சுடச்சுட:

ஆலயங்கள்

இலக்கியம்

ஆன்மிகம்

வெள்ளி, மே 28, 2010

ஸ்ரீகிருஷ்ண அஷ்டோத்திரம் - தமிழில் !


ஸ்ரீகிருஷ்ண அஷ்டோத்திரம் - தமிழில் !


கோயில்களில்... அர்ச்சனைத் தட்டை பக்தர்களிடம் இருந்து வாங்கிக் கொண்டு, அங்கேயே சங்கல்பமும் செய்து, கருவறையின் உள் சென்று, துளஸி அல்லது பூக்களால் ஓர் அர்ச்சகர் அஷ்டோத்திர அர்ச்சனை செய்வது என்பது பழகிய நடைமுறை. ஆனால், நகரங்களில் உள்ள பெரும்பாலான பெரிய கோவில்களில் கூட்ட நெரிசல்... கிராமத்துக் கோயில்கள் பலவற்றிலோ, முறையான பயிற்சி பெறாத அர்ச்சகர்கள். இந்த நிலையில், அஷ்டோத்திர அர்ச்சனை என்று சங்கல்பம் செய்துகொண்டு, நூற்றியெட்டுக்குப் பதிலாக பதினெட்டு அல்லது இருபத்தியெட்டு திருநாமாக்களால் அர்ச்சனை செய்துவிட்டு, ஏனோதானோவென்று நைவேத்தியமும் செய்துவிட்டு, பிரசாதத் தட்டை கொடுத்துவிட்டுச் சென்றுவிடுவதை அன்றாடம் சந்நிதிகளில் காண்கிறோம். நம் இந்து மதத்தில்தான் கேள்விகள் கேட்பது பரம்பரை பிரசித்தமாயிற்றே. சிலர் முனகிக் கொண்டே, பெருமானின் வழிபாட்டில் மன ஈடுபாட்டைக் காட்டாமல், நடைபெறும் தவறுகளிலேயே மனத்தைச் செலுத்தி, ஏனடா கோவிலுக்கு வந்தோம் என்ற மன நிலையில் வெளியேறுகின்றனர். இதுவும் அன்றாடக் காட்சிதான்!

சரி... கோவில் என்று வந்தாயிற்று! வழிபாடு என்பதும் நம் மனத்தைப் பொறுத்தது. இது கீதை நாயகன் சொன்ன விஷயம்தான்! எனவே இறை வழிபாட்டைத் தவிர உள்ள கோயிலின் மற்ற நடவடிக்கைகளில் நம் மனத்தை (கருவறையில் இருக்கும் அந்தப் போது மட்டும்) செலுத்தாமல், இந்த அஷ்டோத்திரத்தை கையில் வைத்துக் கொண்டு வரிசையில் செல்லும் போதே அர்ச்சித்துக் கொண்டு செல்லுங்கள். உள்ளே அர்ச்சகர் உங்கள் அஷ்டோத்திர அர்ச்சனைக்கு ஏற்ப பகவானின் பாதத்தில் துளஸி/ பூக்களை சமர்ப்பிப்பதாக மனத்தில் எண்ணிக் கொள்ளுங்கள். உங்கள் வழிபாடு பூர்த்தியாகும்.

செம்மொழித் தமிழும் பகவானுக்கு பிரியமான மொழிதான். எனவே சம்ஸ்க்ருத வார்த்தை பழக்கம் இல்லாதவர்கள், தமிழில் அதன் அர்த்தத்தைச் சொல்லி, போற்றி போற்றி என்று முடித்து அர்ச்சிக்கலாம்.

அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி,
சென்று அங்கு தென் இலங்கை செற்றாய் திறல் போற்றி,
பொன்னச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி
கன்று குனிலாய் எறிந்தாய் கழல் போற்றி
குன்று குடையாய் எடுத்தாய் குணம் போற்றி
வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி

- என்று நம் செம்மொழித் தமிழில் போற்றி வழிபாட்டுக்கு ஆறாம் நூற்றாண்டிலேயே வழி ஏற்படுத்தித் தந்திருக்கிறார் ஸ்ரீ ஆண்டாள். தெய்வத் தமிழின் கம்பீரத்தை உணர்த்திய ஆண்டாளம்மை காட்டிய வழியில் இந்த கிருஷ்ண அஷ்டோத்திரத்தை (நூற்றியெட்டு போற்றி வழிபாட்டை) சொல்லி வழிபடுவோம். பெரும்பாலான பெருமாள் கோயில்களிலும் கிருஷ்ண அஷ்டோத்திரமே அர்ச்சகர்களால் சொல்லப்படுகிறது.

எனவே, இந்த நாமாக்களை அச்சு எடுத்து (பிரிண்ட் எடுத்து) கையில் வைத்துக் கொள்ளுங்கள். மிகவும் உபயோகமாக இருக்கும். சமஸ்கிருத நாமாக்களை இயன்ற அளவுக்கு பதம் பிரித்து, எளிமையாகச் சொல்ல வரும் வகையில் பிரித்துத் தந்திருக்கிறேன். ஸ்ரீ கிருஷ்ண அனுக்கிரஹம் அனைவருக்கும் கிடைக்கட்டும்.

சம்ஸ்கிருத அர்ச்சனைப் பெயராக இருந்தால், ஓம் என்று முதலிலும் நம: என்று பின்னாலும் சேர்க்கவேண்டும். தமிழில் என்றால், ஓம் என்பது பொது. எனவே ஓம் சொல்லி, போற்றி என்பதை பின்னால் சேர்த்துக் கொள்ளலாம்.

ஸ்ரீ கிருஷ்ண அஷ்டோத்ரம்

0. ஓம்........................நமஹ -   ஓம் .................................... போற்றி!
1. க்ருஷ்ணாய - கருமை நிறம் உள்ளவரே
2. கமலநாதாய - ஸ்ரீலட்சுமி நாதரே
3. வாஸுதேவாய - வஸுதேவ புத்திரரே
4. ஸநாதநாய - பிரம்மா உள்ளிட்ட தேவருக்கும் மிகப் பழைமையாகத் திகழ்பவரே
5. வஸுதேவாத்மஜாய - வசுதேவரின் பிரார்த்தனையால் புத்திரராகப் பிறந்தவரே
6. புண்யாய - புண்ணியத்தைச் செய்பவரே
7. லீலாமானுஷ விக்ரஹாய - விளையாட்டாக மானிட சரீரத்தை எடுப்பவரே
8. ஸ்ரீவத்ஸ கௌஸ்துபதராய - ஸ்ரீவத்ஸம் என்னும் மரு, கௌஸ்துபம் என்னும் மணி ஆகியவற்றைத் தரித்திருப்பவரே
9. யசோதாவத்ஸலாய - யசோதையிடம் மிக்க (வாத்சல்யம்) அன்பு கொண்டவரே
10. ஹரயே - அண்டியவரின் பாவங்களை அப்படியே அறுத்து எறிபவரே
11. சதுர்புஜாத்த சக்ராஹிகதா சங்காத்யுத ஆயுதாய - நான்கு கைகளிலும் சக்கரம், கத்தி, தண்டு, சங்கம் என்னும் ஆயுதங்களை தரித்திருப்பவரே
12. தேவகீநந்தனாய - தேவகியின் புத்திரரே
13. ஸ்ரீஸாய - திருமகள் நாயகரே
14. நந்தகோப ப்ரியாத்மஜாய - நந்தகோபருக்கு மிகவும் பிரியமான பிள்ளையே
15. யமுனா வேக ஸம்ஹாரிணே - யமுனையின் வேகத்தைத் தடுத்தவரே
16. பலபத்ர ப்ரிய அநுஜாய - பலராமருக்கு மிகவும் பிரியமான தம்பியானவரே
17. பூதனாஜீவித ஹராய - கொல்லவந்த கொடிய பூதனையின் உயிரைப் போக்கியவரே
18. சகடாசுர பஞ்சனாய - சகடனாக வந்த அசுரனை முறித்து எறிந்தவரே
19. நந்த வ்ரஜஜநா நந்திதே - வ்ரஜபூமியான திருஆய்ப்பாடி மக்களை மகிழ்ச்சிப் படுத்துபவரே
20. சச்சிதானந்த விக்ரஹாய - சச்சிதானந்த மயமான சரீரம் உடையவரே
21. நவநீத விலிப்தாங்காய - புத்தம்புது வெண்ணெயை முழுவதும் பூசிக்கொண்ட உடம்பினைக் கொண்டவரே
22. நவநீத நடாய - வெண்ணெய்க்காக நாட்டியம் ஆடுபவரே
23. அநகாய - தோஷம் சிறிதும் இல்லாதவரே
24. நவநீத நவாஹாராய - புதிதாக எடுக்கப்பட்ட வெண்ணெய்யையே அமுது செய்பவரே
25. முசுகுந்த ப்ரஸாதகாய - முசுகுந்தருக்கு அனுக்கிரஹம் செய்தவரே
26. ஷோடசஸ்த்ரீ ஸஹஸ்ரேசாய - பதினாயிரம் பெண்களுக்குத் தலைவரானவரே
27. த்ரிபங்கீ லலிதா க்ருதயே - வயிற்றில் உள்ள மூன்று மடிப்புகளால் அழகான உருவம் கொண்டவரே
28. சுகவாக் அம்ருதாப்த்த இந்தவே - சுகாசாரியாரின் அமுத வாக்காகிய பாற்கடலுக்கு சந்திரன் போன்றவரே
29. கோவிந்தாய - பசுக்களுக்கு இந்திரன் என உலகத்தால் துதிக்கப்படுபவரே
30. யோகிநாம்பதயே - யோகிகளுக்கு தலைவரானவரே
31. வத்ஸ வாடசராய - கன்றுகளின் கூட்டங்களில் சஞ்சாரம் செய்பவரே
32. அநந்தாய - எவராலும் அறிய முடியாதவரே
33. தேநுகாசுர மர்த்தனாய - தேனுகன் என்ற அசுரனைக் கொன்றவரே
34. த்ருணீக்ருத த்ருணாவர்த்தாய - திருணாவர்த்தன் எனும் அசுரனை புல்லுக்கு இணையாக்கியவரே
35. யமளார்ஜுன பஞ்சனாய - யாமளார்ஜுனர்கள் மருத மரங்களாக நிற்க, அவற்றை முறித்தவரே
36. உத்தாலதால பேத்ரே - உயர்ந்த பனை மரங்களை முறித்தவரே
37. தமால ச்யாமளாக்ருதயே - பச்சிலை மரத்தைப் போன்ற (சியாமள) நீல நிறம் உள்ளவரே
38. கோபகோபி ஈஸ்வராய - கோபர்கள் கோபிகள் இவர்களுக்கு தலைவரானவரே
39. யோகிநே - தத்துவ ஞானத்தால் (யோகத்தால்) அடையப்படுபவரே
40.  கோடிசூர்ய சமப்ரபாய - கோடி சூரியர்களுக்கு இணையான ஒளி பொருந்தியவரே
41. இளாபதயே - பூதேவியாக இளையின் பதியே
42. பரஸ்மை ஜ்யோதிஷே - பரஞ்சோதி ஸ்வரூபமானவரே
43. யாதவேந்த்ராய - யாதவர்களின் தலைவரே
44. யதூத்வஹாய - யாதவர்களின் பாரத்தை வகிப்பவரே
45. வநமாலினே - வைஜயந்தி எனும் வனமாலையினை அணிந்திருப்பவரே
46. பீதவாஸஸே - பீதாம்பரதாரியே
47. பாரிஜாத அபஹாரகாய - பாரிஜாத விருட்சத்தை அபகரித்தவரே
48. கோவர்த்த நாச லோத்தர்த்ரே - கோவர்த்தன மலையை அநாயாசமாக எடுத்தவரே
49. கோபாலாய - பசுக்களைக் காப்பவரே
50. ஸர்வபாலகாய - எல்லோரையும் காத்து ரட்சிக்கும் ரட்சகரே
51.  அஜாய - ஜனனம் எனும் பிறப்பு இல்லாதவரே
52. நிரஞ்ஜனாய - தோஷம் சிறிதும் அற்றவரே
53. காமஜனகாய - மன்மதனுக்கு தந்தையானவரே
54. கஞ்ஜலோசனாய - தாமரை மலரைப் போன்ற கண்களை உடையவரே
55. மதுக்னே - மது என்னும் அசுரனைக் கொன்றவரே
56. மதுரா நாதாய - மதுரையம்பதிக்குத் தலைவரே
57. த்வாரகா நாயகாய - துவாரகாபுரியின் தலைவரானவரே
58. பலிநே - மிகுந்த பலம் பொருந்தியவரே
59. ப்ருந்தாவனாந்த சஞ்சாரிணே - பிருந்தாவனப் பிரதேசத்தில் சஞ்சரிப்பவரே
60. துளஸீ தாமபூஷணாய - துளசி மாலையை ஆபரணமாகப் பூண்டவரே
61. ஸ்யமந்தக மணேர் ஹர்த்ரே - சியமந்தக மணியைக் கொண்டவரே
62. நரநாராயணாத்மகாய - நரநாராயண ஸ்வரூபமாக உள்ளவரே
63. குப்ஜாக்ருஷ்டாம்பரதராய - திரிவக்கிரை எனும் கூனியினால் இழுக்கப்பட்ட வஸ்திரத்தைத் தரித்தவரே
64. மாயினே - மாயையினை உடையவரே
65. பரமபூருஷாய - புருஷ உத்தமரே
66. முஷ்டிகாஸுர சாணூர மல்ல யுத்த விசாரதாய - முஷ்டிகாசுரன், சாணூரன் இவர்களுடன் மல்யுத்தம் செய்வதில் சமர்த்தரே
67. ஸம்சார வைரிணே - சம்சார பந்தம் அற்றுப் போகச் செய்பவரே
68. கம்ஸாரயே - கம்சனுகுப் பகையானவரே
69. முராரயே - முரன் எனும் அசுரனுக்கு எதிரியானவரே
70. நரக அந்தகாய - நரகன் எனும் அசுரனை முடித்தவரே
71. அநாதி ப்ரஹ்மசாரிணே - தொன்றுதொட்டு பிரம்மசாரியாக இருப்பவரே
72. க்ருஷ்ணா வ்யஸநகர்ஸகாய - கிருஷ்ணா என்று அழைத்த திரௌபதியின் துக்கத்தைத் துடைத்தவரே
73. சிசுபால சிரச்சேத்ரே - சிசுபாலன் சிரத்தைத் துண்டித்தவரே
74. துர்யோதன குலாந்தகாய - துரியோதனன் குலத்தை அழித்தவரே
75. விதுர அக்ரூர வரதாய - விதுரர், அக்ரூரர் இவர்களின் ஆசைகளைப் பூர்த்தி செய்தவரே
76. விஷ்வரூப ப்ரதர்சகாய - அர்ஜுனன் முதலானவர்களுக்கு விசுவரூபக் காட்சியை அளித்தவரே
77. ஸத்யவாசே - சத்தியமான வாக்கினை உடையவரே
78. ஸத்ய சங்கல்பாய - சொன்ன சொல் தவறாதவரே
79. ஸத்யபாமாரதாய - சத்யபாமையிடத்தில் விசேஷ அன்பு பூண்டவரே
80. ஜயிதே - எப்போதும் வெற்றியைக் கொண்டவரே
81. ஸுபத்ரா பூர்வஜாய - சுபத்திரைக்கு முன் பிறந்தவரே (அண்ணன் ஆனவரே)
82. ஜிஷ்ணவே - ஜயசீலரே
83. பீஷ்ம முக்தி ப்ரதாயகாய - பீஷ்மருக்கு மோட்சத்தை அளித்தவரே
84. ஜகத்குரவே - அகில உலகங்களுக்கும் குருவானவரே
85. ஜகந்நாதாய - அகில உலகங்களுக்கும் தலைவர் ஆனவரே
86. வேணுநாத விசாரதாய - புல்லாங்குழல் ஊதுவதில் சமர்த்தரானவரே
87. வ்ருஷபாசுர வித்வம்ஸினே - விசுஷபாசுரனைக் கொன்றவரே
88. பாணாசுர பலாந்தகாய - பாணாசுரனின் சேனையை ஒன்றுமில்லாமல் முடித்தவரே
89. யுதிஷ்டிர ப்ரதிஷ்டாத்ரே - தருமபுத்திரரை நிலைக்கச் செய்தவரே
90. பர்ஹிபர்ஹாவதம்ஸகாய - மயில் தோகையினை ஆபரணமாக அணிந்தவரே
91. பார்த்தசாரதயே - அர்ஜுனனுக்கு சாரதியாக இருந்தவரே
92. அவ்யக்தாய - இப்படிப்பட்டவர் என்று எவராலும் அறியமுடியாதவரே
93. கீதாம்ருத மஹோததயே - கீதை எனும் அமுதக் கடலானவரே
94. காளீய பணிமாணிக்யரஞ்சித ஸ்ரீபதாம்புஜாய - காளியன் எனும் பாம்பின் படத்தில் உள்ள மாணிக்கத்தால் சிவந்த பாதக் கமலத்தை உடையவரே
95. தாமோதராய - யசோதை உரலோடு கட்டிய கயிற்றினை வயிற்றில் கொண்டவரே
96. யஜ்ஞபோக்த்ரே - யாகத்தின் பலனைப் பெற்றுக்கொள்பவரே
97. தாநவேந்த்ர விநாசகாய - அசுரர் தலைவனை நாசம் செய்தவரே
98. நாராயணாய - ஆன்மாக்களை தமக்கு இருப்பிடமாகக் கொண்டவரே
99. பரப்ரஹ்மணே - பரப்ரம்ஹ ஸ்வரூபியானவரே
100. பந்நகாசந வாஹநாய - பாம்புகளை உண்ணும் கருடனை வாகனமாகக் கொண்டவரே
101. ஜலக்ரீடா ஸமாசக்த கோபீ வஸ்த்ர அபஹாரகாய - நீரில் விளையாடிய கோபிகைகளின் ஆடைகளை அபகரித்தவரே
102. புண்யஸ்லோகாய - புண்ணியமே கீர்த்தியாக உடையவரே
103. தீர்த்தபாதாய - பரிசுத்தமான பாதங்களைக் கொண்டவரே
104. வேதவேத்யாய - வேதங்களால் அறியப்படுபவரே
105. தயாநிதயே - தயைக்கு இருப்பிடமானவரே
106. ஸர்வ பூதாத்மகாய - எல்லாப் பிராணிகளின் ஸ்வரூபமும் ஆனவரே
107. ஸர்வ க்ரஹ ரூபிணே - சூரியன் முதலிய எல்லா கிரகங்களின் உருவமும் உடையவரே
108. பராத்பராய - உயர்ந்தவர்கள் யாவருக்கும் உயர்ந்தவரே
நாநாவித மந்த்ர புஷ்பாணி ஸமர்ப்பயாமி
 
Copyright © 2013 செங்கோட்டை ஸ்ரீராம்
Shared by Alahappa Grafix