சுடச்சுட:

ஆலயங்கள்

இலக்கியம்

ஆன்மிகம்

ஞாயிறு, பிப்ரவரி 17, 2013

இறை அடியார்க்கு மட்டிலுமே சாதி சாகிறது



உண்மைதான்! ஆயிரம்தான் சாதி ஒழிப்பு மாநாடும் சமத்துவ புரங்களும் ஏற்படுத்தினாலும் 'அடிமனத்திலிருந்து உண்மையாக ' ஏற்படுத்தாமல் ஓட்டு வங்கிக்காக பேசப்படும் காரணத்தால் தொடரும் இன்றைய நிலையைப் பார்த்து வருகிறோம். நாத்திகம் பேசினாலோ, மதமாற்றம் செய்தாலோ சாதி வேறுபாடு ஒழிந்துவிடுமா?

சைவமும் வைணவமும் தழைத்தோங்கிய தமிழகத்தில் இறை உணர்வுக்கு ஆட்பட்ட அடியார்களுக்கு மட்டுமே சாதி தொலைந்திருக்கிறது. வெளி வேஷதாரிகள் சுயநலமிகளாக இருந்தனர் என்பதை ஒதுக்கி விட்டு இறையடியார் வாழ்வையே நாம் உதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

அப்படி எத்தனையோ அடியார்கள் இருந்து உணர்த்திய போதிலும் வைணவ மார்க்கம் பாரதமெங்கும் தழைக்கச் செய்த மகான் ராமானுஜரின் வாழ்வு உணர்த்திய விதம் வெள்ளிப்படையானது. அவர் வாழ்வின் இரண்டு உதாரண வெளிப்பாடுகள்...

உறையூர் சோழராஜாவிடம் மெய்க்காப்பாளனாக இருந்தவர் பிள்ளை உறங்காவில்லி. அவர் மனைவி பொன்னாச்சியார். மிகுந்த அழகுள்ளவர். அவர் கண்ணழகில் மயங்கிய பிள்ளை உறங்காவில்லி, வெளியே ஊழியத்துக்குப் போகும் போதும் பிரிய மனமின்றி உடனழைத்துச் செல்வார். அதுவும் வெயிலில் மேனி கறுக்கக் கூடாதென்பதால் குடை பிடித்துக்கொண்டு போவார். மனையாளின் அழகு அவரை அப்படி மயக்கியிருந்தது. அதனால் மனையாளின் பின்னே சேவகனாய்ச் சென்ற இவரை ஊரார் கேலி பேசியதில் வியப்பில்லையே?

ஒரு நாள் நண்பகல். காவிரிக் கரையில் மகான் ராமானுஜர் தம் சீடர்களுடன் இருக்கும் போது பொன்னாச்சியார் பின்னே சென்ற பிள்ளை உறங்காவில்லியின் செயலைக் கண்டார். இப்படியோர் பெண்பித்தரோ? என்று வியந்து, அவரைத் திருத்திப் பணிகொள்ள எண்ணினார். தம் சீடர்களிடம் அவரை அழைத்து வரச் சொன்னார். வந்தவரிடம் அவர் செயல் குறித்து வினவ, அவரோ இவள் கண்ணழகில் ஈடுபட்டு இப்படிச் செய்கிறேன் என்றார். எம்பெருமானார் பிள்ளை உறங்காவில்லியிடம் சொன்னார்... இதுவோ அழிந்துவிடும் அழகு. நிலையில்லாதது. நிலையான, இதைக் காட்டிலும் பேரழகை உமக்குக் காட்டுகிறேன்... கண்டால் நீர் இனி இச்செயலை விட்டுவிடுவீரோ? என்றார்.

சொல்லிவிட்டு, திருவரங்கம் அரங்கனின் சன்னதி நோக்கி அழைத்துச் சென்றார். அரவணைத் துயிலும் அரங்கனின் பேரழகை , கண்ணழகைக் காட்டி, அந்த அழகை அனுபவிக்கும் உணர்வையும் ஆனந்தத்தையும் அவருக்கு ஊட்டினார். அரங்கன் காட்சி கண்ட அக்கணமே பிள்ளை உறங்காவில்லி, எம்பெருமானார் அடிபணிந்து தாசரானார். அவருக்கு ஞான பக்தி வைராக்கியங்கள் வளர்ந்தன.

பங்குனி பிரம்மோற்சவ தீர்த்த வாரி சமயம் நீராடப் போகும் போது. முதலியாண்டான் என்ற சீடர் கரம் பற்றி நீராடப் புகுவார் ராமானுஜர். நீராடி முடித்து கரையேறும்போது பிள்ளை உறங்காவில்லி தாசரின் கரம் பற்றி எழுவார். இது வர்ணாசிரம தர்மத்திற்கு விரோதமானது என்றும் பிராமணன், கீழ்குலத்தோனைத் தொடுவது தவறல்லவோ என்று கூறி சீடர்கள் ராமானுஜரின் செயலுக்கான காரணத்தைக் கேட்டனர். அதற்கு அவர் இப்படி பதிலளித்தார்...

எத்தனை தான் ஞானம் பெற்றாலும் உயர்குலத்தில் பிறந்தோம் என்ற எண்ணமே ஆணவமாக நின்று, இறைவனை அடையும் நிலையான அடியார்க்கு அடிமை என்ற நைச்யம் (தாழ்ந்த நிலை) பெற முடியாமல் போய் விடுகிறது. எனவே இப்பிறவியால் உண்டான அகங்காரத்தை, அகங்காரமே சிறிதுமற்ற இந்த அடியவரைத் தீண்டி உடல் சுத்தி செய்து கொள்கிறேன்... என்றார்.

பிறப்பின் பெருமையால் ஒருவன் அகங்காரம் கொள்வதோ, அல்லது மனத்தாழ்ச்சி கொள்வதோ தகாது. இறைவனை அடைய விரும்பும் ஒவ்வொரு ஆன்மிக உள்ளமும் மகான் ராமானுஜரின் இந்த உபதேசத்தை மனத்தில் கொள்ள் வேண்டும்.

பிள்ளை உறங்காவில்லி தாசரின் இந்தக் கதையிலிருந்து இன்னொரு செய்தியும் நமக்குக் கிடைக்கிறது. பிள்ளை உறங்காவில்லி மனையாளின் பின்னே மோகத்தால் சுற்றி வந்தார். எம்பெருமானார் அவரை அரங்கனிடம் ஆற்றுப்படுத்திய பிறகு, சோழராஜனிடம் செய்து வந்த சேவையை விட்டு, அரங்கன் மேல் பக்தியும் அன்பும் கொண்டு கையில் வாளேந்தி பெருமாளின் விக்கிரகத்திற்குப் பாதுகாவலாய் செல்லத்தொடங்கினார்.
இவர் பரமபதித்த போது, அவருடைய திருமேனிக்கு பொன்னாச்சியார் கண்ணீர் உகுக்காமல் சடங்குகளை உடனிருந்து ஆற்றினார். அத்திருமேனி கொண்டு செல்லப்பட்டு அவர் பார்வையிலிருந்து மறையும் வரை இருந்து, மறைந்ததும் தன் உடலை விட்டு உயிர் பிரியப் பெற்றார். இந்த ஆச்சர்யத்தை அறிந்து இரு திருமேனிகளையும் ஒன்றாய்த் தகனம் செய்தார்கள்.

இருவரும் கொண்ட அன்பின் ஆழம் அத்தகையது. பிள்ளையுறங்காவில்லி மனைவிதாசனாய் இருந்தபோது மனைவியின் பின் இவர் சென்றார். அவரே அரங்கன் தாசனாய் ஆனபின்பு, பொன்னாச்சியார் இவர் பின்னே சென்றார். இறை பக்தியின் பெருமை அத்தகையது. இதற்குக் காரணமாக இருந்தது, எம்பெருமானாரின் திருவுள்ளம்.

ராமானுஜரின் இன்னொரு வாழ்வியல் செய்தி....

ஆளவந்தாரின் எண்ணப்படி ராமானுஜருக்கு பஞ்ச சம்ஸ்காரங்கள் செய்து வைத்த பெரிய நம்பிகள், தம் ஆசார்யரான ஆளவந்தாரின் இன்னுமொரு சீடரான (தாழ்குலத்தைச் சேர்ந்த) மாறனேரி நம்பிக்கு, ராஜபிளவை என்ற புண்ணைக் கழுவி மருந்திட்டு, உணவும் அளித்து வந்தார். இதனால் ஏற்பட்ட பிராமணர்கள் நிந்தையை அவர் பொருட்படுத்தவில்லை. மாறனேரி நம்பி திருநாடு அலங்கரித்த போது, ஞானத்தால் சிறந்த அந்தணர்க்குரியதான ப்ரஹ்மமேத சம்ஸ்காரம் என்ற சிறந்த நிலையால் பள்ளிப்படுத்தினார். இதற்கு, வர்ணாஸ்ரம தர்மத்தை மீறி இப்படிச் செய்யலாமோ? என்று பெரிய நம்பிகளிடம் ராமானுஜர் கேட்டார்.

அதற்கு பெரிய நம்பிகள், ""சாமான்ய தர்மத்தை நிலை நாட்டுகிற சக்ரவர்த்தித் திருமகனான ராம பிரான், பறவைகளின் அரசனான ஜடாயுவுக்கு இந்த சம்ஸ்காரத்தைச் செய்தாரே! அவரிலும் நான் பெரியனோ? அல்லது ஜடாயுவைக் காட்டிலும் மாறனேரி நம்பி சிறியரோ? இது கிடக்கட்டும். சாமான்ய தர்மத்தைக் கொண்ட யுதிஷ்டிரன் விதுரருக்கு இதைச் செய்யவில்லையா? தர்மபுத்திரரைக் காட்டிலும் நான் பெரியவனோ? அல்லது விதுரரைக் காட்டிலும் இவர் சிறியவரோ? சரி இதுவும் இருக்கட்டும்... ஆழ்வார், "பயிலும் சுடரொளி" என்ற பதிகத்திலும், "நெடுமாற்கடிமை" என்ற பதிகத்திலும் பாகவதர்களின் சிறப்பைக் கூறி, "எம்மையாளும் பரமர்" என்றும், "எம் தொழுகுலம் தாங்களே" என்றும் கூறியவை எல்லாம் வெற்று வார்த்தைகளேயோ? அவை அனுஷ்டிக்கத் தக்கவை அன்றோ?'' என்று சொல்லி, (தாழ்குலத்தோராயினும்) பாகவத உத்தமர்கள் எவ்வகையிலும் சிறப்பிக்கப்பட வேண்டியவர்களே என்று கூறி நிலைநிறுத்தினார்.

இது எம்பெருமானாருக்குத் தெரியாததல்ல! ஆயினும் தகுந்த பெரியோர் மூலமாக, தம்மைச்சேர்ந்தவர்களுக்கு உணர்த்த வேண்டும் என்ற அவாவினால் இப்படியோர் நிகழ்வை நிகழ்த்தினார்.

பாகவத உத்தமர்களுக்குள்ளே சாதியால் உயர்வு தாழ்வு இல்லை என்பதே ராமானுஜரின் இவ்விரு வாழ்வியல் செய்திகளும் சொல்லும் உண்மை...

கி.பி.1017 இல் அவதரித்த மகான் ராமானுஜரின் ஆயிரமாவது பிறந்த நாள் உற்ஸவங்கள் கொண்டாடப்படவுள்ள நிலையில், அவருடைய சமூகச் சீர்திருத்தக் கருத்துக்களை உலகுக்கு எடுத்துச் சொல்லும் கடமை தமிழர் ஒவ்வொருவருக்கும் உள்ளது.

 
Copyright © 2013 செங்கோட்டை ஸ்ரீராம்
Shared by Alahappa Grafix