சுடச்சுட:

ஆலயங்கள்

இலக்கியம்

ஆன்மிகம்

புதன், செப்டம்பர் 26, 2007

S.G.Kittappa's contributed Library









This Library situated in Sengottai, which is contributed by S.G.Kittappa,
செங்கோட்டை மண்ணின் நண்பர்களே...
நம் ஊரின் மெயின்ரோடில் உள்ள ஸ்ரீமூலம் வாசகசாலை பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள். அந்த வாசகசாலையானது நம் ஊருக்குப் பெருமை சேர்த்த பழம்பெரும் நாடக நடிகர், பாடகர் அமரர் எஸ்.ஜி.கிட்டப்பா அவர்களின் நன்கொடையாக கட்டடம் கட்டிக்கொடுக்கப்பட்டு நம் சமுதாயத்துக்காக அளிக்கப்பட்டது. அதில் பழம்பெருமையும் கிடைத்தற்கு அரியதுமான புத்தகங்கள் பல இடம்பெற்றிருந்ததை நண்பர்கள் அறிவீர்கள். சிறுவயதுமுதல் அந்தப் புத்தகங்கள் நம் பொதுஅறிவை வளர்த்து ஆளாக்க உதவியதை நீங்கள் மறக்கமாட்டீர்கள் என்று நம்புகிறேன். அந்த வாசகசாலையானது 1919 முதல் முன்னாள் திருவாங்கூர் மகாராஜா ஸ்ரீமூலம் திருநாள் மகாராஜா பெயரில் 'ஸ்ரீமூலம் வாசகசாலையாக இயங்கி வந்தது.
அந்த வாசகசாலையானது இன்னும் பரவலாக பொது பயன்பாட்டுக்கு வரவேண்டும் என்று எண்ணி சமுதாயத்தின் சார்பில் செங்கோட்டை நகராட்சிக்கு, வாடகையின்றி நூலகம் நடத்துவதற்கு, அவர்களின் பொறுப்பில் 1985 முதல் கொடுக்கப்பட்டிருந்தது. நூலகம் நன்றாக இயங்கிவந்த போதிலும் அதில் பாதுகாக்கப்பட்டிருந்த அரிய நூல்கள் பலவும் தற்போது காணாமல் போயுள்ளன.
1906 இல் பிறந்த எஸ்.ஜி.கிட்டப்பாவின் நூற்றாண்டை ஓரளவு ஈடுபாட்டுடன் ஊரில் கொண்டாடினோம். ஊர்ப் பெரியவர்கள் சிலர் அரசின் மூலம் ஏதாவது செய்ய எண்ணி செயலில் இறங்கினர். அதன் ஒரு பகுதியாக நான் மஞ்சரி மாத இதழில் ஆசிரியராக இருந்தபோது கிட்டப்பாவைப் பற்றிய நீண்ட கட்டுரையை வெளியிட்டு, அவருடைய நூற்றாண்டு விழா வருடமான 2006இல் அவர் நினனவாக நினைவு மண்டபமோ நினைவில்லமோ அரசின் சார்பில் கட்டித் தரப்படவேண்டும் என்ற வேண்டுகோளை வைத்து தமிழக அரசின் கவனத்தைக் கவர முயன்றேன். அரசின் சார்பில் அதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்ட போதும், சில இடையூறுகளால் அது பெரிய அளவில் இயலாமல் போனது.
தற்போது நகராட்சியால் வாசகசாலையை சரிவரப் பராமரிக்க இயலாத நிலையில் நகராட்சி மீண்டும் நம் சமுதாயத்தின் கட்டுப்பாட்டுக்குள் இந்த வாசக சாலையை ஒப்படைத்துள்ளது. நம் சமுதாயத்தின் சார்பில் அமரர் எஸ்.ஜி.கிட்டப்பா நூற்றாண்டு நினைவாக வாசகசாலையை நல்லமுறையில் நடத்த எண்ணம் கொண்டு ஊரில் உள்ள பெரியவர்கள் அரிய முயற்சியை எடுத்து வருகிறார்கள்.
இதன் பொறுப்பாளராக, மேட்டுத்தெரு வி.வெங்கடேஸ்வரன் செயல்பட்டு வருகிறார்.
நண்பர்கள், செய்யவேண்டியது என்னவென்றால், நம் அடுத்த மாணவத் தலைமுறை பயன்படும் வகையில் நல்ல நூல்களை, அறிவுப் பொக்கிஷங்களை அந்த நூலகத்தில் வாங்கி வைக்க வேண்டியது... நல்ல பத்திரிகைகளுக்கு சந்தா கட்டி, நம் சார்பில் நூலகத்துக்கு வரவைக்க வேண்டியது, இன்னும் தங்களால் இயன்ற உதவிகளைச் செய்வது... இவ்வளவே!
நம் பகுதியில் உள்ள இரு பெரும் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகளும் பயன்பெறும் வகையிலும், அனைத்து இளைஞர்களும் உலகை தைரியமாக எதிர்கொள்ளும் வகையிலும் இந்த நூல்நிலையத்தை நாம் உயர்த்தவேண்டும்.
கல்வி தானம் மிகச் சிறந்தது, அதன் ஒரு பகுதி, நல்ல நூல்களை மாணவர்களும் இளைஞர்களும் படிக்க உதவி, அவர்கள் பட்டறிவும் படிப்பறிவும் பெறச் செய்வது...
தொடர்புக்கு... வி.வெங்கடேஸ்வரன், (மேலாளர்), மேட்டுத் தெரு, செங்கோட்டை, பின்: 627 809.
உங்களது அன்பான பதில்களையும் நடவடிக்கைகளையும் எதிர்பார்த்து,
அன்பன்
செங்கோட்டை ஸ்ரீராம்.
 
Copyright © 2013 செங்கோட்டை ஸ்ரீராம்
Shared by Alahappa Grafix