சுடச்சுட:

ஆலயங்கள்

இலக்கியம்

ஆன்மிகம்

திங்கள், ஆகஸ்ட் 29, 2011

மொழி இணைப்புப் பாலம் அமைத்த ரா.வீழிநாதன்

மொழி இணைப்புப் பாலம் அமைத்த ரா.வீழிநாதன்



செங்கோட்டை ஸ்ரீராம்
First Published : 28 Aug 2011 01:37:45 AM IST
தமிழ் மொழிபெயர்ப்பு இலக்கிய உலகில் தனி இடம் பெற்றவர் ரா.வீழிநாதன். சிறந்த படைப்பாளி. இலக்கியவாதிகள், வாசகர்கள் மத்தியில் மிகப் பிரபலமான பெயர். தமிழில் இருநூறுக்கும் அதிகமான சிறுகதைகள், கட்டுரைகள், புதினங்களைப் படைத்தவர். அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக இலக்கியப்பணி புரிந்தவர். இதற்காக அவர் கற்றவை மிக அதிகம். கல்கி வார இதழில் உதவி ஆசிரியராக வெகுகாலம் பணி செய்த இவர், பின்னாளில் காஞ்சி மகாபெரியவர் ஆசியுடன் வெளிவந்த "அமரபாரதி' மாத இதழின் நிறுவன ஆசிரியரானார். மிகச் சிறந்த மொழிபெயர்ப்பாளர். இந்தியிலிருந்து தமிழில் இவர் மொழிபெயர்த்துள்ளவை மிக அதிகம். குஜராத்தி, மராத்தி, உருது, பெங்காலி ஆகிய மொழிகளிலும் தேர்ந்தவர்.
 1920-ஆம் ஆண்டு மே 15-ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்டம் பூந்தோட்டத்துக்கு அருகில் உள்ள விஷ்ணுபுரம் என்ற கிராமத்தில் பிறந்தார். காவிரியின் கிளை நதியான அரசலாற்றின் கரையில் உள்ள திருவீழிமிழலை இறைவன் பெயரையே பெற்றோர் இவருக்குச் சூட்டினர்.
 அடிப்படைப் படிப்பறிவே ஆடம்பரமாகக் கருதப்பட்ட அந்தக் காலத்தில், ரா.வீ.க்கு ஹிந்தி உள்ளிட்ட வேற்று மொழிகளும் படிக்க ஆசை. அந்தக் கிராமத்திலேயே வசித்த வி.கே.சுப்பிரமணிய ஐயர் இவரைத் தன் மகன்போல் நேசித்து, எந்தவித குருதட்சிணையும் இன்றி ஹிந்தி கற்றுக் கொடுத்தாராம். தொடர்ந்து சம்ஸ்கிருதம் உள்ளிட்ட மொழிகளும் கற்றார் ரா.வீ.
 இவருக்கு 14 வயது இருக்கும்போது, தவளாம்பாள் என்ற பெண்ணை மணம் செய்து வைத்தனர். அவரே ரா.வீ.யின் மூச்சுக்கும் பேச்சுக்கும் காரண சக்தியாக விளங்கினார். பெரும்பாலானோர், குடும்பம் ஓர் இம்சை என்று கருதும் நிலையில், ரா.வீ.யின் எழுதும் இச்சைக்கு உயிரூட்டியவர் மனைவி தவளாம்பாளே. இதை பல இடங்களில் பதிவு செய்திருக்கிறார் ரா.வீ.
 காந்தியின் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டார். இந்தி ராஷ்டிரபாஷா தேர்வில் தென்னாட்டிலேயே முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றார். தொடர்ந்து இந்தி பிரசார சபைகளிலும், திருச்சி ஜோசப் கல்லூரி, தேசியக் கல்லூரி, ஹோலி கிராஸ் கல்லூரிகளில் இந்தி விரிவுரையாளராகவும் பணியாற்றியுள்ளார். பிரசார சபை நடத்தி வந்த "இந்தி பத்ரிகா' இதழிலும் பங்காற்றியுள்ளார். சென்னையில் இந்தி பிரசார சபா வெள்ளிவிழாவுக்கு காந்திஜி வருகை தந்தபோது, அவருடன் இணைந்து பங்காற்றிய பெருமை ரா.வீழிநாதனுக்கு உண்டு.
 வீழிநாதனின் முதல் சிறுகதை "ரயில் பிரயாணம்' 1942-இல் "கலைமகள்' இதழில் வெளியானது. தொடர்ந்து "காவேரி' இதழில் இவர் படைப்புகள் வெளிவரலாயின. அடுத்து, "கல்கி' இவரைப் பெரிதும் ஆட்கொண்டது. கல்கியில் உதவி ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். கூடவே, இந்தியில் தயாரான "மீரா' படத்துக்கு வசன மேற்பார்வையும், அதில் நடித்த எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கு இந்தி கற்றுக்கொடுக்கும் பணியும் சேர்ந்தே நடந்தது.
 "கல்கி' கிருஷ்ணமூர்த்தியே வீழிநாதனை சம்ஸ்கிருத, இந்திக் கதைகள், படைப்புகளை தமிழில் மொழிபெயர்க்கத் தூண்டுகோலாக இருந்தார். தனது கதைகள், நாவல்களை இந்தியில் மொழிபெயர்க்கச் சொன்னார். சோலைமலை ராஜகுமாரி, பார்த்திபன் கனவு, அலையோசை ஆகியவை இந்தியில் மொழிபெயர்க்கப்பட்டன. அலையோசை, "லஹரான் கி ஆவாஜ்' என இந்தியில் மொழிபெயர்க்கப்பட்டது இவருக்கு சிறந்த மொழிபெயர்ப்பு விருதைப் பெற்றுத் தந்தது. அதன் மூலம் ரா.வீழிநாதன் பெயர் தமிழ்-இந்தி இலக்கிய இதழியல் உலகில் மிகப் பிரபலமடைந்தது. இவைதவிர, சிறுகதைகள், கட்டுரைகள், துணுக்குகள் போன்றவற்றை அதிகம் எழுதியுள்ளார். காவேரி, கல்கி, நவயுவன், கலைவாணி, சக்தி, கலைமகள், ஆனந்தபோதினி, பிரசண்ட விகடன், நவசக்தி, நாடோடி, தென்றல், மாலதி, திரைஒலி, சிவாஜி, ஹிந்துஸ்தான், நல்ல மாணவர், அணுவிரதம், தமிழ்நாடு, குமுதம், விகடன், சாவி, இதயம் பேசுகிறது, முத்தாரம், மஞ்சரி, விஜயபாரதம், கோகுலம், பூந்தளிர், சுதேசமித்திரன், தினமணி, தினமணி கதிர் என அந்தக் காலத்தைய அனைத்து பத்திரிகைகளிலும் இவரின் படைப்புகள் வெளியாகியுள்ளன.
 குறும்பன், அட்சயம், ஆங்கிலம், மாரீசன், ராமயோகி, ராமகுமார், கிருத்திவாஸ், ராவீ, விஷ்ணு என்றெல்லாம் புனைபெயர் வைத்துக்கொண்டு எழுதினார் ரா.வீழிநாதன். "காசி யாத்திரை' என்ற நூல் இவரின் எழுத்துலக அனுபவத்துக்குச் சான்று. விசும்பரநாத் கெüசிக் எழுதிய பிகாரினி (பிச்சைக்காரி) நாவலை இவர் யசோதரா என்ற தலைப்பில் மொழிபெயர்த்தார். இதில் சாண்டில்யனின் முன்னுரை, நூலின் சிறப்பை உணர்த்தும்.
 குறிப்பாக, ஜெகசிற்பியனின் ஜீவகீதம் நாவல், "பஹர் க அத்மி' என்ற பெயரில் மொழிபெயர்ப்பானது. ஜெயகாந்தனின் ஜெய ஜெய சங்கர, ராஜாஜியின் பஜகோவிந்தம், நவீன உத்தரகாண்டம் ஆகியவை இதே பெயர்களில் இவரால் இந்திக்குச் சென்றன. நா.பா.வின் சமுதாய வீதி, தி.ஜா.வின் வடிவேலு வாத்தியார், பி.எஸ்.ராமையாவின் பதச்சோறு, என்.சிதம்பர சுப்ரமணியத்தின் இதயகீதம் உள்ளிட்ட மேலும் பல நூல்கள் இந்தி இலக்கிய உலகில் இடம்பிடிக்கக் காரணமாக அமைந்தவர் ரா.வீ.
 1980 பிப்ரவரி முதல் இவர் நிறுவன ஆசிரியராக இருந்து நடத்திய "அமரபாரதி' பத்திரிகையை குடும்பப் பத்திரிகை என்றே சொல்வார் ரா.வீ. பத்திரிகைப் பணிகளில் குடும்ப உறுப்பினர்கள் எல்லோருமே உதவி செய்ததால் அவ்வாறு கூறுவதாகச் சொல்வார் ரா.வீ.
 ""எழுதுவது அற்புதமான கலை. சக்தி வாய்ந்தது. அதற்கு நல்ல கல்வியறிவும், விஷயங்களைப் புரிந்துகொண்டு வெளிப்படுத்தும் திறனும் மிகத் தேவை. நல்ல மொழியறிவு அவசியம். இவையெல்லாம் இருந்தால்தான் எழுத்தின் மூலம் நல்ல கருத்துகளை, சொல்ல வருவதை மிகத் தெளிவாக அழகாக வாசகரிடம் கொண்டு சேர்க்க முடியும்'' - இது ரா.வீழிநாதன் அடிக்கடி சொல்லும் விஷயம்.
 சிறிய துண்டுத் தாளில்கூட குறிப்புகளை எழுதுவார். துணுக்குகள் படைப்பார். தம் 75-ஆம் வயதில் அவர் மறையும் வரை, துணுக்குகள் எழுதுவதைக்கூட அவர் கைவிடவேயில்லை. "என்னதான் இலக்கியவாதியாக இருந்தாலும், மொழிபெயர்ப்பு இலக்கியத் துறையில் ஈடுபடுபவரை இரண்டாம்தரக் குடிமகனாகக் கருதும் போக்கு வருந்தத்தக்கது' என்பதை அவரே ஓரிடத்தில் பதிவு செய்திருக்கிறார்.
 மஞ்சரி இதழில் ரா.வீ.யின் எழுத்துகள் அதிகம் இடம்பெற்றன. மொழி பெயர்ப்புக் கலை குறித்த இவருடைய சிறு சிறு கட்டுரைகள், தமிழ்ப் படைப்புகள் உலகை ஆக்கிரமிக்க வழி சொல்லுபவை. மொழிபெயர்ப்பு இலக்கிய உலகில் தனித்துவம் பெற்ற இதழாளர். நவீன உலகில் தமிழின் ஆளுமையை உலகுக்கு எடுத்துச் சொல்லும் ஒவ்வொருவரும் அடையாளமாகக் கொள்ள வேண்டியவரும்கூட!

திங்கள், ஆகஸ்ட் 15, 2011

காதிலே பூ! கொள்கையெலாம் ப்பூ ப்பூ...

உண்ணாவிரதம் என்றால் என்னவென்றே தெரியாத

அன்னியன் ஆங்கிலேயனிடம்
உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வெற்றி கண்டாய்!
உத்தம உருவாய் உனைக் கொண்டாடியது உலகம்!

உன் வழியைத்தான் இன்றும் ஒருவர் மேற்கொண்டிருக்கிறார்...

உண்ணாவிரதம் என்றால் என்னவென்றே தெரியாத
அன்னிய அடிவருடிகளிடம்...
போராட்டம் நடத்துபவரையே களங்கம் சுமத்தி
அப்புறப்படுத்தும் வழி கண்டவர்களாய்..!

அன்று அகிம்சைப் போராட்டத்தாலே
காங்கிரஸ் இயக்கம் கொண்டு
ஆங்கிலேயன் காதிலே பூச்சுற்றினாய்!
இன்று ஹிம்சை செய்வதையே வழியாய்க் கொண்ட
காங்கிரஸ் கட்சிக்காரர்கள்
உன் பெயரையே போட்டுக்கொண்டு
உன் காதிலே பூச்சுற்றுகிறார்கள்...

அட... இருங்க... இருங்க...
எங்கள் பங்குக்கு நாங்களும் சுற்றுகிறோம்...

ஞாயிறு, ஆகஸ்ட் 14, 2011

விமர்சனக் கலைக்கு வளம் சேர்த்த க.நா.சுப்ரமணியம்


விமர்சனக் கலைக்கு வளம் சேர்த்த க.நா.சுப்ரமணியம்

First Published : 14 Aug 2011 03:03:11 AM IST

மிழின் இலக்கிய வளமையும் தொன்மைச் சிறப்பையும் நமக்குள்ளே வைத்திருத்தல் தகாது; உலக மொழிகளில் எடுத்துச் சென்றால் அதன் பெருமை உயரும் என்றெண்ணியவர் க.நா.சு. அதனால் தமிழின் தலைசிறந்த படைப்புகளை ஆங்கிலத்தில் கொண்டுசெல்ல மொழிபெயர்ப்புக் களம் கண்டார். உலக இலக்கியத்துக்கு இணையாக உயர்ந்த தரத்தில் நவீனத் தமிழ் இலக்கியமும் திகழ வேண்டும் என்ற விருப்பத்தால், இப்பணியில் தன்னை முழுவதும் ஈடுபடுத்திக் கொண்டவர்.
 க.நா.சு. என்ற மூன்றெழுத்தால் இலக்கிய உலகில் செல்லமாக அழைக்கப்பட்டவர் க.நா.சுப்ரமணியம். கந்தாடை நாராயணசாமி ஐயரின் புதல்வராக சுவாமிமலையில், 1912-ஆம் ஆண்டு ஜனவரி 31-ஆம் தேதி பிறந்தார்.
40 நாவல்கள், 10 சிறுகதைத் தொகுதிகள், 80க்கும் மேற்பட்ட மொழிபெயர்ப்பு நூல்கள், தத்துவ விசார நூல்கள் 10, இலக்கிய விசாரம் என்ற கேள்வி பதில் நூல் ஒன்று, உலகத்துச் சிறந்த நாவல்கள், உலகத்துச் சிறந்த நாவலாசிரியர்கள், உலகத்துச் சிறந்த சிந்தனையாளர்கள் என மூன்று தொகுதிகள், இலக்கிய விமர்சன நூல் ஒன்று. இன்னும் பல நூல்களை தம் 86 வயதுக்குள் எழுதிக் குவித்தவர் இவர். அதற்கு மூல காரணமாக அமைந்தது, சிறுவயதிலேயே இவர் ஊன்றிப் படித்த இலக்கியங்கள் மற்றும் பிற நூல்கள்தான்.
 ÷சுவாமிமலை கோவிலருகே தொடக்கப்பள்ளியில் தொடங்கி, பின்னர் கும்பகோணம் நேட்டிவ் உயர்நிலைப் பள்ளியில் படிப்பு தொடர்ந்தது. அவருடைய தந்தைக்கு சுப்பிரமணியத்தை ஏதாவது ஓர் அரசுப் பணியில் அமர்த்திவிட எண்ணம். எனவே, ஆங்கிலக் கல்வி முறைக்கு மாற்றிப் படிக்க வைத்தார். கும்பகோணம் அரசுக் கல்லூரி, அண்ணாமலைப் பல்கலை என விரிந்த அவருடைய கல்விப் பயணம், அவருக்கு இலக்கிய அறிவையும் கூடவே ஆங்கிலப் புலமையையும் தந்தது.
படிக்கும் காலத்திலேயே ஐரோப்பியப் பத்திரிகைகளுக்கு கதைகள் அனுப்பி வைத்தார் சுப்ரமணியம். வெளிநாட்டு மற்றும் இந்திய ஆங்கிலப் பத்திரிகைகளில் அவருடைய கதை கட்டுரைகள் வெளிவந்தன. 1935-இல் டி.எஸ்.சொக்கலிங்கம் நடத்திவந்த "காந்தி' இதழில் வெளிவந்த கதைகள் அவரது சிந்தனையை தமிழின்பால் திருப்பின. தொடர்ந்து மணிக்கொடி அவரை ஈர்த்தது. தமிழில் எழுதத் தொடங்கினார் க.நா.சு.
 ÷தமிழ் இலக்கியப் பணிக்காகச் சென்னை வந்தவர், தன் எழுத்துகளுடன் கால் பதித்தது "தினமணி' அலுவலகத்தில். அங்கே எழுத்தாளர் வ.ரா. இவருடைய கையெழுத்துப் பிரதிகளை வாங்கிப் பார்த்தார். கே.என்.சுப்ரமண்யம் என்று கையெழுத்துப் போட்டிருந்தார்.
வ.ரா. கேட்டார்... ""நீர் என்ன ஆங்கிலேயனுக்குப் பிறந்தவரா... கே.என்.சுப்ரமண்யம் என்று எழுத?'' வெடுக்கென்று கேட்டார். சுப்ரமண்யமோ யோசித்துக் கொண்டிருந்தார். ""கே.என்.சுப்ரமண்யம் என்றெல்லாம் எழுதாதீர்... கந்தாடை நாராயணசாமி ஐயர் மகன் சுப்ரமண்யம் அல்லவா நீர்; க.நா.சு. அல்லது க.நா.சுப்ரமண்யம் என்றே எழுதும்'' என்று கட்டளையிட, இவரும் அதை ஏற்றுக்கொண்டார். அதுமுதல் க.நா.சு. என்ற மூன்றெழுத்துப் பெயர் தமிழ் இலக்கிய வானில் சுடர்விடத் தொடங்கியது.
ஒரு நாளைக்கு குறைந்தது 10 பக்கங்கள் தமிழில் சுயமாக எழுதுவது, 15 பக்கங்கள் தமிழில் மொழிபெயர்ப்பது, 10 பக்கங்கள் ஆங்கிலத்தில் புதிதாகப் படைப்பது, இத்துடன் மதிப்புரை, விமர்சனங்கள் எழுதுவது என்பதை எழுத்துப் பணிக்கான திட்டமிடலாகக் கொண்டார். தழுவல் எனும் உத்தியோடு விகடன், சுதேசமித்திரன், இமயம், சக்தி, ஜோதி உள்ளிட்ட இதழ்களில் பிறமொழி இலக்கியங்களைத் தமிழில் தந்தார்.
 "சூறாவளி' எனும் இலக்கிய இதழைத் துவக்கினார். ராமபாணம், சந்திரோதயம், இலக்கிய வட்டம், ஞானரதம், முன்றில்... இவை எல்லாம் க.நா.சு.வால் தொடங்கப்பட்ட இதழ்கள்தான். இவற்றால் ஏற்பட்ட பொருளாதார நஷ்டம், தமிழுலகுக்கு மாபெரும் மொழிபெயர்ப்பு இலக்கிய நஷ்டத்தைத் தந்துவிட்டது.
 ÷தயவு தாட்சண்யமற்ற கண்டிப்பான விமர்சனங்களுக்குப் பெயர் பெற்றவர் க.நா.சு. "தினமணி'யில் இலக்கிய விமர்சனக் கட்டுரைகள் அதிகம் எழுதியவர். அசுரகணம், பித்தப்பூ, தாமஸ் வந்தார், கோதை சிரித்தாள் எனப் பல நாவல்களையும் எழுதியுள்ளார். 1979-இல் குமாரன்ஆசான் நினைவு விருது, 1986-இல் சாகித்ய அகாதெமி விருது என விருதுகளும் பெற்றவர். பொய்த்தேவு - இவரது பிரபலமான நாவல்களுள் ஒன்று.
 ÷அந்நாவலில் இவரது எழுத்து நடை கதை நடையாக இல்லாமல் பல இடங்களில் கட்டுரை நடையாகவே இருக்கிறது என்பது அந்தக் கால விமர்சகர்களின் கணிப்பு.
 ÷க.நா.சு. மேற்கத்திய எண்ணம் கொண்டவர்; தமிழ்நாட்டைப் பற்றி அக்கறை இல்லாதவர் என்றெல்லாம் அந்தக் காலத்தில் அவர் மீது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. அவர் மேற்கொண்ட மொழிபெயர்ப்புப் பணி அதற்குக் காரணமாக இருக்கலாம். இருப்பினும், மொழிபெயர்க்கப் படைப்புகளைத் தேர்வு செய்யும்போது அதை உணர்வுப்பூர்வமாகவே செய்தார் என்பது புரியும். ÷தமிழர்களை, தமிழ்க் கலாசாரத்தை மனதில் கொண்டே, அவர்களுக்கு ஒட்டக் கூடியதைத்தான் நாம் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தார் என்பதையும் உடனிருந்தவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
 ஆனால், க.நா.சு.வே விமர்சனக் கலைக்கு உரமிட்டவர். அவருடைய விமர்சனங்கள் இன்றளவும் பேசப்படுகின்றன. அந்த வகையில், க.நா.சு.வுக்கு எழுத்துத் துறைக்கு அப்பால் நண்பர்கள் அதிகம் இருந்ததில்லை. சம காலத்து எழுத்தாளர்கள் பற்றி, படைப்புகள் பற்றி நிறைய விமர்சனங்கள் செய்துள்ளார் க.நா.சு. ஆனால், பாரதி பற்றி அவரிடம் ஒரு மெüனமே இருந்திருக்கிறது. பாரதியைக் குறைசொல்லி எழுதியதுமில்லை; பாராட்டியும் சொன்னதில்லை.
 தன் விமர்சனங்கள் பற்றி அவர் ஓரிடத்தில் சொன்னது...
 ÷""நீங்கள் அழிக்கும் விமர்சனம் ஏன் எழுதுகிறீர்கள்; ஆக்க விமர்சனம் செய்யக்கூடாதா என்றுதான் விமர்சனம் எழுத ஆரம்பித்த காலத்தில் பல வாசகர்கள் என்னைக் கேட்டதுண்டு. அதற்கு ஒரே பதில்தான் உண்டு. அழிக்கப்பட வேண்டியது அதிகமாக இருக்கும்வரை அழிக்கும் விமர்சனம் செய்தேதான் தீரவேண்டும். ஆனால், ஆக்க விமர்சனம் இல்லாமல் அழித்தல் விமர்சனம் என்று ஒன்று கிடையாது. இலக்கிய விமர்சனத்தில் ஒரு நோக்கில் அழிப்பதும் ஆக்குவதும் ஒன்றே என்றுதான் பதில் தரவேண்டும். மற்றபடி கவிதை, சிறுகதை, நாவல் என்று எழுதுகிறபோது நான் எழுதியதை எந்தச் சுண்டைக்காய் வாசகன் ஏற்றுக் கொள்ளுவான் என்பது பற்றி எனக்கு நினைப்பு இருப்பதில்லை. தான் இன்று கவிதை என்று எழுதுவதை, கம்பனும் இளங்கோவும், டாண்டேயும், ஷேக்ஸ்பியரும் இன்று இருந்தால் ஏற்றுக் கொள்வார்களா என்பதுதான் என் நினைப்பு. நிகழ்கால வாசகன் அறிவால், ஆற்றலால், அரசியலால் அவர்களை விடச் சிறந்தவனாக இருக்கலாம்; ஆனால், இலக்கியத் தரத்தால் எந்த வாசகனும் எந்தக் காலத்திலும் எட்டாத ஒரு தரத்தையே பழங்கால, நிகழ்கால, வருங்கால எழுத்தாளர்கள் எல்லாம் எட்ட முயலுகின்றனர். அந்தத் தரம் ஒரு சரடு; அதைக் கண்டுகொள்ளத்தான் நம் பொது ஸீரியஸ் எழுத்தாளனும், தரமுள்ள இலக்கியாசிரியனும் முயலுகிறான். அந்தத் தரத்தை வாசகர்கள் தேடிக் கண்டுகொள்ள வேண்டும். இன்றைய வாசகர்கள் தேடத் தயாராக இல்லை. ஆனால் அவர்கள் தேடுவது அவர்களுக்குக் கிடைக்கும்...'' என்கிறார் க.நா.சு.

சனி, ஆகஸ்ட் 13, 2011

தேசம் விற்பனைக்கல்ல!



தேசம் விற்பனைக்கல்ல!

தேசியம் பேசினவன் ஒரு வகை
சுதேசியம் சொன்னவனும் ஒரு வகை
பாசிசம் பகன்றவனோ பல வகை
நாசிசம் மாக்கிசம் என்றெல்லாம் இசங்களை
பூசித்துக் காப்பதெல்லாம் போதாதா?

தேசத்தின் போராட்டம் எதை நோக்கி?
அடிமைத்தனம் அறுத்து அவதி நீக்க அல்ல!
அடிமை மோகத்தால் அவதி பெருக்க!

நம் தேசத்தின் இசம் எது?
இந்துயிசமா? புத்திசமா?
கிறிஸ்துவ இஸ்லாமிசமா?
இல்லவே இல்லை!

இந்த இசங்களையெல்லாம் பின்னுக்குத் தள்ளி
நம்பர் ஒன் இடம்பிடித்த இசம் ஒன்றுண்டு!

அந்த இசம்...
கூட்டுக் குடும்பத்தைக் கொலை செய்தது!
கூட இருந்தவனைக் குழிபறிக்கச் செய்தது...
பெண்ணாசை பொன்னாசை மண்ணாசை
துறக்கச் சொன்ன இசத்தையும் இம்சித்தது...

பாசத்தைப் படுகுழியில் தள்ளி,
சுயநலப் பித்தை வளர்த்தெடுத்தது!
நண்பர்களோ, உறவினர்களோ...

ஏன் ஏன்...
அண்ணன் தம்பி அம்மா அப்பா என்றாலும்,
ஓர் அறைக்குள் ஒட்டிக் கொண்டிருந்தாலும்,
இருவேறு ஆசைகளை வளர்த்தெடுத்தது!

வாழ்க்கை நெறிமுறை தொலைக்க வைத்து
வாழுதற்காய் முறைதவறும் மனம் வளர்த்தது!
நட்பு தொலைத்தது; நல் உளம் சிதைத்தது...

உதவும் எண்ணத்தை உருத்தெரியாமல் ஆக்கியது!
உடன் வந்தான் உதவி செய்வோம் உருப்படுவான் என்று பார்த்தால்,
கடன் வாங்கிக் கம்பி நீட்டிக் கழுத்தறுக்கச் செய்தது!
ஊழல், லஞ்சம், ஏமாற்றல், நயவஞ்சகம்...
எல்லாம் இந்த இசத்தால்தான்!

தேசத்தில் நிகழும் தவறுகளுக்கெல்லாம்
இந்த இசத்தின் வீச்சும் ஆளுமையுமே காரணமாம்!

தேசத்தை விலை பேச வைக்குது!
வாயில் சுதேசியம் பேசி, கையில் தேசியம் பிடித்து,
வாயில் கதவோ வெளிநாட்டுப் பொருளுக்கு திறக்க வைக்குது!

பெரும்பான்மை மதம் போலே
நமக்குள் நுழைந்திட்ட இந்த இசம்...
எந்த இசம்..?

எல்லாம் இந்த
கன்ஸ்யூமரிசம்தான்!

கன்ஸ்யூமரிசம்தான்!

இந்த இசத்தின் வழி நடப்போர்க்கு
நுகர்வோர் என்பது பெயர்...

நாமும் நுகரத் தலைப்பட்டோம்
வசதியான வாழ்க்கைக்கு ஆசைப்பட்ட
நுகர்வோராய்!

இப்போது சொல்லுங்கள்...
நம் தேசத்தின் போராட்டம் எதை நோக்கி?

வெள்ளி, ஆகஸ்ட் 12, 2011

சகோதரத்துவ நாளாம்!

சகோதரத்துவ நாளாம்!


-----------------------------------------------------------------------
கழுத்திலே கட்ட எண்ணமாம்!
தடுக்க என்ன செய்வது?!
கையிலே கட்ட இதோ நாள் வந்தது!
கழுத்திலே அவன் மாட்டிக் கொள்ளாமல்
இருக்கணுமே!

எல்லாம்...??!
ஒரு
கயிறு விஷயம்தான்!
 
Copyright © 2013 செங்கோட்டை ஸ்ரீராம்
Shared by Alahappa Grafix