியின் பெயர் இருந்ததும், அணி உரிமையாளர்களின் பெயர்கள் மறைக்கப்பட்டதும் சர்ச்சையைக் கிளப்பியது. பிசிசிஐக்கும், ஐபிஎல்லுக்கும் என்ன தொடர்பு எனக் கேள்வி எழுப்பினார் ராஜஸ்தான் கிரிக்கெட் அசோஷியேஷன் செயலாளர் சஞ்சய் தீக்‌ஷித். மேலும், 2005-2008 வரை மட்டுமே தலைவராக இருந்த லலித் மோடியின் பெயர் ரூ.800 கோடி மதிப்புள்ள ஐபிஎல் இணையதளத்தில் தொடர்ந்து இடம்பெறுவது ஏன் என்றும் சர்ச்சையைக் கிளப்பினார்.
அதே நாளில் சசிதரூர் அமைச்சரவையில் இருந்து வெளியேற்றப்பட்டார். அரசு அதிகாரத்தை தனது தனிப்பட்ட வியாபாரத் தொடர்புகளுக்குப் பயன்படுத்திக் கொண்ட குற்றச்சாட்டைத் தொடர்ந்து இந்த நடவ்கை மேற்கொள்ளப்பட்டது. கொச்சி டஸ்கர்ஸ் அணி பங்குகளை மனைவி பெயரில் வாங்கிய குற்றச்சாட்டின் கீழ் சசி தரூர் பெரும் சர்ச்சையை அந்த ஆண்டில் கிளப்பியிருந்தார். இவை எல்லாம் அரசியல்வாதிகளால் கிளம்பியது என்றால், அணி உரிமையாளர்களோ தேசியத்தின் மடியில் கைவைத்தனர்.
2010 மார்ச் 22ல் பஞ்சாப் அணியின் உரிமையாளரும் பாலிவுட் நடிகையுமான பிரீத்தி ஜிந்தா, அதன் இன்னொரு உரிமையாளர் நெஸ் வாடியா இருவருக்கும் எதிராக ஐபிஎல் அணி விளம்பரங்களில் பகத் சிங், ராஜகுரு உள்ளிட்ட விடுதலைப் போராட்ட வீரர்களின் படங்களைப் பயன்படுத்தியது தொடர்பாக சண்டிகர் நீதிமன்றம் சம்மன் அனுப்பிய விவகாரம் பெரிதும் பேசப்பட்டது. மக்களின் உணர்வுகளை காயப்படுத்தியதாக எழுந்த சர்ச்சை அது!
அதே ஆண்டு பிப்ரவரியில், சிவ சேனாத் தலைவரான பால்தாக்கரே, ஆஸ்திரேலிய வீரர்களை மும்பை மண்ணில் விளையாட அனுமதிக்க மாட்டேன் என்றார். ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் வரிசையாகத் தாக்கப்பட்டு வருவதால், ஆஸ்திரேலியர்கள் விளையாட வந்தால் ஐபிஎல் நடத்த விட மாட்டோம் என்றார் அவர். இருப்பினும் பின்னர் இந்திய சகோதரர்கள் ஆஸ்திரேலியாவில் வசிப்பதால், இந்த முடிவைக் கைவிடுவதாக அறிவித்தார்.
அதே நேரத்தில், கோல்கத்தா அணி உரிமையாளர் ஷாருக் கான், பாகிஸ்தான் வீரர்களுக்கு தனி சலுகைகளைக் காட்டுவதாக பால் தாக்கரே கூறிய குற்றச்சாட்டும் பெரிதும் எதிரொலித்தது. 
ஐபிஎல் சீஸன் 4ல் பிசிசிஐயுடன் கொச்சி டஸ்கர்ஸ் அணி வைத்திருந்த உறவு பொசுங்கிப் போனது. பண விவகாரத்தால், கொச்சி அணி நீக்கப்பட்டு, இனி ஐபிஎல் சீஸன் 5 முதல், 9 அணிகளே விளையாடும் என்று அறிவிக்கப்பட்டது.
ஐசிஎல்லுக்குப் போட்டியாகத் தொடங்கப்பட்ட ஐபிஎல் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, ஐசிஎல் நடத்தும் போட்டிகளுக்கு மைதானங்களைத் தரக்கூடாது என்று பிசிசிஐ விதித்த கட்டுப்பாடு. அதைத் தொடர்ந்து ஐசிஎல் அமைப்பைத் தடை செய்தது, ஐசிஎல் அமைப்பில் இருக்கும் விளையாட்டு வீரர்கள் பிசிசிஐயின் அணியில் இடம்பெற இயலாது என்ற அறிவிப்பு எல்லாம் சர்ச்சையோ சர்ச்சைகள்தான்! தாங்கள் உருவாக்கிய அமைப்பு என்பதால் பிசிசிஐ, ஐபிஎல்லை மட்டுமே முன்னிறுத்துவது என்று முடிவானது. அதற்காக ஐசிஎல் குறித்து மோடி சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு கடிதம் எழுதிய விவகாரம், அதே வருடத்தில் ஐபிஎல் ஆணையர் பதவியில் இருந்து லலித் மோடி கழற்றிவிடப்பட்ட விவகாரம் எல்லாம் ஐபிஎல்லின் பணத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் மகிமையைப் பறை சாற்றியது.
அதே ஆண்டில், ஐபிஎல் அணிக்காக தேசிய அணியில் இடம்பெறாமல் தவிர்க்க எண்ணிய காம்பிரின் செயல்பாடு, அந்த வருடத்தில் மிக அதிகத் தொகை கொடுத்து வாங்கப்பட்ட காம்பிர், மேற்கு இந்தியத் தீவுகள் சுற்றுப் பயணத்தில் தேசிய அணியில் இடம்பெறாமல் விட்டது எல்லாம் வீரர்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தியது. உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் காயம் பட்டபோதும், காயத்துடன் ஐபிஎல் போட்டியில் விளையாடுவேன் என்று காம்பிர் அடம்பிடித்தது... அப்போது, காம்பிரின் உடல் காயம் குறித்த மருத்துவ அறிக்கை கூட விவாதப் பொருளானது.
2011 மே மாதத்தில் தென் ஆப்பிரிக்காவில் இருந்து மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பெற்ற சியர்லீடர் பெண் ஒருவர், பின்னணியில் நடைபெற்ற தனிப்பட்ட அந்தரங்க விஷயங்களைக் குறித்து இணைய வலைப்பூவில் தகவல் வெளியிட்டார் என்பதற்காக அவர் நாட்டுக்கே திருப்பி அனுப்பப் பட்டார். அப்போது அவர், நான் பார்த்த அளவில், கிரிக்கெட் வீரர்கள்தான் விளையாட்டு வீரர்களிலேயே அறிவிலிகளாகவும் மோசமான நடத்தையாளர்களாகவும் அறிகிறேன் என்று குறிப்பிட்டிருந்தார்.
ஐபிஎல் சீஸன் 5ல், அனைவரையும் உலுக்கிய சர்ச்சையாக அமைந்தது, பெங்களூர் அணியில் இடம்பெற்ற ஆஸ்திரேலிய வீர்ர் லுக் போமர்ஸ்பெக்கின் செயல். இந்திய அமெரிக்கரான பெண் ஒருவர், தில்லி ஹோட்டல் மௌர்யா ஷெர்ட்டனில் இருந்தபோது, தவறாக நடந்துகொண்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அளவுக்கு போமர்ஸ்பெக்கால் தாக்கப்பட்டார் என்று கிளம்பிய சர்ச்சை. அவருக்கு ஐபிசி சட்டப்படி தண்டனையும் வழங்கப்பட்டது.
2012 மே 18ல் கோக்கத்தா அணியின் உரிமையாளர் ஷாருக் கான் வெற்றிக் களிப்பில் மும்பை வாங்க்டே மைதானத்தில் ரகளையில் ஈடுபட்டு அதிகாரிகளை கேவலப்படுத்தினார் என்பதால், அவருக்கு மைதானத்துக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டது.
மே 15ல் ஐந்து வீரர்கள் மீது ஸ்பாட் பிக்ஸிங் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. டெக்கான் சார்ஜஸ் அணியின் டிபி சுதிந்திரா, புனே அணியின் மோனிஷ் மிஸ்ரா, பஞ்சாப் அணியின் அமித் யாதவ் மற்றும் சுலப் ஸ்ரீவஸ்தவா, தில்லியைச் சேர்ந்த அபினவ் பாலி ஆகியோர் மீது ஸ்பாட் பிக்ஸிங் புகார்கள் முன்வைக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து முறைகேடுகளைக் களைய குழு அமைக்கப்பட்டது. தொடர்ந்து தனியார் தொலைக்காட்சி ஒன்று ஸ்டிங் ஆபரேஷன் என்ற முறையில், ஸ்பாட் பிக்ஸிங்கை அம்பலப்படுத்தியது.
ஏப்.18ல் நடந்த கோல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில், பஞ்சாப் அணியின் உரிமையாளர் ப்ரீத்தி ஜிந்தா, தனது அணியின் பேட்ஸ்மென் ஷான் மார்ஷ் ஆட்டம் இழந்த விதம் குறித்து நடுவருக்கு தன் அதிருப்தியைத் தெரிவிக்கும் விதத்தில் ஸ்ட்ராடஜிக் டைம் அவுட் நேரத்தின் போது, நடந்து கொண்டது, அதைத்தொடந்து, நடுவருக்கு விளக்கம் எதிர்பார்த்து ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா அறிக்கை அனுப்பியது எல்லாம் சர்ச்சை மயமே!
இது அல்லாமல், முனாப் படேல், ஹர்பஜன் சிங் ஆகியோர் சூடான பேச்சுகளால் மைதானத்தில் சண்டையிட்டது போன்ற செயல்களுக்கு அபராதமும் கண்டனமும் விதிக்கப்பட்டது சாதாரண நிகழ்வாகிவிட்டது.
ஏப். 8ம் தேதி, பஞ்சாப் அணியினர் அறையை சேதப்படுத்திவிட்டார்கள் என்று கூறி, மகாராஷ்டிர கிரிக்கெட் அசோஷியேஷன் புகார் பதிவு செய்தது போன்ற சம்பவங்களும் ஐபிஎல்லின் பாரம்பரியத்தை தொடர்ந்து கொண்டு செல்லும் போலும்!
 
Copyright © 2013 செங்கோட்டை ஸ்ரீராம்
Shared by Alahappa Grafix